Photo, Sri Lanka Guardian 

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கடந்த வாரம் கூறியது நிதானமாக சிந்திக்கக்கூடிய எவரையும் பரபரப்புக்கோ குழப்பத்துக்கோ உள்ளாக்கியிருக்க முடியாது. இதற்கு முன்னரும் சில தடவைகள் அவர் அவ்வாறு கூறியிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நெடுமாறன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது அவர் 2010ஆம் ஆண்டு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் முதற்தடவையாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறினார். ஈழத்தில் போர் மீண்டும் மூளும். அதற்கு பிரபாகரனே தலைமை தாங்குவார் என்றும் அவர் அப்போது கூறினார்.

பிறகு 2016 பெப்ரவரியில் கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் விடுதலை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் அவரது மரணத்தை இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். அடுத்து 2018ஆம் ஆண்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் பிரபாகரன் ஒருபோதும் பிடிபடவில்லை. தப்பி வெளியேறிவிட்டார் என்று கூறினார். அதை அந்தப் பத்திரிகையே கடந்த வாரம் மீண்டும் சுட்டிக்காட்டியது.

நெடுமாறனைப் போன்றே பிரபாகரனையும் விடுலை புலிகளையும் மையப்படுத்திய அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் நெடுமாறன் கடந்த வாரம் வெளியிட்ட தகவல்களுடன் உடன்படவில்லை.

தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் கூறிய தகவல்களை தனக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் மூலமாக உறுதிசெய்ய முடியவில்லை என்று வைகோ கூறிய அதேவேளை, கடந்த வருடம் நவம்பரில் லண்டனில் இருந்து தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இதே போன்று அறிக்கையொன்றை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாவும் ஆனால், தன்னுடன் அண்ணன் (பிரபாகரன்) தொடர்புகொண்டு கேட்டால் அதற்குப் பிறகு அறிக்கையை வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என்று பதிலளித்ததாகவும் சீமான் கூறினார்.

போர்க்களத்தில் தமிழ் மக்களை கைவிட்டு தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு தப்பியோடுகின்ற கோழை அல்ல விடுதலை புலிகளின் தலைவர் என்றும் கூறிய சீமானிடம் பிரபாகரன் ஒரு நாள் வந்தால் என்ன சொல்வீர்கள்  என்று செய்தியாளர்கள் கேட்டபோது “கடவுள் இல்லை என்ற கொள்கையை கொண்டிருந்த ஐயா பெரியாரிடம் கடவுள் ஒரு நாள் நேரில் வந்தால் என்ன சொல்வீர்கள்  என்று ஒரு தடவை கேட்டார்கள். அதற்கு அவர் அவ்வாறு வந்தால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போவோம் என்று பதிலளித்தார். அதேபோன்று அண்ணன் உயிருடன் வந்தால் நாமும் அவர் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் போவோம்” என்று பதில் கூறினார்.

“பிரபாகரன் உயிருடன் நலமே இருக்கிறார். அவரின் குடும்ப உறுப்பினர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அவர்களின் அனுமதியுடனேயே இதை அறிவிக்கின்றேன். ஈழத் தமிழர்களின் மீட்சிக்கான திட்டத்துடன் பிரபாகரன் விரைவில் வருவார். உலகம் பூராவும் வாழும் தமிழர்களுக்கு இதை அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். ஈழத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் அவருக்கு  ஆதரவை வழங்கவேண்டும். தமிழ்நாடு அரசாங்கமும் சகல அரசியல் கட்சிகளும் அவருக்கு ஒன்றுபட்டு ஆதரவை வழங்கவேண்டும். தற்போதைய சர்வதேச நிலைவரமும் இலங்கையில் ராஜபக்‌ஷ ஆட்சி மக்கள் கிளர்ச்சியில் வீழ்த்தப்பட்ட சூழ்நிலையும் பிரபாகரன் பற்றிய இந்தத் தகவலை அறிவிப்பதற்கான பொருத்தமான தருணமாகும்” என்று நெடுமாறன் முள்ளிவாய்க்கால் முற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

மேலும் அவர், “விடுலை புலிகள் பலத்துடன் இருந்தபோது இந்திய விரோத சக்திகள் தமிழ் மண்ணைப் பயன்படுத்த அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்தியாவின் எதிரி நாடுகளிடம் இருந்து எந்தவொரு காலப்பகுதியிலும் எந்த உதவியையும் பெறாமல் இருப்பதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். சீனா இப்போது இலங்கையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா இலங்கையை பயன்படுத்துவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் உகந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து சமுத்திரத்தில் சீன ஆதிக்க அச்சுறுத்தலை தடுக்க இந்தியா தலையிடவேண்டும்” என்றும் கூறினார்.

பிரபாகரனின் மனைவி, மகள் குறித்து கேட்டபோது அவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்று கூறிய நெடுமாறன் பிரபாகரனின் குண்டு துளைத்த சடலம் என்று காண்பித்து இலங்கை அரசாங்கம் 2009 மே 19 வெளியிட்ட காணொளி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

அவருக்கு அருகில் இந்தியாவில் வசிக்கும் கவிஞர் காசி ஆனந்தனும் வேறு முக்கியஸ்தர்களும் கூட இருந்தனர். செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் இனிப்பு பண்டங்களை எல்லோருக்கும் வழங்கி மகிழ்ந்ததை காணொளி மூலம் காணக்கூடியதாக இருந்தது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் கூறிய முன்னைய சந்தர்ப்பங்களின்போது அந்தச் செய்திக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தத் தடவை இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் மற்றைய ஊடகங்களும் கொடுத்திருக்கின்றன. கடந்த ஒரு வாரகாலமாக இந்திய தொலைக்காட்சிகளில் நெடுமாறனின் அறிவிப்பு மற்றும் அதற்கு இருக்கக்கூடிய பின்னணி குறித்து தொடர்ச்சியாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. யூ ரியூப் தமிழ் அலைவரிசைகளை பிரபாகரன் பற்றிய கலந்துரையாடல்களும் நேர்காணல்களும் ஆக்கிரமித்திருக்கின்றன. அதன் காரணத்தினால் இந்தத் தடவை நெடுமாறனின் நடவடிக்கையின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருக்கின்றன என்று அவதானிகள் பலரும் சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றனர்.

ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் போன்ற விடுதலை புலிகள் ஆதரவு அரசியல்வாதிகளையும் முள்ளிவாய்க்கால் முற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்கச் செய்து தனது அறிவிப்புக்கு பரந்தளவிலான ‘ஏற்புடைமையை’ தோற்றுவிப்பதற்கு நெடுமாறன் முயற்சித்ததாகவும் இறுதி நேரத்தில் அது கைகூடாமல் போய்விட்டதாகவும் தமிழக செய்திகள் கூறுகின்றன. பிரபாகரன் பற்றிய அறிவிப்பு காலப்பொருத்தமானதோ அல்லது அரசியல் பொருத்தமானதோ அல்ல என்றும் இதன் பின்னணியில் இந்திய அரசாங்கமும் அதன் உளவுப்பிரிவும் இருப்பதாகவும் திருமாவளவன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு அரசாங்கத்திடமிருந்தோ இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருந்த தருணம் வரை எந்த பிரதிபலிப்பும் வெளியாகியிருக்கவில்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் அதற்கிடையில்  தமிழ்நாடு அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என்றும் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவரான மனிந்தர்ஜீத் சிங் பிட்டா திருமலையில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கடந்த வியாழக்கிழமை கூறியதாக பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.

தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவரின் அறிவிப்பை எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே இலங்கை இராணுவம் உடனடியாகவே நிராகரித்தது. 2009 மே 18 பிரபாகரன் இறந்ததை அன்றைய மந்ஹித ராஜபக்‌ஷ அரசாங்கம் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தியதாகவும் அந்தத் தகவலை அன்றைய இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு ஜனாதிபதி மஹிந்த தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதாகவும் வெளியான செய்திகளையும் விடுதலை புலிகளின் சர்வதேச உறவுகள் பிரிவு தலைவராக இருந்த குமரன் பத்மநாதன் (கே.பி.) 2009 மே 24 பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் ‘எமது இணையற்ற தலைவர் வீரமரணமடைந்துவிட்டார் ‘ என்று கூறியதையும் ஊடகங்களும் அரசியல் அவதானிகளும் கடந்த வாரம் நினைவூட்டியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

தன்னால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு ‘சான்றாக’ பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்களுடன் தான் வைத்திருப்பதாகக் கூறும் தொடர்புகளை மாத்திரமே நெடுமாறன் முன்வைத்திருக்கிறார். அதேவேளை, விடுதலை புலிகளின் தலைவர் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு தற்போதைய சர்வதேச நிலைவரமும் ராஜபக்‌ஷ ஆட்சிக்கு எதிரான கடந்த வருடத்தைய மக்கள் கிளர்ச்சியும் பொருத்தமான தருணம் என்று அவர் கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

கடந்த வாரத்தைய அறிவிப்பும் முன்னைய அறிவிப்புக்களைப் போன்று இருந்ததே தவிர, வெளியுலகம் நம்பக்கூடியதாக புதிய தகவல் எதையும் நெடுமாறன் வெளியிடவில்லை. செய்தியாளர்களினால் கிளப்பப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கும் அவர் உருப்படியான பதில்களை அறிவிக்கவில்லை. முன்னைய சந்தர்ப்பங்களைப் போலன்றி இத்தடவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை அவர் வெளியிட்டார். அது ஒன்று தான் வித்தியாசம். அதேவேளை, இந்திய மத்திய அரசாங்கம் தனது அறிவிப்புக்கு கவனம் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கையிலும் இந்து சமுத்திரத்திலும் சீன ஆதிக்க அச்சுறுத்தல் குறித்தும் அவர் கூறியிருக்கிறார். விடுதலை புலிகளை உறுதியான இந்திய ஆதரவுச் சக்தியாக காண்பிக்கும் வகையிலான அவரின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.

தனது அறிவிப்புக்கு தமிழ்நாட்டு அரசியல் காரணிகள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டதற்கு அவ்வாறு எதுவும் இல்லை என்று நெடுமாறன் திட்டவட்டமாக மறுத்ததாக இந்து ஆங்கில பத்திரிகையின் இணை ஆசிரியர் தி.இராமகிருஷ்ணன் கூறியிருந்தார். நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் நெடுமாறன் அடுத்து வரக்கூடிய எந்தவொரு தேர்தலையும் மனதிற்கொண்டு இந்த அறிவிப்பைச் செய்திருக்க பெரும்பாலும் வாய்பில்லை.

இந்த நிகழ்வுப்போக்குகள் எல்லாம் இலங்கை அரசியலில் குறிப்பாக தமிழர் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் இதனால் யாருக்கு பயன் என்பதும் முக்கியமான கேள்விகள்.

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பதினான்கு வருடங்கள் நிறைவடையவிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயம் குறைந்தபாடாக இல்லை. அதை குறைக்கவேண்டும் என்ற தமிழ் மக்களின் இடையறாத கோரிக்கைக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம் என்பது பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது. இராணுவத்தின் பலத்தை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதற்கு திட்டமிருப்பதாக அண்மையில் அரசாங்க தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது கவனிக்கத்தக்கது.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் செய்த அறிவிப்பை அடுத்து கிளர்ந்தெழுந்திருக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் மகாசங்கத்துக்கும் ‘தீனி’ போடுவதாகவும் இது  அமைகிறது. தென்னிலங்கையில் கிளம்பிய எதிர்ப்பைக் கண்டு இப்போது ஜனாதிபதி 13 என்று வாயெடுக்கவே தயங்குகிறார். தங்களது மீளெழுச்சிக்காக சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கை வளர்க்க மீண்டும் ‘புலிப்பூச்சாண்டி’ காட்டுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை ராஜபக்‌ஷர்கள் பயன்படுத்தவும் கூடும். மீண்டும் ‘தமிழ்ப் பயங்கரவாதம்’ தலைதூக்காமல் இருக்கவேண்டும் என்றால் தங்களது ஆட்சியே மீண்டும் வரவேண்டும் என்று அவர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

பிரபாகரனை அவரது ஆதரவாளர்களும் எதிரிகளும் ஒருபோதும் மறப்பதில்லை. அதனால் அவர் செய்திகளில் இருந்து மறைவதில்லை. எமது தமிழ் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வசதியான முறையில் அவரின் பெயரைப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல்கள் நெருங்கும்போது அது சற்று கூடுதலாக இருக்கும். சிங்கள அரசியல்வாதிகளும் பிரபாகரனை தமக்குத் தேவைப்படும்போது சிங்கள மக்கள் மத்தியில் நினைவுபடுத்துவதற்கு தவறுவதில்லை.

ஆனால், பிரபாகரன் மீது ஆழமான பற்றுக்கொண்ட நெடுமாறன் கவனத்தை கவரக்கூடியதாக  செய்திகளில் நீண்டகாலமாக  அடிபடவில்லை. முதுமை காரணமாக முன்னரைப் போன்று அவரால் அரசியல் செயற்பாடுகளில் ஈடுடமுடியாமல் இருப்பது அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால், 89 வயதான அவர் பிரபாகரன் பற்றிய அறிவிப்பை அடுத்து இப்போது சடுதியாக இந்திய மற்றும் இலங்கை மட்டங்களில் மாத்திரமல்ல சர்வதேச அளவிலும் ஊடகங்களை ஆக்கிரமித்திருப்பதை காணமுடிகிறது.

வீரகத்தி தனபாலசிங்கம்