Photo, Swissinfo

ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான தீர்மானத்தை இலங்கை எதிர்நோக்குகின்றது. உலகளாவிய கவனத்தை ஈர்த்த சூழ்நிலைகளில் படுமோசமான இரத்தக்களரியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 2009 ஆண்டுக்குப் பிறகு மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படுகின்ற 9ஆவது தீர்மானம் இதுவாகும்.

இலங்கையின் சர்வதேச மதிப்புக்குப் பாதகமாக அமையக்கூடிய வகையில் மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க மேலும் தீர்மானங்கள் கொண்டுவரப்படாதிருப்பதை உறுதிசெய்ய அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் கடுமுயற்சிகளை எடுத்துவந்தன. ஆனால், அவை பயன்தரவில்லை. அரசாங்கங்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டது.

இன்னமும் வரைவு கட்டத்தில் இருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 50/1 தீர்மானம் இலங்கை மீது தடைகளை விதிப்பதில் நாட்டம் காட்டவில்லை. மாறாக, நாடு எதிர்நோக்குகின்ற மோசமான பொருளாதார நெருக்கடியும் அதனால் மக்கள் அனுபவிக்கின்ற அவலங்களும் கருத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலைவரத்தை மனதிற்கொண்டு ஆதரவை வழங்கி இலங்கை நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு ஆதரவை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறத்தில், இரு தசாப்தங்களுக்கும் மேலாக கொலையையும் கொள்ளையையும் தாராளமாக செய்துவிட்டு அரசாங்க தரப்பினர் சுதந்திரமாக திரிவதற்கு வசதியாக அமைந்திருக்கின்ற ‘தண்டனை விலக்கீட்டு உரிமையை’ முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே புதிய தீர்மானத்தின் அடிநாதமாக அமையும் கருப்பொருளாகும். இந்தத் தீர்மானம் பல்வேறு விடயங்களுக்கு மத்தியில் (2021 ஆம் ஆண்டின் 46/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட) ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்களின் வாழ்க்கை நிலைவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கடந்தகால மற்றும் சமகால மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சான்றுகளை சேகரிப்பதற்கான பொறிமுறையில்  46/1 தீர்மானம் நாட்டம் காட்டியது. அதே கண்காணிப்பு பொறிமுறை புதிய தீர்மான வரைவின் முக்கியமான அம்சமாகும். அத்தகைய சர்வதேச கண்காணிப்பு பொறிமுறை நாட்டின் தேசிய இறையாண்மைக்குப் பாதிப்பாக அமையும் என்று அரசாங்க பிரதிநிதிகள் முன்வைத்த ஆவேச உணர்ச்சியுடனான வாதங்களினால் தீர்மானத்தை வரைந்தவர்களின் கவனத்தைத் திசை திருப்பமுடியவில்லை.

மாறாக, தற்போதைய தீர்மானத்துக்கு அவர்கள் புதிய அம்சங்களைச் சேர்த்திருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுத்தல், பயன்படுத்தக்கூடாத சட்ட ஏற்பாடுகளை பயன்படுத்தி போராட்ட இயக்கத்தை ஒடுக்குதல் ஆகியவையே கவனம் செலுத்தப்பட்டுள்ள புதிய  இரு அம்சங்களாகும்.

அரசாங்கத்தின் பொறுப்பு

மனித உரிமை மீறல்கள் மீதான ஐ.நா. கண்காணிப்பு பொறிமுறையை பலப்படுத்துவதுடன் சேர்த்து அந்த பொறிமுறையூடாக சேகரிக்கப்படும் சான்றுகளை உலகளாவிய நியாயாதிக்க சட்டக் கோட்பாட்டை பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கக்கூடிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கும் அமைப்புக்களுக்கும் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. உலகளாவிய நியாயாதிக்கம் என்பது குற்றம் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய நாடு எதுவாக இருந்தாலும்,குற்றத்தை இழைத்தவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் குற்றவியல் நியாயாதிக்கத்தை பயன்படுத்துவதில் நாட்டம் கொண்ட அரசுகளை அல்லது சர்வதேச அமைப்புகளை அவ்வாறு செய்ய அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடே உலகளாவிய நியாயாதிக்கமாகும் (Universal Jurisdiction).

விடுதலை புலிகளை ஆதரித்தவர்கள் அல்லது அந்த இயக்கத்தின் சார்பில் செயற்பட்டவர்கள் இலங்கையில் அவர்கள் செய்த காரியங்களுக்காக வெளிநாடுகளில் சட்ட நடவடிக்கைளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்த ஒரு சில சந்தர்ப்பங்கள் இருந்தன. அரசாங்கத்தின் சார்பில் செயற்பட்டவர்கள் எவரும் இதுவரையில் அத்தகைய சட்ட  நடவடிக்கைகளுக்கு ஆளாகவில்லை. ஆனால், அரசாங்கப் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய சாத்தியங்கள் இருந்த காரணத்தினால் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து அவசர அவசரமாக அகற்றப்பட்ட பல சந்தர்ப்பங்களை காணக்கூடியதாக இருந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பூர்வாங்க வரைவு அறிக்கை சட்ட மற்றும் பொருளாதார தடைகள் விதிக்கப்படக்கூடிய சாத்தியத்துக்கான அறிகுறியைக் காட்டுகிறது. அரசியலமைப்பு கட்டுப்பாடுகளையோ அல்லது பொருளாதார மீட்டிக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவையையோ காரணம் காட்டுவதன் மூலமாக சர்வதேச நெருக்குதலை திசைதிருப்புவது  அரசாங்கத்துக்குக் கஷ்டமானதாகவே இருக்கும்.

பொருத்தமான சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பு ஊடாக, எல்லைகடந்த அல்லது உலகளாவிய நியாயாதிக்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நீதிச்செயன்முறைகள் ஊடாக (இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய) சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கும்; அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது பாரதூரமான மனிதாபிமான சட்டமீறல்களை செய்ததாக நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புகளை செய்வது குறித்து ஆராய்வதற்கும்; மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் மீதான விசாரணைகளை நடத்துவதிலும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.

பொருத்தமான சர்வதேச வலையமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களினதும் அவர்களது பிரதிநிதிகளினதும் ஒத்துழைப்பு ஊடாக, எல்லைகடந்த அல்லது உலகளாவிய நியாயாதிக்கம் தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட  நீதிச்செயன்முறைகள் ஊடாக (இலங்கையில் சகல தரப்பினராலும் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய) சர்வதேச குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை விசாரித்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதற்கும்; அப்பட்டமான சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது பாரதூரமான மனிதாபிமான சட்டமீறல்களை செய்ததாக நம்பகமான முறையில் குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சொத்துக்கள் முடக்கம் மற்றும் பயணத்தடைகள் போன்ற தடைவிதிப்புக்கை செய்வது குறித்து  ஆராய்வதற்கும்; மனித உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் பொருளாதார குற்றங்கள் மீதான விசாரணைகளை நடத்துவதிலும் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதிலும் இலங்கைக்கு ஆதரவளிக்கவும் சர்வதேச ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று உயர்ஸ்தானிகரின் அறிக்கை விதப்புரை செய்கிறது.

ஐக்கிய நாடுகள் சாசனத்தை மீறுவதாக அமைகிறது என்ற அடிப்படையில் அரசாங்கம் ஆட்சேபனை தெரிவிக்கின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் 51/1 தீர்மான வரைவு பொருளாதாரக் குற்றங்கள் கோட்பாட்டை கொண்டுவருகிறது. இரு வகையான சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இலங்கை உட்பட ஐ.நா.வின் உறுப்புரிமையைக் கொண்ட சகல நாடுகளும் இந்த இரு ஒப்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஒன்று சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தம். மற்றையது பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தம். இவை ஒன்றுக்கொன்று சமமானவையும் தொடர்புபட்டவையுமாகும்.

அதனால், போர்க்குற்றங்கள் மற்றும் பொருளாதார குற்றங்களைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்படக்கூடிய இலங்கையர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்க கோட்பாட்டை பிரயோகிக்க முடியும். மேலும் பொதுவில் சர்வதேச மனித உரிமைகளை மீறியதாக குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு எதிராக அதை பிரயோகிக்கமுடியும்.

புதிய மீறல்

இப்போது முகங்கொடுக்க வேண்டியிருக்கும் பாதகமான தீர்மானத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னைய கூட்டத்தொடர்களின்போது அளித்த உறுதிமொழிகளை அரசாங்கம் காப்பாற்ற வில்லை. தற்போதைய தீர்மான வரைவு முன்னைய தீர்மானங்களின் உறுதிமொழிகளில் நிறைவேற்றப்படாதவற்றின் சாராம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. உறுதிமொழிகளை வழங்கிவிட்டு பிறகு அவற்றை காப்பாற்றாத நடைமுறை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் வழங்கப்பட்ட உறுதிமொழியுடன் தொடங்கியது. “சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளுக்கு இசைவான முறையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் வலுவான பற்றுறுதியை அரசாங்கம் கொண்டிருக்கிறது” என்று பான் கீ மூனுடனான மஹிந்தவின் கூட்டறிக்கையில் வலியுறுத்திக் கூறப்பட்டது.

2011ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளின் நடைமுறைப்படுத்தலில் கவனத்தைச் செலுத்தியது. ஆனால், ஒரு தேசிய ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட இந்த விதப்புரைகள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தேசிய விசாரணை அல்லது தேசிய பொறிமுறையை முன்னெடுப்பதாகக் கூறும் உறுதிமொழி மெய்யான தேசிய இறையாண்மையுடனான கூற்றாக அன்றி ஒரு கானல்நீராகவும் மாயையாகவுமே தோன்றுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவான முறையில் மீளாய்வு செய்யப்படும்வரை, அதைப் பயன்படுத்துவதில்லை என்று அரசாங்கம் இறுதியாக நடந்த ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2022 ஜூன் கூட்டத்தொடரில் அரசாங்கம் உறுதியளித்தது. போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு அதே சட்டத்தைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கம் அந்த உறுதிமொழியை மீறியிருக்கிறது. மாணவ தலைவர்கள் ஏதோ பயங்கரவாதிகள் என்பது போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தக் கைதுகளை நியாயப்படுத்துவதற்கு அரசாங்க உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதையும் வன்செயல் சம்பவங்கள் இடம்பெற்றதையும் காரணமாகக் கூறுகிறது.

அந்த மாணவ தலைவர்கள் ஒரு மாதத்துக்கும் கூடுதலாக உளவியல் சித்திரவதைக்கு ஒப்பான சூழ்நிலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அவர்கள் பயங்கரவாதம் என்று கூறக்கூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபட்டதற்கான சான்று எதையும் அரசாங்கம் இதுவரை முன்வைக்கவில்லை. அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை. நீதிமன்றத்துக்கு  கொண்டுவரப்படாமல் தனிமையில் அவர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தை கடுமையாக கண்டிக்கும் வகையிலான இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது தற்போது நாட்டுக்கு தேவைப்படுகின்ற பொருளாதார ஆதரவை முழு அளவில் பெறுகின்ற வாய்ப்புக்களுக்கு குந்தகத்தை ஏற்படுத்தும். அரசாங்கம் தீர்மானத்தை எதிர்த்து அதை தோற்கடிப்பதற்கான முயற்சிகளும் பயன்தராமல் போகும் பட்சத்தில் இலங்கை அரசாங்கம் அதன் உறுதிமொழிகளை காப்பாற்றும் என்று நம்பமுடியாது என்ற செய்தியே உலகிற்கு சொல்லப்படும். இது நாட்டுக்குள் சர்வதேச பொருளாதார வளங்களைக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு பாதகமாக அமையும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள் என்பதுடன் வெளிநாட்டு அரசாங்கங்களும் நம்ப முடியாத ஒரு அரசாங்கத்துக்கு அவற்றின் வரியிறுப்பாளர்களின் பணத்தை வழங்க தயக்கம் காட்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானம் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக நிறைவேற்றப்படுமானால் அது தேசிய நலனைப் பாதிக்கும். கருத்தொருமிப்பின் அடிப்படையிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் பேச்சுவார்த்தையை நடத்தி அதை நடைமுறைப்படுத்துவதே  நல்லதாக இருக்கும்.

கலாநிதி ஜெகான் பெரேரா