வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சமமான வளப்பங்கீடு வழங்கப்படவேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க மறுக்காமல் அதனை வழங்கவேண்டும். அரசியல் பிரதிநிதித்துவத்தில் போதுமான வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்கிறார் கிளிநொச்சியை மையமாகக் கொண்டு செயற்படும் சிரேஷ்ட ஊடகவியலாளர் மு. தமிழ்செல்வன்.

வடக்கு நோக்கி வந்த மலையக மக்கள், இங்கு பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை. நடந்துமுடிந்த ஈழப்போராட்டத்தில் அதிகளவில் மலையகத்தைச் சேர்ந்தவர்களே பங்கெடுத்திருந்தார்கள். அந்த மக்கள் ஏன் போராடினார்கள்? தமிழ் மக்களின் பொதுவான ஒரு கொள்கைக்காக வேண்டித்தான் அவர்கள் போராடினார்கள். மலையக மக்கள் வேறு, பூர்வீக மக்கள் வேறு, யாழ்ப்பாண மக்கள் வேறு என்று பார்க்கவில்லை. இப்போதும் கிளிநொச்சியில் மலையக மக்கள் செறிந்துவாழும் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றால், முன்னாள் போராளி ஒருவரைப் பார்க்கலாம். இல்லையென்றால் போராட்டத்தில் பங்கெடுத்து வீரச்சாவடைந்தார் என்று கூறுவார்கள் அல்லது காணாமலாக்கப்பட்டுவிட்டார் என்று கூறுவார்கள் என்று கூறுகிறார் மு. தமிழ்செல்வன்.

மலையக மக்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு வடக்கு நோக்கி இடம்பெயர்ந்த மலையக மக்கள் தொடர்பாக மு. தமிழ்செல்வன் ‘மாற்றம்’ தளத்துக்கு வழங்கிய முழுமையான நேர்க்காணலை கீழே பார்க்கலாம்.