படம் | REUTERS/Dinuka Liyanawatte, Themalaysianinsider

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த அரசின் மீதான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு தமிழ் மக்களின் தற்போதைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்ப, மேற்படி விசாரணை தொடர்பில் வெளிப்படுத்தி வரும் அதீத நம்பிக்கையே பிரதான காரணமாகும். அரசன் எவ்வழியோ, அவ்வழியே குடிகள் என்றொரு கருத்துண்டு. அதே போன்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்பானது, எதனை மக்கள் முன்வைக்கிறதோ, அதுவே மக்களது நம்பிக்கையாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில், தமிழ் மக்கள் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு விசாரணையென்று வரும்போது அதற்கு சாட்சிகள் அவசியமாகின்றது. ஆனால், ஜ.நா. விசாரணைக் குழுவினர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை கொழும்பு வழங்கவில்லை.

இது பற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவிப்பிள்ளை, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பான ஏராளமான தகவல்கள் இலங்கைக்கு வெளியில் இருக்கின்றன. அவற்றை ஜ.நா. விசாரணைக் குழு திரட்டிக் கொள்ளும். எனவே, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளாமலே ஜ.நா. விசாரணைக் குழுவால் சிறந்த முறையில் விசாரணையை முன்னெடுக்க முடியுமென்று தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் குறிப்பிடும்போது, வட கொரியா, சிரியா விவகாரத்திலும் ஜ.நா. விசாரணைக் குழு அங்கு சென்றிருக்கவில்லை. ஆனால், விசாரணைகள் சிறப்பாக இடம்பெற்றன. எனவே, ஜ.நா. விசாரணைக் குழுவை இலங்கை அரசு அனுமதிக்காமல் விடுவதால் எமக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அவரின் மேற்படி கருத்துக்கள், இலங்கை தொடர்பான ஜ.நா. விசாரணையில் எந்தவிதமான தொய்வும் இருக்கப் போவதில்லை என்பதையே குறித்து நிற்கிறது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், ஜ.நா. விசாரணை நீதியாக இடம்பெறும் என்பதற்கான உறுதிமொழி கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதுடன், இந்த விசாரணையின் ஊடாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்விற்கான வாசல் திறக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றார்.

நவிப்பிள்ளை குறிபிட்டவாறு விசாரணைக்கு தேவையான சாட்சியங்களை முற்றிலுமாக வெளியில் இருந்தவாறு கையாளும்போது, அதில் உள்ளூர் மக்களின், குறிப்பாக வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் சாட்சிகளாக இருக்கின்ற மக்கள் பங்களிக்க முடியாதவொரு நிலைமை காணப்படுகிறது என்பதையும் இவ்விடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டே, கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் கொள்கை நெறிப்படுத்தலாளருமான எம்.ஏ. சுமந்திரன், மக்களை நோக்கி ஒரு கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதாவது, சாட்சியமளிப்பதில் அச்சமிருப்பின், சாட்சியங்களை கூட்டமைப்பிடம் ஒப்படைக்குமிடத்து, அதனை உரிய இடத்திற்கு எங்களால் சேர்பிக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார். இதன் மூலம் கூட்டமைப்பு, ஜ.நா. விசாரணையில் ஒரு பங்காளராக மாற முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.

இலங்கைக்குள் ஜ.நா. விசாரணைக் குழு பிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற சூழலில், தமிழ் மக்கள் வெளிப்படையான சாட்சிகளாக மாறுவதில் பல இடர்கள் உண்டு. இதனைக் கருத்தில் கொண்டே சுமந்திரனும் மேற்படி ஆலோசனையை முன்வைத்திருக்கின்றார் போலும். சுமந்திரன் குறிப்பிடுவது போன்றே, ஜ.நா. விசாரணை தொடர்பில் கூட்டமைப்பால் வினைத்திறனுடன் பணியாற்ற முடியும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முக்கிய காரணம் போர்க் குற்றச்சாட்டு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சாட்சியமளிக்கக் கூடிய ஆற்றலுள்ளவர்கள் கூட்டமைப்பிற்குள்ளேயே இருக்கின்றனர். அவர்கள் இதற்கு தலைமை தாங்க முடியும்.

இன்று அரசால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் முன்னிலையில் பல பெண்கள் துனிகரமாக சாட்சியமளித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் மன்னார் தளபதியாக இருந்த ஜான் என்பவரின் மனைவி தன்னுடைய கனவனை இராணுவத்தினரே கொண்டு சென்றனர் எனப் பகிரங்கமாக சாட்சியமளித்திருக்கின்றார். இதேபோன்று இன்னும் பல கணவன்மார்களை இழந்து தவிக்கும் பெண்கள் பகிரங்கமாகவே சாட்சியமளித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான கத்தோலிக்க மத குரு இமானுவேல் ஜெபமாலை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையீனத்தின் காரணமாகவே பலர் சாட்சியமளிக்க முன்வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதனை பிறிதொரு வகையில் விளங்கிக் கொள்வதாயின், அவர்கள் அனைவரும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஜ.நா. விசாரணையின் மீது கொண்டிருக்கும் அளப்பரிய நம்பிக்கையின் காரணமாகவே உள்ளக விசாரணைகளை புறக்கணித்திருக்கின்றனர். இந்த நிலைமையானது கூட்டமைப்பின் மீது மேலும் பொறுப்புக்களை சுமத்தியிருக்கின்றது. இதனை கூட்டமைப்பால் புறக்கணிக்க முடியுமா?

தற்போதுள்ள சூழலில் ஜ.நா. விசாரணையின் போது பலராலும் சிறந்த முறையில் பங்களிக்க முடியாதவொரு புறநிலைமை காணப்படுகிறது. சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுவது போன்று ஜ.நா. விசாரணை தமிழ் மக்களுக்கான தீர்விற்கான வாசலை திறந்துவிட வேண்டுமாயின், அதில் தமிழர் தரப்பின் காத்திரமானதொரு தலையீடு நிகழவேண்டியது அவசியமாகிறது. இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மேற்படி விசாரணை வெறுமனே மஹிந்த அரசை குற்றம் காணும் ஒரு நிகழ்வாக சுருங்கிவிடுவதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு மாறாக, மேற்படி விசாரணையை ஒரு அரசியல் தீர்விற்கான மேற்கின் ஆசிர்வாதமாக மாற்ற வேண்டும். அவ்வாறு இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், இதில் கூட்டமைப்பு காத்திரமான தலையீட்டை செய்தாக வேண்டியுள்ளது.

இந்த இடத்தில் மேலெழும் கேள்வி, ஜ.நா. விசாரணைக் குழு இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டிராத சூழலில் கூட்டமைப்பால் என்ன செய்ய முடியும்? தற்போதைய சூழலில் இரண்டு விடயங்களை கூட்டமைப்பால் செய்யக்கூடிய நிலை காணப்படுகிறது. ஒன்று, சுமந்திரன் குறிப்பிடுவது போன்று சாட்சிகளை திரட்டி, அதனை உரிய இடத்திற்கு சேர்பிக்க முடியும். இரண்டு, கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நேரடியாக சாட்சியமளிக்கலாம். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் எவ்வாறு சாட்சியாக மாற முடியும்? அது சாத்தியமான ஒன்றே!

இன்று கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிறிதரன் இறுதி யுத்தத்தை பார்த்த ஒருவர். இறுதி யுத்தத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவர். எனவே, யுத்தத்தின் போதும், யுத்தம் நிறைவுற்ற பின்னரும் மக்களோடு இணைந்திருக்கும் ஒருவர் என்னும் வகையில் சிறிதரனால் பல்வேறு விடயங்களை ஜ.நா. விசாரணைக் குழுவின் முன்னால் நேரடியாகவே சொல்ல முடியும். அதேபோன்று, வடக்கு மாகாண சபையில் உறுப்பினராக இருக்கின்ற முல்லைத்தீவை பிரதிநிதித்துவம் செய்யும் ரவிகரன் மற்றும் கிளிநொச்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பசுபதிப்பிள்ளை ஆகியோர் போர் எழுச்சிக் குழுவில் இருந்தவர்கள். இறுதிவரை வன்னி யுத்த அரங்கில் இடம்பெற்ற அனைத்தினதும் சாட்சியாய் இருப்பவர்கள். மக்கள் பிரதிநிதிகளான இவ்வாறானவர்கள் சாட்சியமளிக்க முன்வருவார்களாயின் அதனை அரசு சுலபமாக தடுத்துவிடவும் முடியாது. இவர்களுக்கு இருப்பது போன்ற யுத்தகால அனுபவங்கள் ஏனைய நாடாளுமன்ற அல்லது மாகாண சபை உறுப்பினர்கள் எவருக்கும் இல்லை.

எனவே, கூட்டமைப்பின் தலைமை இந்தக் கோணத்தில் சிந்தித்தால், அது விசாரணையில் கூட்டமைப்பின் தலையீட்டை அதிகரிக்க உதவும். மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அதேபோன்று மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும், சாட்சியம் அளிப்பார்களாயின் மக்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை ஏற்படும். இதனைத் தொடர்ந்து அச்சப்படுபவர்கள் கூட தங்களின் சாட்சிகளை பதிவுசெய்ய முன்வருவர். மேலும், சுமந்திரனின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களில் பலர் கூட்டமைப்பிடம் தங்களின் சாட்சியங்களை ஒப்படைக்கக் கூடியதொரு சூழலும் மலரும். சாட்சிகள் அவ்வாறு கூட்டமைப்பை நோக்கி அணிதிரள வேண்டுமாயின் அதற்கு முன் நிபந்தனையாக மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஜ.நா. சாட்சியாக மாறவுள்ளனர் என்னும் செய்தி அவர்களை போய்ச் சேர வேண்டும்.

இதேபோன்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தான் தொடர்பில் இருந்தார் என அவரே சில இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். அவரும் நடந்து முடிந்த போர் குறித்து தனக்குத் தெரிந்த விடயங்களை ஜ.நா. விசாரணைக் குழுவின் முன்னால் நேரடியாகவே முன்வைக்க முடியும். இலங்கைக்குள் செல்லாமலேயே தங்களால் விசாரணையை சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும் என்று நவிப்பிள்ளை குறிப்பிடுவதிலிருந்து, ஜ.நா. விசாரணைக்குத் தேவையான பல்வேறு ஆதாரங்கள் ஏலவே அவர்கள் வசமுள்ளது போல் தெரிகிறது. எனவே, இறுதி யுத்தத்தின்போது அகப்பட்டவர்களின் தகவல்கள் போதியளவு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்னும் முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. எனவே, இத்தகையதொரு சூழலில் சாட்சியமளிக்கக் கூடிய தகுதிநிலையில் இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகவே ஜ.நா. விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளிப்பார்களாயின், அது விசாரணையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஜயமில்லை. இது குறித்து கூட்டமைப்பு கருத்தில் கொள்ளுமா?

மேலே குறிப்பிட்டவாறான மக்கள் பிரதிநிதிகள் ஜ.நா. விசாரணையின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயங்குவார்களாயின், அவர்கள் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழவும் வாய்ப்புண்டு. மேலும், இவர்கள் இதுவரை சொல்லிவந்த விடயங்கள் குறித்தும் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழலாம். இன்றைய சூழலில், மக்கள் எதிர்ப்பார்ப்பது எவர் பிரபாகரனை ஆத்மார்த்த தலைவராக கைக்கொள்கின்றார் என்பதையோ, எவர் புலிகள் குறித்து புகழ்கின்றனர் என்பதைப் பற்றியோ இல்லை. மாறாக, வரலாற்றின் முக்கியமான தருணங்களில், தங்களது நலனை முன்னிறுத்தி உண்மையிலேயே எவர் செயற்படுகின்றார் என்பதையே மக்கள் உற்றுநோக்குகின்றனர்.

தினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.

Jathindra