Photo, THE NEW YORK TIMES

பதின்மூன்று நாட்களுக்கு முன்னர் (19/1) திடீரென்று தனது பதவி விலகலை அறிவித்த நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டேன் உலகின் முக்கிய கவனத்துக்குரியவராகியிருக்கிறார். அவர் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும் சர்வதேச  ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. பிரதமர் பதவியில் இருந்து மாத்திரமல்ல அரசியலில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கும் ஜசிந்தாவை பற்றி வெளியாகியாகும் தகவல்கள் கவனத்தை மிகவும்  தூண்டுபவையாக இருக்கின்றன.

நியூசிலாந்து தொழிற்கட்சியின் தலைவியான அவர் 2017 அக்டோபர் 17 தனது 37ஆவது வயதில் பிரதமராக பதவியேற்றார். அப்போது அவர் உலகில் ஒரு அரசாங்கத்துக்கு தலைமை வகிக்கும் மிகவும் இளம் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது இரண்டாவது பதவிக்காலத்தில் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்துக்கு முன்னர் 42 வயதில் பதவி விலகும் ஜசிந்தா மிகவும் இளம் வயதில் தனது விருப்பத்தின் பேரில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுபவர் என்ற இன்னொரு பெருமையையும்  தனதாக்கிக்கொள்கிறார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி முதன் முதலில் பதவியேற்று சரியாக 57 வருடங்கள் நிறைவுபெற்ற தினத்தில் ஜசிந்தா பதவி விலகும் அறிவிப்பைச் செய்ததை ஒரு எதிர்பாராத தற்செயல் நிகழ்வு என்று ஆங்கில பத்திரிகையொன்றில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

எமது நினைவுக்கு எட்டிய உலக வரலாற்றில் பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்த – மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இரண்டாவது  தலைவியாக ஜசிந்தா  விங்குகிறார். பதவியில் இருந்தபோது முதன் முதலாக குழந்தை பெற்ற தலைவி படுகொலையுண்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ ஆவார்.

பிரதமராக பதவியேற்ற மூன்று மாதங்களில் தான் கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்த ஜசிந்தா 2018 ஜூலையில் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு 6 வாரகால மகப்பேற்று விடுமுறையில் போவதற்கு முன்னர் பதில் பிரதமரை நியமித்தார். கைக்குழந்தையுடன் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட உலகின் முதல் தலைவியும் ஜசிந்தாவே. அவரது வாழ்க்கைத் துணைவர் கிளார்க் கேபோர்ட் குழந்தையை பார்த்துக்கொண்டிருக்க ஜசிந்தா பொதுச்சபையில் உரையாற்றினார். இவ்வாறாக பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்ததாக இருக்கிறது அவரின் 6 வருட பிரதமர் பதவிக்காலம்.

ஜசிந்தாவுக்கு முன்னரும் அரசாங்கத் தலைவர்களாக பெண்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் சிலர் இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் பெண்கள் பலர் அரசாங்கத் தலைவர்களாக வரலாம். அதில் ஒன்றும் புதுமையில்லை.

ஆனால், பதவி விலகலை அறிவிக்கும் செய்தியாளர் மகாநாட்டில் ஜசிந்தா அரசியலில் இருந்து ஓய்வுபெறும் தனது தீர்மானத்துக்கு கூறிய காரணமே அவரை மற்றைய அரசியல்வாதிகளை விடவும் வித்தியாசமானவராக வெளிக்காட்டி நிற்கிறது.

நல்ல ஒரு பிரதமராக வருவதற்கு எத்தகைய பண்பு தேவை என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் மனப்போக்கை அறிந்து அதற்கேற்ப ஒத்துணர்வுடன் செயற்படுவதே ஒரு அரசாங்கத் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்பாகும் என்று பதிலளித்தார்.

“எனது தலைமுறையைச் சேர்ந்தவர்களிடம் அரசியல்வாதியாக வருவதற்கு எப்படியிருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள் எவை ? என்று கேட்டால் அன்பு காட்டும் இயல்பு என்றோ, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் இயல்பு என்றோ பதிலளிப்பார்கள் என்பது  சந்தேகமே. ஆனால், அடுத்த தலைமுறை அந்த பதிலை அளிக்கும்.

“மற்றவர்களின் அனுபவங்களை விளங்கிக்கொள்ள முயற்சிக்காவிட்டால் தீர்வுகளைக் கொடுப்பது கடினம். அதுவே என்னைப் பொறுத்தவரை முக்கியமான விடயம். எப்போதும் இரக்கமுடையவளாக இருக்க முயற்சித்த ஒருத்தி என்று என்னை நியூசிலாந்து மக்கள் நினைவில் வைத்திருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம் ” என்று அவர் கூறினார்.

பதவி விலகலுக்கான காரணத்தை விளக்கிய ஜசிந்தா, “ஒரு நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு வாய்ப்புக் கிடைப்பது என்பது மிகப்பெரிய சிறப்புரிமை. அந்த சிறப்புரிமையுடன் சேர்ந்து பொறுப்புணர்வும் வரவேண்டும். ஒருவர் நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு தான் சரியான நபர்தானா என்பதையும் எப்போது தான் சரியான நபர் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டிய பண்பும் இந்தப் பொறுப்புணர்வில் அடங்குகிறது.

“என்னைப் பொறுத்தவரை, பிரதமராக இருந்தபோது என்னால் முடிந்ததை செய்தேன். முழுமையான வல்லமை இல்லாமல்  நாட்டுக்குத்  தலைமை தாங்கும் பதவியை வகிக்க முடியாது, வகிக்கவும் கூடாது. அத்தகைய வல்லமை இல்லையென்றால் அந்தப் பதவிக்கு எம்மால் நீதி செய்யமுடியாது. எதிர்பாராத சவால்கள் வரும்போது அவற்றுக்கு முகங்கொடுக்க மேலதிக வல்லமை தேவை. பதவிக்கு நீதியைச் செய்வதற்கு  என்னிடம் அந்த மேலதிக வல்லமை  இல்லை என்பதே எனது மதிப்பீடு. அதற்கு வலிமையும் பண்பும் தேவை. அதை பதவியில் விடாப்பிடியாக தொங்கிக்கொண்டிருக்கும் வக்கிரம் பிடித்த பேர்வழிகளிடம் எதிர்பார்க்கமுடியாது” என்று விளக்கமளித்தார்.

ஜசிந்தாவின் இந்த விளக்கம் தார்மீகப் பண்புகளில் வேரூன்றிய அரசியலில் அவருக்கு இருக்கும் நம்பிக்கையைத் தெளிவாக வெளிக்காட்டுகிறது. அது எந்தளவுக்கு நடைமுறை யதார்த்தத்துக்கு பொருந்தும் என்று கேட்பவர்களே ஏராளம். ஆனால், தனது பதவிக்காலத்தில் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினைகளை குறிப்பாக கிறைஸ்ட் சேர்ச் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தீவிர வலதுசாரிகளின் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொவிட் – 19 பெருந்தொற்று போன்ற பிரச்சினைகளை கையாண்ட விதத்தின் மூலம் தலைமைத்துவத்துக்கு முன்மாதிரியாக அவர் விளங்கியதை உலகம் கண்டது. அவரது தலைமைத்துவம் உலகெங்கும் உள்ள தாராளவாத போக்குடைய பிரிவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் பிரதமராக பதவியேற்றபோது நியூசிலாந்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை ஜசிந்தா நிறைவேற்றத் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டை கடந்தவாரம் பல அரசியல் விமர்சகர்களும் ஊடகங்களும் முன்வைத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நாடுகளில் ஒன்றாக நியூசிலாந்து விளங்குகிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜசிந்தாவின் செல்வாக்கில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வீழச்சி எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் தொழிற்கட்சியின் தேர்தல் வாய்ப்புக்களை பாதிக்கும் என்ற அபிப்பிராயங்கள் வெளியானதற்கு மத்தியிலேயே அவரது பதவிவிலகல் அறிவிப்பு வந்திருக்கிறது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அதை மறுத்திருக்கும் அவர் எதிர்வரும் தேர்தலில் தொழிற்கட்சியினால் வெற்றிபெற முடியும் என்று  நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.

எது எவ்வாறிருந்தாலும், ஜசிந்தா தனது பதவிவிலகலை அறிவித்த விதமும் கூட பாராட்டைப் பெற்றிருக்கிறது. கைவிடும் நோக்கத்துடன் எவரும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில்லை என்று ஆங்கில நாவலாசிரியரும் பத்திரிகையாளருமான ஜோர்ஜ் ஓர்வெல் கூறினார். எளிதாக அதிகாரத்தைக் கைவிட விரும்பாத தலைவர்கள் உள்ள உலகில் ‘பதவியில் தொடர தனக்கு போதுமான வல்லமை இல்லை’ என்ற ஜசிந்தாவின் கூற்று உண்மையில் அவரின் பலவீனத்தை அல்ல நேர்மையையும் துணிச்சலையுமே வெளிக்காட்டியிருக்கிறது எனலாம்.

இன்று உலக நாடுகளில் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் தலைவர்களில் எத்தனை பேர் தங்கள் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தங்களிடம் வல்லமை இல்லை என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டு பதவிகளில் இருந்து கௌரவமாக விலகத் தயாராயிருக்கிறார்கள்?

தவறான ஆட்சிமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களினால் ஆட்சியதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட அரசியல்வாதிகள் ஓய்வுபெறமாட்டோம் என்று கூறுகின்ற இலங்கையில் வாழுகின்ற நாம் உதாரணத்துக்கு வேறு எந்த நாட்டையும் தேடத்  தேவையில்லை. வகிக்கும் பதவிகளுக்கு தங்களால் நீதி செய்யமுடியவில்லை என்று ஒத்துக்கொண்டு அப்பதவிகளில் இருந்து இறங்குவதற்கு இலங்கை அரசியல்வாதிகளில் எவராவது முன்வருவார் என்று எதிர்பார்க்க முடியுமா?

ஆட்சியதிகாரப் பதவிகளில் இருக்கும் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில்  செல்வாக்குடன் இருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான கட்டத்தில் பதவியில் இருந்து விலக முன்வராவிட்டால் இறுதியில் அவர்களின் அரசியல் வாழ்க்கை பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும் என்று காலஞ்சென்ற பிரிட்டிஷ் அரசியல்வாதி ஈனொக் பவல் அரை நூற்றாண்டுக்கு முன்னர் கூறியதை கடந்தவாரம் சர்வதேச அரசியல் ஆய்வாளர் ஒருவர்  நினைவுபடுத்தியிருந்தார்.

நெல்சன் மண்டேலா தொடர்ந்தும் பதவியில் இருக்கவேண்டும் என்று பலரும் விரும்பியபோதிலும், தனது முதலாவது ஐந்து வருட பதவிக்காலத்தின் முடிவில் ஜனதிபதி பதவியில் இருந்துவிலகி  இன ஒதுக்கலின் முடிவுக்கு பின்னரான தென்னாபிரிக்காவில் தலைமைத்துவ மாற்றத்துக்கான உதாரணத்தை வகுத்தார். ஆனால், அவருக்கு பிறகு வந்த ஜனாதிபதிகளிடம் மண்டேலாவின் தலைமைத்துவப் பண்பைக் காணமுடியவில்லை.

ஜசிந்தா அரசியல் பதவியை ஒரு பொறுப்பாக நோக்குகிறார். நாட்டுக்கு தலைமை தாங்குவதற்கு தாங்கள் எப்போது பொருத்தமான ஆட்கள்… எப்போது பொருத்தமில்லாத ஆட்கள் என்று தீர்மானிப்பதும் அரசியல்வாதிகளின் ஒரு பொறுப்பு என்ற அந்த இளம் அரசியல்வாதியின் கூற்று உண்மையில் நேர்மைப்பண்பு கொண்ட அரசியல் தலைமைத்துவத்துக்கு ஒரு வரைவிலக்கணமாகும்.

வீரகத்தி தனபாலசிங்கம்