பட மூலம், Amnesty International 

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. மனித உரிமைகளுக்காக வாதிடும் சட்டத்தரணி. அவர் கைது செய்யப்பட்டு, ஏழு மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது கைது அநீதியானதென அவரது உறவினர்களும், நண்பர்களும் ஆதங்கப்பட்டார்கள். அப்போது, “சத்தம் போடாதீர்கள், சட்டம் தனது கடமையைச் செய்ய இடமளியுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டது. விசாரணையில் தலையிட வேண்டாம் என்றும் சொல்லப்பட்டது. உண்மை தானாக வெளிவந்து, சிலவேளை ஹிஜாஸ் விடுதலையாகலாம் என்பதால், பொறுமை காக்குமாறு அவர்களுக்குக் கூறப்பட்டது.

ஆனால், இப்போது ஏழு மாதங்கள் கடந்துள்ளன. தீர்ப்பு கண்ணுக்கெட்டாத தூரத்தில் விசாரணைகள் தொடர்கின்றன. ஹிஜாஸ் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சினை இருக்குமானால், சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரிகளும், சட்டத்தரணிகளும் இதுவரையில் முறையாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருக்க மாட்டார்களா? ஆக, அதிகாரிகள் முடிவில்லாமல் விசாரிக்க நாம் இடமளிக்க வேண்டுமா?

ஏழு மாதங்கள் கடந்துள்ளன. ஹிஜாஸ் விவகாரத்தில் ஊடக சாகஸங்கள் ஓய்ந்து விட்டன. இவர் குற்றவாளியென தாமாக முன்கூட்டியே தீர்மானித்தவர்கள் கோமாளிகளாக மாறியிருக்கிறார்கள். வலுவான ஆதாரங்கள் எனக் கூறப்படும் சில விடயங்களை வெளியிட்ட சில ஊடகங்கள், ஹிஜாஸ் என்ற மனிதரில் இருந்து ஒரு அரக்கனை சித்தரிக்க முனைந்தன. ஆனால், எந்தவொரு ஆதாரத்திலும் நம்பகத்தன்மை இல்லையெனத் தோன்றுவதால், அவையே ஹிஜாஸை மாவீரராக மாற்றியிருக்கின்றன.

ஏழு மாதங்கள் கடந்துள்ளன. ஹிஜாஸ் இன்னமும் நீதிபதியொருவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவில்லை. விசாரணைகள் கையாளப்படும் விதம் பற்றி மஜிஸ்ட்ரேட் நீதிபதியொருவர் கரிசனை வெளியிட்டுள்ளார். எனினும், கொடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதிகாரம் அவருக்குக் கிடையாது.

ஹிஜாஸின் விவகாரம் பிரதான நீதி முறைமையில் இருந்து புறத்தே கிடப்பதல்ல. இது நீதியை நிலைநாட்டுவதற்காக பாடுபடும் சட்டத்தரணிகள் எதிர்கொள்ளும் ஆபத்தைப் பிரதிபலிக்கிறது. அநீதி பற்றி கேள்வி கேட்காத சட்டத்தரணிகள் எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதையும் இது பிரதிபலிக்கிறது.  எனவே, விசாரணைக் கூண்டில் நிற்பவர் ஹிஜாஸ் அல்ல. சட்டத்தரணிகளின் ஒட்டுமொத்த தொழில் துறைக்கும் சாவு மணி அடிக்கப்படுகிறது.

ஹிஜாஸின் காலடித் தடத்தில் நடந்து செல்பவர்கள், அவருக்கு நேரக்கூடிய கதியின் அபத்தம் எவ்வளவு சுமையானது என்பதை உணர்வார்கள். அடுத்தது நாம் தான் என்பதை அறிந்து பயணத்தைக் கைவிடவும் கூடும். ஹிஜாஸிற்கு எதிரான அநீதி, முறையாக எதிர்கொள்ளப்படாவிட்டால் அது சகல சட்டத்தரணிகளுக்கும் தவறான முன்னுதாரணமாக அமைந்து விடலாம். அவர்கள் தமக்குரிய வேலையை செய்வதற்காக தண்டிக்கப்பட்டு, தமது சகாக்களால் கைவிடப்படும் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

ஏப்ரல் மாதம் ஹிஜாஸ் கைது செய்யப்பட்ட சமயம், இலங்கை சட்டத்தரணிகள் ஆரம்ப கட்டத்தில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்தவில்ல. அவர் கைதானதை சிலர் கண்டித்தார்கள். மேலும் பலர், இந்த விடயத்தில் கவனம் வேண்டும் என வலியுறுத்தினார்கள். சில சட்டத்தரணிகள் ஹிஜாஸின் குற்றமின்மையையும் கேள்விக்கு உட்படுத்தினார்கள். நீதி முறைமையே ஈற்றில் நீதியை நிலைநாட்டும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால், இன்று ஏழு மாதங்கள் கடந்துள்ளன. கடந்து சென்ற காலப்பகுதியானது, இலங்கை சட்டத்தரணிகள் தமது நிலையை மீளவும் மதிப்பீடு செய்து, இத்தகைய பாரதூரமான அநீதிக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வழிவகுத்த காலமாகவும் இருக்கலாம். இந்த சட்டத்தரணிகளில் ஒருவர், உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தமது தொழிலைத் தொடர முடியாமல், தமது மனைவியின் பிரசவத்தில் உடனிருந்து பிள்ளையைப் பார்க்கும் சந்தோஷம் மறுக்கப்பட்டு தடுப்புக்காவலில் அல்லற்படுகிறார்.

இம்மாத முற்பகுதியில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் குழு ஹிஜாஸ் தொடர்பில் வலுவான அறிக்கையொன்றை விடுத்திருந்தது. அவர் குற்றச்சாட்டு இல்லாமல் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பற்றி கரிசனை வெளியிட்டிருந்தது. இந்தக் குழுவின் அங்கத்தவர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி பாரிஸ்டர்களாக உள்ளார்கள்.

இந்தக் குழுவானது, “தடுப்புக் காவலில் இருந்து ஹிஜாஸை விடுதலை செய்யுங்கள். இலங்கையின் சட்டத்தரணிகள் தத்தமது தொழில்துறை கடமைகளுக்காகப் பழிவாங்குதல், அச்சுறுத்தல்கள், இம்சைப்படுத்தல்கள் பற்றிய அச்சம் இல்லாமல் தடங்கல் இன்றி நிறைவேற்றக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் எடுங்கள்” என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இன்னொரு நாளில், சட்டத்தரணிகள், நீதிபதிகள், ஜூரர்கள், சட்ட ஸ்தாபனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய LawAsia என்ற பிராந்திய அமைப்பும் ஹிஜாஸ் தொடர்பில் வலுவானதொரு அறிக்கையை விடுத்திருந்தது. ஹிஜாஸிற்கு எதிராக ஊடகங்களில் கதையளக்கப்படும் முன்தீர்மானம் மிக்க தப்பெண்ணங்கள், ‘குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் ஒருவரை நிரபராதியாகக் கருதுதல்’ என்ற அடிப்படைக் கோட்பாட்டையே அச்சுறுத்துவதாக அவ்வமைப்பு கூறியிருந்தது. இவ்வமைப்பும் ஹிஜாஸை விடுதலை செய்து, சட்டத்தரணியாக வேலை செய்வதற்கு உள்ள உரிமையையும், தன்னிச்சையான தடுத்து வைத்தலுக்கு எதிரான உரிமையையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருந்தது,

சட்டத்தரணிகள் சார்ந்த மேலும் இரண்டு சங்கங்களும் ஹிஜாஸிற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. எமது சட்டத்தரணிகள் சங்கமும் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்து, ஹிஜாஸை விடுதலை செய்யுமாறு தெளிவாக கோரிக்கை விடுக்க வேண்டும். அவர் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் உள்ள போலித்தன்மையை முன்னணி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகள் அங்கீகரிக்க முன்வந்துள்ளார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் கிடையாது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மிகப்பெரிய சோதனையை எதிர்கொள்ளும் நிலையில், அதன் தைரியமும், நற்பண்பும் மேலோங்கி, நீதியின் மீதான புதுககடப்பாடு தொடர்ந்து நீடிக்குமென நான் நம்புகிறேன்.

கிஹான் குணதிலக