பட மூலம், AP Photo/Eranga Jayawardena

பெண்களாகிய எம்மை அவர்கள் நள்ளிரவில் ஆடு மாடுகளைப் போல் ஏற்றிச் சென்றது மட்டுமல்லாது, எங்களை எங்கே கூட்டிச் செல்கின்றனர் என்றோ அல்லது ஏன் கூட்டிச் செல்கின்றனர் என்றோ கூட எம்மிடம் கூறவில்லை. நாங்கள் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை கூட எமக்கில்லையா? எங்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை அறியும் உரிமை கூட எமக்கில்லையா? நாங்கள் இந்த நாட்டின் கடுமையான உழைப்பாளர்கள். நாங்கள் யாசகர்களல்ல! நாங்கள் சட்டவிரோதச் செயல் எதையும் செய்யவில்லை. நாங்கள் அரசாங்கத்திற்குச் சுமையாக இருப்பவர்களல்ல. அவர்கள்தான் எம்மில் தங்கி வாழ்கின்றனர். வரட்டும் அவர்கள் அடுத்த முறை எங்களிடம் வாக்குக் கேட்டு! அவர்களுக்குத் தேர்தல் காலத்தில்தான் நாங்கள் தேவை. அவர்கள் எங்களைக் கேவலமான முறையில் நடத்துவதால்தான் நாம் இவ்வாறு பேசுகின்றோம்” என அவர்கள் கூறினர்.

தனிமைப்படுத்தலில் களுத்தறையில் இருக்கும் தொழிலாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2020 ஒக்டோபர் 05ஆம் திகதி, மினுவாங்கொடையிலுள்ள பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் 1394 ஊழியர்கள் கொவிட்-19 தொற்றினைக் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 567 ஊழியர்களுக்குத் தொற்று இருப்பது அடுத்த நாள் உறுதிசெய்யப்பட்டது. எவ்வாறாயினும் இற்றைவரையில் இக்கொத்தணிப் (Cluster) பரவல் 1500 இனை விட அதிகரித்துள்ளது (குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் இக்கொத்தணியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்கள்). விசேட வாடகை விமானத்தில் இந்தியாவில் இருந்து பிரெண்டிக்ஸ் நிறுவனத்தினால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 48 தொழிலாளர்களில் ஒருவரினால் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவர்களினால் இக்கொத்தணிப் பரவல் உருவாகியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இக்காரணத்தினால் கொத்தணிப் பரவல் உருவாகவில்லை என்பதை பிரெண்டிக்ஸ் நிறுவனம் அது வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் திட்டவட்டமாக மறுத்து, கொவிட்-19 தொடர்பான சகல கட்டாய அரசாங்க ஒழுங்குவிதிகளையும் தான் பின்பற்றியதாகக் குறிப்பிட்டுள்ளது. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அமைவாக இந்த 48 தொழிலாளர்களினதும் தனிமைப்படுத்தல் செயன்முறையினை மேற்பார்வை செய்யவில்லை என்பது இறுதியில் தெரியவந்துள்ளது. எனவே, பின்பற்றப்படவேண்டிய ஒழுங்குவிதிகளை பிரெண்டிக்ஸ் நிறுவனத்திற்காகத் தளர்த்துவதற்கு அல்லது அவற்றினைப் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் உடந்தையாக இருந்தமையினை இது தெளிவாகக் காட்டுகின்றது.

ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களும் மனிதவலுத் தொழிலாளர்களும் (Manpower workers) பெரும் எண்ணிக்கையில் ஓரிடத்தில் அருகருகில் நெருக்கமாகப் பணியாற்றுகின்ற காரணத்தினாலும் மிக நெருக்கமாகப் பகிரப்பட்ட தங்குமிட வசதிகளில் வசிப்பதாலும் வைரசின் துரித பரவலால் பாதிக்கப்படக்கூடிய உயர் சாத்தியத்தினைக் கொண்டுள்ளனர். மனித வலுத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கப் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினாலும் இவர்களுக்கான பொறுப்பினை எத்தொழில் வழங்குனரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தினாலும் இவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியத்தினைக் கொண்டுள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட இந்த நோய்த்தொற்று இலங்கையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எனப் பரவலாகக் கருதப்படுகின்றது. இந்த வைரஸ் பரவல் தற்போது எந்த அளவு விசாலமானதாக இருக்கின்றது என்பது இன்னும் தெளிவாக அறியப்படாத அதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் பற்றி அறிக்கையிடப்பட்டு வருகின்றது. எனவே, தொற்றினைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக அமையப்போகின்றது. நோய்த்தொற்று இன்னும் சமுதாயப் பரவல் (Community Transmission) நிலையினை அடையவில்லை என அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகின்றது. ஆனால், பரந்த அளவில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் இச்செய்தியினை ஓர் உத்தரவாதமாகவோ அல்லது துல்லியமானதாகவோ நோக்க முடியாது. சமுதாயத்தில் வைரஸ் எந்த அளவிற்குப் பரந்து காணப்படுகின்றது என்பது மிகவும் தெளிவற்றதாக இருப்பதனால் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதும் அவசியமான தற்பாதுகாப்பினை மேற்கொள்வதும் பொதுமக்களின் முழுப் பொறுப்பாக மாறியுள்ளது.

அண்மைய நெருக்கடியினை அரசாங்கமும் இராணுவமும் கையாண்ட விதமானது, குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் கையாளப்பட்ட விதமானது மிகவும் பிரச்சினைக்குரியதாக இருக்கின்றது. தெளிவான தகவல்கள் இல்லாமை, விழிப்புணர்வு இல்லாமை, பாதுகாப்பற்ற போக்குவரத்து, சுகாதாரக் குறைவான தனிமைப்படுத்தல் வசதிகள், பஸ்களில் ஏற்ற முன்பும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அனுமதிக்கையிலும் பிசிஆர் பரிசோதனைகளை நடத்தத் தவறியமை ஆகியவை, பின்பற்றப்படவேண்டும் என அரசாங்கம் கூறுகின்ற அடிப்படை கொவிட்-19 ஒழுங்குவிதிகளைத் தெளிவாக மீறிய செயற்பாடுகளாகும்.

ஒக்டோபர் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில், கட்டுநாயக்கவிலுள்ள லியனகேமுல்லையைச் சேர்ந்த ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் 45 பேர் (25 பெண்கள், 1 கர்ப்பிணிப் பெண் மற்றும் 2 சிறார்கள் உள்ளடங்கலாக) இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு களுத்துறையிலுள்ள தற்காலிக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு பஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர். அருகிலுள்ள விடுதியில் கொவிட்-19 தொற்று உறுதியான தொழிலாளர்கள் வசித்த காரணத்தினால் இவர்களையும் தனிமைப்படுத்தவேண்டியுள்ளது என இத்தொழிலாளர்களிடம் கூறப்பட்டது.

“எமது பொருட்களை எடுத்துக்கொண்டு பஸ்சில் ஏறுவதற்கு சில நொடிகளே எமக்கு வழங்கப்பட்டது. ஒரு மாற்று ஆடையினைக் கூட எம்மால் பொதி செய்து எடுத்துச் செல்ல முடியவில்லை. சீப்பினைக் கூட எடுத்துவைக்க முடியவில்லை! முழுப் பிரதேசமும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதால் தப்பியோட முயற்சிக்கவேண்டாம் என இராணுவம் எம்மிடம் கூறியது. இராணுவம் எங்களைக் கைதிகளைப் போலவே நடத்தியது. எங்களை ஏதோ தேசத்துரோகம் செய்தவர்களைப் போலவே நடத்தினார்கள்” எனத் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

அவர்களை வேயாங்கொடைக்கு அழைத்துச் செல்வதாகவே கூறப்பட்டது. ஆனால், கடைசியிலே அவர்கள் களுத்தறையில் தனிமைப்படுத்தப்பட்ட இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் தொலைபேசி சிக்னலும் அவ்வளவாக இல்லை என்று கூறப்படுகிறது.

அன்றைய  தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் (12ஆம் திகதி அதிகாலை) எவரிவத்தயினைச் சேர்ந்த 35 பெண்களும் 1 பிள்ளையும் அடங்கிய 53 பேர் தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டு இதே விதமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

“இரவில் வந்த இராணுவத்தினர் எமக்கு அவசியமான பொருட்களைப் பொதி செய்து பஸ்சில் ஏறுவதற்கு 10 நிமிடங்களையே வழங்கினர். இராணுவத்தினர் எங்களிடம் தாங்கள் பல இரவுகள் தூங்காமல் மிகவும் களைப்படைந்திருப்பதால் தங்களைக் காக்கவைக்க வேண்டாம் எனக் கூறினர். நாங்கள் அளவுக்கதிகமாக வேலை செய்திருந்தோம். 2 நாட்களுக்கு முன்புதான் எனக்குக் கொரொனா இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன. அவர்களிடம் இதனைக் கூறுவதற்குக் கூட எனக்கு அவகாசம் வழங்கப்படவில்லை. அவர்கள் யாரையும் பேச அனுமதிக்கவில்லை. அவர்கள் எம்மை பஸ்சினுள் திணித்துக் கூட்டிச் சென்றனர்” எனக் களுத்தறையில் இருந்து தொழிலாளர் ஒருவர் கூறினார்.

அவர்கள் மேலும் தொழிலாளர்களை அழைத்துச் செல்வதற்காக கட்டுநாயக்க, சீதுவ, நீர்கொழும்பு மற்றும் ஆமந்தொலுவ பிரதேசங்களுக்குச் சென்றனர். கடைசியில் நாங்கள் கட்டுநாயக்கவை விட்டு ஒக்டோபர் 12ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கே புறப்பட்டோம்.

இறுதியாக நாங்கள் 12 மணித்தியாலங்களின் பின்னர் பி.ப. 12.30 இற்கே களுத்துறையினை அடைந்தோம். போய்ச்சேரும் வரை எங்களுக்கு உணவோ அல்லது ஒரு துளி நீரோ கூட வழங்கப்படவில்லை. அங்கே சென்றதும் எங்களுக்குச் சிறிது உணவளித்தனர். ஆனால், அந்த உணவு சாப்பிட முடியாததாக இருந்தது. தனிமைப்படுத்தலுக்கான இடம் துப்பரவு செய்யப்படாமல் இருந்தது. கழிப்பறைகள் நீர் நிறைந்து அழுக்காகக் காணப்பட்டன. 13ஆம் திகதி வரை எம்மை சுகாதாரப் பணியாளர்களோ அல்லது பொதுச் சுகாதார அதிகாரிகளோ பார்வையிடவில்லை. இங்கே இராணுவத்தினர் மட்டுமே இருந்தனர். நிலையத்தில் அனுமதிக்கையில் யாருக்கும் பிசிஆர் பரிசோதனை நடத்தப்படவில்லை. வைத்தியர் ஒருவர் எம்மைப் பார்க்க வருவார் என்ற வதந்தி அடிபட்டது. ஆனால் இதுவரை எங்களுக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என அவர்கள் கூறினர்.  

இன்று தொழிலாளர்களுக்குச் செருப்பு, சவர்க்காரம் மற்றும் சலவைத் தூள் போன்ற அடிப்படைப் பண்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்போது 400 முதல் 500 வரையான தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சில அறைகளில் 6 முதல் 7 தொழிலாளர்கள் வரை தங்கியுள்ளதாகவும் சில அறைகளில் 3 முதல் 5 வரையான தொழிலாளர்கள் தங்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 30 தொழிலாளர்களுக்கு 2 குளியலறைகளும் 2 கழிப்பறைகளும் 2 வாஷ் பேசினும் வழங்கப்பட்டுள்ளன (4 வாஷ் பேசின்கள் இருந்தாலும் 2இல் மட்டுமே நீர் வருகின்றது). 

தங்களால் நிலையத்தினைத் துப்பரவு செய்ய முடியவில்லை என்று கூற விரைவில் துப்பரவு செய்வதாக இராணுவத்தினர் அவர்களிடம் கூறியுள்ளனர். சிறந்த உணவினை வழங்குவதாகவும் இராணுவத்தினர் வாக்குறுதியளித்துள்னர். ஆனால், எவ்வித ருசியுமற்ற உணவே இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றது. நிலையத்தினை விட்டு யாருக்கும் செல்ல முடியாது என அவர்களிடம் கூறப்பட்டுள்ளது. யாராவது ஒரு தொழிலாளருக்குத் தொற்று ஏற்பட்டால் அது அனைவருக்கும் விரைவாகத் தொற்றிவிடும் எனத் தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர். ஏனெனில், தற்காலிகத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உரிய சுகாதார ஒழுங்குகள் எவையும் நடைமுறையில் இல்லை.

அறையின் தரை தூசி படிந்துள்ளது. கழிப்பறைகள் அழுக்காக உள்ளன. எங்களுக்கு இவ்வாறு வாழ்ந்து பழக்கமில்லை. இதனால் எங்கள் அறைகளையும் கழிப்பறைகளையும் நாங்களே துப்பரவு செய்தோம். நாங்கள் இப்படியே இங்கே தொடர்ந்து வாழ்ந்தால் எங்களுக்குக் கொரோனா வராவிட்டாலும் துப்பரவற்ற இந்தச் சூழலின் காரணமாக எங்களுக்கு வேறு நோய்கள் வந்துவிடும். இச்சூழ்நிலையினை இவர்கள் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்யாவிட்டால் நாங்கள் வாக்களித்த அரசாங்கத்தினை மாற்றும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்” என அவர்கள் கூறினர்.

எனக்கு மாரடைப்பு வந்திருக்கின்றது. என் இதயத்தில் இரண்டு அடைப்புக்கள் உள்ளன. நான் பல்வேறு மருந்து மாத்திரைகளையும் பாவிக்கின்றேன். இங்கே இருப்பதால் எனக்குக் கொரோனா வந்தால் நான் பிழைப்பது சந்தேகம்தான். இந்த இடம் நாய்கள் வாழக் கூடத் தகுதியற்றது! இவர்களுக்கு வாக்களித்ததற்கு எங்களையே நாங்கள் அடித்துக்கொள்ளவேண்டும் போலிருக்கின்றது” என ஒரு தொழிலாளர் கோபத்துடன் கூறினார்.

“நாங்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்குத் தயாராக இருந்தோம். அருகிலுள்ள வாடகை வீட்டில் இரண்டு சகோதரிகளுக்குத் தொற்று உறுதியானதால் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக 20,000 ரூபா பெறுமதியான பொருட்களைக் கொள்வனவு செய்து வீட்டில் தங்கியிருக்கத் தயாராக இருந்தோம். நாங்கள் அனைவரும் மிக அவதானத்துடனேயே இருந்தோம். இரண்டு சகோதரிகளும் கூடத் தங்களைப் பரிசோதிப்பதற்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்குத் தனிப்பட்ட முறையில்தான் சென்றனர். ஏனெனில், அவர்களின் உடல்நிலை நலிவுற்றிருந்தது. அவர்களுக்குத் தொற்று இருப்பது தெரியவந்ததும் அவர்கள் தங்களைச் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். எங்களுக்கு நோய்த் தொற்று இல்லாதபோதும் நாங்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்குத் தயாராகவே இருந்தோம்.  அரசாங்கம் அனைவரையும் பரிசோதித்து, தொற்று உள்ளவர்களைத் தனிமைப்படுத்தி ஏனையவர்களைச் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுமதித்திருக்கவேண்டும். ஏனெனில், எங்களுக்கென தனியான வாடகை வீடுகளும் கழிப்பறைகளும் உள்ளன. அவர்கள் (அரசாங்கமும் இராணுவமும்) தாங்கள் அனைத்தையும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதாக நினைத்துக்கொண்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பற்றி எங்களுக்கு உபதேசம் செய்து எங்களை அடைத்துவைக்கின்றனர். ஆனால், எங்களை பஸ்சினுள் ஆடு மாடுகள் போல அடைத்து துப்பரவற்றதும் பாதுகாப்பற்றதுமான தனிமைப்படுத்தல் மையங்களில் விடும்போது இந்தப் பாதுகாப்பு ஒழுங்குகள் எதுவும் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரியவில்லை” என ஒரு தொழிலாளர் கோபத்துடன் கூறினார்.

“அரசாங்கத்தின் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதற்கும் தனிமைப்படுத்தலைப் பின்பற்றுவதற்கும் நாங்கள் எதிரப்புத் தெரிவிக்கவில்லை. உரிய செயன்முறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் எங்களைக் கையாள அனுப்பப்படுபவர்கள் (இராணுவம்) எங்களை மனிதாபிமானத்துடனும் கௌரவத்துடனும் நடத்தப் பயிற்றப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்றே நாம் கேட்கின்றோம். நீங்கள் நள்ளிரவில் வந்து, பஸ்சில் ஏறுவதற்கு எங்களுக்கு 10 நிமிடங்கள் மாத்திரம் தந்து, நாம் எங்கே அழைத்துச் செல்லப்படுகின்றோம், ஏன் அழைத்துச் செல்லப்படுகின்றோம் என எமக்குக் கூறாமல் எம்மை அழைத்துச் செல்ல முடியாது. கொலைகாரனைக் கைது செய்கையில் கூட அவனிடம் கைதுக்கான காரணத்தினை நீங்கள் கூறவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அடிப்படை மரியாதையினைக் கூட ஏன்  எங்களுக்குத் தரவில்லை” என அவர்கள் கேள்வி கேட்கின்றனர்.

நாங்கள் கொரோனாவை வெற்றிகொண்டுவிட்டோம் என்று பெருமிதமடைந்ததே அரசாங்கமும் சுகாதார அமைச்சும் விட்ட பெருந்தவறாகும். இதனால், அனைவரும் அற்பமாக திருப்திகொண்டு இதனை கவனத்தில் எடுக்காமல் இருக்கத் தொடங்கினர். அதிகமான மக்கள் முகக்கவசம் அணிவதையே நிறுத்தியிருந்தனர். கொரொனாவைக் கட்டுப்படுத்தியமைக்காக உலக சாதனை ஏற்படுத்த முயற்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை (உலகில் 2ஆவதாக வந்தமை). சாதனை ஏற்படுத்துவதில் நாம் செலுத்திய கவனத்தை இங்கே உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதில் உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அவ்வாறு செய்திருந்தால் நாம் தானாகவே சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றிருப்போம்” என அவர்கள் கூறினர்.

“இந்த வருட ஆரம்பத்தில் பூரண அடைப்பு நிகழ்ந்தபோது இராணுவம் பதுங்கு குழிகளுக்குள் கொளுத்தும் வெயிலில் நின்றபோது நாம் எமது செலவில் அவர்களுக்கு தண்ணீர் வாங்கிக் கொடுத்தோம். இராணுவம் என்றால் என்ன என்பதை இப்போதுதான் நாம் உணர்ந்துகொண்டோம். இப்போது துயரப்படுவது நாங்கள் தான். நாங்கள் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் என்கின்ற ஒரே காரணத்தினால் மூடர்கள் என்று அர்த்தம் கொள்ளவேண்டாம். எங்களுக்கும் உரிமைகள் உண்டு. எங்களால் தான் அவர்கள் (அரசாங்கமும் இராணுவமும்) இன்று உயிர்வாழ்கின்றனர். அவர்களின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்வது நாங்கள்தான் என்பதுபோல் அவர்கள் எம்மை நடத்துகின்றனர். அவர்கள்தான் எமக்குச் சுமையாக மாறியுள்ளனர். நாம் இவ்வாறு நடத்தப்படுவதற்கான காரணம் நாங்கள் முக்கியமானவர்களாகவோ அல்லது செல்வந்தர்களாகவோ கருதப்படாமையினால் ஆகும். எங்கள் தவறினால் எங்களுக்குக் கொரோனா வரவில்லை. எனவே, பழிவாங்குவதைப் போல் எம்மை நடத்தக்கூடாது. இதைத்தானா நாங்கள் எமது அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கவேண்டும்?” என அவர்கள் கோபத்துடன் கேட்டனர்.

“நாம் அரசாங்கத்தினைக் குறை கூறவில்லை. எமது ஜனாதிபதி மட்டும் இல்லையென்றால் நாம் எல்லோரும் இறந்திருப்போம். ஆனால், நாமே இந்த அரசாங்கத்தினை ஆட்சிக்குக் கொண்டுவந்தோம். எனவே, எமக்கு அவர்களை வகைப்பொறுப்புக் கூறவைக்கும் பொறுப்பினை நாம் கொண்டுள்ளோம். அவர்கள் செய்யும் தவறினைத் திருத்தி அவர்கள் முன் செல்லவேண்டும். எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, இந்த நெருக்கடியினை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பில் சகல தொழிலாளர்களுக்கும் கிராமசேவையாளர்களுக்கும் விடுதி உரிமையாளர்களுக்கும் ஒரு பூரணமான விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. இப்போது உரிய முறைமை ஒன்று அமுலில் இல்லை. எல்லாமே ஏனாதானோ என்று திட்டமிடப்படாமல் நடக்கின்றன” என அவர்கள் கூறினர்.

மரிசா டி சில்வா