Photo, Selvaraja Rajasegar

கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்னென்றும் இல்லாத தோல்வையைச் சந்தித்தது. அரசாங்கத்தின் விருப்பத்துக்கு எதிராக ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச கருத்தொருமிப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் தெரிவுசெய்யப்பட்ட 47 நாடுகளில் 7 நாடுகளின் ஆதரவை மாத்திரமே இலங்கையினால் பெறக்கூடியதாக இருந்தது. இது தற்போதைய அரசாங்கம் உட்பட வெவ்வேறு அரசாங்கங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் 9ஆவது தீர்மானமாகும்.

ஆனால், தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் ஐக்கிய நாடுகளின் ஆற்றல் குறித்து இலங்கையிலும் எதிர்பார்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றன. தேசிய மற்றும் சர்வதேசிய மனித உரிமைகள் அமைப்புக்களின் கடுமையான கண்டனத்துக்குள்ளாகின்ற போதிலும் கூட,  அண்மைக்கால போராட்ட இயக்கத்தில் பங்கெடுத்தவர்களை அரசாங்கம் தொடர்ந்து கைதுசெய்து கொண்டேயிருக்கிறது.

மனித உரிமைகள் பேரவை அரசாங்கத்துக்கு முன்வைத்திருக்கும் கோரிக்கைகளின் பட்டியல் முன்னெப்போதையும் விட பெரியதாக இருக்கிறது. முன்னைய தீர்மானங்களின் நிறைவேற்றப்படாத சகல கோரிக்கைகளும் உட்பட மேலும் கூடுதலான கோரிக்கைகள் புதிய பட்டியலில் அடங்கியிருக்கின்றன. நாட்டில் இடம்பெறுகின்ற குற்றங்களின் கண்காணிப்புப் பட்டியலில் மேலதிகமாக பொருளாதார ஊழலும் சேர்க்கப்பட்டிருப்பது இதில் மிகவும் முக்கியமானதாகும். இது மனித உரிமைகள் பேரவை கவனத்துக்கெடுத்திருக்கும் புதிய விவகாரம் என்பதால், இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து அக்கறை பிறந்திருக்கிறது. கடந்த காலத்திலும் சமகாலத்திலும் மனித உரிமைகள் நிலைவரத்தைப் பொறுத்தவரை இலங்கையில் இடம்பெற்றுவருபவற்றை கண்காணிக்கின்ற ஜெனீவாவை மையமாகக் கொண்ட சான்று திரட்டல் பொறிமுறையை வலுப்படுத்தப்படும் உள்ளார்ந்த அச்சுறுத்தலும் இருக்கிறது.

ஆனால், சிறிய எண்ணிக்கையிலான இராணுவ அதிகாரிகள் மீது விதிக்கப்பட்டிருக்கக்கூடிய பயணத்தடைகளை தவிர, இதுவரையில்,வேறு தண்டிக்கும் நோக்குடனான நடவடிக்கை எதுவும் இல்லை. இது விடயத்தில் பெரிய மாற்றம் எதுவும் வராது என்று ஒரு மெத்தனமான நம்பிக்கையை அரசாங்கம் கொண்டிருக்கிறது போன்று தெரிகிறது.

குறிப்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் உருவாக்கப்பட்ட சான்று திரட்டும் பொறிமுறையை அரசாங்கம் கடுமையாக நிராகரித்திருக்கிறது. சுயாதிபத்தியம் கொண்ட எந்த அரசுமே அதன் அரசியலமைப்புக்கு முரணாக அமையக்கூடிய ஒரு வெளிப்பொறிமுறை தன் மீது திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அரசாங்கம் வாதிட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக விரிவான தேசிய பாதுகாப்பு சட்டமொன்றை கொண்டுவருவதாக அரசாங்கம் மீண்டும் உறுதியளித்திருக்கிறது. மனித உரிமைகள் பேரவையில் முன்னைய இறுதிச் சந்தர்ப்பத்திலும்   பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்துடன் சேர்த்து அந்த சட்டத்தை மாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அந்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை.போராட்ட இயக்கத்தின் பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். தீவிரவாதிகள், போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் அது போன்ற வேறு நபர்களையும் சோவியத்பாணி புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதற்கு புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற முயற்சி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களுக்கு சர்வதேச மனித உரிமைகள் தராதரங்கள் பற்றி எந்த அறிவும் இல்லை என்பதையே வெளிக்காட்டுகிறது.

இந்தியாவின் ஆதரவு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதன் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு நீண்டகால நோக்கில் பதிலளிக்கவும் அரசாங்கம் திட்டமிடுகிறது. நீதிபதி நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை அரசாங்கம் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியிருக்கிறார். சகல தரப்புகளிலும் இடம்பெற்ற பரந்தளவிலான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் தொடர்பிலான பிரச்சினைகளைக் கையாளுவதற்கு உண்மையைக் கண்டறியும் உள்நாட்டுப் பொறிமுறையொன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் என்ன நடந்தது  என்ற உண்மையக் கண்டறிந்து அவற்றை ஏற்றுக்கொள்வது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு நகருவதற்கும் புதிய எதிர்காலம் ஒன்றை வடிவமைப்பதற்கும் அவசியமானதாகும். ஆனால், அத்தகைய  பொறிமுறை தனித்த ஒன்றாக இருக்கமுடியாது. அது தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று வெற்றிகரமானதாக அமையவேண்டுமானால் பரந்த ஒரு முறைமையின் அங்கமாக அமையவேண்டியது அவசியமாகும்.

ஆனால், வெற்றிகரமானதாக அமையக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கு ஆதரவான சூழ்நிலையொன்றுக்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

மனித உரிமைகள் பேரவையைத் திருப்திப்படுத்தக்கூடிய தராதரங்கள் அந்தப் பொறிமுறைக்கு கொடுக்கப்படுவதாக இருந்தால், தேசிய நல்லிணக்க கட்டமைப்புப் போருக்கு வழிவகுத்த காரணிகளைக் கையாளக்கூடிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான ஏற்பாடுகளை உள்ளடக்கியதாக அமையவேண்டும். அதற்கான எந்த அறிகுறியும் தற்சமயம் இல்லை.

“அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் அர்த்தபுஷ்டியான அதிகாரப்பரவலாக்கத்தை செய்தல், மாகாண சபைகளுக்கு விரைவில் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இலங்கையினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை இந்தியா கவனத்திற்கெடுத்திருக்கும் அதேவேளை, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் போதிய முன்னேற்றம் இல்லை என்று நாம் நம்புகிறோம்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி தூதுவர் இந்திர மணி பாண்டே கூறினார்.

“இந்த உறுதிமொழிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதை நோக்கி இலங்கை அர்த்தமுடைய வகையில் பணியாற்றவேண்டும் என்று இந்தியா விலியுறுத்துகிறது. ஏனென்றால், சகல இலங்கையர்களுக்குமான சுபீட்சத்தை எட்டுவதும் சுபீட்சம், கண்ணியம், அமைதி சமாதானம் ஆகியவற்றுக்கான இலங்கை தமிழர்களின் நியாயபூர்வமான அபிலாசைகள் நிறைவேறுவதும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் ” என்றும் பாண்டே கூறினார்.

இத்தடவை இந்தியாவின் ஆதரவை பெறுவதில் இலங்கை கண்ட தோல்வியை பெரியதொரு வெளியுறவுக்கொள்கைப் பின்னடைவாகவே நோக்கவேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் எந்தவொரு சர்வதேச விவகாரத்திலும் இந்தியாவின் நிலைப்பாடு உலகளாவிய பரிமாணத்தைக் கொண்டதாகும். கடந்த வருடம் இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார உதவியும் தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கும் உதவியும் வேறு எந்தவொரு  தனியான நாடும் வழங்கியிராதளவுக்கு மிகவும் பெரியதாகும் என்பதுடன் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்த சகல நாடுகளும் செய்திருக்கக்கூடிய பங்களிப்புகளையும் விடவும் கூடுதலானதாகும்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா கொண்டிருக்கும் அரசியல் அக்கறைகளை  இந்தியாவின் சொந்த தமிழ் சனத்தொகை, இலங்கையின் பொருளாதாரத்துக்கு இந்தியாவின் பெரியளவு ஆதரவு ஆகியவற்றின் பின்புலத்தில் நோக்கவேண்டுமேயன்றி, இலங்கை தமிழ் மக்கள் மீதான பாரபட்ச அணுகுமுறையின் அடிப்படையில் நோக்கக் கூடாது. டொலர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில், எரிபொருட்களைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக மைல் கணக்கில் மக்கள் இரவு பகலாக சுட்டெரிக்கும் வெயிலுக்கும் கொட்டும் மழைக்கும் மத்தியில் வரிசைகளில் காத்திருந்த நேரத்தில், அதுவும் அந்த வரிசைகளில் நின்ற பலர் மரணமடைந்த நேரத்தில் இந்தியா கப்பல்களில் பெற்ரோலையும் டீசலையும் அனுப்பிச் செய்த உதவியை மறக்கக்கூடாது.

அடிப்படைக் காரணிகள்

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொடர்ச்சியான தீர்மானங்கள் இனநெருக்கடியை சமாதானமான முறையிலும் சகல குடிமக்களினதும் தேவைகளை நிறைவேற்றக்கூடிய முறையிலும் தீர்த்துவைப்பதில் எமது நாட்டுக்கு இருக்கும் இயலாமையின் நேரடி விளைவாகும். பல இனங்களை, பல மதங்களைக் கொண்ட நாடொன்றை எவ்வாறு சிறப்பாக ஆட்சிசெய்வது என்ற பிரச்சினையிலேயே மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின் தொடக்கமூலம் தங்கியிருந்தது, தொடர்ந்தும் தங்கியிருக்கிறது.

1950களில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க காலந்தொட்டு தொடக்கம் இன்று ரணில் விக்கிரமசிங்க காலம் வரை பிரச்சினைக்கான தீர்வு இன, மத சிறுப்பான்மையினங்களைச் சேர்ந்த மக்கள் பிராந்திய பெரும்பான்மையினராக வாழும் நாட்டின் அந்த பாகங்களுக்கு  ஓரளவு சுயாட்சி வழங்குவதற்கான (மாகாண அரசாங்கம்) ஏற்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. பெரிய நாடுகளிலும் சரி  (இந்தியா, நைஜீரியா) சிறிய நாடுகளிலும் சரி  (மலேசியா, சுவிற்சர்லாந்து) பல இனங்களையும் பல மதங்களையும் கொண்ட நாடுகளில் இதுவே நடைமுறையாக இருக்கிறது.

தங்களது கூட்டுவாழ்வுக்கு தாங்களே பொறுப்பாக இருக்கவேண்டும் என்று பரஸ்பரம்  விரும்புகிற தேசிய பெரும்பான்மையினமொன்றும் (சிங்களவர்கள்) பிராந்திய பெரும்பான்மையினங்களும் (தமிழர்கள், முஸ்லிம்கள்) இருக்கின்றன என்பதை அங்கீகரிப்பதாக அரசியல் தீர்வு அமையவேண்டியது அவசியம். இதை விளங்கிக்கொள்கின்ற அதேவேளை தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் தங்களிடம் எதிர்பார்க்கின்ற மக்களுக்கு அதை விளங்கப்படுத்த முன்வரக்கூடிய தேசிய அரசியல் தலைவர்களுக்கு எம்மத்தியில் தட்டுப்பாடு நிலவுவது இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் துரதிர்ஷ்டவசமான யதார்த்த நிலையாகும். அத்தகைய தலைவர்கள் ஒரு சிலரே. அவர்களது குரல்கள் இப்போது பலமாக ஒலிப்பதில்லை. கடந்த காலத்தில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.  பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இருந்தனர். அடுத்த மட்டத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இருந்தனர். இன்று தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களில் அத்தகையவர்கள் தங்களது குரலை ஓங்கி ஒலிக்கவேண்டும்.

போராட்ட இயக்கம் உச்சத்தில் இருந்த நாட்களில் அறகலயவின் இளம் தலைவர்கள் இனவாதத்துக்கு எதிராகவும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு இனவாத அரசியலை முன்னெடுத்தவர்களுக்கு எதிராகவும் துணிச்சலுடன் பேசினார்கள். ஏனைய சமூகங்களைச் சேர்ந்தவர்களை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அரசின் எதிரிகளாகவும் காண்பித்த அரசியல்வாதிகளையும் அந்த இளம் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், முறைமை மாற்றமொன்றை வேண்டிநின்ற அந்த அறகலய இலட்சியவாதம் தங்களது நிலப்பிரபுத்துவ உரித்துக்களையும் ஊழல் மோசடிகள் மூலமாக குவித்த செல்வத்தையும் பாதுகாக்க கங்கணம் கட்டி நிற்பவர்களினால் அடக்கியொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச ரீதியில் மதிக்கப்படக்கூடிய ஒரு நடுத்தர வருமானமுடைய நாடாக அண்மைய எதிர்காலத்தில் இலங்கை மாறுவதற்கான வாய்ப்புக்கள் மீது இருளின் சாயல் படர்கின்ற போதிலும் கூட  அந்த இலட்சியவாதம் நம்பிக்கையீனங்களுக்கு மத்தியிலும், முறைமை மாற்றத்துக்காக பாடுபடுகிறவர்களின் தாரக மந்திரமாக நிலைபெற்று நிற்கும்.

கலாநிதி ஜெகான் பெரேரா