பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குவதற்கு உபயோகிக்கப்பட்டு வந்ததும், அண்மைக் காலம் வரை கொழும்புப் பகுதியில் ஒரு பெரும் அழகான காலனித்துவக் காலத்துக் கட்டடத்தில் இயங்கி வந்த காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் (Office Of Missing Persons) அதன் முக்கியத்துவத்தை இழந்து, தற்போது கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் ஒரு சிறிய அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

முன்னர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஒரு பகுதியாக இந்த அலுவலகம் இருந்தது. அந்த அமைச்சு இப்போது இல்லை. இந்த மாதத்தின் பொதுத் தேர்தலின் பின்னர், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் அமைசர் அலி சப்ரியின் கீழான நீதி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய ஐக்கியத்துக்கான அலுவலகம் (ONUR), இழப்பீடு வழங்கும் அலுவலகம் மற்றும் குற்றங்களில் பாதிப்புற்றவர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்புக்கான அதிகாரசபை போன்ற நல்லிணக்கத்திற்கான ஏனைய பொறிமுறைகளும் கூட ஜனாதிபதி கோட்டபாயவின் தனிப்பட்ட சட்டத்தரணியின் கவனிப்பில் இடப்பட்டுள்ளன.

பித்தளை மற்றும் பத்திக் பொருட்களுக்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும், இம்முறை அமைச்சர்களின் கவர்ச்சிகரமான பெயர் பட்டியலில் நல்லிணக்கம் மற்றும் ஒருங்கிணைப்புக்கான அமைச்சு எங்கேயும் காணப்படவில்லை.

இவ்விதமான அச்சுறுத்தும் சமிக்கைகளுடன், நிலைமாறும் நீதிப் பொறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட நல்லிணக்கச் செய்முறைகளுக்கு, குறிப்பாக காணாமல்போனோர் தொடர்பான அலுவலக்திற்கு என்ன எதிர்பார்ப்பு உள்ளது? ஒரு வலுவான செயற்பாட்டு அமைப்பாக அது தப்பிப் பிழைக்குமா அல்லது இலங்கை தொடர்ந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச சமூகத்தைத் திருப்திப் படுத்துவதற்கு வெறும் வார்த்தைச் சேவையை அளிக்கும், பற்களில்லாத, ஒரு வெள்ளையடிக்கும் கருவியாக அது முக்கியத்துவம் இழக்கப்பட்டு மூலையில் வீசப்படுமா?

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் ரூ.1.3 பில்லியன் ஒதுக்கீட்டுடன் 2018இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன் நாட்டில் அனைத்து அரசியல் மோதல்களிலிருந்தும் உருவாகிய காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கு அது ஆணைப்படுத்தப்பட்டது. அது ஒரு சட்ட ரீதியான அதிகார அமைப்பாக இல்லாதிருந்த போதிலும், பரந்த புலன்விசாரிக்கும் அதிகாரம் மற்றும் தனிநபர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைப்பாணை செய்வதற்கும் முடியுமாக இருந்தது. அது ஒரு மனிதாபிமான, உண்மை கண்டறியும் பொறிமுறையாகவும் மற்றும் வழக்குத் தொடுப்பதற்கான பணியற்றதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

அதன் இரண்டரை வருடகால செயற்பாட்டில், அது காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் நாடு முழுவதிலுமாக தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடியலையும் உறவினர்களிடமிருந்து பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகளைக் கேட்டதுடன் அவர்களது கரிசனைகளைக் கவனமெடுப்பதற்கு அரசின் விருப்பு பற்றிய அவர்களது சந்தேகங்களை நீக்குவதற்கும் முனைந்தது.

“காணாமல்போனமை தொடர்பாக அரசு எந்தவிதமான பதில்களையும் வழங்காததன் விளைவாக, சில குடும்பங்களில் காணாமல்போனவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. குடும்ப உறுப்பினர்கள் இனியும் துயர் கொள்வதற்கு முடியாமலும் மற்றும் அதற்கு முடிவு கட்டுவதற்கும் இயலாதிருந்தனர் என்பதுடன் சிலர் காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்களை நினைவுகூர்ந்து, கௌரவித்து, அவர்கள் பெயரில் தானமளித்தலை மேற்கொள்வதா என நிச்சயமற்று மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக காத்துமிருந்துள்ளனர்” என காணாமல்போனவர்களுக்கான அலுவலகம் அதன் இரண்டு வருட செயற்பாட்டைக் குறிக்கும் முகமாக வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது. பல சம்பவங்களில், வருமானத்திற்கு எந்த வழியுமின்றி உள்ளதுடன் தங்களது பயனற்ற தேடுதலைத் தொடர்வதற்குமான கட்டாயத் தேவையிலும் இட்டு குடும்பத் தலைவர்கள் மனைவிகள்,  பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களை தவிக்க விட்டுவிட்டு காணாமற் போயுள்ளனர் என அது குறிப்பிட்டது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் மனிதப் புதைகுழிகளெனச் சந்தேகப்படும் சம்பவங்களில்  நீதவான் விசாரணைகளில் உதவியுள்ளதுடன் காணாமற்போதல்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வழக்காடுவதற்காகவும் மற்றும் மனித எச்சங்களை இனங்காணுதல் மற்றும் தடுத்து வைத்தல் நடைமுறைச் செய்முறைகளுக்கான சட்டச் சீர்திருத்தங்களுக்குமாக வாதிட்டது.

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.6000 ஐ இடைக்கால நிவாரணமாக வழங்குவதற்கு பரிந்துரைத்ததுடன், அது 2019 இறுதி வரை அமுல்படுத்தப்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்றின் போது, நிவாரணப் பொறிமுறைகளில், காணாமல்போனோர்களின் உறவினர்களையும் பயனாளிகாளாக உள்வாங்கிக் கொள்வதற்கு அரசாங்கத்தை அது வலியுறுத்தியது.

இலங்கையில் காணாமல்போதல்கள் நிகழ்ந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதற்காக அரசாங்கத்தின் கடப்பாட்டின் ஓர் அங்கீகரித்தலாக வலிந்து காணாமபோதல்கள் தொடர்பான சர்வதேச தினத்தை காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் நினைவு கூர்ந்தது.

நடவடிக்கைகளின் போது காணாமல்போனவர்களாகக் கருதப்படுகின்ற ஆயுதப்படைகளின் உறுப்பினர்களின் ஒரு பெயர்ப்பட்டியலை அலுவலகம் தயார் செய்து அதில் உள்ளடக்கப்படுவதற்காக  தங்களது காணாமல்போன உறவினர்களின் விபரங்களைத் தருவதற்கு குடும்பங்களை அது கேட்டுக் கொண்டது.

“காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் பயனறுதியாக இருப்பதற்கு, அது அரசாங்கத்தினதும் மற்றும் அரச முகவர்களினதும் தாராளமான ஒத்துழைப்பு தேவைப்படுத்துகிறது என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். காணாமல்போனவர்கள் மற்றும் காணாமலாக்கப்பட்டோர்களின் எதிர்பார்ப்புகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் குடும்பங்களுடன் பணியாற்றுவதற்கும் அவர்கள் சார்பில் வாதுரைப்பதற்கும் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் உறுப்பினர்கள் பற்றுறுதி கொண்டுள்ளனர்” என காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கூற்றுப்படி, ஜூன் 28 அன்று தொலைக்காட்சியில் பேசுகையில், காணாமல்போனோர் தொடர்பான அலுவலகச் சட்டமூலம் எந்த விவாதத்திற்கும் இடம் விடாது நாடாளுமன்றித்தின் ஊடாக திணிக்கப்பட்டது. அழைப்பாணைகளை விடுப்பதற்கு, சாட்சிகளை விசாரணை செய்வதற்கு மற்றும் சான்றுகளைத் திரட்டுவதற்கும் முடியுமான விசாரணை அதிகாரம் கொண்ட ஓரமைப்பு” என அவர் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை விபரிக்கிறார்.

2018இல் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட, வலிந்து காணாமல்போதல்களைத் தடுப்பதற்கான ஒரு சாதனமான, வலிந்து காணாமற் போதல்களிலிருந்து அனைத்து நபர்களினதும் பாதுகாப்புக்கான சர்வதேச உடன்படிக்கை, “அது, காணாமல்போன நபர்களினது இடங்களைக் கண்டறிவதற்கு வசதியளிப்பதற்கானதல்ல. ஆனால், ஆயுதப் படை உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கானது” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் விபரிக்கப்பட்டது.

ஜனவரியில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடனான ஒரு சந்திப்பில், காணாமல்போயுள்ள ஆயிரக்கணக்கானோர் உண்மையிலேயே இறந்து போய்விட்டார்கள் என்று யதேச்சையாகக் தெரிவித்தார். ஆனால், அவர்கள் எவ்விதம் காணாமல்போனார்கள், எவ்வாறு அவர்கள் இறந்தனர்? சான்றுகள் எங்கே? இதற்கான பதிவுகள் எங்கே? நாட்டின் அனைத்து மதங்களையும் சேர்ந்த இந்த ஆயிரக்கணக்கான காணாமல்போயுள்ள பிரஜைகள் “உண்மையிலேயே இறந்துவிட்டனர்” எனக் கூறி அவர்களின் தலைவிதியை இலங்கை வெறுமனே தட்டிக் கழித்து விட முடியுமா?

“1980களின் பிற்பகுதியிலிருந்து 60,000 இற்கும் 100,000 இற்குமிடையிலான நபர்கள் காணாமலாக்கப்பட்டிருந்தனர். இது உலகிலேயே அதிக எண்ணிக்கையில் காணாலாக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியது. காணமால்போனவர்களது தலைவிதி மற்றும் அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்ற உண்மையை அரசு மறைப்பதுடன், நாட்டின் ஆயுத மோதலின் இறுதியில் அரச படைகளிடம் சரணடைந்தவர்களின் பெருமெண்ணிக்கையிலான காணாமற் போதல் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கான ஒரு தெளிவான சுட்டிக்காட்டுதலாக உள்ளது” என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியது.

1983 மற்றும் 2009 இற்கிடையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல்போதல்களை விசாரணை செய்த பரணகம ஆணைக்குழு, 21,000 முறைப்பாடுகளை மட்டுமே பெற்றுக்கொண்டதுடன், 1988 மற்றும் 1997 இடையில் மேற்கு, தென் மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல்போதல்களை விசாரித்த வலய ஆணைக்குழு 8,739 முறைப்பாடுகளை மட்டும் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கும் நிலையுடன், காணாமற் போனவர்கள் தொடர்பான அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் மிகவும் குறைவானது.

மெக்சிக்கோவிலிருந்து சிரியா வரைக்கும் மற்றும் பங்களாதேஷிலிருந்து லாவோஸ் மற்றும் பொஸ்னியா, ஹேர்சிகொவினாவிலிருந்து ஸ்பெயின் வரையென வலிந்து காணாமலாக்கப்பட்டமை என்பது உலகம் பரந்த ஒரு நிகழ்வாக உள்ளது. “அவை பொதுவாக உள்நாட்டு மோதல்களில், குறிப்பாக அரசியல் எதிரிகளை அல்லது ஆயுதம் தாங்கிய எதிர்ப்புக் குழுக்களை நசுக்கி, அடக்குவதற்கு முயலும் அரசாங்கங​களினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன”.

ஆர்ஜெனரீனாவில், புவனர்ஸ் அயர்ஸின் பிளாசா டி மாயோ எனுமிடத்தில் தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் கூடி, 1976 – 1983 இடையிலான காலப்பகுதியிலிருந்து ஆர்ஜென்ரீனாவின் இராணுவ ஆட்சியாளர்களால் களவாடப்பட்ட தங்களது பிள்ளைகளை வேண்டி வாராந்தம் வியாழக்கிழமைகளில் நடத்தும் மெழுகுவர்த்ததிப் போராட்டம், முடிவின்றித் தொடரும் துயரிற்கான ஒரு சாட்சியாக உள்ளது.

இலங்கையில், மே 2009 இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கில் 69 பெண்கள், தங்களது குடும்ப உறுப்பினர்களின் நிலை பற்றி அறியாது இறந்து போயுள்ளனர். தெற்கு மற்றும் நாட்டின ஏனைய பகுதிகளில், 1971 இலிருந்து காணாமல்போன தங்களது உறவினர்களின் மீள் வருகைக்காக எதிர்பார்த்திருக்கும் வேளையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறியப்படவில்லை.

காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு மறுமொழி கண்டு பிடிப்பார்களா என அரசாங்கத்தைக் கேள்வி கேட்கின்ற, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களிற்கான உப-அனுசரனை அளித்தலிருந்து விலகிக் கொள்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தால் காணாமல்போனோரின் குடும்பங்கள் மேலும் குழப்பமடைந்தனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் படி, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளர்கள், அரசாங்கத்தின் கண்காணித்தல் மற்றும் மிரட்டுதல்கள் என்பன ஒரு குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளதாக முறையிட்டுள்ளனர். உண்மையை அல்லது பொறுப்புக்கூறலைக் கோரும் பலரும் தொடர்ந்து பேசுவதற்கு தங்களது அடையாளம், பாதுகாப்பு மற்றும் சக்தியை பணயம் வைத்துள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

“நவம்பர் 2019 இல் கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்ததிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர்களுக்கு எதிராக இலங்கை பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு முகவர்கள் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக, அவ்வமைப்பு மேலும் தெரிவித்தது.

காணாமல்போனோரின் உறவினர்களுக்கு உதவுகின்ற மற்றும் ஆதரவளிக்கின்ற நபர்கள் அதிகரித்தளவிலான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். “சட்டத்தரணிகள் மற்றும் அரசசார்பற்ற ஸ்தாபனங்கள் உட்பட அவர்களது போராட்டங்களுக்கு ஆதரவாகவுள்ள நபர்கள் மற்றும் ஸ்தாபனங்கள் கடந்த சில மாதங்களாக அரச முகவர்களிடமிருந்து கூடுதலான கண்காணிப்பு மற்றும் மிரட்டல்களுக்கு உள்ளாகின்றனர். காணாமல்போனவர்களின் குடும்பங்களுடன் இணைந்தும் மற்றும் ஆதரவளிப்பதிலிருந்தும் விலகி இருப்பதற்கும், குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சக செயற்பாட்டாளர்களிடமிருந்து அழுத்தம் அங்கு உள்ளது. “நானும் கூட அத்தகைய அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கிறேன்” என்றார் மனித உரிமைகள் ஆர்வலர் ருக்கி பெர்ணான்டோ.

“ஒட்டு மொத்தத்தில், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது எனக் கண்டறிவதற்கு போராடுபவர்கள் மற்றும் சட்ட ரீதியாக அவர்களைப் பொறுப்புக்கூற வைக்க முயல்பவர்களைப் பொறுத்த வரை, மிகவும் இருள் சூழ்ந்த, நம்பிக்கையற்ற மற்றும் உதவியற்றதொரு நிலையே காணப்படுகிறது.

“ஆனால், காணாமல்போனவர்களின் பல குடும்பங்கள் மிகவும் தைரியமாக இருப்பதுடன் அவர்கள் தங்களின் போராட்டாங்களைத் தொடருவார்கள் என நான் நம்புகிறேன். போராட்டங்களைத் தொடர்வதற்கு மேலும் புதிதான படைப்பாற்றலுடன் கூடிய வழிவகைகளைக் காண்பது அக்குடும்பங்களுக்கு சவால் மிக்கதாக இருக்கும். அரசு, சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களிலிருந்து அழுத்தங்கள் இருந்தபோதிலும், தொடர்ச்சியான உதவி மற்றும் ஆதரவை அவர்களுக்கு வழங்குவது செயற்பாட்டாளர்களுக்கான சவாலாக இருக்கும்” என்று ருக்கி கூறுகிறார்.

மினொலி டி சொய்ஸா