Photo, TAMIL GUARDIAN

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காணும் முயற்சிகளிலும் வடக்கு, கிழக்கில்  எதிர்நோக்கப்படும் பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் முயற்சிகளிலும் தமிழ் அரசியல் கட்சிகள் ஐக்கியப்பட்டு ஒருமித்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் அவர்களின் நலன்களில் அக்கறைகொண்ட சிவில் சமூகம் மற்றும் அவதானிகளினதும்  இடையறாத வேண்டுகோளாக இருந்து வருகிறது.

ஆனால், தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் அது குறித்து அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை. ஏற்கனவே இருபது வருடங்களுக்கும் அதிகமான காலமாக பல்வேறு மாச்சரியங்களுக்கு மத்தியிலும் கூட நீடித்து நின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடந்த முற்பகுதியில் இல்லாமற் போய்விட்டது.

கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை அந்தக் கட்சிகள் ஐக்கியப்பட்ட ஒரு அமைப்பாக ஒருமித்து  முன்வைக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால், மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதில் தங்களுக்குப் பிரச்சினை இருக்கிறது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரடியாகவே உயர்ஸ்தானிகரிடம் கூறியதாகவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வொன்றை தனது கட்சி ஏற்றுக்கொள்வில்லை என்பதை அதற்கான காரணமாகக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

வேறுபாடுகள் இருந்தாலும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுப்பது அறிவார்ந்த செயற்பாடாக இருக்கும் என்று சந்தோஷ் ஜா தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம் கூறியதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியாவினால் கேட்கமுடியுமே தவிர அது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது இலங்கையர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவித்தன.

இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லி நெருக்குதலைக் கொடுக்கவேண்டும் என்பதே தமிழ் கட்சிகளின்  நிலைப்பாடாக இருக்கிறது. புதிய உயர்ஸ்தானிகரின் கருத்துக்கள் அது விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்தியிருக்கும் எனலாம்.

தமிழ் கட்சிகளின் ஐக்கியத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டையும் குறித்த அவரின் அறிவுரையே இலங்கை தமிழர்களுக்கான அவரின் பிரதான செய்தி.

ஆனால், அது தொடர்பில் தமிழ் மக்களின் நலன்கருதி விட்டுக்கொடுப்புடனும்  அக்கறையுடனும் பரிசீலிக்க தமிழ்க்கட்சிகள் முனைப்புக்காட்டுவாக இல்லை. மாறாக ஐக்கியம் என்பதை ஒவ்வொரு கட்சியும் அவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அணுகப்பார்க்கின்றன என்றே தெரிகிறது..

இரு வாரங்களுக்கு முன்னர்  இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மறுநாளே தமிழ் கட்சிகளை மீண்டும் ஐக்கியப்படுத்தப்போவதாகவும்  2009ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை மீட்டெடுக்கப்போவதாகவும் கூறினார்.

ஆனால், தமிழரசு கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டு கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சில தமிழ்க்கட்சிகள்  சிறிதரனின் அறிவிப்புக்கு அனுகூலமான சமிக்ஞையைக் காட்டவில்லை.

மாறாக, தாங்கள் ஏற்கெனவே அமைத்து வைத்திருக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் தமிழரசு கட்சி வேண்டுமானால் இணைந்துகொள்ளலாம் என்று கூறுகின்றன.

ஆயுதப்போராட்ட இயக்கங்களாக இருந்து பிறகு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த இந்த கட்சிகள் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கண்ட அனுபவங்கள் காரணமாக மீண்டும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தின் கீழான கூட்டமைப்பு ஒன்றில் பங்கேற்கத் தயாராயில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடுதற்கான அணுகுமுறை தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் ஏற்பட்ட வேறுபாடுகளை அடுத்து அந்தக் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருந்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பிலேயே நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்தன. அந்தத் தேர்தல்கள் நடைபெறவில்லை என்பது வேறுவிடயம்.

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம்தான் முக்கியம் என்றால் அந்தக் கூட்டணியில் சிறிதரன் தலைமையிலான தமிழரசு கட்சி இணைந்துகொள்வதே முறையானது என்று அதன் பேச்சாளரான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சிறிதரனிடம் இருந்து இது தொடர்பில் இதுவரையில் எந்த பிரதிபலிப்பும் வெளிவரவில்லை. பொதுச்செயலாளர் உட்பட கட்சியின் ஏனைய பதவிகளுக்கு தெரிவுகளைச் செய்ததில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை தொடர்பில் மூண்டிருக்கும் சர்ச்சையை அடுத்து கட்சியின் மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

மகாநாட்டை விரைவில் கூட்டி தலைவர் பதவியை முறைப்படி பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்தவாரம் சிறிதரனுக்கு நீண்டகடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதற்கு இன்னமும் அவர் பதில் அனுப்பியதாக தெரியவில்லை.

தனது கட்சிக்குள் தோன்றியிருக்கும் தகராறுகளைத் தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சிறிதரன் தற்போதைக்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சிக்குள் தனது நிலையை  வலுப்படுத்துவதற்கும் கட்சிக்குள் ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கும் முன்னதாக ஏன்தான் சிறிதரன் தமிழ் தேசிய கூட்மைப்பை 2009 ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டுவருவது குறித்து அவசரப்பட்டுப் பேசினாரோ தெரியவில்லை.

கொள்கை நிலைப்பாடுகள்

இது இவ்வாறிருக்க, தலைவர் தெரிவுக்குப் பிறகு சிறிதரன் வெளிப்படுத்தியிருக்கும் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து பார்ப்போம்.

அவர் ஊடகங்களுக்குக் கருத்துக்களை கூறியிருந்தபோதிலும், ஜனவரி 28 திருகோணமலையில் நடைபெறவிருந்த தமிழரசு கட்சியின் மகாநாட்டில் முறைப்படி பதவியை பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை வழிநடத்துவதற்கு கடைப்பிடிக்கப்போகும் கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மகாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் அந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையை அவரால் நிகழ்த்த முடியாமற்போய்விட்டது.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு 2010 பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றப் பிரவேசம் செய்த 56 வயதான  சிறிதரன் விடுதலைப் புலிகளின் தீவிரமான ஆதரவாளர். அதைப் பகிரங்கமாக சொல்வதற்கு ஒருபோதும் அவர் தயங்கியதில்லை. கடந்த 14 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவரும் அவர் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை அடிக்கடி கூறிவந்திருக்கிறார். அதற்காக அவர் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகளின் கடுமையான  கண்டனங்களுக்கும் ஆளாகி வந்திருக்கிறார்.

தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவான பின்னரும் கூட அவர் வெளியிட்ட கருத்துக்கள் விடுதலைப் புலிகளின் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆனால், ஆயுதப்போராட்டம் இல்லாத அரசியல் பாதையில் கட்சியை வழிநடத்துவதில் அவர் நாட்டம் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டின.

அண்மையில் தமிழ் கார்டியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் கூறிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தம் தீர்வாக அமையப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் சிறிதரன் உறுதியாக இருக்கிறார் என்பது தெரிகிறது.

ஒற்றையாட்சி வரையறைக்குள் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யப்போவதில்லை என்று கூறிய அவர் தமிழ் மக்களின் பயணம் சமஷ்டி முறையொன்றை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கியதே என்று குறிப்பிட்டார்.

தமிழர்களின் நிலம், மொழி மற்றும் கலாசார அடையாளங்களை அங்கீகரிக்கக்கூடிய வகையில் வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த தீர்வொன்றைக் காண்பதும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான ஒரு அரசியல் பாதையை வகுப்பதற்கு உதவுவதுமே தங்களது இலட்சியம் என்றும் அவர் கூறினார்.

மேலும், தாயகத்தில் உள்ள தமிழர்களையும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தையும் ஐக்கியப்படுத்தி அரசியல் பாதையொன்றை வகுப்பதில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுடன் இணைவது முக்கியமானது என்று குறிப்பிட்ட சிறிதரன் தமிழ் கட்சிகளின் ஐக்கியத்துக்கு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் தேசியவாத சக்திகளை ஐக்கியப்படுத்துவதிலும் சகல தமிழர்களுக்குமான ஒரு பாதையை வகுப்பதிலும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கு முக்கியமான வகிபாகம் இருக்கிறது என்றும் கூறினார்.

எல்லாற்றுக்கும் மேலாக  தங்களது பயணம் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து தொடங்கவேண்டும் என்று அவர் கூறியது முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும்.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்ட சக்திகள் உட்பட கடுமையான தேசியவாத உணர்வுடைய தனது ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அந்தக் கருத்துக்களை அவர் வெளியிட்டார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், தற்போது நடந்துமுடிந்திருப்பது ஒரு உட்கட்சித் தேர்தலேயாகும். தற்போதைய சூழ்நிலையில் சிறிதரனின் நிலைப்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து சுமார் 15 வருடங்கள் கடந்த நிலையில், இன்றைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் நிலைவரத்துக்கு மத்தியில் இலங்கை தமிழர்களின் பிரதான அரசில் கட்சியின் தலைவராக வந்திருக்கும் சிறிதரனுக்கு தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள சவால்களை முறையாக விளங்கிக்கொள்ளவேண்டிய தலையாய பொறுப்பு இருக்கிறது.

தமிழர்களின் மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டத்தில் உயிர்த் தியாகத்தைச் செய்த தலைவர்களையும் போராளிகளையும் நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்துவதும் கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளுடனேயே தமிழ் மக்களை கட்டிவைத்திருக்கக் கூடிய அரசியல் அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதும் வேறுபட்ட விவகாரங்கள்.

கடந்த காலப் போராட்டங்களின் நினைவுகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சிந்தனை என்பது அந்தப் போராட்டங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு மாறிவிட்ட சூழ்நிலைக்கு பொருத்தமான முறையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான தந்திரோபாயங்களை வகுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும்.

வெறுமனே உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கடந்த காலத்தைக் காவியம் போன்று நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதில் உள்ள பொருந்தாத்தன்மையில் இருந்து தமிழரசு கட்சியின் தலைவர் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும்.

ஆயுதப் போராட்டத்தில் மாத்திரம் நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட ஒரு இயக்கத்தின் அரசியல் கோட்பாடுகளை நாடாளுமன்ற அரசியலுக்குப் பிரயோகிப்பதில் உள்ள அறவே நடைமுறைச் சாத்தியமற்ற தன்மைபுரிந்து கொள்ளப்படவேண்டும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னரான காலப்பகுதியில் உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்கி அன்றைய தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களினால் வடக்கு, கிழக்கில் தமிழர்களை பிரமாண்டமான முறையில் அணிதிரட்டக் கூடியதாக இருந்ததைப் போன்று இன்று செய்வது இயலாத காரியம்.

இன்று தமிழ் மக்களின் தேவைகளும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் பெருமளவுக்கு மாறிவிட்டன. பெரும்பாலான தமிழர்கள் அதுவும் முக்கியமாக வடக்கு தமிழர்கள் மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்வது பற்றியே கனவுகண்டு கொண்டிருக்கிறார்கள்.

மண்ணில் நிலவும் உண்மையை பற்றிய பிரக்ஞை இன்றி நடைமுறைக்கு ஒவ்வாத தீவிரவாத சிந்தனையுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இயங்கும் குழுக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு வசதியாக அமையக்கூடிய சூழ்நிலையை தமிழ்ப் பகுதிகளில் தோற்றுவிக்கும் வகையிலான அணுகுமுறைகளும் செயற்பாடுகளும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏற்கனவே கட்டுப்படியாகாத போர் ஒன்றைக் கடந்து வந்து இன்னமும் கூட வழமை வாழ்வுக்குத் திரும்புவதற்கு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களை மீண்டும் இடர்பாடுகளுக்குள் தள்ளிவிடக்கூடாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்த காலச் சம்பவம் ஒன்றை நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு முன்னதாக 1975 ஆகஸ்ட் மாதம் என்று நினைவு. இலங்கையில் தனித்தமிழ்நாடு சாத்தியமா இல்லையா என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.தருமலிங்கத்துக்கும் (புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தையார்) சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைலர் என். சண்முகதாசனுக்கும் இடையில் விவாதம் ஒன்று சுன்னாகம் சந்தை மைதானத்தில் இடம்பெற்றது.

சுன்னாகம் அன்று கணிசமானளவுக்கு இடதுசாரிகளுக்குச் செல்வாக்கான பகுதியாக விளங்கியது. விவாதத்தின் நடுவராக தருமலிங்கத்தினதும் சண்முகதாசனினதும் ஆசிரியர் ஒறேற்றர் சுப்பிரமணியம் இருந்தார்.

ஒரு கட்டத்தில் சண்முகதாசன் தருமரை நோக்கி தனித்தமிழ்நாட்டை எந்த வழியில் அடையப்போகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு தருமர் எந்த வழி என்பது தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று பதிலளித்தார். மிகுந்த நகைச்சுவையுணர்வுடைய ஒறேற்றர் குறுக்கிட்டு தங்களது இயக்கத்தின் இரகசியம் என்று அவர் சொல்வதால் இரகசியத்தைக் கூறவேண்டும் என்று சண்முகதாசன் வலியுறுத்தக்கூடாது என்று கூறிவிவாதத்தை முடித்துவைத்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் அந்த இரகசியம் என்ன எனபதும் பிறகு தமிழர்களுக்கு நேர்ந்த அவலமும் கடந்த அரைநூற்றாண்டு வரலாறு.

இலக்கை அடைவதற்குத் தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமுடையதுமான எந்தவிதமான  சிந்தனையோ விளக்கப்பாடோ இன்றி மக்களின் உணர்ச்சிகளைக் கிளறிவிடும் அரசியல் முழக்கங்களைச் செய்த அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளினால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்கள் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.

இன்று சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல் தீர்வே தங்களது இலட்சியம் என்று கூறும் எமது தமிழ் அரசியல்வாதிகளில் எவராவது அந்தத் தீர்வை எவ்வாறு காண்பது என்பது பற்றி ஏதாவது சிந்தனை இருக்கிறதா? அதுவும் தருமர் அன்று கூறியதைப் போன்ற இரகசியமா?

இதற்குள் தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்து பயணத்தைத் தொடங்குவது பற்றி பேசுகிறார்.

குழந்தையாக இராமர் இருந்தபோது வானத்தில் உள்ள நிலாவைப்பிடித்து கையில் தந்தால்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்து அழுததாக ஒரு கதை உண்டு. தாயார் கோசலை எதுவும்  செய்யமுடியாமல் வசிஸ்ட்ட முனிவரின் உதவியை நாடவே அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு ஒரு கண்ணாடியை எடுத்துவந்து அதில் நிலாவைத் தெறிக்கவைத்து குழந்தை இராமரின் கையில் கொடுத்தாராம். அவரும் தனது கையில் நிலா கிடைத்துவிட்டது என்ற திருப்தியில் அழுகையை நிறுத்தி தாயார் உணவை ஊட்ட தாராளமாகச் சாப்பிட்டாராம்.

தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அன்று தமிழ் தலைவர்கள் முன்வைத்ததை பற்றி தருமருடனான அந்த விவாதத்தில் சண்முகதாசனே இந்த கதையையும் கூறினார்.

இன்று மீண்டும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழர்களுக்கு கண்ணாடியில் நிலாவைக் காட்டும் அரசியல் வேண்டாம்.

வீரகத்தி தனபாலசிங்கம்