பட மூலம், Selvaraja Rajasegar Photo

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் – பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் – போராட்டங்களும் – வாக்குறுதிகளும் – ஆட்சிமாற்றமும் – அமைச்சரவைப் பத்திரமும் – மீண்டும் பேச்சுவார்த்தையும் – வழங்கப்படாமைக்கான காரணங்களும் என ஐந்து வருடங்கள் கடந்து செல்கின்றன.

2015 பொதுத்தேர்தல் பிரசார மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதி 2020 பொதுத்தேர்தலிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த 2020 தேர்தலுக்கு முன்பதாக அதனைக் கொடுத்துவிட்டால் தேர்தலில் பெரு வெற்றிப்பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் 2020 ஜனவரியில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் இப்போது அர்த்தமற்றதொன்றாகவே தோன்றுகிறது. இதனைப் பெற்றுக் கொடுத்துவிடுவதனால் தோட்டத் தொழிலாளர்களும் நன்மையடைந்து அதனால் அரசியல் இலாபம் ஒன்றும் அடையப்படமுடியுமெனில் அதற்கான இறுதி சந்தர்ப்பம் ​இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 10 ஆம்திகதியாகும். ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி அதற்கு முதல் மாத சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜூலை மாதச் சம்பளத் தொகையில் அது சேர்க்கப்படுமானால் ஆகஸ்ட் 10 ஆம் திகதியே கிடைக்கும். அப்போது (ஆகஸ்ட் 5 ) பொதுத்தேர்தல் நிறைவுபெற்றிருக்கும். எனவே, அரசியல் இலாபம் இல்லாது தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னான மாதங்களில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என எதிர்பார்ப்பு கொள்ள முடியாதுள்ளது. மாறாக அப்போதும் ஏன் ஆயிரம் ரூபா கொடுக்க முடியாது? என்பதற்கான காரணத்தையே கேட்கநேரலாம். காரணம் இப்போதே அதற்கான காரணம் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இறுதியாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தமிழ் ஊடகங்களின் செய்திப் பிரதானிகள் உடனான சந்திப்பில் பிரமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதுதான் தேர்தல் காலத்தில் இந்தத் தொகை வழங்கப்படுமாக இருந்தால் அதனை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு வாக்காளருக்கான லஞ்சம் வழங்கலாகப் பார்க்கக்கூடும் என்பதாகும். ஏற்கனவே மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் என அமைச்சரவைப் பத்திரம் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக “தை பிறந்தால் வழி பிறக்கும்” கோஷத்தோடு ஜனவரி 15 அறிவிக்கப்பட்ட போது ஏப்ரல் 10ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கக் கூடிய மார்ச் மாத சம்பளத்தில் கிடைத்திருக்க வேண்டும். அதன்போது ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனவே, ஏப்ரல் 10 தேர்தல் பிரசார காலமாகவே இருந்திருக்க வேண்டும். எனவே, மார்ச் 11இல் தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது பதில் வழங்கிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் “பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சரவை அனுமதிக்கப்பட்ட இந்த விடயத்தை அதுவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இந்த விடயத்தினை ஆணைக்குழு எந்தவித்த்திலும் தடுக்காது” என உறுதி வழங்கப்பட்டது.

எனவே, இப்போது தேர்தல் காலத்தில் இந்த சம்பளவுயர்வு வழங்கப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதனை லஞ்சம் என குற்றம் சுமத்தலாம் என்ற பிரதமரின் கருத்து ஒரு நொண்டிச் சாட்டு. ஏனெனில், இதற்கு முன்னதாக உறுதிசெய்யப்பட்ட மார்ச் முதலாம் திகதி முதல் கொடுக்கப்படாமைக்கான காரணமாக “கொரொனா” முன்வைக்கப்பட்டது. அதுவும் நொண்டிச்சாட்டே என்பது அப்போதே தெளிவாகியது. ஏனெனில், கொரொனாவுக்கான ஊரடங்கு அறிவிப்பு வந்ததே மார்ச் 19ஆம் திகதி இரவுதான். எனவே, மார்ச் ஒன்று முதலே அதற்கான காரணம் கண்டறியப்பட்டமை கண்துடைப்பே அன்றி வேறில்லை.

இப்படி காலத்துக்குக் காலம் ஆயிரம் ரூபா வழங்கப்படாமைக்கு அரசாங்கம் பலவித காரணங்களை கண்டறிய முற்படுகிறதே தவிர அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல இதற்கு முன்னதான அரசாங்கத்திடமும் அதற்கு முன்னரும் கூட இருக்கவில்லை.

1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தலுக்கு உள்ளானதன் பின்னர் அந்தப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகள் அதிகாரங்கள் எல்லாமே இழக்கப்பட்டன. சம்பள நிர்ணய சபைச் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கமும் ஓர் அங்கமாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது.

கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தீர்மானிக்கப்படும் முறைமை நடைமுறைக்கு வந்ததோடு தொழிற்சங்க பிரதிநிதிகளும் – தோட்ட முதலாளிகளும் கூடிப்பேசித் தீர்மானித்துவிடுவதால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே. ஏதேனும் அரசியல் அழுத்தங்களால் தொழில் அமைச்சரோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அல்லது ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது பார்வையாளர்களாக அமரந்திருந்திருக்கின்றார்களே அன்றி அவர்களுக்கு அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதி அமைச்சராகவும் (தொழில் அமைச்சர் அல்லாத) செயற்பட்டு வந்ததால் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சம்பளம் பேசித் தீர்மானிக்கப்பட்டதான ஒரு மாயை (Illusion) உருவாக்கப்பட்டு வந்தது. அந்த மாயையை மேலும் விரிவாக்க தொழிற்சங்கப் பிரதிநிதியான அந்த அமைச்சர் அப்போது ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இருப்பவர் முன்னிலையில் தோட்ட முதலாளிகளுடன் கையொப்பம் இட்டு பந்தா காட்டிவிடுவதால் அரசாங்கம் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதான ஒரு தோற்றப்பாடு மக்களுக்கும் காட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு உள்ளே என்ன உள்ளது என்பதை ஜனாதிபதியோ அல்லது பிதரமரோ அறியார். அதற்கான தேவையும் அவருக்கு எழுந்திருக்கவில்லை. அதனை அமைச்சுப் பதவிகள் கொடுக்கும்போதே அவர்கள் கைகழுவி விட்டிருந்தனர்.

இப்போதைய கள நிலவரங்களின்படி அப்படி காட்சிப்பொருளாக கையொப்பம் இடும் தரப்பினர் நடுவே நிற்கும் நிலைமை ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு நாடாளுமன்றத்தில் கொச்சைத் தமிழில் அடிக்கடி கூவியவர் மஹிந்தானந்த அளுத்கமகே. அவரும் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பது பலரும் அறியாத செய்தி. அந்த சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட “இடாப்புப்” பெயர் என்ன என்று ஊர்ஜிதமாக தெரியாத நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் “மஹிந்தானந்த யூனியன்” என அதன் “வீட்டுப் பெயரில்” தொழிலாளர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது இந்த ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தை தாங்கள் வந்ததும் நடைமுறைப்படுத்துவோம் என்றவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நாளில் அங்கே கண்ணில்பட்ட தோட்டத் தொழிலாளி பெண் ஒருவரை தன் அருகே அழைத்த ஜனாதிபதி அவரது சுக நலன்களை விசாரித்ததுடன் தேர்தல் முடிந்த கையோடு நவம்பர் 19 முதல் அதனைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததாக அப்போது ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது நடைமுறைச் சாத்தியமில்லாதது என அப்போதைய வேட்பாளரும் இப்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்‌ஷ அறிந்துகொண்டு தான் ஜனாதிபதியானதும் இதனை செய்ய முயற்சித்து இருக்கலாம். இதன்போதும் அவருக்காக அங்கும் இங்கும் ஓடித்திரிந்தவர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆவார். அதன் பின்னர் ஜனாதிபதி ஓர் ஆய்வினைச் செய்திருக்க வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கிடையில் பொதுத்தேர்தல் காலமும் நெருங்க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதான தோற்றப்பாட்டினைக் காட்ட அவரது முன்னெடுப்பிலேயே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.

அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படுவதாக இருந்தால் இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் இன்று நிறைவு பெற்று இருக்கும். கடந்த அரசாங்கத்தில் நாளாந்த மானியமாக 50/= கொடுப்பதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அப்போதைய பிரதமரும் தனித்தனியே அத்தகைய பத்திரம் சமர்ப்பித்து அவை அனுமதிக்கப்பட்ட போதும் இன்று வரை அது கொடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறை அப்படி ஆனதல்ல என்பதை இப்போதே “அரசாங்கங்கள் “ உணரத் தொடங்குகின்றன.

தாங்கள் என்னதான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக கொடுப்பதாக இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்த கம்பனிகளை நடாத்தும் தோட்ட முதலாளிகள் கைகளிலேயே உள்ளது. கம்பனிகளை பொறுத்தவரை இலங்கை குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேதனமான 400/= க்கும் மேலான ஒரு தொகையாக 700/=ஐ அடிப்படை சம்பளமாக இப்போது கொடுக்கின்றன. அதுவும் ஒப்பந்த தொழிலாளர்கள் விடயத்தில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் அவ்வளவு இறுக்கமானதாகவும் இல்லை.

எனவே, அவர்கள் சட்டத்தை மீறவில்லை என நினைக்கின்றனர். ஆனால், பொதுவான சட்டமான இதில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்கள் அப்படி ஒன்றும் இலகுவான வேலையில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ரூபா அல்ல அதற்கு மேலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். அந்த உணர்வை ஆட்சியாளர்கள் பெறாதவரை இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பத்தோடு பதினொன்றுதான்.

ஒன்றில் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தைத் திருத்தி ஆயிரமாக அதனை உயர்த்த வேண்டும். இதனால், தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இன்று ஏனைய தொழில் துறை நாட்கூலித் தொழிலாளர்களும் நன்மைப் பெறுவர். அல்லது ஆயிரம் ரூபாவையும் விட அதிகமாக நாளாந்தம் உழைக்கக்கூடியதாக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும். இதனை தென்பகுதி சிங்கள மக்களுக்கு “அரசாங்கங்கள்” செய்து கொடுத்துள்ளன.

எனவே, பொறுப்புள்ள அரசாங்கம் எனில் பொருத்தமான தீர்வை முன்வைக்குமேயன்றி கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடித் தேடிக் கண்டறியாது என்பதே யதார்த்தமாகும்.

மயில்வாகனம் திலகராஜா