பட மூலம், Rabwah Times

பின்னணி

அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகள் ஆகியோர் 5 வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு அகதிகளாக வந்தார்கள். அவர்களுடைய அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகத்தினால் (UNHRC) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதுடன், அவர்களை மீளக் குடியேற்றுவதற்கான ஒரு நாட்டை UNHRC தேடிக் கண்டுபிடிக்கும் வரையில் இங்கு வாழ்வதற்கான ஆவணங்களை அவர்கள் தம் வசம் வைத்துள்ளார்கள். இவை அனைத்தும் வெளிநாட்டு அமைச்சின் ஒப்புதலுடனேயே இடம்பெற்றுள்ளன. அவர்கள் இலங்கையில் சட்ட ரீதியான விதத்திலேயே தங்கியிருக்கின்றார்கள்.

அஹமதியா குடும்பத்தினர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து அவர்களுடைய உலகம் தலைகீழாக மாறியது. வன்முறைக் கும்பல்கள் முஸ்லிம் அகதிகள் மீது தாக்குதல் தொடுத்ததுடன், அந்த அகதிகள் தமது அயல் பிரதேசங்களிலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்கள். அவர்களுடைய இந்த வெளியேற்ற நடவடிக்கைக்கு பொலிஸார் தூண்டுதல் அளித்ததாக நம்பகமான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு வன்முறைக் கும்பல்கள் வந்த பொழுது, அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த வன்முறைக் கும்பல்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கோ பொலிஸார் எதையும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் பொலிஸ் நிலையங்களிலும், பள்ளிவாசல்களிலும் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அந்த அகதிகளை அழைத்துச் சென்றார்கள். தேசிய கிறிஸ்தவப் பேரவை ஒரு சில அகதிகளை தமது கட்டடத்திற்குள் எடுத்த பொழுது, பௌத்த பிக்குகளின் தலைமையிலான வன்முறைக் கும்பல்கள் அவர்களைத் துரத்தியடித்தன. சர்வோதய இயக்கத்தினால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் இதே கதியே நிகழ்ந்தது.

வட மாகாணம் மட்டுமே இது தொடர்பாக அமைதியாக இருந்து வருவது போல் தெரிந்தது. இந்த அகதிகளை செட்டிகுளத்திற்கு எடுத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட போதிலும், ஒரு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். கொழும்பில் வாழ்ந்து வரும் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் தமிழர்கள் இருந்து வருவது ஆபத்தானது எனக் கூறி கோட்டாபய 2007ஆம் ஆண்டில் தமிழ் மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்றிய சம்பவத்தை இந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறந்திருப்பார்கள் போல் தெரிகிறது. ஏனென்றால், இப்பொழுது அவர்கள் முஸ்லிம்கள் தொடர்பாகவும் அதே விதத்திலான ஒரு கருத்தை கூறுகின்றார்கள். இந்த முஸ்லிம்கள் இங்கிருப்பதைப் போலவே பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள் என்ற விடயத்தையும், அவர்கள் நல்ல விதத்தில் நடத்தப்பட்டு வருகின்றார்கள் என்ற விடயத்தையும் நாங்கள் மறந்து விடுகின்றோம். அஹமதியா முஸ்லிம்கள் இலங்கையில் தற்காலிகமாக மட்டுமே தங்கியிருப்பதுடன், அந்த நிலைமையிலும் கூட அவர்களின் இருப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

ஆளுநர்

அதனை அடுத்து, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இந்த அகதிகள் அனைவரையும் பூந்தோட்டம் முகாமில் தங்க வைக்க வேண்டும் என்ற மனப்பிரமையுடன் இருந்து வந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு, ஆடு மாடுகளை போல ஓட்டிச் செல்லப்பட்டிருந்த தமிழ் அகதிகள் போர் முடிவடைந்த பின்னர் முட்கம்பி வேலிகள் சூழ்ந்த இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். ஆளுநரின் நியமன அதிகாரியான ஜனாதிபதி இந்த அகதிகளை வேறு நாடுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டிக் கொண்டிருப்பதனை அடுத்து, ஆளுநர் பின்பற்றும் இந்தக் கொள்கை அவருடைய தொழில் நலன் சார்ந்த ஒரு கொள்கையாக இருந்து வருவது போல் தெரிகின்றது.

அங்லிக்கன் தேவாலயம்

கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரையில், அகதிகளின்  இந்த துயர நிலையை – குறிப்பாக பிள்ளைகளின் துயர நிலையை – வெறுமனே தட்டிக் கழித்து விட முடியாது. எமது நாட்டில் தங்கியிருக்கும் விதவைகள், பிள்ளைகள், வழிப்போக்கர்கள் ஆகியோரை பராமரிக்க வேண்டிய விடயத்தை வேதாகமம் தெளிவாக குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒரு அஹமதியா குடும்பத்தையாவது தமது வீட்டில் தனிப்பட்ட முறையில் தங்க வைக்க வேண்டும் என  யாழ்ப்பாண அதி மேற்றிராணியார் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். நானும் எனது மனைவியும் இதற்கு உடன்பட்டோம். ஆனால், ஆச்சரியமூட்டும் விதத்தில் சிவசேனை இயக்கத்தைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தம் இந்த அகதிகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் விதத்தில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமெனக் கேட்டு சிவசேனை இயக்கம் முன்னர் யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால், இந்துத்துவ பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியர் வட பிரதேசத்திற்கு அகதிகள் எடுத்து வரப்பட்டு, அவர்களுக்கு ஏதேனும் ஒன்று நடந்தால், அவர்களை எடுத்து வருபவர்கள் அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியிருக்கும் என ஓர் ஆசிரியர் தலையங்கம் எழுதியிருந்தார். அகதிகளுக்கு தீங்கிழைக்கப்பட முடியும் என்ற ஓர் அச்சுறுத்தலாகவே அது நோக்கப்பட்டது. இந்த அகதிகளை  வரவேற்று, ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் விருந்தோம்பும் குடும்பங்கள் உறுதியாக நின்ற போதிலும், அகதிக் குடும்பங்கள் பின்வாங்கத் தொடங்கின.

தலைமை நிலைய பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ மற்றும் ஆளுநர் சுரேன் ராகவன்

இறுதியாக 2018 மே 19ஆம் திகதி எனது வீட்டிற்கு ஓர் அஹமதியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தது. நாங்கள் அவர்களை உடனடியாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு பதிவு செய்தோம். தலைமை நிலைய பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ அந்தப் பதிவை ஏற்றுக்கொண்டார். அடுத்த நாள் காலையில் பொலிஸ் நிலையத்திற்கு  வர வேண்டுமெனக் கேட்டு இரவு 9 மணிக்குப் பிறகு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் நிரப்பிக் கொடுத்திருந்த ஆவணங்களை பெர்ணான்டோ திருப்பியனுப்பியிருந்தார். தீவிரவாத இந்துக்கள் அகதிகள் மீது தாக்குதல் தொடுக்க முடியும் எனப் புலனாய்வுப் பிரிவு அறிக்கைகள் எடுத்துக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். எமது சந்திப்பு முடிவடைந்தது என்பதைக் காட்டும் விதத்தில் அவர் எழுந்து நின்றார். அஹமதியா அகதிகள் பூந்தோட்ட முகாமுக்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை ராகவன் வலியுறுத்தி வருவதாக யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார். இந்த நிராகரிப்பை எழுத்து மூலம் தர வேண்டுமென நாங்கள் வேண்டுகோள் விடுத்த போதிலும், அந்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை.

அன்று மாலை எம்மைத் தனது அலுவலகத்திற்கு அழைத்த ராகவன் அங்கு மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். அந்தச் சந்திப்பு அநேகமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் இயல்பிலான ஒரு சந்திப்பாகவே நிகழ்ந்தது.

அஹமதியா அகதிகள் தம்வசம் ஆவணங்களை வைத்திருந்த போதிலும், இந்தியா ஊடாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் கோருவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கத் தவறியதன் மூலம் அவர்கள் சட்டத்தை மீறியிருந்தார்கள் என ராகவன் வலியுறுத்திக் கூறினார். அது உண்மையாக இருந்திருந்தால், இலங்கை அரசாங்கம் அவர்களை கைது செய்து நாடு கடத்தியிருக்க வேண்டும் என்ற விடயத்தை இங்கு பொய் பேசி மழுப்பும் ஆளுநரும் அறிவார்.

அஹமதியா அகதிகள் பூந்தோட்ட முகாமிற்குச் செல்ல வேண்டும் என்ற விடயத்தை ராகவன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என நான் கூறியதனையடுத்து, அவர் எனக்கு வெள்ளிக்கிழமை வரையில் கால அவகாசம் வழங்கினார். இந்த கருணைக் காலப் பிரிவு முடிவடையும் வரையில் எந்தவொரு பொலிஸ் உத்தியோகத்தரோ அல்லது இராணுவத்தினரோ எனது வீட்டிற்கு வரமாட்டார்கள் என்பது குறித்த உத்தரவாதத்தை தர வேண்டுமென நான் அவரிடம் கேட்டேன். ஐந்து சாட்சிகளுக்கு மத்தியில் அவர் எனக்கு இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.

நாஜி இரகசியப் பொலிஸ் கெடுபிடிகள்

தம்மீது தாக்குதல் தொடுப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன என்ற விடயத்தை தெரிந்து கொண்ட அஹமதியாக்கள் ஏற்கனவே கலவரமடைந்திருந்தார்கள். இரவு சுமார் 8.00 மணியளவில் ஒரு போலிஸ் ஜீப் வந்து எனது வீட்டிற்கு அருகில் நின்றது. ஜீப் வந்திருப்பதை அறிந்து, நான் வீதியோரத்துக்குச் சென்று பார்த்த பொழுது அது அந்த இடத்திலிருந்து கிளம்பிச் சென்றது. அப்பொழுது அஹமதியாக்கள் பெருமளவுக்கு பீதியடைந்திருந்தனர். நிச்சயமாக தாக்குதல்கள் இடம்பெற முடியும் என்பது குறித்த பெர்ணான்டோ மற்றும் ராகவன் ஆகியோரின் பேச்சுக்களை எவரும் நம்பவில்லை. எம்மை பயமுறுத்துவதற்கும், வெளியேறிச் செல்வதற்கு அஹமதியாக்களை தூண்டும் நோக்குடனும் அவர்கள் இவ்விதம் கதை கட்டியிருந்தார்கள் என நாங்கள் கூறுகிறோம். எப்படியிருந்தாலும், இந்த அச்சுறுத்தல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடந்திருக்கும்? இரவு 9.00 மணியளவில் வெளியேறிச் செல்வதற்கு அஹமதியாக்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் அவ்விதம் வெளியேறிச்  சென்ற போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு வந்து அவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்லும் வரையில் 9.20 வரையில் தரித்து நின்றார்கள்.

ராகவன் பின்பற்றிய தந்திரம், நாஜி இரகசியப் பொலிஸார் பின்பற்றிய ஒரு தந்திரமாகமே இருந்து வந்தது என்பது தெளிவாகும். எமது பொலிஸாரும், இராணுவத்தினரும் இந்த தந்திரத்தை சிறப்பான விதத்தில் கற்றுக் கொண்டிருப்பதுடன், எம்மைப் பயமுறுத்தும் நோக்கத்துடன் வழமையாக இரவிலேயே எம்மைத் தேடி வருவார்கள். ராகவன் எத்தகைய கூச்சமும் இல்லாமல் தனது வாக்குறுதியை மீறியதுடன், அஹமதியாக்களை தப்பி ஓடவைக்கும் பொருட்டு நாஜி பொலிஸ் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியிருந்தார். நெஞ்சில் ஈரமற்ற விதத்தில் சிறு பிள்ளைகளை வதைமுகாமொன்றில் அடைத்து வைக்க அவர் விரும்பினார்.

அயோக்கியர்களுக்கு மரியாதையளித்தல்

அயோக்கியர்கள் எப்பொழுதும் தமக்கு மரியாதையை எதிர்பார்க்கிறார்கள். அது ஒரு மானிடத் தேவையாகும். அயோக்கியர்கள் உயர் பதவிகளை வகிக்கும் பொழுது, பொது மக்களும் மரியாதையை எதிர்பார்த்து, அத்தகைய அயோக்கியர்களை வைபவங்களுக்கு அழைக்கின்றார்கள். இந்தச் செயலின் தார்மீகத் தன்மை குறித்து எவரும் பேசுவதில்லை. ஏனெனில், தம்மை முக்கியஸ்தர்கள் எனக் காட்டிக் கொள்ளும் பொருட்டு பெருந்தொகையான ஆட்கள்  வெவ்வேறு அளவுகளில் இந்த விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏழை பாடசாலை மாணவிகளுக்கான ஒரு ஞாபகார்த்த விடுதி திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் எனது குடும்பத்தினருடன் பங்கேற்றேன். பெருந்தன்மையுடன் மக்களால் வழங்கப்பட்ட நன்கொடைகள் காரணமாக வறிய பிள்ளைகளுக்கு இலவச தங்குமிட வசதி, பாடசாலைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச்  செலவு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. எமது கொழும்பு பேராயர் இதற்கு வருகை தந்திருந்ததுடன், ஆசீர்வாத ஆராதனைகளில் அவருடன் யாழ்ப்பாண ஆயரும், யாழ் ஆயரின் பிரதம பிரதிநிதியும் பங்கேற்றார்கள். யாழ்ப்பாணத்தின் பெரும் புள்ளிகள் பலர் இந்நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

சரியாக காலை 8.00 மணிக்கு பாதுகாப்பு சைரன் ஒலித்ததுடன், வாகனத் தொடரணி அங்கு வந்தது. தலைமை நிலைய பொலிஸ் பரிசோதகர் பெர்ணான்டோ மற்றும் ஆளுநர் ராகவன் ஆகியோர் வாகனத்திலிருந்து இறங்குவதைப் பார்த்து நான் பேரதிர்ச்சியடைந்தேன். ராகவன் தேசியக் கொடியை ஏற்றி, தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது நேராக நிமிர்ந்து நின்றார்.

இங்குள்ள எதிர்முரண் நிலை, தஞ்சம் கோருவதற்கான தகைமையை கொண்டுள்ளவர்கள் என அத்தாட்சிப்படுத்தப்பட்டிருந்த பிள்ளைகளை வதை முகாமிற்கு அனுப்புவதற்கு முன்வந்த செயலுடன் சம்பந்தப்பட்டிருந்த இந்த இரு நபர்களும், இந்த விடுதியில் தங்கவைக்கப்படும் பெண் பிள்ளைகளின் நலன் குறித்து கரிசனை கொண்டுள்ளார்கள் என நாடகமாடுவதாகும். மேலும், இவர்களின் அடுத்த எதிர்முரண் நிலை குறித்த விரிவான தகவல்கள் எனக்குப் பின்னர் தெரிய வந்தன. இராணுவத்தினால் சட்ட விரோதமான விதத்தில் கையகப்படுத்தப்பட்டு (இப்பொழுது அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்படுவதற்கு தயார் நிலையில் இருந்து வரும்) வீடுகளை பூந்தோட்ட முகாமின் விரிவாக்கல் செயற்பாடுகளுக்கென கையகப்படுத்திக் கொள்ள வேண்டுமென ராகவன் நிர்ப்பந்தித்து வருவதாக அங்கிருந்த ஏனையவர்கள் என்னிடம்  சொன்னார்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மற்றவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் ஒரு மனப்பாங்கினை அது எடுத்துக் காட்டுகின்றது. மேலும், ஏனையவர்களினால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகளை தான் தீர்த்து வைத்திருப்பதாக ஜனாதிபதியிடம் காட்டிக் கொள்ளும் ஒரு பயனற்ற முயற்சியாகவும் அது இருந்து வருகின்றது.

தமது சொந்த அரசியல் மற்றும் தொழில் ஆதாயங்களை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்தின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கக் கூடிய விதத்திலான கதைகளை பரப்பி வரும் ஆளுநர் மற்றும் அவரது அடிவருடியான தலைமை நிலைய பொலிஸ் பரிசோதகர் ஆகியோரின் பகட்டு ஆரவாரத்தையும், போலிப் பெருமிதத்தையும் பார்த்த போது எனக்கு கடுங்கோபம் ஏற்பட்டது. நாஜி பொலிஸார் சல்யூட் அடிக்கும் விதத்தில் இவர்களுக்கு ஒரு சல்யூட் அடிப்போமா என்று எனக்குத் தோன்றியது. என்னுடைய உறவினர்கள் இது குறித்து பெருமளவுக்கு கவலைப்பட முடியும் என்ற காரணத்தினால் நான் அதனைச் செய்யவில்லை. துரதிர்ஷ்டவசமாக ‘பகலில் பொலிஸ், இரவில் திருடன்’ சோடி தேசிய கீதம் முடிவடைந்த உடனேயே அந்த இடத்திலிருந்து வெளியேறிச் சென்றது. அநேகமாக, தமக்கு மரியாதை கிடைக்கக் கூடிய வேறொரு இடத்துக்கு அவர்கள் சென்றிருக்கக் கூடும்.

பேரதிர்ச்சியிலிருந்து அஹமதியா பிள்ளைகள்  மயிரிழையில் தப்பியமை

அஹமதியாக்கள் கடந்த 21ஆம் திகதி காலை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிச் சென்று, மூன்று நாட்களுக்கென தற்காலிக தங்குமிட வசதியை தேடிக்கொண்டார்கள். கடவுளுக்கு நன்றி. வவுனியாவில் இருக்கும் (19 பாகிஸ்தானியர்களையும், 16 ஆப்கன் இளைஞர்களையும் கொண்ட) பூந்தோட்ட முகாம் பிற்பகல் 2.00 மணியளவில் இரும்புக் கம்பிகள் மற்றும் பொல்லுகள் என்பவற்றை ஏந்திய சிங்கள காடையர்களினால் தாக்கப்பட்டதுடன், புத்தபிக்குகள் மற்றும் வவுனியா சிங்கள பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரின் தலைமையில் இந்தக் கும்பல் வந்தது. இந்தக் குண்டர் படையில் தமிழர்கள் எவரும் இருக்கவில்லை எனத் தெரிய வருகிறது.

தாக்குதல் நடத்திய சிங்களவர்கள் மீது – குறிப்பாக புத்த பிக்குகள் மீது – பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்த முடியாதிருந்தது. அதிர்ஷடவசமாக, அந்தக் காவல் அணியின் ஒரு பாகமாக சுமார் 10 இராணுவ சிப்பாய்களும் இருந்துள்ளார்கள் என களத்தில் இருந்த பத்திரிகை நிருபர்கள் எனக்கு அறிவித்தார்கள். அவர்கள் மேலும் அதிக எண்ணிக்கையிலான இராணுவ சிப்பாய்களை அழைத்திருப்பதுடன், அந்தக் கும்பலை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக சூளுரைத்து, அதன் மூலம் அவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

பெர்ணான்டோ – ராகவன் சோடி அஹமதியா பிள்ளைகளை இந்த முகாமுக்கு அனுப்பி வைத்து, அவர்கள் இந்தக் கும்பலை எதிர்கொள்ள நேரிட்டிருந்தால், அந்தப் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய  அதிர்ச்சியை கற்பனை செய்து பாருங்கள். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அலுவலகம் இந்த அகதிகளை வேறு நாடொன்றில் மீள் குடியேற்றும் வரையில், அவர்கள் யாழ்ப்பாணத்தில் அமைதியாக வாழ்ந்து வருவதற்கு இடமளிக்கும் பொருட்டு நீதிமன்றத் தலையீட்டை நாடுவதே எங்களுக்கு இருக்கும் ஓரேயொரு மாற்று வழியாக இருந்து வருகின்றது.

தென்னிலங்கை இப்பொழுது தறிகெட்டுப் போயிருக்கும் ஒரு சூழ்நிலையில், அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது களங்கம் கற்பிப்பதற்கு முயற்சித்து வந்தாலும் கூட, அகதிகள் மீது தாக்குதல் தொடுத்த இந்தச் சம்பவத்தில் தமிழர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரத்தின் மிகை வேலைப்பளு

அரசாங்கத்தின் பிரச்சார இயந்திரத்தின் ஒரு பாகம், வேலைப் பளு மிக்கதாக இப்பொழுது இருந்து வருகின்றது. அஹமதியாக்கள் சட்டவிரோதமாக இருந்து வருகின்றார்கள் என ராகவன் பொய்யாகக் கூறி வருகின்றார். அதன் காரணமாக மாகாண சபைத் தேர்தல்களைத் தடுக்கும் விதத்தில் அதிகாரிகள் எல்லை நிர்ணயக் கமிட்டியின் அறிக்கையை கிடப்பில் போட்டிருக்கின்றார்கள். இது ஆளுநர்கள் மாகாண சபையின் அதிகாரங்களை அபகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பளித்திருப்பதுடன், தமது சலுகைகளுக்கு பகரமாக அவர்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து வருகின்றார்கள். நான் இந்த அகதிகளை சட்டவிரோதமான விதத்தில் தங்க வைத்திருப்பதாக தமிழ் காங்கிரஸ் சட்டத்தரணி சுகாஸ் என்னிடம் சொன்னார். ஒரு நல்ல சிங்கள நண்பர் இரவு 10.20 மணிக்கு என்னுடன் தொடர்பு கொண்டு, சிரச தொலைக்காட்சியும் இதே மாதிரியான ஒரு கருத்தைக் கூறியதாகவும், அது உண்மையானதா எனவும் கேட்டார்.

அதனை அடுத்து, இது அகதிகளின் நல் வாழ்வுக்கான ஒரு போராட்டமாக மட்டும்  இருந்து வரவில்லை. எமது வீடுகளில் நாங்கள் விருந்தினர்களாக வைத்துக் கொள்வதற்கு தெரிவு செய்து கொள்ளும், சட்டத்தை மதிக்கும் மக்களை தங்க வைத்துக் கொள்வதற்கான எமது அடிப்படை உரிமைக்கான ஒரு போராட்டமாக அது மாற்றமடைந்தது. அது உண்மைக்கான ஒரு போராட்டமாகவும், சட்டத்தை மதித்து நடக்கும் தமிழர்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல்வாதிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு போராட்டமாகவும் மாறியது. இந்த தமிழர்களும், சிங்களவர்களும் எமது ஜனநாயகத்தை மதிப்பதுடன், அதனை தக்கவைத்துக் கொள்வதற்கும் முயற்சித்து வருகின்றார்கள். இந்தப் பின்புலத்திலேயே, அநேகமாக ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான ஒரு உத்தியாக நாட்டில் பெரும் குழப்ப நிலை நிலவி வருகின்றது என்ற விதத்தில் பொய்யான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த ‘அரசியல் இரகசியங்கள்’ என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொள்வதனை நிறுத்துமாறு நான் இந்தக் கும்பலுக்கு சவால் விடுவதுடன், தமது அரசியல் அபிலாசைகளை சாதித்துக் கொள்வதற்காக வடக்கில் அகதிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகின்றது என்ற இந்தக் கதையை தாம் உருவாக்கவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு ஆதாரம் காட்டுமாறும் அவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன். அரசியல்வாதிகள் இந்த பயங்கர சூழ்நிலை குறித்த கருத்தை எழுப்பிய பொழுது, எமது சுதந்திரங்களை பறித்துக் கொள்ளும் ஒரு வழமையான செயற்பாடாகவே அது இருந்து வருகின்றது என நான் ராகவனிடம் சொன்னேன். அனைத்து அதிகாரங்களும் நுண்மையங்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டை சிவிலியன்களாகிய நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எமது வீட்டில் தங்கியிருக்கும் விருந்தாளிகளை வெளியேற்ற வேண்டும் என பொலிஸார் எம்மிடம் கூறி, நாங்கள் அதற்குப் பணிந்து நடக்கும் பொழுது எமது உரிமைகளை இழந்து விடுகின்றோம். பொலிஸாரை எமது எஜமானர்களாக ஆக்குகின்றோம். எமது நாடு ஒரு ஜனநாயக நாடு. பொலிஸ் ஆட்சி நடைபெறும் ஒரு நாடாக இருந்துவரவில்லை.

எஸ். ரத்னஜீவன் எச். ஹூல்

 

 


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மாற்றத்தில் வௌிவந்த கட்டுரைகளை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.