“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.”

1989-09-15ஆம் திகதி ராஜனி தனது நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியற் துறையின் தலைவராகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளராகவும் 1980களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு செயற்பட்ட ராஜனி திராணகம படுகொலை செய்யப்பட்டு செப்டெம்பர் 21ஆம் திகதியுடன் 34 வருடங்கள் ஆகின்றன. 1989ஆம் ஆண்டு, தனது 35 ஆவது வயதில், பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் தனது மாணவர்களுக்கு வாய்மொழி மூலப் பரீட்சை ஒன்றினை நடாத்திய பின், துவிச்சக்கர வண்டியிலே வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து ராஜனி படுகொலை செய்யப்பட்டார்.

இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவ பீடத்திலே கற்றல் நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்புவதற்காகவும் போரின் போது வன்முறையினால் பாதிக்கப்பட்டோரின் அனுபவங்களைப் பதிவு செய்வதிலும், போராட்டக் குழுக்களாலும், இராணுவத்தினாலும் பல்கலைக்கழக மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சமயங்களில் அவர்களைப் பாதுகாப்பதிலும் ராஜனி உன்னிப்பாகச் செயற்பட்டார். மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஸ்தாபிப்பதிலும் ராஜனியின் பங்கு முக்கியமானது. வட இலங்கையிலே அச்சுறுத்தல், நெருக்கடிகள் நிறைந்த போர்ச்சூழலிலே அநாதரவாக விடப்பட்ட பெண்களின் நல்வாழ்வுக்காக ‘பூரணி’ என்கின்ற பெண்கள் இல்லத்தினை யாழ்ப்பாணத்தில் தோற்றுவிப்பதில் ராஜனி முன்னின்று பாடுபட்டார்.

ராஜனி திராணகமவினை நினைவுகூருகின்ற அதேநேரத்தில், ராஜனி திராணகம, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கற்பித்து வந்த ராஜன் ஹூல், கோபாலசிங்கம் சிறீதரன், தயா சோமசுந்தரம் ஆகியோருடன் இணைந்து எழுதிய ‘முறிந்த பனை’ என்ற நூல் பற்றியும் நாம் சிந்திக்கலாம். 1980களின் இறுதி வருடங்கள் இனப் பிரச்சினையின் வரலாற்றில் முக்கியமான ஒரு காலப் பகுதி. ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொண்ட காலம். இதே காலப்பகுதியில் இலங்கை இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்திய அமைதிக் காப்புப் படை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்ற பெயரில் நாட்டின் வட கிழக்கில் வன்முறையில் ஈடுபட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திலே இருந்த தமிழ் மக்கள் தம்மைச் சார்ந்தோரினாலும், வெளிச் சக்திகளாலும் அடக்குமுறைக்கு உள்ளானார்கள். இந்த நிலையிலே வன்முறையின் பாதிப்புக்கள் பற்றி விபரமாகவும், ஆதாரபூர்வமாகவும் எழுதிய ‘முறிந்த பனை’, இனப்பிரச்சினை, இலங்கை அரசு, தேசிய விடுதலைப் போராட்டத்தின் இலக்குகள் மற்றும் மார்க்கங்கள், இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு என்பன பற்றி வரலாற்று ரீதியாக ஆராய்ந்து விமர்சனங்களை முன்வைத்தது. இங்கு முறிந்த பனை தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் போதாமைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தினைப் பற்றியும் தமிழ்ச் சமூகத்தினுள் இருந்தவாறு வைத்த விமர்சனங்கள் தனித்துவமானவை. இந்த விமர்சனங்களே ஆயுதம் தரித்த பல தரப்பினரும் இந்த நூல் தமது சிந்தனைகளுக்கும், செயற்பாடுகளுக்கும் அச்சுறுத்தலினை ஏற்படுத்துவதாக உணர்ந்தமைக்கான காரணம்.

இதுவே ராஜனி திராணகம படுகொலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நான் யாழ்ப்பாணத்திலே பாடசாலை மாணவனாக இருந்த காலத்திலே இந்த நூலினைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். எனினும், 2005ஆம் ஆண்டிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே முதல் வருட மாணவனாக இருந்தபோதுதான் இந்தப் புத்தகத்தினை வாசிப்பதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.

அரசியல் ரீதியான உறுதியான பிரக்ஞை எதுவுமில்லாத நிலையில், ஒரு விதமான பற்றுறுதி அற்ற தமிழ்த் தேசிய மனநிலையுடன் வளர்ந்து, யாழ்ப்பாண நடுத்தர வர்க்கக் குடும்பமொன்றிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற நான் இந்த நூலினை வாசித்த போது, முதலிலே என்னை ஈர்த்த விடயம் இந்த நூலின் அரசியல் நிலைப்பாடு அல்ல; மாறாக இந்த நூலினை எழுதியவர்கள் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையும், அன்பும், நேர்மை மீதான பற்றுறுதியும், அதற்காக அவர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்ட சவால்களுமே ஆகும்.

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களினைப் பற்றி ராஜனி எழுதியுள்ள விரிவான குறிப்புக்கள் எனது மனதினை உருக்குபவையாக இருந்தன. விடுதலைப் புலிகள், இந்திய இராணுவம் என்ற இரண்டு தரப்புக்களைப் பற்றி மாத்திரமல்லாது, ஏனைய ஆயுதப் போராட்ட இயக்கங்கள், இலங்கை அரசாங்கம், அதன் படைகள் போன்ற பல்வேறு சக்திகள் தமிழ் மக்கள் மீது இழைத்த வன்முறைகளையும் இந்த நூல் ஆவணப்படுத்தியது. போராட்டத்தினையும், அதன் வன்முறைகளையும், அவை சமூகத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்களையும் பற்றி எழுதுவதனைத் தானும் முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் எவ்வாறு நோக்குகிறோம் என தான் இறப்பதற்கு சில காலங்களுக்கு முன்னர் ராஜனி எழுதிய 1989ஆம் ஆண்டு நடுப்பகுதி நிகழ்ச்சிகள் என்ற பிற்குறிப்பு, நேர்மை, உண்மை, அறம், ஆழமான அறிவு சார் விசாரணை என்பவற்றினால் கட்டப்படும் அரசியலினைத் தேடிக்கொண்டிருக்கும் பலருக்கும் ஓர் உந்து சக்தியாக அமைகிறது:

“பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின் கீழ், எந்த விதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக்கொண்டு விடுவதற்காக, நம்பிக்கைக்கு மேல் நம்பிக்கை வைத்துக்கொண்டு, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்னொரு பக்கத்தில், பதுங்கி ஒதுங்கி நின்று, இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு விட்ட மக்கள் முகங்களையும் நாம் பார்க்க முடிகிறது. நோய்வாய்ப்பட்டு மோசமான நிலையில் இருக்கின்ற தருணத்திலே ஒருவர் உடல் ரீதியில் எதையாவது செய்து பார்க்க முயற்சி செய்வதைப் போலவே, இன்றைய சூழ்நிலையில் தெளிவான பார்வையுடன் அல்லது ஆராய்ச்சி மனப்பாங்குடன் நாம் எதையாவது செய்வது என்பது இருக்கின்றது.

எமது முன்னைய விவரணங்கள் ‘ஏதோ ஒரு நூலிழையைப் பற்றிக்கொள்ள’ முயல்வதாகத் தோன்றுவதாக யாரோ ஒருவர் குறிப்பிட்டார். எமது பகுப்பாய்வில் ஒருங்கிணைந்த பூரணத்துவத்தினை வெளிக்கொணரவும், ஒரு புரிதலைத் தேடிக் கொள்ளவும், ஒதுங்கிப் போய் நிற்கும் நிலைமைகளுக்குள் அமிழ்ந்து கொண்டிருக்கும் எமது சமூகத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டவும், அதனை ஒழுங்குறச் செய்வதற்கான சில வழிகளைத் தேடவும் நாங்கள் அதனைச் செய்ய வேண்டி இருந்தது. புறநிலை ஆய்வு என்பதனை வெறும் கல்வி வளாக ஆராய்ச்சிக்கான ஒரு பயிற்சியாக மட்டும் நாம் கருதவில்லை. புறநிலை நோக்கும், சத்தியத் தேடலும், விமர்சன பூர்வமான நேர்மையான நிலைப்பாடுகளை எடுத்து விளக்குவதும், எமது சமூகத்துக்கு இன்று மிகவும் அவசியமாக உள்ளது. இதற்கு விலையாக எம்மில் சிலரின் உயிரும் பறிபோகலாம். இதனைவிட்டால் எமது சமூகத்திற்கு வேறு மார்க்கம் இல்லை என்ற ரீதியிலேயே நாம் இதைக் கைக்கொண்டுள்ளோம்.”

இந்த நூலினை நான் திரும்பத் திரும்ப வாசிக்கின்ற சந்தர்ப்பங்களிலே அது எனது அரசியற் பார்வையினை செழிமைப்படுத்துவதனை நான் உணர்ந்தேன். காலனித்துவ எதிர்ப்புக் காலத்திலே உருவாகிய பௌத்த சிங்கள தேசியவாதத்தின் அடிப்படையில் அமைந்த இலங்கை அரசின் உருவாக்கத்தின் பின்னணியில் தமிழர்களும் ஏனைய சிறுபான்மை இனத்தவரும் சந்தித்த ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் முறிந்த பனை மிகவும் ஆழமாக அலசுகிறது.

இனப் பிரச்சினையினை தமிழ் சிங்களப் பிரச்சினையாக குறுகிய இருமைகளினூடாக நோக்கும் அணுகுமுறைகளுக்கு ஒரு மாற்றினை வழங்கும் இந்த நூல், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை சமூகங்களின் விடுதலையில் மிகுந்த கரிசனையினைக் கொண்டிருக்கிறது. தமிழ் அரசியலின் வெவ்வேறு காலகட்டங்களை உரிய இடங்களிலே விமர்சன ரீதியாகவும், அனுதாபத்துடனும் ஆராய்கின்ற முறிந்த பனை, உன்னதமான நோக்கங்களுக்காகத் தொடங்கப்பட்டு பல்வேறு மேன்மையான தியாகங்களைப் புரிந்த ஆயுத ரீதியிலான விடுதலைப் போராட்டம் மக்களிடம் இருந்து தன்னைத் துண்டித்து, ஆயுதக் குழுக்கள் ஒன்றை ஒன்று அழித்துச் செயற்படுவதனை நோக்கிச் சென்று, இந்தியா போன்ற வல்லரசுகளின் தயவிலே எமது விடுதலையினை விட்டுச்சென்றுள்ளதனை மனம் வருந்தி எழுதியது.

ஆரம்பத்திலே விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட ராஜனி திராணகம பின்னர் அந்த இயக்கத்தினை விட்டு வெளியேறிமைக்கு இந்தக் காரணங்களில் சில முக்கியமானவையாக இருந்தன. தேசியவாதத்தினையும், இடதுசாரி அரசியலின் சில வரட்டுத்தரமான அடிப்படைகளினையும் ராஜனி தனது அரசியல் சிந்தனைகளிலும், செயற்பாடுகளிலும் கேள்விக்குட்படுத்தி வந்துள்ளார் என்பதனையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.

இராணுவ பலத்தினை மையமாகக் கொண்ட விடுதலைப் புலிகளின் அரசியல், மக்களை எங்கே கொண்டு சென்று விடும் என்பதனை ஆராய்ந்த ராஜனி திராணகம, முள்ளிவாய்க்கால் துயரத்திற்கான முக்கியமான சில காரணிகளை 25 வருடங்களுக்கு முன்னரே தீர்க்கதரிசனமாகக் கூறிச் சென்றுள்ளார்:

“புலிகளின் வரலாறு, அவர்களது தத்துவ வறுமை, காத்திரமான அரசியற் பார்வை இன்மை, சகிப்புத் தன்மையின்மை, வெறித்தனமான அர்ப்பணிப்பு போன்றனவே, அவர்களின் உடைவுக்கு, இறுதிக் காரணமாக அமையப் போகிறது. புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்து வரப் போவதில்லை. இந்த முழுச் சரித்திரத்திலிருந்தும், அதன் மேலாதிக்கக் கருத்தியலில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும்போது தான் விடுதலைக்கான ஒரு புதிய பார்வை பிறக்க முடியும்.”

தான் சார்ந்த சமூகத்தின் விடுதலையினை மாத்திரம் மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலின் குறுகிய மனநிலையினையும், தமிழ் மக்கள் மத்தியில் நிலவிய சாதி, வர்க்க, பால் மற்றும் பிராந்திய வேற்றுமைப்படுத்தல்களைச் சமூக ரீதியாகக் களைவதில் இருந்து தமிழ்த் தேசியவாதம் தவறியமையும் சுட்டிக்காட்டிய முறிந்த பனை, சிங்கள தமிழ் மக்களிடையே நல்லுறவினை வளர்ப்பதின் ஊடாகவும், நாட்டின் எல்லா சமூகங்களினையும் அரசியல் உரையாடல்களில் பங்குபெறச் செய்வதன் ஊடாகவுமே, எமது பிரச்சினைகளுக்குப் பிற சக்திகளின் தலையீடு இன்றி ஒரு தீர்வினை நாம் பெறமுடியும் என்பதனை வலியுறுத்தியது.

தென்னிலங்கை அரசியலிலே இடதுசாரிகள் பலவீனப்பட்டுப் போனமையினையும், அவர்கள் சிங்களத் தேசியவாத நிகழ்ச்சிநிரலில் தம்மை இணைத்துக்கொண்டமையினையும் தீவிரமாக விமர்சனம் செய்யும் முறிந்த பனை, இனங்களுக்கு இடையிலான நல்லுறவினை ஏற்படுத்துவதிலுள்ள சவால்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தது. எனினும், இணைந்து செயற்படுவதிலே இருந்த சிரமங்களுக்கு மத்தியிலும் அதனை ஒரு இலக்காக முன்னிறுத்தி, அரசியல் சிந்தனையிலும், செயற்பாட்டுத் தளத்திலும், எது முடியும் என்பதற்கு அப்பால், எந்த இலட்சியத்தினை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என்பதனை முறிந்த பனை கோடிட்டுக்காட்டியது.

முறிந்த பனை எழுதப்பட்டு இருப்பத்தைந்து வருடங்கள் கடந்து சென்றாலும், அந்த நூலிலே முன்வைக்கப்பட்டுள்ள இவ்வாறான சில கருத்துக்கள் இன்றைய எமது அரசியற் சூழலுக்கும் மிகவும் பொருந்துகின்றன. போர்க்காலத்திலே பெண்கள் எதிர்நோக்கிய பொருளாதார, கலாசார ரீதியிலான சவால்களை அவர்களின் அனுபவப் பதிவுகளாக முறிந்த பனையில் ராஜனி திராணகம விபரிக்கிறார்.

அன்றைய நாட்களில் இந்திய இராணுவத்தின் பாலியல் துன்புறுத்தல்கள் ஒரு புறமாகவும், துன்புறத்துல்களை எதிர்நோக்கிய பெண்கள் மீது சமூகம் கொண்டிருந்த ஆணாதிக்கப் பார்வை மறுபுறமாகவும், பெண்களைப் பல்வேறு மட்டங்களில் ஒடுக்கியது என்பதனை ராஜனி விளக்குகிறார். தங்கள் குடும்பங்களின் தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் சமுதாயத்தின் பார்வையில் குறைந்து விடக்கூடாது என்று கருதியமையால், நடுத்தர வர்க்க, உயர் சாதிப் பெண்கள் தாம் எதிர்கொண்ட பாலியல் அச்சுறுத்தல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும், துன்புறுத்தல்களை மேற்கொண்ட இராணுவத்தினரை எதிர்கொள்வதற்கும் தயங்கினர் எனக் கூறும் ராஜனி திராணகம, மீனவக் கிராமம் ஒன்றினைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கப் பெண்கள் தமது சமூகத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான போது, ஒரு குழுவாகத் திரண்டு சென்று, தமது பிரதேசத்துக்குப் பொறுப்பான இந்திய இராணுவ அதிகாரியிடம் முறையிட்டு, துன்புறுத்தலில் ஈடுபட்ட படைவீரர்களை அடையாளம் காட்டிய ஒரு சம்பவத்தினைக் குறிப்பிடுகிறார்.

இந்தச் சம்பவத்தின் ஊடாக, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினர் கூடிய சமூக உணர்வு கொண்டவர்களாக இருந்தனர் என்பதனையும், அவர்களிடம் காணப்பட்ட கூட்டு எதிர்ப்பு மனநிலையினையும் ராஜனி வெளிக்கொணர்கிறார். நெருக்கடிகள் நிறைந்த ஒரு சூழலிலே ஓர் அறிவுஜீவியின் சமூகப் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராஜனி திராணகம எடுத்துக்காட்டாக அமைகிறார்.

ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது, விடுதலைக்காக முன்வைக்கப்படும் சிந்தனைகளையும், மார்க்கங்களையும் பற்றி எவரும் கேள்வி கேட்பது இல்லை. எவை எல்லாம் எம்முன் தீர்வுகளாக எழுச்சி பெற்று நிற்கின்றனவோ, அவற்றினை மாத்திரம் முன்னிறுத்தி, அவை காட்டுகின்ற பாதையினையே பின்பற்றி, விடுதலையினைத் தேடுவது எமது பழக்கமாக இருக்கிறது. இங்கு புத்தாக்கச் சிந்தனைக்கும், அரசியல் அறத்துக்கும் அதிக இடம் இல்லை. எம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி, மற்றையவர்களைப் பற்றி எல்லாம் நாம் சிந்திப்பதில்லை.

எமது விடுதலைக்காக நாம் முன்வைக்கும் கருத்துக்கள், கோட்பாடுகள், எமது விடுதலைப் பாதை என்பன, எம்மத்தியில் வாழும், எம்மைச் சுற்றி வாழும் மற்றைய சமூகங்களை எப்படிப் பாதிக்கும் என்பது பற்றி நாம் ஆராய்வதில்லை. இவ்வாறான ஒரு சூழலிலே ஓர் ஆய்வாளனின் பணி என்ன என்ற கேள்வி எழுகிறது. எம்முன் எழுச்சி பெற்று நிற்கின்ற, எமது அரசியல் எதிர்காலம் குறித்து முடிந்த முடிவாக தெரிகின்ற தீர்வுகளை மாத்திரம் ஒரு ஆய்வாளர் வலியுறுத்த வேண்டும் என்ற கருத்து அபத்தமானது.

நெருக்கடியான தருணங்கள் எம்மிடம் இருந்து புதிய சிந்தனைகளையே கோருகின்றன. இந்தத் தருணங்களிலே, ஆய்வாளனின் கடமை, சமூகத்திலே பிரபலமாக இருக்கின்ற அல்லது செல்வாக்குப் பெற்று இருக்கின்ற கருத்துக்கள் எந்த அளவுக்கு நியாயத் தன்மை கொண்டுள்ளன என்பது பற்றி ஆராய்ந்து, அவ்வாறான கருத்துக்களுக்கு அறம் சார்ந்த, நீதி சார்ந்த பதில்களை முன்வைப்பதாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம் ஆய்வாளர் சமூகத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொள்கிறார் என்பது அல்ல; மாறாக, சமூகம் தன்னைத் தனது கூட்டுச் சுயநல மனப்பான்மையில் இருந்து விடுவித்து, சமூகத்திலுள்ள எல்லோரும் அறிவுஜீவுகள் என்ற நிலையில் இருந்து சிந்திக்கவும், செயற்படவும், விடுதலையினைத் தேடவும் ஊக்கப்படுத்தும் ஒரு முயற்சியே இதுவாகும்.

இவ்வாறான ஒரு சிந்தனையினைத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலிருந்தவாறு மேற்கொண்ட ஒரு புத்திஜீவியே ராஜனி திராணகம. முறிந்த பனை தமிழ் சமூகத்தின் மீது கொண்டுள்ள கரிசனை இவ்வாறான பரந்துபட்ட ஒரு மனிதநேயத் தளத்திலிருந்தே எழுகின்றது. இந்தக் கரிசனையே மனித உரிமைகளுக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்களாகிய ராஜன் ஹூலையும், கோபாலசிங்கம் சிறீதரனையும், ராஜனியின் மறைவின் பின்னர் 20 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து போரின் போது இலங்கையிலே இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை பக்கச்சார்பற்ற முறையில் வெளிக்கொண்டு வருவதற்குத் தூண்டியது.

முறிந்த பனை எழுதப்பட்டு 34 ஆண்டுகள் கடந்து விட்டன. சமத்துவம், சமூக நீதி என்பவற்றின் அடிப்படையில் இனப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு எதுவுமே நாட்டின் சிறுபான்மை இனங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. தமிழ் சமூகங்களின் மத்தியிலே பால்,வர்க்க, சாதி வேற்றுமைப்படுத்தல்கள் தொடர்ந்தும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. போரினால் ஏற்பட்ட வடுக்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மீளவில்லை. சிறுபான்மையினரும், பொருளாதார ரீதியில் நலிவுற்றோரும் வாழ்ந்து வந்த நிலங்கள் நாட்டின் பல பகுதிகளில் இராணுவத் தேவைகளுக்காகவும், அபிவிருத்தி என்ற பெயரிலும் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகள் அரசின் அனுசரணையுடன் சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் காணாமற்போன தமது உறவுகளைக் கண்ணீருடன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வட கிழக்கில் இராணுவத்தின் தலையீடு எமது எல்லா விதமான செயற்பாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. மக்கள் தமது அரசியல் உரிமைகள் குறித்துப் பேசவும், அவை தொடர்பாகச் செயற்படுவதற்காகவும் உள்ள வெளிகள் இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின் கீழே இருக்கின்றன.

இந்த சூழலிலே தமிழ் அரசியற் தரப்புகள் வெளிச்சக்திகளின் ஆதரவுடன் தான் தீர்வினைப் பெறுவதில் மேலும் மேலும் ஆர்வம் காட்டிவருகின்றனர். தமிழ்த் தேசியவாதம் தென்னிலங்கையில் உள்ள முற்போக்கான சக்திகளுடன் உறவு கொள்வது பற்றிச் சிந்திப்பது இல்லை. அதேநேரம், தென்னிலங்கையிலும் முற்போக்கு சக்திகள் சிங்கள தேசியவாதத்தினால் விழுங்கப்பட்டு வருகின்றன. தற்போது முஸ்லிம் மக்கள் சிங்கள பௌத்தத் தேசியவாதத்தின் அடக்குமுறையினைத் தீவிரமாக உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் வெற்றுத் தேசியம் பொருளாதார ரீதியில் ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகிறது.

வெவ்வேறு வடிவங்களில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களாகிய நாம் பல துருவங்களாகிப் போய், ஒருவரை ஒருவர் எதிர்ப்பதில் எமது நேரத்தினையும், சக்தியினையும் செலவிடுகிறோம். இதன் மூலம் எமது பொது எதிரியான அரசு பொறுப்புக் கூறலில் இருந்து தப்பிப்பதற்கு நாமே வழி செய்கிறோம். இவ்வாறான விரக்தியூட்டும் சூழலில் இணைந்து செயற்படுவது எவ்வாறு என்ற கேள்விக்கு முறிந்த பனை காட்டும் வழி, இணைந்து செயற்படுவதில் உள்ள ‘கஷ்டங்களை விசுவாசத்தோடு எதிர்கொள்வது’ என்பதாகும்.

இந்த விசுவாசத்தினைக் கட்டியெழுப்பவும், இணைந்து செயற்படுவது பற்றிய உரையாடல்களினை மேற்கொள்ளவும், அதற்கான செயற்றிட்டங்களை உருவாக்கவும், அவற்றினை முன்னெடுப்பதில் உள்ள கஷ்டங்களை வெற்றிகொள்ளவும் நாட்டில் செயற்படும் முற்போக்கு சக்திகள் நாடு முழுவது தளங்களை உருவாக்க வேண்டும். எமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாமே தேடிக் கொள்ளவும், எம்மிலும், சமூகத்திலும், அரசிலும் ஆரோக்கியமான மாற்றங்களை நாம் ஏற்படுத்தவும், ராஜனி திராணகமவும், முறிந்த பனையும் எமக்குக் காட்டியிருக்கின்ற பாதை இதுவே.

மகேந்திரன் திருவரங்கன்

(ராஜனி திராணகம கொல்லப்பட்டு நேற்றோடு 34 வருடங்களானதை முன்னிட்டு ராஜனியின்  25ஆவது ஆண்டு நினைவுதினத்தன்று எழுதப்பட்ட கட்டுரையை [அப்டேட்] மீள்பிரசுரம் செய்கிறோம்.)