Photo, AP Photo/Eranga Jayawardena, HRW
இலங்கையின் பொதுக் கல்வி முறையை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதன்மையான இலக்குகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. இதற்கமைய, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற வரவேற்கத்தக்கப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்திருந்தாலும், இந்தச் சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்துக் கல்வியாளர்கள் மத்தியில் ஆழ்ந்த கரிசனைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, போதிய வெளிப்படைத்தன்மையோ அல்லது பொதுக் கலந்தாலோசனைகளோ இன்றி இச்சீர்திருத்தங்கள் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சமூக நீதியையும் விமர்சனப் பாங்கான சிந்தனையையும் வளர்ப்பதாகக் கல்விக் கொள்கை ஆவணம் குறிப்பிட்டாலும், நடைமுறையில் சமூக விஞ்ஞானம் மற்றும் மானிடப் பண்பியல் பாடங்களுக்குக் குறைந்த முக்கியத்துவமே வழங்கப்பட்டுள்ளதுடன், பாடப்புத்தகங்களில் பல தவறான மற்றும் பாரபட்சமான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய பின்னணியில், முன்மொழியப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஜனநாயகக் கல்விச் சூழலை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அரச பல்கலைக்கழக ஆசிரியர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். முழுமையான அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
நாட்டின் கல்வி அமைப்பை மறுசீரமைப்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாக உள்ளது. ஆட்சிக்கு வந்த உடனேயே, பொதுக் கல்வியில் “மாற்றத்தினை உருவாக்கக்கூடிய” சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான செயல்முறையை அரசாங்கம் தொடங்கியது. கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 2% ஆக (2023 இல் 1.8% இருந்து) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு போதுமற்றதாக இருந்தாலும், உட்கட்டுமான வசதிகளை உருவாக்குதல், கூடியளவிலான ஆசிரியர்களை நியமித்தல், பாடசாலைகளில் உள்ள வசதிகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு அரசு உறுதியளித்துள்ளதுடன், கல்வி மறுசீரமைப்பினை ஓர் உடனடித் தேவையாகவும் அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இவை அனைத்தும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளே. எனினும், தற்போது முன்னெடுக்கப்படும் பொதுக் கல்வி சீர்திருத்தங்கள் குறித்து நாம் ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டுள்ளோம். எமது கருத்துகளை நாம் இங்கு வெளிப்படுத்துகிறோம்.
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் ஒன்றாகவும், வெளிப்படைத்தன்மையோ, பொதுக் கலந்தாலோசனைகளோ இல்லாததாகவும் உள்ளது. 2026 ஜனவரியில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்ட மறுசீரமைப்புகள் குறித்த அறிவிப்புகள் 2025 ஜூலையிலேயே வெளியிடப்பட்டன. 2025 ஆகஸ்டில், சில ‘பவர்பொயின்ட்’ அட்டைகள் அதிகாரபூர்வமற்ற வழிகளின் மூலம் மக்களைச் சென்றடைந்தன. நடைமுறைப்படுத்துவதற்கு வெறும் மூன்று மாதங்களுக்கு முன்பாக, 2025 நவம்பரில் தான் Transforming General Education in Sri Lanka 2025 என்ற அதிகாரபூர்வ கொள்கை ஆவணம் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சு இந்த மறுசீரமைப்புகள் குறித்து பல கூட்டங்களை நடத்தியிருந்தாலும், அந்தக் கூட்டங்கள் நடைபெற முன்னரேயே அல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே, பாடத்திட்டத் தொகுதிகள் எழுதப்பட்டு, அச்சிடப்பட்டு, ஆசிரியர்களுக்கான பயிற்சியும் தொடங்கப்பட்டு விட்டது என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
புதிய பொதுக் கல்வி கொள்கையில், அதன் எண்ணக்கரு உருவாக்கத்துக்கும் அதன் அணுகுமுறை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது. பாடத்திட்ட மறுசீரமைப்புகளின் நோக்கங்கள் “விமர்சனப்பாங்கான சிந்தனை”, “பல்வேறு நுண்ணறிவுகள்”, “மானிடப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞான பாடங்களின் சமூக மற்றும் அரசியல் மதிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ளுதல்” போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதனையும், “சமத்துவம், உள்ளடக்கத்தன்மை மற்றும் சமூக நீதி” போன்ற விழுமியங்களினை உள்ளடக்குவதனையும் (பக். 9) வெளிப்படுத்துகின்றன. ஆனால், புதிய பாடத்திட்டத்தில் சமூக விஞ்ஞானம் மற்றும் மானிடப்பண்பியல் பாடங்களுக்கு மிகக் குறைந்த முக்கியத்துவமே அளிக்கப்பட்டிருக்கிறது. தீவிர சிந்தனைக்கோ, சமூக நீதியை நோக்கமாகக் கொண்ட குடிமக்களை உருவாக்குவதற்கோ இந்தப் பாடத்திட்டத்தில் போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை. சுற்றாடல், வரலாறு, குடியியல் போன்ற பாடங்கள் ஆரம்பக் கல்வியில் இடம்பெறவில்லை. கனிஷ்ட இடைநிலைக் கல்வியில், குடியியல் மற்றும் வரலாற்றிற்கு ஒரு தவணைக்கு முறையே 10 மற்றும் 20 மணிநேரங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. “அத்தியாவசிய பாடங்கள்” எனப்படும் பாடங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், கணிதம் மற்றும் மொழி போன்ற அடிப்படைப் பாடங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைந்துள்ளது; கனிஷ்ட இடைநிலையில், ஒரு தவணைக்கு கணிதத்திற்கும், தாய்மொழிக்கும் தலா 30 மணிநேரங்களே வழங்கப்படுகின்றன. இன ஒற்றுமையை மேம்படுத்துவோம் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியானது கொள்கை ஆவணத்தில் இருந்தபோதும், இரண்டாவது தேசிய மொழிக் கற்றலுக்கும், மோதல்களால் பாதிக்கப்பட்ட நமது வரலாறு குறித்த கற்றலுக்கும் பாடத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை. தற்போது அத்தியாவசியப் பாடமாக உள்ள முயற்சியாண்மையும் நிதியியல் அறிவும் பாடத்துக்கான நேர ஒதுக்கீடு, இரண்டாவது தேசிய மொழி, புவியியல் மற்றும் குடியியல் ஆகியவற்றுக்கு சமமாக உள்ளது. சிரேஸ்ட இடைநிலையில் (O/L), சமூக விஞ்ஞானம் மற்றும் மானிடப்பண்பியல் பாடங்கள் விருப்பத் தேர்வுக்குரிய பாடங்களாக மட்டுமே உள்ளன. அரசாங்கம் கல்வி பற்றி தான் கொண்டிருக்கும் நோக்கங்கள் குறித்து உண்மையிலேயே உறுதியாக இருந்தால், எந்த வகுப்பில் எந்தப் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும், அவை ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும், வெவ்வேறு நிலைகளில் அவை எவ்வாறு தொடர்ச்சித் தன்மையுடன் முன்னேறிச் செல்ல வேண்டும், மொத்த பாடத்திட்டத்தில் அவற்றின் முக்கியத்துவம் என்ன என்பன குறித்து தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.
இந்த மறுசீரமைப்புகளின் ஒரு சாதகமான அம்சமாக தொழில்முறைக் கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காணப்படுகிறது. மாணவர்களின் ஆர்வங்கள், கற்றல் பாணிகள், தேவைகள் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளை அங்கீகரித்து, அவற்றை பூர்த்தி செய்யும் பாடத்திட்டம் கல்வியை மேலும் பன்முகத்தன்மை கொண்டதாகவும், ஜனநாயகத் தன்மையுடையதாகவும் மாற்றியமைக்கும். எனினும், பாடத்திட்டத்தில் ‘வேறுபாடு’ எவ்வாறு கையாளப்படுகிறது என்பதில் எச்சரிக்கை தேவை. இது தொழில்முறை பயிற்சியில் மட்டும் அல்லாது, பாடத்திட்டத்தின் அனைத்து அம்சங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். உதாரணமாக, வரலாற்றுப் பாடத்திட்டம் சமீபத்திய இலங்கை வரலாறையும், சிறுபான்மை மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் வரலாறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு வரலாற்றுக் கதைகளுக்கு இடமளிக்குமா? பாடப்புத்தகங்களில் காட்டப்படும் குடும்ப அமைப்புகள், வழக்கமான கருவுக்குரிய குடும்பக் கருத்துக்களைத் தாண்டிச் செல்லுமா? இத்தகைய விடயங்களைச் சரிவரக் கையாண்டால், மாணவர்கள் பாடத்திட்டங்களில் தாங்கள் அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பதனை உணருவார்கள்; பொதுமைப்படுத்தப்பட்ட முன்கற்பிதங்களும் அநியாயமான தடைகளும் இல்லாமல் தங்கள் கல்விப் பயணத்தை அவர்களினால் முன்னெடுக்க முடியும்.
தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) இணையதளத்தில் உள்ள 6ஆம் வகுப்பு பாடத்திட்டத் தொகுதிகள் கடுமையான மதிப்பாய்வுக்கு உட்படாதவையாகத் தோன்றுகின்றன. அவற்றில் பல தட்டச்சுப் பிழைகள் காணப்படுவதுடன், (சில வெளிப்படையாக அறிவிக்கப்படாத) செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களும் உள்ளன; மாணவர்களின் அனுபவத்திலிருந்து தொலைவில் உள்ள படங்களும் இந்தப் பாடத்திட்டத் தொகுதிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. சில பாடப்புத்தகங்களில் தவறான அல்லது தவறாக வழிகாட்டக் கூடிய தகவல்கள் உள்ளன. பூகோளக் கற்கைகள் பாடப்புத்தகம் குறிப்பிட்ட முக அம்சங்கள், முடி நிறம், தோல் நிறம் ஆகியவற்றை சில நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் பொதுமைப்படுத்தப்பட்ட முறையில் தொடர்புபடுத்துகிறது; மேலும், பழங்குடி மக்களைக் குறிப்பதற்கு அவமதிப்பான சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன (உதாரணம்: “Pygmies”, “Eskimos” – இவை அந்த சமூகங்கள் நீண்ட காலமாக நிராகரித்த சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது). நைஜீரியர்கள் ஏழைகளாகவும், விவசாயத்தில் மட்டுமே ஈடுபடுபவர்களாகவும், மின்சாரம் இல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். முயற்சியாண்மையும் நிதியியல் அறிவும் பாடப்புத்தகம் “உலகப் புகழ்பெற்ற தொழில்முனைவோர்களை” (பாடப் புத்தகத்திலே அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர்) அறிமுகப்படுத்தி, வாழ்க்கையின் வெற்றியை வணிகத் திறனுடன் சமமாக்குகிறது. இத்தகைய உள்ளடக்கம், கல்வி மறுசீரமைப்புக் கொள்கையில் கூறப்பட்டுள்ள “சமத்துவம், உள்ளடக்கத்தன்மை மற்றும் சமூக நீதி” (பக். 9) என்ற உறுதிப்பாட்டுக்கு முரணாக உள்ளது. நமது பாடப்புத்தகங்களில் இத்தகைய உள்ளடக்கம் தேவையா?
தரம் 9 இன் முடிவில் நடைபெறுவதற்கு முன்மொழியப்பட்ட “தொழில் ஆர்வத் தேர்வு” மிகவும் பிரச்சினைக்குரியது. 14 வயதிலேயே குழந்தைகளை தங்களின் தொழில் பாதையைத் தேர்ந்தெடுக்க வழிநடத்துவது பொருத்தமற்றது; குறிப்பாக, மேல்நிலை கல்விக்கு அப்பாலான தொழில்முறை பாதைகள் இன்னும் போதியளவில் வளர்ச்சியடையாத நிலையில், தமது தொழில் பாதைகளைத் தீர்மானிக்கும் கல்வித் தெரிவுகளை மாணவர்களை மேற்கொள்ளச் சொல்லுவதற்கு முன், மாணவர்கள் தங்கள் ஆர்வங்களை ஆராய்வதற்கு அவர்களுக்குப் போதிய நேரம் வழங்கப்பட வேண்டும்; குறிப்பாக இலங்கையில் தொழில்கள் தர ரீதியாக வரிசைப்படுத்தப்படும் நிலையில் இது மிகவும் முக்கியம். மேலும், பெற்றோரின் தொழில் அல்லது பொருளாதார நிலை காரணமாக சில வகையான பின்னணிகளிலிருந்து வரும் மாணவர்கள் திட்டமிட்டு குறிப்பிட்ட கல்விப் பாதைகளுக்குள் தள்ளப்படாமல் இருப்பதற்காகவும், தொழில் பாதைகள் குறித்த பாலின அடிப்படையிலான பொதுமைப்படுத்தப்பட்ட புரிதல்களால் அவர்கள் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதற்காகவும், பாடத்திட்டம் தொழில்கள் மற்றும் தொழில்முறைகள் குறித்த முற்கற்பிதக் கருத்துக்களை நிராகரிக்கும் வகையில் அமைவது அவசியம்.
இந்த பாடத்திட்டத் தொகுதிகள் டிஜிட்டல் கல்வியறிவையும் புதிய தொடர்பாடல் தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயன்படுத்துவதனையும் ஊக்குவிக்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, இது முன்னேற்றம் மிக்கதும் காலத்திற்கேற்றதுமான ஒரு முயற்சியாகத் தோன்றுகிறது. ஆனால், தொழிநுட்பத்தினை அணுகுவதற்கான வாய்ப்புக்கள், டிஜிட்டல் மூலம் வழங்கப்படும் உள்ளடக்கத்தின் தரம், வயதுக்கேற்ற தன்மை போன்ற பல அம்சங்கள், டிஜிட்டல் பயன்பாட்டை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளுவதற்கு மாறாக, அது குறித்து நாம் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகின்றன. அனைத்து ஆசிரியர்களும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை நெறிமுறையுடனும், பொறுப்புடனும் பயன்படுத்தத் தெரிந்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பல பாடசாலைகளில் அடிப்படை வசதிகளே இல்லாத நிலையில், டிஜிட்டல் ரீதியிலான சமூகப் பிளவுகள் தீவிரமாக இருக்கும். அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் சாதனங்களை வழங்குவது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது; இதன் சுமை பெற்றோர் மீதே வீழ்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இத்தகைய பிரச்சினைகள், வளம் நிறைந்த பாடசாலைகளுக்கும் பிற பாடசாலைகளுக்கும் இடையில் டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் கல்விக்கான அணுகல் போன்ற விடயங்களில் இருக்கும் இடைவெளியை மேலும் பெருப்பிக்கும்.
பொதுக் கல்வி பாடத்திட்டத்தை எண்ணக்கரு ரீதியாக வடிவமைத்தல், உருவாக்குதல், எழுதுதல் மற்றும் மதிப்பாய்வு செய்தல் ஆகிய பொறுப்புகள் தேசிய கல்வி நிறுவகத்துக்கு உரியவை. நாட்டின் பொதுக் கல்வி அமைப்பை மேம்படுத்தும் உயரிய நோக்கத்துடன் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது போதிய வசதிகளும், பணியாளர்களும் இல்லாததாகவும், பாடத்திட்டங்களையும் பாடப்புத்தகங்களையும் எழுதவும் உருவாக்கவும் மதிப்பாய்வு செய்யவும் தேவையான அனுபவமும் நிபுணத்துவமும் உள்ளவர்களைக் போதியளவில் கொண்டிராததாகவும் உள்ளது. தேசியக் கல்வி நிறுவகத்தின் கட்டமைப்பு மற்றும் அதனது பொறுப்புக்கள் குறித்து மறுபரிசீலனை செய்து, அந்த நிறுவனத்துக்கு புதுமூச்சு அளிக்க வேண்டிய அவசியம் இப்போது தெளிவாகியுள்ளது.
இவ்விடயங்களை கருத்தில் கொண்டு, தரம் 6 இற்கான கல்வி மறுசீரமைப்புகளின் நடைமுறைப்படுத்தலை 2027க்கு ஒத்திவைக்க அமைச்சரவை எடுத்த சமீபத்திய முடிவு வரவேற்கத்தக்கது. முன்மொழியப்பட்ட பொதுக் கல்வி மறுசீரமைப்புகள், எதிர்க்கட்சிகள், ஆசிரியர் மற்றும் மாணவர் சங்கங்களிடமிருந்து கடும் எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளன. அதில் பெரும்பகுதி, சீர்திருத்தச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையும் கலந்தாலோசனையும் இல்லாமை குறித்த நியாயமான விமர்சனங்களாகவும், சில உள்ளடக்கத்தின் தரம் மற்றும் சாரம் குறித்ததாகவும் உள்ளன. அதே நேரத்தில், இந்த எதிர்ப்புகளுக்குள் கல்வி அமைச்சர் மீது பாலின அடிப்படையிலான, பெண்களை இழிவுபடுத்தும் தாக்குதல்களும் இடம்பெற்றிருக்கின்றன; அவை மிகவும் பிரச்சினைக்குரியவை. இருப்பினும், புதிய பாடத்திட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளை, கல்வித் துறையையும் அரசினையும் நீண்டகாலமாகப் பாதித்து வரும் கட்டமைப்புசார் சிக்கல்களின் பிரதிபலிப்பாகவே நாங்கள் பார்க்கிறோம். இவை குறித்து விளங்கிக்கொள்ளும் போது, இவற்றைப் பழைய பாடத்திட்டத்தில் இருந்த தவறுகளில் இருந்தும் சந்தேகத்திற்குரிய உள்ளடக்கங்களில் இருந்தும் தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது; பழைய பாடத்திட்டம் கூட கல்விக்கான அரச நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டதனாலும், வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளினாலும், அதன் விளைவாக அரச நிறுவனங்கள் பலவீனமடைந்தமையினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. கல்வி மறுசீரமைப்புகளின் பொறுப்பு தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இருப்பதால், கல்வி மறுசீரமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட வலுவான ஜனநாயகச் செயல்முறையும், முந்தைய மறுசீரமைப்பு முயற்சிகளில் புறக்கணிக்கப்பட்ட விடயங்களுக்கு உரிய கவனமும் தற்போதாவது வழங்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
இந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, கீழ் கையொப்பமிட்டுள்ள நாங்கள், அரசாங்கத்திடம் அவசரமாக பின்வருவனவற்றை கோருகிறோம்:
-
- ஆரம்பநிலை உட்பட, புதிய பாடத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலை ஒத்திவைத்து, அதை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
- நாடெங்கும் பொதுச் செயலமர்வுகளையும், கூட்டங்களையும் நடத்தி, கல்வி மறுசீரமைப்புகள் குறித்து ஆலோசனைமிக்க செயல்முறையை முன்னெடுக்க வேண்டும்.
- அரசின் கல்வி அமைப்பின் மொத்த நிறுவன கட்டமைப்பையும் மறுபரிசீலனை செய்து, அதன் வேறுபட்ட கூறுகளுக்கிடையே அதிக ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும்.
- தேசியக் கல்வி நிறுவகத்தின் பொறுப்புக்களை மறுபரிசீலனை செய்து, திறந்த மற்றும் வெளிப்படையான செயல்முறை மூலம், வெளிவாரி அறிஞர்களை நியமித்து, பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தக உள்ளடக்கங்கள் குறித்து ஆலோசித்து மதிப்பாய்வு செய்யும் வகையில் அதன் திறனை வலுப்படுத்த வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கையினையும் பாடத்திட்டத்தினையும் தொடர்ந்து திருத்தம் செய்யக்கூடிய (live) ஆவணங்களாகக் கருதி, கொள்கை உருவாக்கம் மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டில் ஒத்திசைவு உருவாக்க இடமளிக்க வேண்டும்; இதன் மூலம் பாடத்திட்டம் கொள்கையுடன் ஒத்திசைவடைய உறுதி செய்ய வேண்டும்.
- மொழிப் பாடங்களைத் தவிர்ந்த பிற பாடங்களின் பாடப்புத்தகங்கள், ஆரம்ப கட்டத்திலேயே சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வரைவு வடிவில் வெளியிடப்பட வேண்டும்; இதன் மூலம் அனைத்து சமூகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் மற்றும் மதிப்பாய்வாளர்கள் தொடக்கத்திலிருந்தே ஆய்வு மற்றும் திருத்தச் செயல்முறையில் பங்கேற்க முடியும்.
- வளங்களின் சமமற்ற பகிர்வு, ஆசிரியர் பயிற்சி தேவைகள், மாணவர் தேவைகள் போன்ற நடைமுறைப்படுத்தல் சிக்கல்கள் மற்றும் கல்வித் துறையின் எதிர்கால வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளை கையாள ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.
கையொப்பமிடுபவர்கள்:
A.M. Navaratna Bandara, formerly, University of Peradeniya
Ahilan Kadirgamar, University of Jaffna
Ahilan Packiyanathan, University of Jaffna
Arumugam Saravanabawan, University of Jaffna
Aruni Samarakoon, University of Ruhuna
Ayomi Irugalbandara, The Open University of Sri Lanka.
Buddhima Padmasiri, The Open University of Sri Lanka
Camena Guneratne, The Open University of Sri Lanka
Charudaththe B.Illangasinghe, University of the Visual & Performing Arts
Chulani Kodikara, formerly, University of Colombo
Chulantha Jayawardena, University of Moratuwa
Dayani Gunathilaka, formerly, Uva Wellassa University of Sri Lanka
Dayapala Thiranagama, formerly, University of Kelaniya
Dhanuka Bandara, University of Jaffna
Dinali Fernando, University of Kelaniya
Erandika de Silva, formerly, University of Jaffna
G.Thirukkumaran, University of Jaffna
Gameela Samarasinghe, University of Colombo
Gayathri M. Hewagama, University of Peradeniya
Geethika Dharmasinghe, University of Colombo
H.Abdul Rauf, South Eastern University of Sri Lanka
Sriyananda, Emeritus Professor, The Open University of Sri Lanka
Hasini Lecamwasam, University of Peradeniya
(Rev.) J.C. Paul Rohan, University of Jaffna
James Robinson, University of Jaffna
Kanapathy Gajapathy, University of Jaffna
Kanishka Werawella, University of Colombo
Kasun Gajasinghe, formerly, University of Peradeniya
Kaushalya Herath, formerly, University of Moratuwa
Kaushalya Perera, University of Colombo
Kethakie Nagahawatte, formerly, University of Colombo
Krishan Siriwardhana, University of Colombo
Krishmi Abesinghe Mallawa Arachchige, formerly, University of Peradeniya
Raguram, University of Jaffna
Liyanage Amarakeerthi, University of Peradeniya
Madhara Karunarathne, University of Peradeniya
Madushani Randeniya, University of Peradeniya
Mahendran Thiruvarangan, University of Jaffna
Manikya Kodithuwakku, The Open University of Sri Lanka
Muttukrishna Sarvananthan, University of Jaffna
Nadeesh de Silva, The Open University of Sri Lanka
Nath Gunawardena, University of Colombo
Nicola Perera, University of Colombo
Nimal Savitri Kumar, Emeritus Professor, University of Peradeniya
Nira Wickramasinghe, formerly, University of Colombo
Nirmal Ranjith Dewasiri, University of Colombo
Iyngaran, University of Jaffna
Pathujan Srinagaruban, University of Jaffna
Pavithra Ekanayake, University of Peradeniya
Piyanjali de Zoysa, University of Colombo
Prabha Manuratne, University of Kelaniya
Pradeep Peiris, University of Colombo
Pradeepa Korale-Gedara, formerly, University of Peradeniya
Prageeth R. Weerathunga, Rajarata University of Sri Lanka
Priyantha Fonseka, University of Peradeniya
Rajendra Surenthirakumaran, University of Jaffna
Ramesh Ramasamy, University of Peradeniya
Ramila Usoof, University of Peradeniya
Ramya Kumar, University of Jaffna
Rivindu de Zoysa, University of Colombo
Rukshaan Ibrahim, formerly, University of Jaffna
Rumala Morel, University of Peradeniya
Rupika S. Rajakaruna, University of Peradeniya
Jeevasuthan, University of Jaffna
Rajashanthan, University of Jaffna
Vijayakumar, University of Jaffna
Sabreena Niles, University of Kelaniya
Sanjayan Rajasingham, University of Jaffna
Sarala Emmanuel, The Open University of Sri Lanka
Sasinindu Patabendige, formerly, University of Jaffna
Savitri Goonesekere, Emeritus Professor, University of Colombo
Shamala Kumar, University of Peradeniya
Sivamohan Sumathy, formerly, University of Peradeniya
Sivagnanam Jeyasankar, Eastern University Sri Lanka
Sivanandam Sivasegaram, formerly, University of Peradeniya
Sudesh Mantillake, University of Peradeniya
Suhanya Aravinthon, University of Jaffna
Sumedha Madawala, University of Peradeniya
Tasneem Hamead, formerly, University of Colombo.
Thamotharampillai Sanathanan, University of Jaffna
Tharakabhanu de Alwis, University of Peradeniya
Tharmarajah Manoranjan, University of Jaffna
Thavachchelvi Rasan, University of Jaffna
Thirunavukkarasu Vigneswaran, University of Jaffna
Timaandra Wijesuriya, University of Jaffna
Udari Abeyasinghe, University of Peradeniya
Unnathi Samaraweera, University of Colombo
Vasanthi Thevanesam, Professor Emeritus, University of Peradeniya
Vathilingam Vijayabaskar, University of Jaffna
Vihanga Perera, University of Sri Jayewardenepura
Vijaya Kumar, Emeritus Professor, University of Peradeniya
Viraji Jayaweera, University of Peradeniya
Vishvika Selvaraj, University of Peradeniya
Yathursha Ulakentheran, formerly, University of Jaffna