Photo, REUTERS

உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஒரு மாதம் கடந்துவிட்ட போதிலும், அரைவாசிக்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க முடியாமல் அரசியல் கட்சிகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிரணி கட்சிகளும் மற்றைய கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக இறங்கியிருக்கின்றன.

முன்னைய அரசாங்கங்களைப் போன்று தேசிய மக்கள் சக்தியும் ‘குதிரை பேரத்தில்’ ஈடுபடுகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை அரசாங்கத் தலைவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஒரு அரசியல் ஆய்வாளர் கடந்த வாரம் கூறியதைப் போன்று முறைமையை அரசாங்கம் மாற்றுகிறதா அல்லது அரசாங்கத்தை முறைமை மாற்றத் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.

தென்னிலங்கையில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றி முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி நிருவாகங்களை அமைக்க முடியாமல் இருப்பதை போன்று வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளில் பெரும்பாலான சபைகளில் முதலாவதாக வந்த இலங்கை தமிழரசு கட்சியினாலும் செய்ய முடியாமல் இருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள சபைகளில் தமிழ் கட்சிகள் மாத்திரம் நிருவாகங்களை அமைப்பதற்கு ஒத்துழைப்பதாக தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய பல தமிழ் அரசியல் தலைவர்கள் தற்போது வேறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னென்றும் இல்லாத வகையில் பெற்ற வெற்றி தங்களின் எதிர்கால அரசியலுக்கு பெரிய ஆபத்தாக அமையப்போகிறது என்று அஞ்சிய தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதத்தின் இருப்பை உறுதிசெய்யவும் தேசியவாத உணர்வை தமிழ் மக்கள் இழந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கவும் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளுக்கு மாத்திரமே வாக்களிக்க வேண்டும் என்று தமிழ் மக்களிடம் கேட்டார்கள். தென்னிலங்கையின் எந்தவொரு தேசியக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிக்கக்கூடாது என்பதே அவர்களின் வலியுறுத்தலாக இருந்தது.

அதிகாரத்துக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடைப்பிடித்த அக்கறையற்ற அணுகுமுறை தமிழ் கட்சிகளின் வேண்டுகோளை தமிழர்கள் பெருமளவுக்கு கருத்தில் எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ் அரசியல்வாதிகள் சிலர் கூறுவது போன்று தமிழ் மக்கள் குறிப்பாக, வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை முற்றாக நிராகரித்து விட்டதாக ஒருபோதும் கூறமுடியாது. வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் அதற்கு தெளிவான சான்று. தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டை என்று கருதப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு (135 ) கட்சிக்கு அடுத்ததாக கூடுதல் ஆசனங்களை (81) தேசிய மக்கள் சக்தியே கைப்பற்றியது.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 16 வருட காலப்பகுதியில் தங்களது அரசியல் உரிமைப் போராட்டத்தை வெறுமனே உணர்ச்சிவசமான சுலோகங்களை முழங்குவதை விடுத்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டிநிற்பதற்கு ஏற்ற முறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான வழிமுறைகளில் முன்னெடுக்கத் தவறிய தமிழ்க்கட்சிகளை தமிழ் மக்கள் மீண்டும் முழுமையாக நம்பத் தொடங்கியிருக்கிறார்கள் என்று கூறமுடியாது. கடந்த ஆறு மாதங்களில் ஜனாதிபதி அநுர குமார குமார திசநாயக்கவும் அவரது அரசாங்கமும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய முறையில் அவர்களது பிரச்சினைகளை கையாளுவதில் மனப்பூர்வமான நாட்டத்தை காட்டியிருந்தால் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்ததை விடவும் கூடுதலான ஆதரவை வடக்கு, கிழக்கில் பெற்றிருக்க முடியும்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ‘தி இந்து’ பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தத் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடத்தை புகடடுவதற்கு தமிழ் மக்கள் விரும்பினார்கள் என்றும் அந்தப் பாடத்தை உகந்த முறையில் புரிந்துகொண்டு தமிழ்க்கட்சிகள் அவற்றின் போக்கை மாற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் பெரிய அனர்த்தத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

ஆனால், உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பின்னரான தமிழ் அரசியல் நிகழ்வுப் போக்குகளை நோக்கும் போது நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தமிழ் அரசியல்வாதிகள் எந்த பாடத்தையும் பெற்றுக் கொண்டதாக தெரியவில்லை. இந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றிகளை அடுத்து அவர்கள் தங்களது பழைய பாதைக்குத் திரும்பிவிட்டார்கள். உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதில் தமிழ் கட்சிகள் ஒத்துழைத்துச் செயற்படும் என்று எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. உள்ளூராட்சி நிருவாகங்களில் ஒத்தழைத்துச் செயற்படுவதற்கு கிடைக்கும் வாய்ப்பு நாளடைவில் தமிழ்க்கட்சிகளின் பரந்தளவிலான  ஒற்றுமைக்கு வழிவகுக்க முடியும் என்று எதிர்பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், கடந்த சில நாட்களாக வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள், கூட்டணிகளை அமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைப் பிரகடனங்கள்  தமிழ் மக்களின் நலன்களை விடவும் தங்களது கட்சி அரசியல் நலன்களிலேயே தமிழ் அரசியல்வாதிகள் கடுமையான கரிசனை காட்டுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்துகின்றன. தேசிய மக்கள் சக்திக்கு எதிராக ஒரேமாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதில் மாத்திரமே தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கிறது.

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பல உள்ளூராட்சி சபைகளில் தனியாக நிருவாகத்தை அமைக்கக்கூடியதாக அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தால் சில வேளைகளில் தமிழ் கட்சிகளின் அணுகுமுறை வித்தியாசமானதாக இருந்திருக்கக்கூடும். ஏனென்றால், தங்களது அரசியல் இருப்புக்கு ஆபத்தாக அமையக்கூடிய எந்தவொரு நிகழ்வுப் போக்கிற்கும் எதிராக ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கும் தமிழ் அரசியல்வாதிகள் அந்த ஆபத்தைக் கடந்து விட்டால் தங்களது பழைய போக்கிற்கு திரும்பிவிடுவார்கள். இன்று வடக்கில் நடப்பது அதுதான்.

வடக்கு தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று இரு முகாம்களாக பிரிவுபடும் திசையை எடுத்திருக்கிறது. ஒன்று தமிழரசு கட்சியும் அதற்கு ஆதரவான சக்திகளும். மற்றையது தமிழ் தேசிய பேரவை என்ற புதிய அவதாரத்தை எடுத்திருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அதற்கு ஆதரவான சக்திகளும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக விளங்கிய தமிழரசு கட்சி தற்போது கூட்டணிகளை அமைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால், தங்களைத் தவிர கொள்கையில் நேர்மையானவர்கள் இலலை என்ற நம்பிக்கையில் இதுகாலவரை மற்றைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு திட்டவட்டமாக மறுத்து வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி இப்போது கூட்டணி அமைப்பதில் அக்கறை காட்டுகிறது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதான அங்கத்துவ கட்சியாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விளங்குகிறது. உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னதாக சில குழுக்களை இணைத்துக் கொண்டு தமிழ் தேசிய பேரவை என்ற அவதாரத்தை எடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேர்தலுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்திருக்கிறது. புதிய கூட்டணிக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை.

தமிழ்ப் பகுதிகளில் உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை அமைப்பதே புதிய கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்ற போதிலும், இரு தரப்பினரும் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஓரணியில் செயற்படப்போவதாக உறுதிபூண்டு உடன்படிக்கையில் கடந்தவாரம் கைச்சாத்திட்டதுடன் கொள்கைப் பிரகடனம் ஒன்றையும் செய்திருக்கிறார்கள்.

இந்த உடன்படிக்கைக்கு முன்னதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் உள்ளூராட்சி சபைகளில் ஒத்துழைத்துச் செயற்படும் சாத்தியம் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

ஆனால், தாங்கள் கணிசமான ஆசனங்களை கைப்பற்றிய சில உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைக்க ஆதரவு தரவேண்டும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு தமிழரசு கட்சி மறுத்ததை அடுத்து அவர்கள் தமிழ் தேசிய பேரவை பக்கம் சென்றிருக்கிறார்கள். அதேவேளை, தமிழரசு கட்சி உள்ளூராட்சி நிருவாகங்களை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அவர்களால் எந்தளவுக்கு ஒத்துழைத்துச் செயற்படக்கூடியதாக இருக்கும் என்பது விரைவில் தெரிந்து விடும்.

கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தலைமைத்துவ தேர்தலுக்குப் பிறகு தமிழரசு கட்சி உட்கட்சித் தகராறுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தலில் சிவஞானம் சிறீதரனிடம் தோல்வி கண்ட எம்.ஏ. சுமந்திரன் மத்திய செயற்குழுவின் ஆதரவுடன் கட்சியை தற்போது தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். நாடாளுமன்ற குழுவின் தலைவராக இருக்கின்ற போதிலும், சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் கட்சியை நிருவகிப்பவர் போன்றே பெரும்பாலும் நடந்துகொள்கிறார்.

தமிழரசு கட்சி சுமந்திரனின் வழிகாட்டலில் செயற்படுவதை கட்சிக்குள் உள்ள சிறீதரன் அணியினர் மாத்திரமல்ல, மற்றைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் விரும்பவில்லை. அதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தயங்காத அவர்கள் தமிழரசு கட்சி சிறீதரனின் தலைமையின் கீழ் வருவதை பெரிதும்  விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

உட்கட்சித் தகராறுக்கு தீர்வைக் காண்பது தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை பொறுத்த விடயம். ஆனால், தமிழரசு கட்சி சுமந்திரனின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அதற்கு விமோசனம் இல்லை என்று அவரை விரும்பாதவர்கள் பேசிக்கொண்டிருந்த நிலையில், உள்ளூராட்சி தேர்தலில் கட்சியின் பெரிய வெற்றி அவரின் எதிராளிகளுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் முன்னரங்கத்தில் சுமந்திரனே நின்றார். குறிப்பாக, யாழ்ப்பாண குடாநாடடுக்குள் தமிழரசு கட்சிக்கு தோல்வி ஏற்பட்டிருந்தால் அவரை கட்சிக்குள்ளும் தமிழர் அரசியலில் இருந்தும் ஒதுக்குவது சுலபமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. இந்தப் பின்புலத்திலேயே வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழரசு கட்சியின் நிருவாகங்களை அமையவிடாமல் தடுப்பதற்கான வியூகங்களை நோக்க வேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,  தமிழ் தேசிய பேரவை ஆகிய மூன்று அணிகளே தமிழர் தரப்பில் முக்கியமானவையாக களத்தில் இருந்தன. தனித்தனியாகப் போட்டியிட்டிருந்தாலும், தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை செய்வதில் அவற்றுக்கிடையில் ஒற்றுமை இருந்தது. தேர்தலுக்குப் பிறகு உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதில் தோன்றியிருக்கும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக ஏன் இந்த மூன்று அணியினராலும் ஒரு சுமுகமான ஏற்பாட்டுக்கு வரமுடியாது? கட்சி அரசியல் போட்டியையும் ஆளுமை மோதல்களையும் தவிர இதற்கு வேறு என்ன காரணத்தை இவர்களால் கூறமுடியும்? குறைந்தபட்சம் உள்ளூராட்சி நிருவாகங்களிலேயே ஒத்துழைத்துச் செயற்ட முடியாத இவர்களிடம் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு ஒன்றிணைந்த அணுகுமுறையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

இதனிடையே, உள்ளூராட்சி தேர்தல்களுக்குப் பிறகு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்த சுமந்திரன் மாகாண சபை தேர்தலில்  தமிழரசு கட்சியின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளியிடாமல் இருந்திருந்தால், வடக்கில் தற்போதைய புதிய அணிசேருகைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போயிருக்கவும் கூடும். வடக்கு அரசியலில் பல வருடங்களாக நிலவும் சுமந்திரன் எதிர்ப்பு நிலைப்பாடு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றிணைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இலங்கை தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைத்துவத்துக்கான நிழல் யுத்தம் ஒன்று இந்த நிகழ்வுப் போக்குகளில் உட்கிடையாக இருக்கிறது.

அதுபோக, வடக்கில் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளையும் அமைக்கப்படும் கூட்டணிகளையும் நோக்கும்போது ‘துரோகிகள்’ என்று ஒருதரப்பு அரசியல்வாதிகளை அழைக்கும் கலாசாரத்துக்கு முடிவு வந்துவிட்டது போன்று தெரிகிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்