Photo, THE GUARDIAN
வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிப்பதில்லை என்பதை வரலாற்றில் இருந்து படிக்கிறோம் என்ற ஜேர்மன் தத்துவஞானி ஜோர்ஜ் வில்ஹெல்ம் பிரெடெரிக் ஹெகலின் மிகவும் பொருள்பொதிந்த கூற்றை அரை நூற்றாண்டுக்கு முன்னர் முடிவுக்கு வந்த வியட்நாம் போர்க் காலத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த றொபேர்ட் மக்னமாரா ஒரு தடவை கூறியதாக வாசித்தது நன்றாக நினைவிருக்கிறது. பிறகு அவர் உலக வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தார்.
அமெரிக்காவும் ஏனைய இராணுவ வல்லரசுகளும் அவற்றின் வரலாற்றுத் தோல்விகளில் இருந்து படிப்பினைகளைப் பெற்று தவறுகளை திருத்திக் கொள்வதில்லை. உலகின் மீது மேலாதிக்கத்தைச் செலுத்துவதற்காக வல்லரசுகள் தொடர்ந்தும் தவறுகளைச் செய்வதற்கு தயங்குவதுமில்லை.
எதிரிகள் என்று தாங்கள் கருதுகின்ற நாடுகள் மீது இராணுவ ஆக்கிரமிப்பை செய்வதன் மூலமாக சொந்தப் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும் என்ற மாயையில் வல்லரசுகள் தொடர்ந்தும் மூழ்கியிருக்கின்றன. இராணுவ வல்லமையினால் எதிர்பார்த்த விளைவுகளை அடையமுடியாது என்பதை நிறுவும் உதாரணங்களினால் வரலாறு நிறைந்து கிடக்கிறது.
பல இலட்சக்கணக்கான மக்களை கொன்றொழித்ததைத் தவிர, வியட்நாம் போரில் அமெரிக்கா ‘சாதித்தது’ எதுவுமில்லை. அந்தப் போரில் கண்டதைப் போன்ற பழிப்புக்கிடமான தோல்வியையே இந்த நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில் ஆப்கானிஸ்தானில் செய்த ஆக்கிரமிப்புக்குப் பின்னரும் அமெரிக்கா கண்டது. அல் – குவைதா இயக்கத்தை ஒழித்துக் கட்டுவதும் தலிபான்களை தோற்கடித்து ஆப்கானிஸ்தானை ஜனநாயகமயமாக்குவதுமே நோக்கம் என்று கூறிக்கொண்டு 2001ஆம் ஆண்டில் ஆக்கிரமிப்பைச் செய்த அமெரிக்கா 20 வருடங்களுக்குப் பிறகு அதே தலிபான்களிடம் ஆப்கானிஸ்தானை கையளித்துவிட்டு வெட்கக்கேடான முறையில் வெளியேற வேண்டியிருந்தது.
சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களைக் குவித்து வைத்திருப்பதாக பொய் கூறிக்கொண்டு 2003ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா அந்த நாட்டை நிர்மூலம் செய்தது. எந்தவொரு பேரழிவு ஆயுதத்தையும் ஈராக்கில் அமெரிக்கர்களால் கண்டெடுக்க முடியவில்லை. கேணல் கடாபியின் கொடுங்கோன்மை ஆட்சியில் இருந்து லிபியாவின் மக்களைப் பாதுகாக்கப் போவதாக கூறிக்கொண்டு 2011ஆம் ஆண்டில் படையெடுத்த அமெரிக்கா அந்த நாட்டை சினானாபின்மாக்கியது. பதினான்கு வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும் கூட லிபியாவில் உறுதிவாய்ந்த அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாமல் இருக்கிறது.
செயல் விளைவான அணுவாயுதத் திட்டம் எதுவும் ஈரானிடம் கிடையாது என்று அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னர் கூறியதையும் பொருட்படுத்தாமல் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுடன் சேர்ந்து கடந்த வாரம் ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் இராணுவ கட்டமைப்புகளை குண்டுவீசித் தகர்த்திருக்கிறார்.
ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கும் செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ராபீல் குறொசி அண்மையில் கூறியிருந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் ருல்சி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கமிட்டி ஒன்றின் முன்பாக சாட்சியம் அளித்தபோது ஈரான் அணுவாயுதங்களை தயாரிக்கவில்லை என்று கூறினார். ஆனால், அவரும் அமெரிக்க புலனாய்வுச் சமூகமும் கூறுவது தவறு என்று ட்ரம்ப் அலட்சியம் செய்தார்.
ஈரான் மீது நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த குண்டுவீச்சுத் தாக்குதல்ளை நியாப்படுத்துவதற்காக ட்ரம்ப் பொய் கூறினார் என்பதை மத்திய கிழக்கின் அண்மைய நிலைவரம் வெளிக்காட்டுகிறது. அதேவேளை, ருல்சி கப்பார்ட் காங்கிரஸ் கமிட்டிக்கு தான் அளித்த சாட்சியத்தை ஜனாதிபதி நிராகரித்ததை அடுத்து தனது முன்னைய கருத்தை தலைகீழாக மாற்றி ஈரான் சில மாதங்களில் அணுவாயுதங்களை தயாரிக்கக்கூடும் என்று கூறினார். நெருக்குதலின் விளைவாகவே அவர் அவ்வாறு தனது நிலைப்பாட்டை மாற்றியிருக்கக்கூடும்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு முன்னதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து செய்த அதே தவறை ட்ரம்ப் தற்போது இஸ்ரேலிய பிரதமர் பென்சமின் நெதன்யாகுவுடன் சேர்ந்து ஈரானின் அணுத்திட்டம் தொடர்பான விவகாரத்தில் செய்திருக்கிறார் என்று தெரிகிறது. முதலாவது பதவிக்காலத்தில் அமெரிக்காவை போர்களில் சிக்கவைக்கவில்லை என்று தன்னைப் பற்றி பெருமை பேசிய ட்ரம்ப், இரண்டாவது பதவிக்காலத்தின் ஆரம்பக்கட்டத்திலேயே ஈரானுடன் போருக்குச் சென்றார் என்பதுடன் உலகின் மிகப்பெரிய வல்லரசின் ஜனாதிபதிக்கு எந்த வகையிலும் பொருந்தாத – தான் தோன்றித்தனமான தனது பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகள் மூலமாக உலகில் பெரும் கொந்தளிப்பான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறார்.
பிரகடனப்படுத்தப்படாத ஒரு அணுவாயுத நாடும் இதுகாலவரையில் அணுகுண்டுத் தாக்குதல்களை நடாத்தி பேரழிவை ஏற்படுத்திய ஒரேயொரு வல்லரசும் சேர்ந்து அணுவாயுதத்தை தயாரிப்பதாக தாங்கள் சந்தேகித்த ஒரு நாட்டின் மீது படுமோசமான குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடாத்தி நாசம் விழைவித்திருக்கின்றன. சர்வதேச சட்டங்களை கிஞ்சித்தேனும் பொருட்படுத்தாமல் போரைத் தொடங்குவதை மாத்திரமல்ல, போர்நிறுத்தத்தை எப்போது செய்வது என்பதையும் மத்திய கிழக்கில் இன்று அமெரிக்காவும் இஸ்ரேலுமே தீர்மானிக்கின்றன.
ஈரானிடம் அணுவாயுதம் கிடையாது என்பதனால் மாத்திரமே அமெரிக்காவும் இஸ்ரேலும் தைரியத்துடன் குண்டுவீச்சுக்களை நடத்தின என்றும் ஈரானிடம் ஒரு சிறிய அணுவாயுதமேனும் இருந்திருந்தால் இவ்விரு நாடுகளும் ஒருபோதுமே தாக்குதல்களை நடத்தியிருக்காது என்றும் பல சர்வதேச அவதானிகள் கூறுகிறார்கள். அதேவேளை, அணுவாயுத பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இஸ்ரேல் மறுத்துவருவது அமெரிக்காவுக்கு ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.
அணுத்திட்டம் குறித்து ஏற்கெனவே ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்த அமெரிக்க அதிகாரிகளும் ஈரானிய அதிகாரிகளும் மீண்டும் சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்த தினத்துக்கு மூன்று தினங்கள் முன்னதாக ஜூன் 13ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சுக்களை நடாத்தத் தொடங்கியது. அமெரிக்காவுடனும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனும் ஒபாமா நிருவாக காலத்தில் ஈரான் செய்துகொண்ட அணுத்திட்ட உடன்படிக்கையில் இருந்து தனது முதலாவது பதவிக்காலத்தில் தன்னிச்சையாக வெளியேறிய ட்ரம்ப் தெஹ்ரானுடன் அதேபோன்ற உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறினார். உடன்படிக்கை தொடர்பில் ட்ரம்ப் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்கு ஈரானிய அரசாங்கம் தயாராயிருக்கவில்லை.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவதை விரும்பாத இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் இராணுவக் கட்டமைப்புகள் மீது படுமோசமான குண்டு வீச்சுக்களை நடத்தியது. ஈரானின் இராணுவ உயர்தலைமைத்துவத்தின் பல தளபதிகள் அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள். ஈரானுடனான தனது இராஜதந்திர முயற்சிகளை சீர்குலைத்த அந்தத் தாக்குதல்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக அமெரிக்க ஜனாதிபதி ஆதரித்தார். ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.
இஸ்ரேலுடன் ஈரான் தொடுத்திருக்கும் போரில் அமெரிக்கா இணைந்துகொள்வதா இல்லையா என்பதை இரு வாரங்களில் தீர்மானிக்கவிருப்பதாக அறிவித்திருந்த ட்ரம்ப் திடீரென்று ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அதிநவீன போர் விமானங்களைப் பயன்படுத்தி குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தினார். அணுவாயுதங்களை தயாரிப்பதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஈரானின் சகல அணுசக்தி மையங்களும் துடைத்தெறியப்பட்டு விட்டதாக பிரகடனம் செய்த அவர் தானாகவே போர்நிறுத்தத்தையும் அறிவித்தார்.
என்னதான் ஈரான் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ தளங்கள் மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தாலும், அது இராணுவ ரீதியாக பெருமளவுக்கு பலவீனப்பட்டுவிட்டது என்பதே உண்மை. ஈரானின் வான்பரப்பு இரு வாரங்களாக இஸ்ரேலின் ஆதிக்கத்திலேயே இருந்தது. தனது போர்நிறுத்த அறிவிப்பை அலட்சியம்செய்து இஸ்ரேல் தொடர்ந்தும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களினால் ட்ரம்ப் ஆத்திரமடைந்தததை அடுத்து இஸ்ரேலும் போர்நிறுத்தத்துக்கு இணங்கியது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை பொறுத்தவரை, காசாவில் இனப்படுகொலையைத் தொடருவதும் ஈரானுடன் மோதுவதும் உள்நாட்டில் அவரின் அரசியல் அதிகார இருப்புடனும் சம்பந்தப்பட்டதாகும். அணுத்திட்டம் தொடர்பில் உடன்படிக்கை ஒன்றைச் செய்வதன் மூலமாக வாஷிங்டனுடன் தெஹ்ரான் இணக்கப் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினால் அது இஸ்ரேலின் நலன்களுக்கு பாதகமானது என்று நெதான்யாகு நினைத்தார்.
இதுவரை காலமும் அமெரிக்கா போன்ற வல்லரசுகள் மாத்திரமே தங்களுக்கு எதிரான நாடுகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்துப் பேசிவந்தன. ஆனால், அமெரிக்காவை நம்பியிருக்கின்ற சிறிய நாடான இஸ்ரேல் கூட ஈரானில் ஆட்சிமாற்றம் குறித்து பேசுகின்ற அளவுக்கு நிலைவரம் மாறியிருக்கிறது. போர்நிறுத்ததுக்கு இணங்கிக்கொண்ட போதிலும், அமெரிக்கா மீண்டும் தாக்கினால் மத்திய கிழக்கில் உள்ள அதன் இராணுவத் தளங்களை தாக்கப் போவதாக ஈரானிய அதியுயர் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை செய்தார்.
பலவீனமான ஒரு ஈரான் அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்வரும் என்று ட்ரம்ப் எதிர்பார்க்கிறார். அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்களினால் ஈரானின் அணுசக்தி மையங்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது குறித்து ட்ரம்ப் நிருவாகத்திற்குள் முண்பாடான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தவிர, ஈரானுக்கு வேறு மார்க்கமே கிடையாது என்று ட்ரம்ப் கூறுகின்ற அதேவேளை, அணூவாயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவது குறித்து ஈரானிய தலைவர் பேசுகிறார்.
ஒரு கட்டத்துக்குப் பிறகு ஈரானின் ஏவுகணைகளை இடைமறிப்பதில் இஸ்ரேல் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியதை அடுத்தே ஈரான் மீதான தாக்குதல்களில் இணைந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ‘அயன் டோம்’ என்ற இஸ்ரேலின் நடமாடும் ஏவுகளை தடுப்புப் பொறிமுறை கணிசமானளவுக்கு பலவீனப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலைப் பொறுத்தவரை, நீண்டகாலத்துக்கு போர்களை நீடிக்க விடாமல் குறுகிய காலத்திற்குள் வெற்றிகளை அடையக்கூடிய தந்திரோபாயங்களையே அது கடைப்பிடித்து வந்திருக்கிறது.
ட்ரம்பை பொறுத்தவரை, தனது ஆதரவுத் தளத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு உபாயமாக அமெரிக்காவின் கடந்த காலப் போர்கள் மீதான தனது வெறுப்பையும் பயன்படுத்தினார். அதனால், நீண்டகாலப் போர்களில் அமெரிக்கப் படைகளை ஈடுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் அவருக்குப் பாதகமாகவே அமையும். மத்திய கிழக்கு நெருக்கடியை கையாளுவதில் அவர் கடைப்பிடிக்கும் அணுகுமுறை ஏற்கனவே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
ஒரு புறத்தில், காசாவில் பாலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கும் அயல்நாடுகள் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளுக்கும் உறுதியான ஆதரவை வழங்கிவரும் ட்ரம்ப், தன்னை ஒரு சமாதானத் தூதுவனாகவும் காட்டிக் கொள்ள பேராசைப்படுகிறார். காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் குடிமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து இரு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மூண்ட போரை நிறுத்தியது தானே என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனால், அதை இந்தியா ஏற்றுக் கொள்ளவில்லை. இரு நாடுகளினதும் இராணுவ உயர் மட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் காரணமாகவே மோதல்களை நிறுத்துவதற்கு இணங்கம் காணப்பட்டதாக இந்தியா அறிவித்தது.
ஆனால், கடந்த மே மாதத்தில் தனது முயற்சியின் விளைவாகவே போர்நிறுத்தத்துக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இணங்கிக்கொண்டன என்று தொடர்ச்சியாக ட்ரம்ப் கூறிக்கொண்டேயிருக்கிறார். கடந்தவாரம் ஹேக் நகரில் நடைபெற்ற வட அத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளின் (நேட்டோ) உச்சி மகாநாட்டின்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி தன்னால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட இராணுவ மோதல்களில் அண்மைய இந்திய – பாகிஸ்தான் மோதலும் ஒன்று என்று கூறினார். இதுவரையில் அவ்வாறு அவர் பதினெட்டு தடவைகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகின.
இது இவ்வாறிருக்க, அண்மைய இந்திய – பாகிஸ்தான் மோதல்களின்போது ‘தீர்க்கமான இராஜதந்திர தலையீட்டைச்’ செய்தமைக்காக 2026 நோபல் சமாதானப் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை முறைப்படி சிபாரிசு செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்த விசித்திரத்தையும் காணக்கூடியதாக இருந்தது. பாகிஸ்தான் இராணுவ தளபதி அசீம் முனிரை வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் சந்தித்த மூன்று நாட்களில் இஸ்லாமாபாத் இந்த அறிவிப்பை வெளியிட்டது. பாகிஸ்தானில் சிவில் அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும் போது அந்த நாட்டின் இராணுவ தளபதியை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவென்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது தடவையாக பதவிக்கு வந்ததைத் தொடர்ந்து சர்வதேச விவகாரங்களில் அவர் கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகளும் அவற்றுக்கு மற்றைய நாடுகள் குறிப்பாக, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வல்லாதிக்க நாடுகள் வெளிக்காட்டுகின்ற பிரதிபலிப்புகளும் பல்துருவ உலக ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. வர்த்தக விவகாரங்களாக இருந்தாலென்ன இராணுவ விவகாரங்களாக இருந்தாலென்ன ட்ரம்பின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு உலகம் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்கிறது போன்று தெரிகிறது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்கள் மத்திய கிழக்கை மாத்திரமல்ல, உலகின் ஏனைய பாகங்களையும் கூட அச்சுறுத்தியதால் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டமை உலகிற்கு நிம்மதியை கொடுத்திருக்கிறது. ஆனால், இஸ்ரேலும் அதற்கு உதவியாக அமெரிக்காவும் நினைத்த நேரத்தில் மீண்டும் தாக்குதல்களை நடாத்துவதை எவராலும் தடுக்க முடியாத மிகவும் ஆபத்தான ஒரு நிலைவரம் தோன்றியிருக்கிறது.
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக அமெரிக்கா செலுத்திவரும் மேலாதிக்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் அண்மைக்காலத்தில் சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்ட சீனாவும் ரஷ்யாவும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியபோது எதையும் செய்யமுடியாமல் இருந்தன. ஈரானிய அதியுயர் தலைவர் அலி காமெனியை தற்போதைக்கு கொலை செய்யும் திட்டம் தங்களுக்கு இல்லை என்று ட்ரம்ப் கூறிய வேளையிலும் ஈரானின் அணுத் திட்டங்களைத் தகர்ப்பது மாத்திரமல்ல, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதும் தங்களது இலக்கு என்று இஸ்ரேலிய பிரதமர் கூறிய வேளையிலும் உலகின் எந்தவொரு முக்கியமான நாடும் அதைக் கண்டனம் செய்யவில்லை.
தற்காப்பு என்பது ஏதோ இஸ்ரேலுக்கு மாத்திரமே பிரத்தியேகமான உரிமை போன்று அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பேசுவதை உலகின் ஏனைய பிராந்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன போன்று தெரிகிறது. காசாவை கற்காலத்துக்கு அனுப்பும் வகையில் சுமார் இரு வருடங்களாக இஸ்ரேல் துவம்சம் செய்வதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு இனப்படுகொலை தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் உண்மையில் இன்று தற்காப்பில் ஈடுபடும் நாடாக அன்றி, ஆக்கிரமிப்பு நாடாக மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் போர்க்குற்றங்களையும் செய்தததாக குற்றஞ்சாட்டப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய பிரதமர் இன்று மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பவராக மாறியிருக்கிறார்.
காசாவில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்களை அயல் நாடுகளுக்கு அல்லது வேறு எங்காவது அனுப்பிவிட்டு அந்தப் பள்ளத்தாக்கை உல்லாசக் கடற்கரையாக மாற்றும் திட்டம் தன்னிடம் இருப்பதாக ட்ரம்ப் கூறுவதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீன நெருக்கடிக்கு இரு நாடுகள் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தீர்வு இனிமேலும் அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இன்று சட்டத்தை ஆதாரமாகக் கொண்ட ஒரு சர்வதேச முறைமை ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை.
2023 அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னதாக இஸ்ரேல் மேற்கொள்ளக்கூடிய பதில் தாக்குதல்களுக்கு சர்வதேச சமூகம் எத்தகைய எதிர்வினையை காட்டும் என்பதைப் பற்றி ஹமாஸ் இயக்கம் நிச்சயமாக சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். எளிதாகவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் ஒரு இனத்துக்காக போராடுகின்ற இயக்கம் அதன் அணுகுமுறைகள் குறித்து தூரநோக்குடன் சிந்தித்திருக்க வேண்டும்.
இன்று காசாவில் தினமும் நூற்றுக்கணக்கில் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முடியாமல் உலக நாடுகள் வெறுமனே கைகட்டிப் பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவிப்பதைத் தவிர, வேறு எதையும் செய்யமுடியாத கையறு நிலையில் இருக்கிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற நாட்களில் காசாவை உலகம் கவனித்ததாகத் தெரியவில்லை.
இத்தகையதொரு சர்வதேச நிலைவரத்துக்கு மத்தியில் இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூறவைப்பதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியை நம்பியிருக்கும் தமிழ் அரசியல் சமுதாயம் சிந்தித்துப் பார்ப்பதற்கு பல விடயங்கள் இருக்கின்றன.
வீரகத்தி தனபாலசிங்கம்