Photo, pakkafilmy

வலிமையான – அறிவுசெறிந்த சான்று இல்லாமல் தமிழே ஏனைய மொழிகளின் தோற்றுவாய் என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை!

கன்னடம் குறித்த கமல்ஹாசனின் கருத்தால் மூண்டிருக்கும் சர்ச்சையைப் புரிந்து கொள்தல்

“கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது” என்ற நடிகர் கமல்ஹாசனின் கருத்து பல்வேறு விவாதங்களை மூளவைத்திருக்கிறது. ஆனால், இது ஒன்றும் புதிய கருத்து அல்ல. இது இரு நூற்றாண்டுகளாக தமிழ் உலையாடல்களில் இருந்து வந்திருக்கிறது.

பொதுவான ஆதித்திராவிட மொழி (Proto – Dravidian language) ஒன்றில் இருந்து கிளைவிட்டவையே திராவிட மொழிகள் என்று றொபேர்ட் கால்ட்வெல்லும் மற்றைய மொழியியல் நிபுணர்களும் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தக் கருத்தை தமிழ்த் தேசியவாதிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. சகல திராவிட மொழிகளும் தமிழில் இருந்து பிறந்தவையே என்று அவர்கள் உரிமை கோரினார்கள். இந்த நம்பிக்கை அதன் உச்சத்தில் தமிழே உலகின் முதலாவது மொழி என்றும் உலகின் ஏனைய மொழிகள் சகலதும் அதிலிருந்து பிறந்தவையே என்றும் பிரகடனம் செய்யப்படுகின்ற அளவுக்கு விரிவடைந்தது.

பெரிதும் ஏற்புடைய கருத்து

இன்றும் கூட தமிழ் அறிவுஜீவிப் பரப்பில் இரு சிந்தனைப் போக்குகள் தொடர்ந்து மேம்பட்டுக் காணப்படுகின்றன. ஆதித்திராவிட மொழி ஒன்று பற்றிய கருத்து தமிழ்நாட்டுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மாறாக, தமிழ் சகல மொழிகளினதும் தோற்றுவாய் என்ற கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தியாவின் பன்மொழிப் பின்புலத்தில் மொழி ஆதிக்கத்தைச் சூழ்ந்த விழிப்புநிலை அரசியல் ரீதியாகவே வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு தேசியக்குழுவும் அதன் அடையாளத்தின் பிரதான குறியீடாக மொழியையே கருதுகின்றன. அவர்களது மொழியின் பெருமையை சிறுமைப்படுத்துவதாக கருதப்படக்கூடிய  எந்தவொரு கருத்து அல்லது நடவடிக்கை ஆவேசமான எதிர்ப்பைக் கிளப்பும்.

இத்தகைய ஒரு சூழ்நிலையில், பொதுவான ஒரு ஆதித்திராவிட தோற்றுவாயில் (Proto – Dravidian Root) இருந்தே சகல திராவிட மொழிகளும் தோன்றின என்ற கருத்தை அழுத்திச் சொல்வதே பொது மேடைகளில் பெருமளவுக்கு பொருத்தமானதாக இருக்கும். இந்தக் கருத்து கலாசார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இணக்கப்போக்கையும் சமத்துவத்தையும் வளர்க்கும்.

மற்றைய மொழிகள் தமிழில் இருந்தே தோன்றின என்று கூறுவதை மற்றையவர்கள் தங்களது மொழியினதும் அடையாளத்தினதும் மதிப்பைக் குறைக்கும் ஒரு செயலாகவே எளிதில் நோக்கக்கூடும். தமிழே தங்களது மொழிகள் எல்லாவற்றினதும் தோற்றுவாய் என்று உரிமை கோருவதை மற்றைய மொழிகளைப் பேசுபவர்கள் தங்கள் மீதான திணிக்கப்படும் ஆதிக்கத்தின் ஒரு வடிவமாகப் பார்க்கக்கூடும். தங்களது மூதாதைப் பெருமையை அரசியல் பிரசாரத்துடன் கலக்கும் தமிழ்த் தேசியவாதிகளைப் பொறுத்தவரை, தமிழே மற்றைய மொழிகளின் தோற்றுவாய் என்று கூறுவது புராதன மேன்மைக் கதையாடல் ஒன்றை கட்டமைக்க உதவலாம்.

ஆனால், அதற்கு அப்பால், சமகால அரசியலில் இந்தக் கருத்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும். வலிமையான – பரவலாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அறிவுசெறிந்த சான்று இல்லாமல், சகல மொழிகளினதும் தோற்றுவாய் தமிழே என்று அழுத்தியுரைக்க வேண்டிய தேவையில்லை. தமிழின் சிறப்புவாய்ந்த பண்புகளான அதன் தொல்பழமை, இலக்கியச் செழுமை மற்றும் இடையறாத இலக்கியப் பாரம்பரியம் ஆகியவற்றை ஏனைய மொழிச் சமூகங்களும் பரந்தளவில் உலகமும் நன்கு அறியும். இந்த சிறப்புக்களை எடுத்தியம்புவதே தமிழைக் கௌரவப்படுத்தப் போதுமானதாகும்.

இந்தியாவின் எந்தவொரு மொழியினதும் நவீன இலக்கியத்துடன் ஒப்பிடும்போது கூட, தமிழ் உயர்வானதாக மாத்திரமல்ல, சமத்துவமானதாகவும் நிற்கிறது. தமிழின் இந்தச் செழுமையை பரந்த உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு உணர்வு முனைப்புடைய முயற்சிகளே இன்று எமக்கு தேவைப்படுகிறது.

2022ஆம் ஆண்டில் இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி சிறீ சர்வதேச புக்கர் பரிசை வென்றார். இந்த வருடம் கன்னட எழுத்தாளர் பானு முஷ்ராக் அதே கௌரவத்தைப் பெற்றார். தமிழும் கூட அத்தகைய உலகளாவிய உச்சங்களை பெறுவதற்கு உரித்துடையது. எமக்குத் தேவை அந்த திசையிலான தளராத கலாசார முயற்சியே அன்றி, ஏனைய மொழிகளைப் பேசுபவர்களை மனமுறிவுக்கு உள்ளாக்கக்கூடிய – ஆத்திரமூட்டும் வகையிலான பயனற்ற கருத்துக்கள் அல்ல.

“தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறியபோது அவரது நோக்கம் அந்த மொழியை அவமதிப்பது அல்ல. கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் அந்த மேடையில் இருந்தார். அவரது குடும்பத்துடனான தனது கனிவான உறவுமுறை பற்றி பெருமையாக ஹாசன் பேசினார். கன்னடத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பண்பொற்றுமையை சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; எம்மவை சகோதர மொழிகள்” என்று கூறுவதற்கே முயற்சித்தார்.

அந்தத் தருணத்தில், ‘தமிழே மூலமொழி’ என்று தமிழ்ச் சிந்தனையாளர்களில் ஒரு பிரிவினர் நீண்டகாலமாகக் கொண்டிருக்கும் ஒரு கருத்து அவரது சிந்தனைக்கு வந்திருக்கக்கூடியது சாத்தியம். ஆனால், அவரது நோக்கங்களை சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது. அத்தகைய கருத்தை பொதுவெளியில் சொல்வதற்கு அவருக்குக் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்கிறது. எதிர்க்கருத்தை கொண்டவர்கள் அவருடன் இணங்காமல் விடலாம். பதிலை பேச்சில் அல்லது எழுத்தில் வெளிப்படுத்த முடியும். ஆனால், அச்சுறுத்தல் விடுப்பது கருத்தை தெரிவிப்பதற்கான அவரின் உரிமையை மீறும் செயலாகும்.

நீதிமன்றத்தின் கருத்து

கமல்ஹாசனின் ‘தக் லைவ்’ என்ற திரைப்படத்தின்  வெளியீடு தொடர்பான ஒரு வழக்கு கர்நாடகா மாநிலத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது மன்னிப்புக் கேட்குமாறு அவரை நீதிபதி பெரும்பாலும் நிர்ப்பந்தித்தார். இந்த விவகாரத்தை இரு பிராந்திய இனங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக மாற்றுவதற்கு மொழி அடிப்படைவாதிகள் தயாராக இருக்கின்ற ஒரு நேத்தில், அவர்களுக்கு அனுகூலமான முறையில் நீதிமன்றம் அதை அணுக வேண்டுமா?

பொலிஸார் இந்த விவகாரத்தை சட்டம், ஒழுங்குடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக கையாளக்கூடும், ஆனால், நீதிமன்றம் அந்த வழியில் நோக்கக்கூடாது. வர்த்தக ரீதியான விட்டுக்கொடுப்பை கட்டாயப்படுத்தும் கட்டப்பஞ்சாயத்து போன்று நீதிமன்றம் செயற்பட வேண்டுமா?

நீதிமன்றம் இதை கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாக அணுகியிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கருத்தினால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக எந்த ஒருவரும் கூறலாம். ஆனால், அவர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அளவு என்ன? எவருமே வேண்டுமென்று சமூகப் பதற்றத்தை உருவாக்கலாம். அத்தகையவர்களை சமரச ஏற்பாட்டுக்கான ஒரு தரப்பாக நீதிமன்றம் கருதமுடியாது.

கமல்ஹாசனுக்கு அத்தகைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் இருக்கிறதா என்பது குறித்து கவனமாக ஆராயப்படும் என்றுதான் நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். அத்துடன், இந்தப் பிரச்சினைக்கும் திரைப்படத்தின் வெளியீட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; பொலிஸ் பாதுகாப்புடன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.

எந்த வழியில் வழக்கு நீதிமன்றத்துக்கு வந்திருந்தாலும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கோணத்திலேயே அதை நீதிமன்றம் அணுகியிருக்க வேண்டும். ஜனநாயக நாடொன்றில் அந்த உரிமையைப் பாதுகாப்பதற்கான இறுதிப் புகலிடம் நீதிமன்றமேயாகும்.

கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கவில்லை. “எனது கருத்து தவறானது அல்ல. அது தவறாக விளங்கிக்கொள்ளப் பட்டிருக்கிறது” என்று அவர் விளக்கமளித்தார். வழமையாக, திரைப்படம் ஒன்று தொடர்பாக ஏதாவது பிரச்சினை எழுந்தால், உடனடியாக மன்னிப்புக் கோருவது, காட்சிகளை அகற்றுவது, திரைப்படத்தின் வெளியீட்டுக்கு வசதியாக சமரசத்தை ஏற்படுத்துதே நடைமுறை நியதியாகும். முதற்தடவையாக திரைப்படத்துறை சார்ந்த ஒருவர் “நான் மன்னிப்புக் கேட்கமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

அந்த நிலைப்பாட்டுக்கு பின்னால் எத்தகைய வர்த்தகக் கணிப்பீடுகள் இருந்தாலும், அத்தகைய அறிவிப்பு ஒன்றைச் செய்வதற்கு அவருக்கு இருந்த துணிச்சலை மெச்சவேண்டும். நீதிமன்றம் கூறியதைப் போன்று இது ஒரு அகங்காரப் பிரச்சினை அல்ல. சுயமரியாதைப் பிரச்சினை. கருத்தொன்றைக் கூறுவதற்கு ஒருவருக்கு சகல உரிமையும் இருக்கிறது. தான் கூறியது சரியானது என்று அவர் நம்பினால் அதில் உறுதியாக நிற்பதற்கான உரிமையும் அவருக்கு இருக்க வேண்டும்.

அத்தகைய கருத்துக்களுக்கு ஜனநாயக ரீதியான எதிர்ப்பை வெளிப்படுத்தவும் முடியும். ஆனால், வன்முறை அச்சுறுத்தல்களை விடுப்பதோ அல்லது உயிர்வாழ்வதற்கான உரிமையை நிராகரிப்பதோ  தண்டனைக்குரிய குற்றங்களாக கணிக்கப்பட வேண்டும்.

Decoding the Kamal-Kannada episode என்ற தலைப்பில் எழுத்தாளர் பெருமாள்முருகன்  எழுதி ‘தி இந்து’ தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம் – வீ. தனபாலசிங்கம்.