Photo, THECOURTREPORTER
இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம், 2026 ஆகஸ்ட் 7 அன்று அரசியலமைப்பின் இருபத்திரண்டாவது திருத்தத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இந்த சட்டமூலம் ஆகஸ்ட் 18 அன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது விவாதத்தில் உள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்துதல் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எழும் கடும் அழுத்தங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஏனைய நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதையும் தனித்தனி நடவடிக்கைகள் மூலம் இரண்டு ஆண்டுகளால் உயர்த்த அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இக்கட்டுரை, முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களைச் சுற்றியுள்ள சில சர்ச்சைகளையும் கவலைகளையும் ஆராய்கிறது.
இலங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள பெருமளவிலான வழக்குகளின் தேக்கத்திற்குத் தீர்வு காண வேண்டியுள்ளது என்ற காரணத்தையே அரசாங்கம் இந்த அரசியலமைப்பு திருத்தத்திற்காக முன்வைக்கிறது. சுமார் 1.1 மில்லியன் வழக்குகள் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த வழக்குத் தேக்கம், நாட்டின் நீதித்துறை அமைப்புக்கும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பாரிய சவாலாக உள்ளது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் சரியான திசையிலான ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்ட திருத்தத்தின் இரண்டாவது அம்சம், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது வழக்குத் தேக்கத்தைக் குறைக்க உதவும். இருப்பினும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான முதல் அம்சம், உள்நாட்டு மற்றும் சர்வதேசத் தரப்பினரிடமிருந்து கணிசமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு, மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு முன்மொழிவிலிருந்தே உருவானது என்பதைக் குறிப்பிடுவது முக்கியம். ஆரம்பகட்ட முன்மொழிவு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மட்டுமே ஓய்வுபெறும் வயதை உயர்த்த முயன்றது. இம்முன்மொழிவு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியதுடன், தற்போதைய குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவருக்குப் பயனளிக்கும் முயற்சியாகவே விமர்சகர்களால் பார்க்கப்பட்டது. இம்முன்மொழிவின் பலவீனம் உடனடியாக வெளிப்படையாகத் தெரிந்தது. இதன் விளைவாக, அரசாங்கம் பின்னர் அனைத்து அல்லது பெரும்பாலான நீதிபதிகளையும் உள்ளடக்கும் வகையில் அதை விரிவுபடுத்தியது. இருப்பினும், இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மட்டும் உயர்த்துவது, நீதிமன்ற வழக்குத் தேக்கத்திற்கு அர்த்தமுள்ள வகையில் தீர்வுகாண அரசாங்கத்திற்கு உதவுமா? இதற்கான பதில் தெளிவாக ‘இல்லை’ என்பதேயாகும். எனவே, தற்போதைய முன்மொழிவின் நோக்கம் ஓரளவு தெளிவுபடுத்தப்பட்ட பின்னரும் கூட, அரசாங்கத்தின் வெளிப்படையான நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்த விமர்சகர்களுக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அரசாங்கத்திற்குச் சாதகமாகப் பார்க்கப்படும் நீதிபதிகளைத் தக்க வைத்துக் கொள்வதே இதன் மறைமுக நோக்கம் என்று வாதிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் நிலவுகின்றன.
நீதிமன்ற வழக்குத் தேக்கம் என்பது அமைப்பில் உள்ள குறைபாடுகள் உட்பட பல காரணிகளின் விளைவு என்றும், எனவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதன் மூலம் மட்டும் இதற்குத் தீர்வு காண முடியாது என்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பது வழக்குகள் விரைவாக முடிவுக்கு வர வழிவகுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மிக முக்கியமாக, இம்முன்மொழிவைச் சுற்றியுள்ள சர்ச்சை, இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் குறித்த பொதுமக்களின் பார்வையை ஏற்கனவே ஓரளவு பாதித்துள்ளது. எதிர்கால நீதித்துறைத் தீர்ப்புகள், குறிப்பாக அரசாங்கத்திற்குச் சாதகமான உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், அவற்றின் சட்டப்பூர்வ நியாயங்களைத் தாண்டி, சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்படலாம்.
இத்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களுக்கும் அரசாங்கத்தின் வெளிப்படையான நோக்கத்திற்கும் இடையிலான தொடர்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளது. “வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தவும் நீதித்துறை அமைப்பின் திறனை மேம்படுத்தவும் இத்திருத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் வெளிப்படையான நோக்கம் இருந்தபோதிலும், முன்மொழியப்பட்ட ஓய்வுபெறும் வயது நீடிப்புக்கும் கூறப்பட்ட நோக்கங்களுக்கும் இடையிலான தொடர்பு தெளிவாக இல்லை” என்று BASL தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல, முன்மொழியப்பட்ட மாற்றங்கள் குறித்து அரசாங்கத்திற்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்த நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மார்கரெட் சட்டர்த்வைட் (Margaret Satterthwaite), “நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள எந்தவொரு திருத்தமும் வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, நடுநிலையான, கலந்தாலோசிக்கப்பட்ட மற்றும் விரிவான நீதித்துறை சீர்திருத்தச் செயன்முறை மூலமே முன்னெடுக்கப்பட வேண்டும் என மரியாதையுடன் பரிந்துரைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சரியான கலந்தாலோசனை மற்றும் தேவையான பாதுகாப்புகள் இன்றி, நீதிபதிகளின் பதவிக்காலத்தில் செய்யப்படும் எந்தவொரு தற்காலிக நிரந்தர மாற்றமும், நீதி நிர்வாகத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அரித்து, நீதித்துறையின் சுதந்திரத்திற்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இக்கவலைகள், தனிமைப்படுத்தப்பட்ட நிறுவன மாற்றங்களை விட நீதித்துறை அமைப்பின் விரிவான சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. வெலிக்கடை, மஹர மற்றும் நீர்கொழும்பில் அண்மையில் ஏற்பட்ட சிறைக் கலவரங்கள், பல கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் மரணத்திற்கு வழிவகுத்ததன் மூலம் இத்தகைய சீர்திருத்தத்தின் அவசரம் மேலும் வெளிப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசியல் பார்வையில், முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின் முதன்மையான பிரச்சினை அது மக்களுக்குக் கொடுக்கும் செய்தியில்தான் உள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது என்பது இன்று இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் அவசரமான சவால் அல்ல. உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவு, பாதாள உலக வன்முறைகள், போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பிற குற்றச் செயல்கள் அன்றாட வாழ்க்கையைப் கணிசமாகப் பாதித்துள்ளன என்பதுடன் அரசாங்கத்தின் அதிக ஒருமுகப்பட்ட நடவடிக்கையைக் கோருகின்றன. பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதிற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, அதன் கொள்கை முன்னுரிமைகள் குறித்து வாக்காளர்களுக்கு தவறான செய்தியை வழங்கக்கூடும். மிக முக்கியமாக, இத்தகைய கவனம், முன்மொழியப்பட்ட திருத்தத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு மறைமுக நோக்கம் உள்ளது என்ற எண்ணத்தை வலுப்படுத்தக்கூடும்.
குறிப்பிடத்தக்க வகையில், அதன் 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வளமான நாடு, அழகான வாழ்க்கை என்பதில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக NPP உறுதியளித்தது. NPP இன் மையக் கருவாக இருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP), நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விமர்சித்தும் எதிர்த்தும் நீண்ட வரலாறு கொண்டது என்பதைக் கருத்தில் கொண்டால், இந்த வாக்குறுதி ஆச்சரியமளிப்பதில்லை. அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றிருந்தபோதிலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னும் எடுக்கவில்லை. அடுத்தடுத்து வந்த அரசியல் கட்சிகளும் இதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விமர்சித்து, அதை ஒழிப்பதாக உறுதியளித்து, அதிகாரத்திற்கு வந்தவுடன் அதைத் தக்க வைத்துக் கொண்டன. JVP/NPP யும் இப்போது அதே பாதையைப் பின்பற்றுவதாகத் தோன்றுகிறது, ஏனெனில் அதுவும் ஜெயவர்த்தன அரசியலமைப்பு வழங்கும் அரசியல் நன்மைகளை உணர்ந்து கொண்டிருக்கலாம். வாக்குறுதியளித்த அடிப்படை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை நோக்கி குறைந்த முன்னேற்றத்தையே அடைந்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது தொடர்பான அரசியலமைப்புத் திருத்தத்தைப் பின்தொடர்வது போன்ற தெளிவான முரண்பாடு, முன்மொழியப்பட்ட திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனங்களின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.
முன்மொழியப்பட்ட திருத்தம், தமிழ் சமூகத்தின் நீண்டகால அரசியல் கவலைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. 2024ஆம் ஆண்டு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை ஒரு வருடத்திற்குள் நடத்துவதாக NPP உறுதியளித்தது. ஆயினும், இவ்வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவொரு அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் தொடர்ந்து இயங்காமல் உள்ளன. இச்சூழலில், மாகாண சபை பிரச்சினையைத் தீர்க்காமல் விட்டுவிட்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் திருத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு, தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அவர்களின் அரசியல் குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு குறித்து கவலையை ஏற்படுத்த வேண்டும். இருப்பினும், வழக்கம்போல, தமிழ் அரசியல் கட்சிகள் இத்திருத்தம் மீதான விவாதத்தைப் பயன்படுத்தி இந்த பரந்த பிரச்சினையின் பால் கவனத்தை ஈர்க்க இதுவரை தவறிவிட்டன. இந்த சர்ச்சை, தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சபைகளை மீண்டும் அமைப்பதற்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமன்றி, மாகாண சபை முறையை சீர்திருத்துவது மற்றும் அதிகாரங்களை மையத்திலிருந்து வெளியே பகிர்ந்தளிப்பது குறித்தான விவாதத்தைப் புதுப்பிப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கக் கூடும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதை நியாயப்படுத்த அரசாங்கம் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று, எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கே வினையாக மாறக்கூடும். நீதித்துறையில் உள்ள பணியாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண அனுபவம் வாய்ந்த நீதிபதிகளைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என அரசாங்கம் வாதிடுகிறது. இருப்பினும், இதே நியாயத்தை கல்வி, இராணுவம் மற்றும் பொதுச் சேவையின் உயர்மட்டப் பிரிவுகள் உட்பட இலங்கையின் பிற துறைகளுக்கும் எளிதாகப் பயன்படுத்த முடியும். பல்கலைக்கழக பேராசிரியர்கள் இதற்குச் சரியானதொரு உதாரணம். பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வுபெறும் வயது தற்போது 65 ஆக உள்ளது. விரிவுரை, ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளில் அவர்களின் நிபுணத்துவம் பொதுவாக அனுபவத்துடன் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், பல பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் முனைவர் பட்டம்/ இறுதிப் பட்டம் பெறாத இளம் விரிவுரையாளர்களாலேயே கற்பிக்கப்படுகின்றன. அனுபவமும் பணியாளர் பற்றாக்குறையும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதை நியாயப்படுத்துகிறது என்றால், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அல்லது பிற வகை அரச ஊழியர்கள் இதேபோன்ற கோரிக்கையை முன்வைப்பதைத் தடுப்பது எது? தற்போதைக்கு, இது ஒரு சாத்தியக்கூறாக மட்டுமே உள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தம் பொதுச் சேவையின் பிற துறைகளிலிருந்தும் இதுபோன்ற கோரிக்கைகளை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இறுதியாக, முன்மொழியப்பட்ட திருத்தம் ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் முன் வரும். தற்போதைய அரசியலமைப்பின் கீழ், பாதுகாக்கப்பட்ட சில விதிகளைப் பாதிக்கும் திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மட்டுமன்றி, மக்கள் தீர்ப்பு மூலமாக மக்களின் ஒப்புதலும் தேவைப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தம் இந்த வகைக்குள் வருகிறதா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இது இரண்டு முக்கியமான பிரச்சினைகளை எழுப்புகிறது. முதலாவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்களே நேரடியாகப் பயனடையும் ஒரு திருத்தத்திற்குப் பொருந்தக்கூடிய அரசியலமைப்புத் தேவைகளைத் தீர்மானிக்க அழைக்கப்படுவார்கள். இது ஒரு தெளிவான முரண்பாட்டை உருவாக்குகிறது மற்றும் இவ்விடயத்தில் நீதிமன்றம் இறுதி முடிவெடுப்பவராகச் செயல்படுவதன் பொருத்தப்பாடு குறித்து நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொது வாக்கெடுப்பு மூலம் மக்கள் இறுதி முடிவை எடுக்க அனுமதிப்பதற்கு வலுவான நியாயம் உள்ளது. இத்திருத்தத்திற்கு அத்தகைய பொது ஒப்புதல் தேவை என்று நீதிமன்றம் தீர்மானிக்குமா?
இரண்டாவதாக, நீதிமன்றத்திற்கு பொது வாக்கெடுப்பு தேவைப்பட்டாலும், அந்த விடயத்தை வாக்காளர்களிடம் கொண்டு செல்ல அரசாங்கம் போதுமான தன்னம்பிக்கையுடன் இருக்குமா? அண்மைய தகவல்கள் அரசாங்கத்திற்கான ஆதரவு சரிந்து வருவதாகப் பரிந்துரைக்கின்றன. நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் இதுவரை காட்டி வரும் தயக்கத்தையும் இது விளக்கக்கூடும். இனி என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கலாநிதி எஸ். ஐ. கீதபொன்கலன்
மேரிலாந்தில் உள்ள சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தில் (Salisbury University, Maryland) முரண்பாடு தீர்வுத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் முன்னதாக இலங்கையின் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
22nd Amendment: A Problem? என்ற தலைப்பில் Colombotelepraph இல் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.