Photo, SELVARAJA RAJASEGAR
2009 மே மாதத்தில் இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த ஆயுத மோதல் முடிவுக்கு வந்த நேரத்திலிருந்து, அதை ஒரு வெற்றியாக கொண்டாட வேண்டுமா அல்லது போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளாக – நினைவுகூர அனுமதிக்க வேண்டுமா என்பது ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட விவாதத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது.
1949 முதல், இலங்கை அரசாங்கமும் தேசியவாத சக்திகளும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு குறிப்பிட்ட அளவு சுயாட்சிக்காக முன்வைத்த அரசியல் கோரிக்கையை நிராகரித்தன. தேசிய பிரச்சினை ஆயுத மோதலாக மாறியது, பின்னர் அது ‘பிரிவினைவாத பயங்கரவாதம்’ என்று பெயரிடப்பட்டு பல தசாப்தங்களாக நீடித்த போருக்குப் பிறகு அதற்கு மோசமான இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு கண்டறியப்பட்டது.
இந்த அருவருப்பான வரலாற்றின்போது நடைபெற்ற கொலைகள், காணாமல்போதல்கள், சித்திரவதைகள் மற்றும் பல மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் பல துணை இராணுவக் குழுக்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
தெற்கில் தேசியவாத மற்றும் இனவெறி சக்திகளின் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் ஜே.வி.பி அப்போதைய ஆட்சியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் போர் முயற்சிகளை கடுமையாக ஆதரித்தது.
இப்போது அதற்கு, அதன் பரந்த முன்னணியான தேசிய மக்கள் சக்தியுடன் சேர்ந்து நாட்டையும் மக்கள் சமூகத்தையும் ஒற்றுமை, சமரசம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான பெரும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் நம்பிக்கையை உருவாக்க, வெற்று வாக்குறுதிகளை வழங்குவதை நோக்கிச் செல்வதை விட தேசிய மக்கள் சக்தி அர்த்தமுள்ள மற்றும் தைரியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தெற்கில் சிலர், வடக்கு மக்களை நீண்ட, கொடூரமான போரில் இறந்த தங்கள் அன்புக்குரியவர்களுக்காக நினைவஞ்சலி நடாத்த அனுமதிக்காத அளவுக்கு வடக்கும் தெற்கும் இன்னும் ஆழமாகப் பிரிந்துள்ளது. பல மக்கள் சமூகங்கள் உள்ள நாட்டில், ஒரு சமூகம் மகிழ்ச்சியாக இருக்கும்போது மற்றொரு சமூகம் அஞ்சலி நிகழ்வு நடாத்த முடியுமா?
தமிழ் மக்களின் நினைவுகூரலை ஒடுக்குவதற்கும், தடுப்பதற்கும் மற்றும் நிறுத்துவதற்கும் உரிமை இருப்பதாக ஆயுதப் போராட்டத்தை தோற்கடிப்பதில் பங்கேற்றவர்களுக்குத் தோன்றலாம். தெற்கில் ஆயுதக் கிளர்ச்சிகளின் போது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களால் அனுஷ்டிக்கப்படுவது போன்று, கூட்டு துக்கம் என்பது, அவர்கள் போராளிகளாக இருந்தாலும் அல்லது சாதாரண குடிமக்களாக இருந்தாலும், தங்கள் நண்பர் அல்லது உறவினரின் மரண தேதியை இன்னும் அறியாத வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தனிநபர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்.
நம்மில் பலர் ஆயுத மோதல் முடிவுக்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைகிறோம். போர் முடிவுக்கு வந்ததைக் கொண்டாட யாருக்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கும் அதேவேளையில், மக்களாகிய நாம் குறைந்தபட்சம் இப்போதாவது சில முக்கியமான கேள்விகளை எழுப்ப வேண்டும்.
16 ஆண்டுகால போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் தமிழ் மக்களிடையே போரில் இறந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை அடக்குவது பல்வேறு சமூகங்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்தை அடைய உதவியதா? போரில் இறந்தவர்கள், அவர்கள் பொதுமக்களாக இருந்தாலும் அல்லது போராளிகளாக இருந்தாலும், அவர்களது நினைவுகளை மற்றும் வலிகளை அடக்குவதும், இறந்தவர்களின் கல்லறைகளை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளுவதும் நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்துவதிலும் நீடித்த அமைதியை உருவாக்குவதிலும் எவ்வாறு உதவியது?
இன்றைய போர் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்த கடந்தகால தவறுகளை ஒப்புக்கொள்வதன் மூலமும், அத்தகைய தவறுகள் மீண்டும் நடக்காமல் தடுப்பதற்கு வலுவான மற்றும் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், நமது பிளவுபட்ட சமுதாயங்களின் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கு பங்களிக்கும் வகையிலான சட்ட அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் இன்றைய போர் வெற்றிக்கொண்டாட்டத்தை சிறந்த வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்பை நோக்கி பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதாக இருக்கும்.
போர் வெற்றியைக் கொண்டாடும்போது, அமைதி மற்றும் நல்லிணக்கம் பற்றி பேசுவது, போராடியவர்களின் தியாகங்களை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், போரின் நீடித்த தாக்கங்கள் மற்றும் குணப்படுத்துதல் மற்றும் புரிதலின் தேவையை அடையாளம் காண்பதும் சம்பந்தப்பட்டது. NPP அரசாங்கம் வெற்றிக்கொண்டாட்டத்திற்கு அப்பால் சென்று மோதலில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மோதல்கள் இல்லாத நல்ல எதிர்காலத்திற்கான தனது உறுதிப்பாடு குறித்து அவதானம் செலுத்தவேண்டும். மடிந்தவர்களுக்கு மரியாதை செலுத்துதல், அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் போராடியவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் அனுபவித்த வேதனை, துக்கம் மற்றும் இழப்புகளை ஒப்புக்கொள்வதும் அதில் அடங்கும்.
ஆயுதம் எடுப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு மாற்று இல்லை என்று நினைத்த ‘தோற்றவர்களின் வேதனையை பகிர்ந்து கொள்வதற்காக’ சிறிது நேரம் நின்று அவர்களுக்கு செவிசாய்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும். மோதல் தனிநபர்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ள நீடித்த தாக்கத்தின் மீது அவதானம் செலுத்தி அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் இழப்பை அடையாளம் காண்பதும் இதில் அடங்கும்.
எதிரிகளாக இருந்தவர்கள் மத்தியில் புரிதல், மன்னிப்பு மற்றும் குணப்படுத்துதலை ஊக்குவித்து சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு அமைதி, நீதி மற்றும் ஒத்துழைப்புக்கான தேவையை வலியுறுத்த வேண்டும். அதேநேரத்தில், எதிர்கால மோதல்களைத் தடுப்பதற்கும் மிகவும் அமைதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கும் நம்பிக்கையும் உறுதிப்பாடும் தூண்டப்பட வேண்டும்.
போர் என்பது வெறும் ஆயுதப் படைகள் மற்றும் குழுக்களிடையேயான மோதல் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றியிருக்கும் மனக்காயங்கள் மற்றும் பல எதிர்மறை அனுபவங்கள் மற்றும் விளைவுகளின் சிக்கலான வலையமைப்பு என்பதை அடையாளம் காணுவதன் மூலம் போரின் சிக்கல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, அரசியல் தலைவர்கள், எதிரிகளை வீழ்த்தியதாகக் கூறி வெற்றியைக் கொண்டாடுவது அல்லது அவர்களின் வீழ்ந்தவர்களை மனிதாபிமானமற்றவர்களாக ஆக்குவது மற்றும் போரை மகிமைப்படுத்துவது என்று பொருள்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய மொழியைப் பயன்படுத்துவதின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். நேர்மறையான எதிர்காலம், சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் கருணைக்கான எதிர்காலம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களின் வலிமை மற்றும் மனிதாபிமானத்திற்கான தொலைநோக்கை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கும் மனித அனுபவங்களை வெளிப்படுத்துவது முக்கியமாக இருக்கும்.
நாம் ஒரு ஒன்றுபட்ட நாட்டை உருவாக்க வேலை செய்கிறோம் என்று உறுதியாகக் கூறினால், வெற்றி மற்றும் தோல்வியின் உயர்வு தாழ்வுகளை அமைதிப்படுத்தவும், சமுதாயத்தில் உள்ள தேசியவாத பதட்டங்களைச் சமாளிக்கவும், மற்றும் “அழகான வாழ்க்கை மற்றும் செழிப்பான நாடு” என்ற தங்களின் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் தைரியமும் உறுதியும் கொள்ள இதுவே NPP மற்றும் அதன் தலைவர்களுக்கான நேரம்.
NPP தலைவர்கள், அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான செயல்பாடு மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த காலத்தைப் பற்றிய திறந்த மற்றும் நேர்மையான விவாதங்களை ஊக்குவிக்காமல் மற்றும் கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற மோதல்களைத் தடுப்பதும் ஒற்றுமையான நாட்டை நோக்கிய பயணத்தில் ஈடுபடுவதும் சாத்தியமற்றதாக இருக்கும்.
2025 மே 19
லயனல் போபகே