Photo, FOREIGNPOLICY

கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த 1983 ஜூலை இனவன்செயல்களுக்குப் பிறகு இந்த வாரத்துடன் நான்கு தசாப்தங்கள் உருண்டோடிவிட்டன.

ஒரு வாரத்துக்கு மேலாக தலைவிரித்தாடிய வன்செயல்களின் கொடூரம், அதனால் நேர்ந்த உயிரிழப்புகள், சொத்து அழிவுகளுக்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட வேதனை அதிர்ச்சியும் உளவியல் தாக்கமும் கணிப்பிடமுடியாதவை.

1983 ஜூலை 22 வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணக் குடாநாட்டில் திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் 13 இலங்கை இராணுவத்தினர் பலியான சம்பவம் அன்றைய அரசாங்கத்திற்குள் ஆதிக்கம் செலுத்திய சிங்கள இனவாதச் சக்திகள் நாடு பூராவும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்வதற்கு ஏற்கெனவே திட்டமிட்டுவந்த வல்செயல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.

இலங்கை அரசியலில் முன்னரைப் போன்று மீண்டும் எதுவுமே இருக்காது என்பதை நிறுவிய அனர்த்தங்கள் நிறைந்த அந்த மாதத்தை காலஞ்சென்ற பிரபல பத்திரிகையாளர் மேர்வின் டி சில்வா ‘கறுப்பு ஜூலை’ (BLACK JULY ) என்று வர்ணித்தார்.

அரசாங்கத்தின் மனநிலை

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு ஒரு வாரம் முன்னதாக லண்டன் ரெலிகிராவ் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அளித்த பேட்டியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் தமிழர்கள் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய மனநிலையில் இருந்தது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியது.

“இப்போது நான் யாழ்ப்பாண மக்களின் அபிப்பிராயத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்களைப் பற்றி அல்லது அவர்களது உயிர்களைப் பற்றி அல்லது எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தைப் பற்றி இப்போது எங்களால் சிந்திக்கமுடியாது. வடக்கு மீது எந்தளவுக்கு நெருக்குதல்களைப் பிரயோகிக்கின்றோமோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்” என்று அவர் சொன்னார்.

ஜெயவர்வர்தனாவின் அந்தக் கருத்துக்கள் கறுப்பு ஜூலை வன்செயல்கள் யாழ்ப்பாணத்தில் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தினால் சிங்களவர்கள் ஆவேசமடைந்ததால் மாத்திரம் மூண்டதல்ல, இனவாதச் சக்திகள்  நீண்ட நாட்களாக தீட்டிவந்த திட்டத்தின் விளைவானது என்பதை அம்பலப்படுத்தியது.

உள்நாட்டுப்போரில் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களும் உயிரிழப்புகளும் சொத்து அழிவுகளும் கறுப்பு ஜூலையில் அவர்கள் அனுபவித்தவற்றை விடவும் விபரிக்கமுடியாத அளவுக்கு அதிகமானவை என்றபோதிலும், அந்த ஜூலையே தமிழர்கள் மத்தியில் ஆயுதப்போராட்ட இயக்கங்கள் பெருகுவதற்கு வழிவகுத்து உள்நாட்டுப்போரை மூளவைத்தது என்பதால் இலங்கையின் அரசியல் வரலாற்றில் அதற்கு பித்தியேகமான ஒரு எதிர்மறைக் குறியீடு இருக்கிறது.

அந்த வன்செயல்களில் நாடுபூராவும் சொல்லொணா அவலங்களைச் சந்தித்து ஆயிரக்கணக்கில் அகதிமுகாம்களில் தஞ்சமடைந்த தமிழ் மக்களுக்கு அனுதாபமாக ஒரு வார்த்தையையேனும் கூறுவதற்கு அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் முன்வரவில்லை.

வன்செயல்களை நியாயப்படுத்திய ஜனாதிபதி

வன்செயல்கள் மூண்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு ஜூலை 28 வியாழக்கிழமை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி ஜெயவர்தன அந்த வன்செயல்களை தமிழ் அரசியல்வாதிகளின் நாட்டுப் பிரிவினைக் கோரிக்கைக்கு எதிரான சிங்கள மக்களின் இயல்பான பிரதிபலிப்பு என்று கூறி நியாயப்படுத்தினாரே தவிர பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று கிஞ்சித்தேனும் நினைக்கவில்லை.

வன்செயல்களை உடனடியாகக்  கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மாத்திரமல்ல, படையினரும் பொலிஸாரும் வன்முறைக் கும்பல்களுக்கு அனுசரணையாகவே செயற்பட்டனர்.

அரசாங்க அரசியல்வாதிகள் பல அமைச்சர்களும் கூட தங்கள் பகுதிகளில் முன்னணியில் நின்று  தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டிவிட்டார்கள்.

வன்முறைக் கும்பல்களைக் கலைக்க படையினர் ஏன் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்று ஜெயவர்தனவிடம் பி.பி.சி. பேட்டியொன்றில் கேட்கப்பட்டபோது, “படையினர் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகள் பெருமளவுக்கு இருந்தது என்று நான் நினைக்கிறேன். கலவரங்களில் ஈடுபட்ட சிங்களவரைச் சுடுவது சிங்கள சமூகத்துக்கு விரோதமான செயலாக இருக்கும் என்று படையினர் உணர்ந்திருக்கக்கூடும். சில இடங்களில் கலகக்காரர்களை படையினர் உற்சாகப்படுத்தியதையும் கண்டோம் ” என்று பதிலளித்தார்.

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்காக ஜெயவர்தனவோ அல்லது அன்று பிரதமராக இருந்து பிறகு ஜனாதிபதியாகவும் வந்த ரணசிங்க பிரேமதாசவோ அல்லது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளில் இருந்த அரசியல்வாதிகளில் எவருமோ உயிருடன் இருந்தவரை தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவித்ததில்லை.

மன்னிப்புக் கோரிய சந்திரிகா

பின்னாளில் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாத்திரமே இலங்கை அரசின் சார்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

கறுப்பு ஜூலையின் 21ஆவது வருட நினைவைக் குறிக்குமுகமாக கொழும்பில் வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர், “அந்த வன்செயல்களுக்காக இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கூட்டாக குற்றப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும். இலங்கை அரசு மற்றும்  இலங்கையின் சகல குடிமக்கள் சார்பிலும் மன்னிப்புக்கோரும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்தியத் தலையீடு

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டுக்கு கறுப்பு ஜூலை வழிவகுத்தது. அன்றைய இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நிலைவரங்களை அவதானிக்க தனது வெளியுறவு அமைச்சர் பி.வி. நரசிம்மராவை கொழும்புக்கு அனுப்பினார்.

அவர் வந்திறங்கிய தினமான (29 ஜூலை 1983) கொழும்புக்கு விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக புரளியைக் கிளப்பிய இனவாதச் சக்திகள் தமிழர்கள் மீது மீண்டும் படுமோசமான தாக்குதல்களை மேற்கொண்டன. அன்றைய தினமே பெருமளவு கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதுண்டு.

தமிழர்கள் சார்பில் இந்தியா தலையீடு செய்வதற்கு சிங்களவர்களின் எதிர்ப்பை வெளிக்காட்டவே நரசிம்மராவ் கொழும்பில் இருந்தவேளை இனவாதச் சக்திகள் மீண்டும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை.

கறுப்பு ஜூலைக்குப் பிறகு ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த  இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் காமினி திசாநாயக்க இந்தியா இலங்கை மீது படையெடுத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கு முயற்சிப்பதாகக் கூறிக்கொண்டு மறுபுறத்தில் இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின.

ஐரிஷ் குடியரசு அரசியல்வாதியும் சின் ஃபீன் இயக்கத்தின் முன்னாள் தலைவருமான ஜெரி அடம்ஸ் வட அயர்லாந்து நெருக்கடிக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, “சமாதான முயற்சிகள் வேறு மார்க்கங்களிலான போர்தான்” (Peace process are war by other means) என்று குறிப்பிட்டார். இலங்கையின் சமாதான முயற்சிகளும் அவ்வாறே அமைந்தன என்பதை அனுபவ வாயிலாக நாம் கண்டோம்.

போர்ப்பிரமை

சிங்கள அரசியல் தலைவர்கள் அடிப்படையில் தமிழர் பிரச்சினை தொடர்பிலான தங்களது சிந்தனையில் ‘போர்’ பற்றிய ஒரு பிரமையைக் கொண்டிருந்தார்கள். இதற்கு இரு உதாரணங்களை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

1977 ஜூலை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஜெயவர்தன பிரதமராக பதவியேற்ற சில வாரங்களில் தலைநகர் கொழும்பு உட்பட பல நாட்டின் பல பாகங்களிலும் தமிழர்களுக்கு எதிராக வன்செயல்கள் மூண்டன. அப்போது தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்.

அந்த வன்செயல் நாட்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜெயவர்தன அமிர்தலிங்கத்தை நோக்கி “சமாதானம் என்றால் சமாதானம். போர் என்றால் போர் ” என்று கூறினார்.

அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் 1956 ஜூன் 5 பிரதமர்  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அரசாங்கம் சிங்களத்தை மாத்திரம் அரசகரும மொழியாக்கும் சட்டத்தை கொண்டுவந்ததை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழரசு கட்சி கொழும்பு காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தியது. அரசாங்கத்தின் தூண்டுதலுடன் காடையர்கள் பொலிஸார் பார்த்துக்கொண்டு நிற்க சத்தியாக்கிரகிகளை கொடூரமாக தாக்கினார்கள்.

அந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரான அமிர்தலிங்கம் தலையில் தனது காயத்துக்கு கட்டுப்போட்டுக்கொண்டு நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தபோது அவரை விளித்து “கௌரவ போர்க்காயங்களே” (Honourable Wounds of War) என்று பண்டாரநாயக்க பேசினார்.

தமிழர்கள் ஆயுதமேந்துவதற்கு வெகு முன்னதாகவே தமிழர்களின் நியாயபூர்வமான உரிமைப் போராட்டத்தை சிங்களத் தலைவர்கள் ஒரு போர் மனோபாவத்துடனேயே நோக்கினார்கள் என்பது தெளிவாகிறது. இறுதியில் அந்தப் போர் வருவதை எவராலும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை. அதற்குப் பின்னரானவை அண்மைக்கால வரலாறு.

இராணுவத் தீர்வு

சகல ஜனாதிபதிகளும் உலக ஒப்பாசாரத்துக்காக அரசியல் தீர்வைப் பற்றி பேசினார்களே தவிர இராணுவத் தீர்வை காணும் முயற்சிகளுக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள்.

இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேசத்தின் பங்களிப்போ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைந்து இறுதியில் முழுவீச்சிலான போர் மூளுவதையே உறுதிசெய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

சர்வதேச அரசியல் நிகழ்வுப்போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலை புலிகளை தோற்கடித்து உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கச் செய்தன.

போரில் அரசாங்கப் படைகள் வெற்றிபெறுவதற்கு உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய ஒரே ஜனாதிபதி தானே என்று உரிமைகோரிய ராஜபக்‌ஷ போர்வெற்றியை மையப்படுத்தி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்து உச்சபட்ச அரசியல் ஆதாயத்தை அறுவடை செய்தார்.

இராணுவவாத அணுகுமுறையுடன் சிங்கள பௌத்த பெரும்பான்மை இனவாத அரசியல் கொள்கைகளை முன்னெடுத்த ராஜபக்‌ஷர்கள் இறுதியில் தங்களது தவறான ஆட்சிமுறை, ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப ஆதிக்க அரசியலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்டார்கள். அவர்களின் வீழ்ச்சி உண்மையில் பெரும்பான்மை இனவாத அரசியலின் தோல்வியைப் பறைசாற்றியது எனலாம்.

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பவும் தவறான ஆட்சிமுறையை மூடிமறைக்கவும் இனிமேலும் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல்களுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே இலங்கை வரலாறு காணாத படுமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உணர்த்தி நிற்கும் முக்கிய படிப்பினையாகும்.

ஆனால் அண்மைக்காலமாக மீண்டும் இனவாத அரசியல் அணிதிரட்டல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். இன அடிப்படையிலான பிரச்சினை இப்போது தீவிரமாக மதங்களுக்கு இடையாலான பிரச்சினையாகவும் திசை திருப்பப்படுகிறது.

மீண்டும் இனக்கலவரம் பற்றிய பேச்சுக்கள்

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் இலங்கை இதுவரை காணாத மிகப்பெரிய இனக்கலவரம் மூளும் என்ற விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற இனவாத அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி  அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். சிங்கள பௌத்த மக்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இத்தகைய பின்னணியிலே, மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கறுப்பு ஜூலையில் இருந்தும் அதற்குப் பின்னரான நான்கு தசாப்தகால அரசியல் நெருக்கடிகளில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயம் எதாவது படிப்பினையை பெற்றிருக்கிறதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகிறது.

தமிழ் மக்களின் இன்றைய நிலை

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு கறுப்பு ஜூலையை நாம் நினைவுகூருவது இது பதினான்காவது வருடமாகும். இந்தக் கட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது?

நான்கு தசாப்தங்களிலும் 15 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குறிப்பாக மேற்கு ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் புலம்பெயர்ந்து நவீன யூதர்கள் போன்று வாழ்கிறார்கள். மேற்கு நாடுகளில் உள்ள செல்வாக்குமிக்க ஆசிய புலம்பெயர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினராக இலங்கை தமிழர்கள் விளங்குகிறார்கள்.

இலங்கையில் வந்து முதலீடுகளைச் செய்து தாய்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுமாறு அரசாங்கத்   தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்ற அளவுக்கு புலம்பெயர் இலங்கை தமிழர்களில் பலர் பொருளாதார ரீதியில் வலிமைமிக்கவர்களாக இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்கள்  எதிர்நோக்கும் மனிதாபிமானப் பிரச்சினைகள் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காணும் முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக மேற்குலக நாடுகளின் கவனத்தை இடையறாது ஈர்க்கும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்கள் மத்தியில் உள்ள அமைப்புக்கள் ஈடுபட்டுவருகின்றன.

வடக்கு கிழக்கில் போரின் விளைவான அவலங்களில் இருந்து இன்னமும் முழுமையாக விடுபடமுடியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடர்பாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.

போரின் முடிவுக்குப் பின்னரும் தமிழ்ப் பிரதேசங்களில் இராணுவமயத்தை வலுப்படுத்துவதிலேயே அரசாங்கங்கள் அக்கறை காட்டுகின்றன. தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் அரசாங்க அனுசரணையுடன் திட்டமிட்ட குடியேற்றங்கள் மதவாத சக்திகளின் துணையுடன் தீவிரப்படுத்தப்படுவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

தொல்பொருள் ஆராய்ச்சி, வனப்பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகள் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் இன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பாரதூரமான உடனடிப் பிரச்சினையாக இருக்கிறது.

கறுப்பு ஜூலைக்குப் பிறகு இந்தியாவின் நேரடித் தலையீட்டை அடுத்து 1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை மாகாண சபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. அதற்காகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் 36 வருடங்கள் கடந்தும் கூட முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை சகல அரசாங்கங்களுமே உறுதிசெய்துகொண்டன .

இந்தியாவினால் கூட அது விடயத்தில் இலங்கையை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. சமாதான உடன்படிக்கை்குப் பின்னரான காலப்பகுதியில் அரசியல் தீர்வை நோக்கிய பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் 1991 மங்கள முனசிங்க தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2000 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள், மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் 2006 பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிநிதித்துவக் குழுவின் யோசனைகள் மற்றும் மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை வரைவதற்கு முன்னெடுக்கப்பட்ட செயன்முறை ஆகியவையே அவையாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா.சம்பந்தன் அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பல சந்தர்ப்பங்களிலும் இந்த முயற்சிகளைப் பற்றி திரும்பத்திரும்ப விளக்கிக் கூறிவந்தார். இறுதியாக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் கூட சம்பந்தன் அவற்றைப் பற்றி சிலாகித்தார். ஆனால், ஜனாதிபதி அவற்றில் அக்கறை காட்டக்கூடிய மனநிலையில் இல்லை.

சம்பந்தனைப் பொறுத்தவரை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் இனப்பிரச்சினைக்கு அதிகபட்ச அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வொன்றைக் வகுப்பதற்குப் புதிதாக எதையும் ஆராயத் தேவையில்லை, மேற்கூறப்பட்ட முயற்சிகளின்போது வரையப்பட்ட யோசனைகளை பரிசீலனைக்கு எடுத்தால் போதும் என்பதே நிலைப்பாடாக இருந்தது.

அண்மைக்காலமாக தமழ்க்கட்சிகளுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்க நடத்திவந்த பேச்சுவார்த்தைகளிலும் முன்னேற்றத்தைக் காணமுடியாமல் இருக்கிறது.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னதாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறிக்கொண்டு விக்கிரமசிங்க கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் இரு தடவைகள் சர்வகட்சி மகாநாடு என்ற பெயரில் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டை கூட்டினார். அந்த முயற்சியைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல்போன நிலையில் இறுதியாக தமிழ்க்கட்சிகளுடன் மாத்திரம் அவர் பேசினார்.

13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும் என்று யாழ். நகரில் தைப்பொங்கல் விழாவில் விக்கிரமசிங்க அறிவித்தார். அரசியலமைப்பில் இருக்கும் அந்தத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனாதிபதி என்ற வகையில் தனது கடமை என்று அதை எதிர்க்கும் அரசியல் சக்திகளுக்கு கூறிய அவர் ஒன்றில் அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் அல்லது அதை ஒழித்துவிட எவராவது நாடாளுமன்றத்தில் புதிய திருத்தச்சட்டம் ஒன்றை தனிநபர் பிரேரணையாகக் கொண்டுவரவேண்டும் என்றும் கூட குறிப்பிட்டார்.

பொலிஸ் இல்லாத பதின் மூன்று

ஆனால், தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பையடுத்து அவர் பிறகு பதின் மூன்றைப் பற்றி பேசுவதைத் தவிர்த்துக்கொண்டார். இப்போது இறுதியாக இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அவர் யோசனையை முன்வைத்தார்.

ஆனால், தமிழ்க்கட்சிகள் அதை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டன. இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னதாக அந்த யோசனையை விக்கிரமசிங்க வெளியிட்டதற்கு ஒரு அந்தரங்க நோக்கம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

புதுடில்லியில் இந்திய அரசாங்கத்திடமிருந்து 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி விரைவில் மாகாண சபை தேர்தல்களை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தல் வரும்போது தன்னால் அது விடயத்தில் செய்யக்கூடியது என்ன என்பதை அவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தும் நோக்குடன்தான் பொலிஸ் இல்லாத 13 பற்றி ஜனாதிபதி கொழும்பில் பேசினார்.

தமிழ்க்கட்சிகள் அதை நிராகரித்துவிட்ட நிலையில் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை மீண்டும் எவ்வாறு தொடங்குவது என்பதில் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும் விக்கிரமசிங்க தமிழர்களை வென்றெடுப்பதை விடவும் தென்னிலங்கை தேசியவாத சக்திகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பதிலேயே கூடுதல் அக்கறை காட்டக்கூடும்.

கறுப்பு ஜூலைக்கும் உள்நாட்டுப் போருக்கும் வழிவகுத்த இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டிய அவசியம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல் சமுதாயம் உணருவதாக இல்லை. தீர்வு முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாடு இன்று மூன்றரை தசாப்தங்களுக்கும் கூடுதலான காலமாக அரசியலமைப்பில் இருந்து வரும் ஒரு திருத்தத்தைக் கூட கைவிடவேண்டும் என்று போர்க்கொடி தூக்குகின்ற அளவுக்கு வலுவடைந்திருக்கிறது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு நழுவிக்கொண்டே போகிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்