பட மூலம், WN

காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நினைவுகூறப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு வடக்கில் ஓமந்தையிலும் கிழக்கில் கல்முனையிலும் தாய்மார் குழுவொன்று தங்கள் கூட்டு எதிர்ப்பைக் வெளிக்காட்டுவதற்குத் தயாராகி கொண்டிருந்தபோது நான் மன்னாரில் இருந்தேன். அவசரகால சட்டம் நீக்கப்பட்டிருந்தாலும் இராணுவத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் ஒரு அதிவிசேட வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு எதிர்ப்பை வெளிக்காட்டுதல் எந்தளவிற்கு பாதுகாப்பானது என்பதைப் பற்றிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இலங்கை இராணுவத்திடம் தனது இளைய மகன் மஹிந்தனை ஒப்படைத்த  பின்னர் மகன் வீடு திரும்பாத  நிலையில் அதற்கெதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடாத்திய பாலேந்திரன் ஜெயகுமாரி எனும் தாய், ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டமை அண்மைக்கால வரலாற்றில் இடம்பெற்றதொரு சம்பவமாகும். மஹிந்தன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் இருப்பதை  புகைப்படமொன்றில் காணக்கிடைத்தாலும் அந்த இளைஞன் ஒருபோதும் வீடு திரும்பவில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் மிக மோசமான சட்டத்தைப் பயன்டுபத்தி தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் காரணமாக ஜெயக்குமாரி இன்றுவரை நீதிமன்றத்திற்கு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். மேற்படி கூட்டத்திற்கு வருகைத் தந்த தாய்மார்களின் கோஷம் “எங்கள் பிள்ளைகளை காணாமல் போகச் செய்தவர்களுக்கு இராணுவத் தளபதி பதவிகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பும் சன்மானமாக வழங்கப்படுகிறது. இது தான்  எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நீதியா?” என்பதாகவிருந்தது.

கடந்த வாரம், கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மனித உரிமைகள், ஜனநாயக ஆட்சி மற்றும் சட்டத்தின் சுயாட்சி ஆகியவற்றை தனது அகந்தையால் புறக்கணித்த ஒரு அடக்குமுறையாளர் உயிர்தெழுந்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களினால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியினை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு  இலங்கை வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயத்தை மீண்டும் கொண்டுவருவதற்காக முயற்சிக்கிறார். அன்று 2015ஆம் ஆண்டில் தனது உயிரைப் பணையம் வைத்து ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமித்ததன் மூலம் தனது முழுமையான அடிபணிதலை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் சந்திர சில்வா ஆகியோர் யார்? தேசபற்றாளர்களா அல்லது தேசத்துரோகிகளா? இக்கேள்விக்கான பதில் சம்பந்தப்பட்ட தரப்புகளை சார்ந்துள்ளது. போர்க்குற்றங்கள், கொலை, காணாமல் போகச் செய்தல், சித்திரவதை மற்றும் அரச சொத்துக்களை கொள்ளையடித்தல் போன்ற சம்பவங்கள் கொண்டாடப் படவேண்டியவைகளா? இவர்கள்தான் இப்போது செய்திகளில் அதிகமாக காணப்படுபவர்களாக இருக்கின்றார்கள். கோட்டாபய ராஜபக்‌ஷ வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை மற்றும் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு ஆகியவை இலங்கையர்களுக்கு ஒரு ஆபத்தான கட்டமாகும்.

1980 களின் பிற்பகுதியில் நடந்த ஜேவிபி இன் (மக்கள் விடுதலை முன்னணியின்) இரண்டாவது கிளர்ச்சியின் போது மாத்தளையில், கஜாபா  படையணியின் கட்டளை அதிகாரியாக கோட்டாபய பணியாற்றினாரென “கோட்டாபயவின் யுத்தம்” எனும் தலைப்பில் சி.ஏ.சந்ரபெருமவினால் எழுதப்பட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக்காலகட்டத்திற்கு உரியதென சந்தேகிக்கப்படுகின்ற 154 எலும்புக்கூடுகளைக் கொண்ட ஒரு பாரிய மனிதப் புதைகுழியொன்று 2012ஆம் ஆண்டில் இவ்விடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்பட்ட மண்டை ஓடுகள் மற்றும் கை எலும்புகள் சித்திரவதைக்கான அறிகுறிகளைக் காட்டுவதாக இருந்தபோதிலும், ராஜபக்‌ஷ அரசாங்கம் அச்சந்தர்ப்பத்திலிருந்த நீதவானை  இடமாற்றம் செய்து, விணைத்திறனற்ற விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்ததன் மூலம் இந்த வழக்கை செயலிழக்கச் செய்தது. இவ்விடயம் சார்ந்த ரேடியோகார்பன் பரிசோதனை பதில்களை விட அதிகமான கேள்விகளையே தோற்றுவித்தது. மேலும் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவவின் கரிசனைகள் புறக்கணிக்கப்பட்டன. (தர்ஷனி ரத்னவல்லி, மாத்தளை மனிதப் புதைகுழிகள்: அலுமாரிகளிலும் எலும்புக்கூடுகள்?, கலம்பு ரெலிகிராப் (டிச.21, 2014).

கோட்டாபய வெளிநாட்டில் ஒரு தசாப்தத்தை கழித்துவிட்டு 2005ஆம் ஆண்டில் இலங்கைக்குத் திரும்பினார். அவர் உடனடியாக பாதுகாப்புத் துறையை மறுசீரமைத்து வாராந்த புலனாய்வு அமைப்புகளின் கூட்டங்களுக்கு தலைமை தாங்கியதுடன் கைதுகள் மற்றும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து தனிப்பட்ட முறையில் கவனம்செலுத்தினார் (கோட்டாவின் போர், ப 357). போர் உக்கிரமடைந்ததால், எவ்வித சாட்சியும் இருக்காது என்பதை அவர் உறுதிப்படுத்திக் கொண்டார். அவர் 2008 செப்டெம்பர் மாதத்தில் ஐ.நாவை இலங்கையிலிருந்து வெளியேற்றியதுடன் சுயாதீன ஊடகங்களுக்கும் தடை விதித்தார். ‘போர்வீரர்கள்’ மற்றும் “மனிதாபிமான நடவடிக்கைகளை” மகிமைப்படுத்துவதற்காகவே ஈடுபடுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கண்மூடித்தனமாக மருத்துவமனைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுதல் மற்றும் தாக்குதல் நடாத்தப்படக்கூடாத பாதுகாப்பு வலயங்களில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்படுதல் தொடர்பாக ஐ.நா. அதிகாரிகளும் அரசாங்க மருத்துவர்களும் அறிக்கையிட்டதையடுத்து செய்திகள் எப்படியோ கசியத்தொடங்கின.

பிரெட்ரிகா ஜான்ஸ் தனது கட்டுரையில் “கோட்டா, அவர்களே சுட உத்தரவிட்டார்” என்று சுட்டிக்காட்டியுள்ளவாறு, புலிகளின் தலைவர்களும் அவர்களது பிள்ளைகளும் நேரடியாக சுட்டுக்கொல்லப்பட்டதுடன் இது கோட்டாபயவின் உத்தரவின் கீழ் செயற்படுத்தப்பட்டதாக அறிக்கையிடப்பட்டிருந்தது. பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் சவேந்திர சில்வாவின் 58ஆவது படைப் பிரிவில் சரணடைந்த நூற்றுக்கணக்கானவர்கள் 2009 மே மாதம் அரசாங்கத்தால் இயக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏற்றப்பட்டார்களெனினும் அவர்கள் ஒருபோதும் திரும்பிவரவில்லை. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் வெளியிட்ட இலங்கை தொடர்பான புலனாய்வு அறிக்கையில் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற இடங்களில் இடம்பெற்ற சட்டவிரோதமான கொலைகள் மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் 58ஆம் படைப்பிரிவின் தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. யுத்த காலத்தில் அனைத்து இராணுவ நடவடிக்கைகளும் கட்டளை தொடர்பு முறையின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டதாகவும் “UAV கண்காணிப்புக்கு” உட்படுத்தப்பட்டதாகவும் ஏற்றுக்கொண்டதன் மூலம் கோட்டாபய ஒவ்வொரு கட்டத்தையும் அறிந்திருந்தார் என்பது புலனாகின்றது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து அதன் இறுதிக்கட்டங்களில் அற்புதமான வேலைகளை” செய்ததற்காக கோத்தாபய சவேந்திர சில்வாவின் மீது பாராட்டினை பொழிந்தார்.

அவரது அட்டூழியங்களை செயல்படுத்த கோட்டாபய பொய்களை உருவாக்கினார். ஐ.நாவின். மனித உரிமை பிரதானியாகவிருப்பினும் அல்லது சமாதான ஆர்வலராக இருப்பினும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் புலிகளாக முத்திரைக் குத்தப்பட்டார்கள். மருத்துவமனைகள் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லையென “”ஒப்புதல் வாக்குமூலம்” அளிக்கும் இடத்திற்கு தள்ளப்படும்வரை அரசு மருத்துவர்கள் புணர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டார்கள். உண்மையை மூடி மறைக்க இயலாத சந்தர்ப்பத்தில், கோட்டாபய வெள்ளை வான்களைக் அனுப்பினார். இராணுவத்தை விமர்சித்தால், “அதை எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் உங்களை முடித்துவிடுவார்கள்” என்று கோட்டாபய தனிப்பட்ட முறையில் போத்தல ஜயந்தவை எச்சரித்ததையடுத்து கீத் நொயார் மற்றும் போத்தல ஜயந்த ஆகியோர் கடுமையாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் ஆங்கில பத்திரிகையாகிய “சன்டே ஒப்சர்வர்” பத்திரிகையில் வெளிவந்த அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட குற்றச்செயல்” (ஜன. 20, 2019) கட்டுரைக்கு அமைவாக பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று பின்னர் கொலைசெய்யுமாறு கோட்டாபய இரண்டு இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.  லசந்த விக்கிரமதுங்கவின்  கொலை மற்றும் மற்றும் கனேடிய தமிழ் பிரஜையாகிய ரோய் சமாதானத்தின் மீதான சித்திரவதை ஆகியவற்றிற்கு தற்போது இவர் ஐக்கிய அமெரிக்காவில் வழக்குளை எதிர்கொண்டுள்ளார்.

போருக்குப் பின்னர் பல ஆண்டுகளாக, பொறுப்புக்கூறல் எனும் விடயம் எட்டாக் கனியாகவே இருந்தது. எல்.எல்.ஆர்.சி மற்றும் பரணகம ஆணைக்குழுவின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டன. காணாமல் போனவர்களின் தாய்மார்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஆர்வலர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி உயிருடன் இருப்பவர்கள் தங்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களின் பெயர்களை வெளியில் கூறக்கூடாதென அச்சுறுத்தப்பட்டதுடன் துன்புறுத்தப்பட்டனர். அருட்தந்தை பிரான்சிஸ் மற்றும் பிற சரணடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஹேபியஸ் கோர்பஸ் வழக்குகள் நலிவடையச் செய்யப்பட்டன. பிரதிவாதியாகவிருந்த, சவேந்திர சில்வா தனது கட்டளையின் கீழ் என்ன நடந்தது எனும் விடயம் சார்ந்த விசாரணைகளை முடக்கினார். மிகவும் பிரபல்யமான வழக்குகளில் கூட எவ்வித முன்னேற்றமும் காணக்கிடைக்கவில்லை. குடும்ப மட்டத்தில், தாய்மார்களுக்கு துயருறுவதற்கு அல்லது எதிர்ப்பு தெரிவிப்பதற்குக் கூட வாய்ப்பிருக்கவில்லை. இராணுவம் அவர்களின் நிலங்களை கையகப்படுத்தியது. ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னர் அணிதிரண்டு தங்களுக்கு நியாயத்தை பெற்றுத்தருமாறு கோரும் முயற்சிகள் கூட நாட்டின்  இறையாண்மைக்கு எதிரான மேற்கத்தேய அச்சுறுத்தலாக முத்திரை குத்தப்பட்டன. இலங்கை மக்களுக்கு சிறப்பான ஏதேனுமொன்றை பெற்றுக்கொள்வதற்கான எந்தவொரு முயற்சியும் போர்வீரர்கள் மீதான தாக்குதல் என்று கூறி நிராகரிக்கப்பட்டது. நிச்சயமாக, ஒரு கொடுங்கோலருக்கு மக்களைத் நசுக்குவதற்கு பிரச்சாரம் தேவை. ஆட்சி தனது பிடியை மேலும் வலுவாக்கிக்கொண்டபோது, கோட்டாபயவின் இலக்குகள் விரிவடைந்தன. அளுத்கம மற்றும் தர்கா நகரில் உள்ள முஸ்லீம் வீடுகளையும் வர்த்தக நிலையங்களையும் எரிப்பதற்காக கும்பலைத் தூண்டுவதற்கு பொதுபல சேனாவின் தலைவரான ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்தக் குண்டர் தற்போது ஜனாதிபதியின் பொது மன்னிப்பையும் பெற்றுள்ளார். இது ஜனாதிபதி சிறிசேன நல்லாட்சியில் இருந்து எவ்வளவு தூரம் சென்றுவிட்டார் என்பதற்கானதொரு அறிகுறியாகும்.

சித்திரவதை மற்றும் கொலை செய்வதற்கான திறன் கொண்டவர்கள் கொள்ளையடிக்கும் திறன் குறைந்தவர்களாக இருக்க முடியாது. மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவதற்காக தனியார் நிறுவனமான அவண்ட்-கார்டுக்கு 75 மில்லியன் டொலருக்கும் அதிகமான அரசு நிதியைக் கொடுத்ததாகவும், உக்ரேனிலிருந்து மிக் போர் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு இரகசிய வெளிநாட்டு கணக்கை ஏற்பாடு செய்தாரெனவும் கோட்டாபய மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதென “என் தந்தைக்கு என்ன செய்தார்கள், அவர்கள் ஏன் அதை செய்தார்கள்”எனும் தலைப்பில், டெய்லி நியூஸ் (ஜன. 10, 2019) நாளிதழிற்கு அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜபக்‌ஷ சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்கி வீண் தற்பெருமைக்காக ஹம்பாந்தோட்டையில் ஒரு விமான நிலையத்தையும் துறைமுகத்தையும் கட்டினர். சிறிசேன 2015இல் ஆச்சரியமானதொரு வெற்றியைப் பெற்றிருந்தாலும், கோட்டாபய 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்தை முறியடிப்பதற்கான ஒரு சதித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தாரா என்பது புலனாகாத புதிராகவே இருக்கின்றது.

ஆகவே, இப்படியான இவர்தான் இப்போது தேர்தலில் போட்டியிடப் போகும் கோட்டாபய ராஜபக்‌ஷ. சுய இலாபத்திற்காக தனது சொந்த மக்களையே நசுக்கக்கூடிய ஒரு அடக்குமுறையாளர். கொடுங்கோன்மையை தேசபற்று என்று மூடிமறைக்கும் மனிதன். 1987ஆம் ஆண்டில் கோட்டாபய சவேந்திர சில்வாவை அவருக்கடுத்த நிலைக்கு உயர்த்தியதிலிருந்து அவரது வலது கரமாக மாறினார்.

தற்போதைய நிர்வாகத்தில் தோல்விகள் கேள்விக்கு இடமின்றி உள்ளன. இது உளவுத்துறையைப் புறக்கணித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிவிட்டது. அரசாங்கம் பொறுப்புக்கூறல் அல்லது பாதுகாப்பு துறை சீர்திருத்தத்தை மேற்கொள்வில்லை. இது தனது பிரசைகளுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் வாக்குறுதியளித்த நிலைமாறு கால நீதியை வழங்கத்  தவறிவிட்டது. போரினால் சிதைந்த வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தமிழர்களுக்கு அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்பதுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இப்போது முஸ்லிம்களை வன்முறைக் கும்பல் குறிவைத்துள்ள நிலையில் மௌனம் காத்து வருகிறது. ஊழல் விசாரணைகள் மீதான ஆரம்ப முன்னேற்றம் எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கத் தவறியுள்ளது. மேலும் மத்திய வங்கி பிணைமுறி சார்ந்த மோசடி இந்த அரசாங்கம் தானும் ஊழல் புரிகின்றதென்பதை பறைசாற்றியுள்ளது. கடந்த அக்டோபரில் அரசியலமைப்புக்கு முரணாக​ மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்தன் மூலமாகவும் அண்மையில் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியதன் மூலமாகவும், சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததன்  மூலமாகவும் தான் ஒரு முதுகெலும்பு அற்றவரென சிறிசேன இனங்காட்டியுள்ளார்.

ஆயினும் மந்தமான நிலையில் சில முன்னேற்றமும் நிகழ்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனாதிபதியின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. இப்போது இலங்கை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உடன்படிக்கையின் ஒரு தரப்பாக மாறியுள்ளது. இடைக்கால நீதியை இலங்கை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து ஆயிரக்கணக்கானோரிடமிருந்து கலந்தாய்வு செயலணி கருத்துக்களைப் பெற்றுள்ளது.  காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் எப்படியோ ஈற்றில் அதன் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஊடக சுதந்திரம் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் அரசியலமைப்பு நெருக்கடியொன்று ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொதுமக்களின் ஈடுபாடு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. தமிழ் தாய்மார்களுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்துவதற்கும் துயறுருவதற்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. பிரஜைகள் தகவல் அறிவதற்கான உரிமை பற்றிய சட்டத்தினைப் பயன்படுத்தி ஊழல் மற்றும் பாரபட்சம் குறித்து அதிகாரிகளை கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு பிறந்துள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்கள், சட்ட அமுலாக்க நிறுவனங்கள் மற்றும் இராணுவத்திடம் அரச அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளன.

சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்ததமை மூலம் ஜனாதிபதி சிறிசேனா என்ன நினைக்கிறார் என்றும் கோட்டாபயவின் தலைமையில் என்ன நடக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. கோட்டாபய “இலங்கையை மீண்டும் பாதுகாப்பானதாக்குவார்” என்று நினைப்பவர்கள் அவர் கட்டவிழ்த்துவிட்ட அரச அனுசரனையுடன் கூடிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ள வேண்டும். சட்டத்தை மதிக்காத ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தல் 2015ஆம் ஆண்டில் அவர் வாக்குறுதியளித்த நல்லாட்சிக்கு நேர்மாறானது என்பதை சிறிசேன புரிந்து கொள்ள வேண்டும். 2015ஆம் ஆண்டின் முற்பகுதியில் வெளிவிவகார அமைச்சர் அளித்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது – “முன்னைய அரசாங்கத்தைப் போல மனித உரிமை மீறல்கள் நடக்கவில்லை என மறுக்கும் நிலையில் நாங்கள் இல்லை. இதுபோன்ற மீறல்கள் நடந்திருப்பதாக நாங்கள் நம்புகிறோம், அது எந்த அளவிற்கு நடந்தது என்பதை நாம் அமைக்கின்ற பொறிமுறையின் மூலம் இறுதியாகத் தீர்மானிக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்கள் அத்தகைய ஒரு பொறிமுறையின் மூலம் நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்” என்பதாகவே அவ்விடயம் அமைந்திருந்தது. சிறிசேனவின் அண்மைக்கால பெருந்தவறு, அவர் 2015இல் இருந்த நிலைப்பாட்டிலிருந்து எந்தளவிற்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றார் என்பதைக் எடுத்தியம்புகின்றது.

சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு கோட்டாபயவின் நலனுக்கு மிகவும் சாதகமாக அமையப்போவதுடன் இவ்விடயம் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்கள் இந்த ஆட்சியின் மீது வைத்த நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பதாகவே அமைகின்றது. இது நம் அனைவருக்கும் நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான ஒரு பாரிய பின்னடைவாகும். ஆகவே, அரசாங்கம் இந் நியமனத்தை மறுபரிசீலனை செய்து சவேந்திர சில்வாவின் கட்டளையின் கீழ் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் காணாமல் போனமை, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் கொலை  செய்யப்பட்டமை, நேரடியாக சுட்டுக்கொல்வதற்கு உத்தரவிடப்பட்டமை, அரச நிதியை கொள்ளையடித்தமை ஆகியவற்றிற்காக கோட்டாபய சட்டத்தின் முன் நிறுத்தப்படுதல் வேண்டும். கோட்டாபய வேட்பாளராக தெரிவுசெய்யப்பட்டமை மற்றும் சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் வீதியோரம் இரவு, பகல் என 1000 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார்களை கேலி செய்வதும் அவமானப்படுத்துவதுமாக அமைகின்ற அதேவேளை தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமை மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகிய விடயங்களில் அனைத்து பிரஜைகளுக்கும் இருள்சூழ்ந்ததொரு காலத்தையே தோற்றுவிக்கும்.

ஷ்ரீன் அப்துல் சரூர்