Photo, THE HINDU
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த ஆறு மாதகால செயற்பாடுகள் மீதான தேசிய அளவிலான ஒரு வாக்கெடுப்பாக நோக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிருவாகம் மக்களின் ஆதரவை இழக்கத் தொடங்கிவிட்டது என்பதை தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது.
ஏழு மாதகால இடைவெளியில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றியைப் பெற்றிருக்கும் தேசிய மக்கள் சக்தி 339 உள்ளூராட்சி சபைகளில் 265 சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய தனியான பெரிய அரசியல் கட்சியாக விளங்குகிறது. ஆனால், அதன் வாக்குகள் கடுமையான அளவுக்கு வீழ்ச்சிகாணத் தொடங்கியிருக்கிறது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் திசாநாயக்க 41.31 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். இரு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 61.56 சதவீதமான வாக்குகளைப் பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான (159) ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. ஆனால், ஆறு மாதகால இடைவெளியில் கடந்த வாரத்தைய உள்ளூராட்சி தேர்தல்களில் அதன் வாக்குகளில் 18 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
பாரம்பரியமான அதிகார வர்க்க அரசியல் கட்சிகளை எல்லாம் நிராகரித்த மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுடனும் பிரமாண்டமான ஆதரவுடனும் முதல் தடவையாக பதவிக்குக் கொண்டு ஒரு இடதுசாரிக் கட்சியின் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த செல்வாக்கு வீழ்ச்சி பெரியதொரு பின்னடைவாகும். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளை பற்றி அரசாங்கத் தலைவர்கள் என்னதான் விளக்கங்களைக் கூறினாலும், யதார்த்த நிலைவரத்தை அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கமுடியாது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று வாக்களிப்பதில் மக்களின் ஆர்வமும் கணிசமானளவுக்கு குறைந்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் 79.46 சதவீதமாகவும் நாடாளுமன்ற தேர்தலில் 68.93 சதவீதமாகவும் இருந்த வாக்களிப்பு உள்ளூராட்சி தேர்தல்களில் 55 சதவீதத்துக்கும் 60 சதவீதத்துக்கும் இடைப்பட்டதாகவே இருந்தது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளையும் விட இரண்டு மடங்கிற்கும் அதிகமான வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருக்கின்ற போதிலும், எதிரணி கட்சிகளின் வாக்குகளில் ஒரு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் 17.66 சதவீதமான வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி இந்தத் தடவை 21.69 சதவீதமான வாக்குகளுடன் 14 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வெறுமனே 3.14 சதவீதமான வாக்குகளைப் பெற்ற ராஜபக்ஷர்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொத்த வாக்குகளில் 9.17 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் கூட அதன் வாக்குகளில் ஏற்பட்ட சொற்ப அதிகரிப்பு குறித்து ஒருவித திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.
தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சி சபைகளில் வெற்றியைப் பெற்றிருக்கின்ற போதிலும், 117 சபைகளில் பெரும்பான்மை உறுப்புரிமையைக் கொண்டிருக்கவில்லை. 120 சபைகளிலேயே எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களினால் நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை கிடைத்திருக்கின்ற அதேவேளை, 30 சபைகளில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் சமமானதாக இருக்கிறது. 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகரசபையில் ஆளும் கட்சியினால் 48 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றக் கூடியதாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்காக தேசிய மக்கள் சக்தி அதன் அதிகாரத்துக்கு உட்பட்ட சகலதையும் செய்தது. ஜனாதிபதி திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு பூராகவும் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடிய உள்ளூராட்சி சபைகளுக்கு நிதியை ஒதுக்குவது தொடர்பில் ஜனாதிபதி ஒரு எச்சரிக்கையையும் கூட மறைமுகமாக விடுத்தார்.
எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் மிகவும் உற்சாகம் குன்றியவையாகவே காணப்பட்டன. தேர்தல்கால வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைப்பதைத் தவிர, எதிர்க்கட்சிகளினால் மக்கள் முன்னிலையில் உருப்படியான ஒரு செயற்திட்டத்தையும் முன்வைக்க முடியவில்லை. இழந்த செல்வாக்கை மீளப்பெறுவதற்கு அந்தக் கட்சிகள் பிரயத்தனங்களை செய்கின்ற போதிலும், தீர்க்கமான மீள்வருகை குறித்து அவை தற்போதைக்கு நினைத்துப் பார்க்க முடியாது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் அதன் செல்வாக்கு குறைந்து வருகின்றது என்ற யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. தங்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற முறையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமையவில்லை என்பதை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள் என்பதை ஜனாதிபதியும் அரசாங்கத் தலைவர்களும் இனிமேலாவது விளங்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே புதிய அரசியல் கலாசாரம் மற்றும் முறைமை மாற்றம் பற்றிய வார்த்தை ஜாலங்களை விடுத்து பயனுறுதியுடைய செயற்பாடுகளில் அரசாங்கம் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க, பெருவாரியான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை தனியாக அதன் சொந்தத்தில் அமைப்பதில் தேசிய மக்கள் சக்தி பிரச்சினைகளை எதிரநோக்குகின்ற போதிலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து செயற்படப்போவதில்லை என்று ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா அறிவித்திருக்கிறார். முன்னைய அரசாங்கங்களின் காலத்தில் இடம்பெற்றதைப் போன்று மற்றைய கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பணத்தையும் பதவிகளையும் தருவதாக ஆசைகாட்டும் கைங்கரியங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இறங்காது என்று எதிர்பார்க்கலாம். ஆனால், தங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பும் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் தனிநபர்களின் ஆதரவுடன் நிருவாகங்களை அமைப்பது குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக சில்வா கூறியிருக்கிறார்.
பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சியை உள்ளூராட்சி நிருவாகங்களை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்பதும் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்து அதை மக்களின் ஆணையாக வியாக்கியானம் செய்ய முடியாது என்பதும் அவரது வாதமாக இருக்கிறது. ஆனால், ஆளும் கட்சியுடன் மோதுவதற்கு தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை எதிரணி கட்சிகள் கைநழுவவிடப் போவதில்லை. எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை உறுப்புரிமை கிடைத்திருக்கும் உள்ளூராட்சி சபைகளில் நிருவாகத்தை அமைப்பதற்காக இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருக்கிறார். கூட்டாக நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பது குறித்து ஆராய விரும்புவதாக ஐக்கிய தேசிய கட்சியுமும் அறிவித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகள் குறிப்பாக பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியும் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்பட முன்வரும் என்பதை அவை கொழும்பு மாநகரசபை விவகாரத்தை கையாள்வதில் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறையின் மூலம் விரைவில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் தினங்களில் சில சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுப் போக்குகளை காணக்கூடியதாக இருக்கும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் உள்ளூராட்சி தேர்தல்கள் இந்தத் தடவை வித்தியாசமான ஒரு பரிமாணத்தை எடுத்தது. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றியதே அதற்குக் காரணமாகும். குறிப்பாக, இலங்கை தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையாக கருதப்படும் யாழ்ப்பாணத்தில் ஆறு நாடாளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது.
தமிழ் அரசியல் கட்சிகளின் எதிர்காலம் குறித்து கேள்விகள் கிளம்பின. தமிழ் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்குப் பாடத்தைப் புகட்ட விரும்பினார்கள் என்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஒத்துக்கொண்டார்கள். அதனால், உள்ளூராட்சி தேர்தல்களில் சகல தமிழ்க்கட்சிகளுமே தேசிய மக்கள் சக்தியை ‘பொது அரசியல் எதிரியாகக்’ கருதி அதற்கு எதிராக தீவிர பிரசாரங்களை முன்னெடுத்தன. ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற முன்னைய ஆளும் கட்சிகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒரு சிங்கள இனவாத சக்தியே என்று தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு கூறினார்கள்.
தமிழ்த் தேசியவாதத்தின் இருப்பை உறுதி செய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் தங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. மக்களும் அந்தக் கட்சிகளுக்கே அதிகப் பெரும்பான்மையாக வாகளித்தார்கள்.
உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருடங்களில் தமிழ்க்கட்சிகளின் அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகள் மீதான வெறுப்பு காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கணிசமானளவில் வாக்களித்த தமிழ் மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தங்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் வெளிக்காட்டிய அலட்சிய மனோபாவம் காரணமாக மீண்டும் தமிழ்க்கட்சிகள் பக்கமாக திரண்டு வந்திருக்கிறார்கள்.
ஆனால், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக ஓரங்கட்டிவிட்டார்கள் என்று கூறமுடியாது. ஆளும் கட்சியும் தமிழ்ப்பகுதிகளில் கணிசமான உள்ளூராட்சி ஆசனங்களை கைப்பற்றியிருக்கிறது. இரு மாகாணங்களிலும் எட்டு மாவட்டங்களிலும் ஆளும் கட்சிக்கு 376 ஆசனங்கள் கிடைத்த அதேவேளை, பிரதான தமிழ் அணிகளான இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை மொத்தமாக 568 ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றன.
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு கட்சிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி வந்திருக்கிறது. தமிழரசு கட்சிக்கு 135 ஆசனங்களும் தேசிய மக்கள் சக்திக்கு 81 ஆசனங்களும் தமிழ் காங்கிரஸுக்கு 79 ஆசனங்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 46 ஆசனங்களும் கிடைத்திருக்கின்றன.
தமிழ் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் இழந்த செல்வாக்கை உள்ளூராட்சி தேர்தல்களில் கணிசமானளவுக்கு மீட்டெடுக்கக்கூடியதாக இருந்திருக்கிறது. ஆனால், வடக்கு தமிழ் மக்கள் தமிழ்க்கட்சிகளை முழுமையாக அரவணைத்திருக்கிறார்கள் என்று கூறமுடியாது. இந்தத் தேர்தல் முடிவுகளினால் உத்வேகம் அடைந்திருக்கும் சில தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியவாதத்தை கூடுதலான அளவுக்கு உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு நாட்டம் காட்டக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
தங்களுக்கு தற்போது கிடைத்த வெற்றியை (தாங்கள் பங்கேற்காத கடந்தகாலப் போராட்டங்களை வெறுமனே நினைவு கூர்ந்துகொண்டு) உணர்ச்சிமயமான கற்பிதங்களுடன் கூடிய கற்பனாவாத சுலோகங்களை எழுப்பும் (தோல்விகண்ட) அரசியல்பாதைக்கு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்த அங்கீகாரமாக தமிழ்க்கட்சிகள் நம்பினால் மீண்டும் தவறிழைப்பதாகவே அமையும்.
வீரகத்தி தனபாலசிங்கம்