Photo, TAMILGUARDIAN

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது குறிப்பான அக்கறைக்குரிய இரு விவகாரங்களை முதன்மைப்படுத்துகிறது. முதலாவது, வடக்கு, கிழக்கின் முன்னாள் போர் வலயங்களில் தொடரும் உயர்மட்ட நிலையிலான கண்காணிப்பு. நாட்டின் அந்த பாகங்களுக்குச் செல்பவர்கள் இரு மாகாணங்களிலும் சீருடையுடன் மிகவும் பெருமளவில் படையினரின் பிரசன்னத்தை காணத் தவறமாட்டார்கள். சுற்றுலா தலங்களிலும் கூட இதுவே நிலைமை.

அந்தப் படையினர் 1970 களின் பிற்பகுதியில் தொடங்கி 2009 மே மாதம் முடிவுக்குவந்த அமைதியைக் குலைத்த வன்முறை நிலைவரத்தை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். 14 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், நாடு அதன் வன்முறைக் கடந்த காலத்தின் மரபை வெற்றிகொள்ளத் தவறியமையை உருவகப்படுத்துவதாக பாதுகாப்புப் படைகளுக்காக இன்னமும் செலவிடப்படும் பாரிய செலவினம் அமைந்திருக்கிறது. பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியிலும் கூட பாதுகாப்புக்கு பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது.

2023 பட்ஜெட் மதிப்பீடுகளின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களின் மொத்த சம்பளங்களில் பாதுகாப்புத் துறையினரின் சம்பளம் 48 சதவீதமாக இருக்கிறது என்று வெறிட்டே றிசேர்ச்​நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட பிந்திய தகவல்கள் கூறுகின்றன. சம்பளங்களுக்கான மொத்த செலவினத்தில் 32 சதவீதத்தை இராணுவம் எடுத்துக்கொள்கிறது. 16 சதவீதம் ஏனைய பாதுகாப்பு சேவைகளுக்குப் போகிறது.

உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கையின் ஆயுதப்படைகளின் அளவு 2017 – 2019 காலப்பகுதியில் 317,000 பேராக இருந்தது. 2021 தெற்காசிய கற்கைகளுக்கான நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையின் இராணுவம் உலகில் 17ஆவது பெரிய இராணுவமாக – ஐக்கிய இராச்சியத்தினதையும் விட கூடுதலானதாக – இருக்கிறது. இராணுவத்தின் பெரிய படைப்பிரிவுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே தொடர்ந்து நிலைவைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளுக்கு வளமான களமாக அந்த மாகாணங்கள் அமைகின்றன.

நில அபகரிப்புக்கு ஆதரவாக இருப்பது மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை ஊக்குவிப்பது உட்பட தமிழ் மக்களை பெரிதும் பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் படையினர் ஈடுபடுவதாக வடக்கு, கிழக்கில் மக்கள் பரவலாக உணருகிறார்கள். ஆனால், போதைப் பொருளுக்குக் கடுமையாக அடிமையாகும் போக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பும் வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் மட்டுப்பட்டவையல்ல, நாட்டின் ஏனைய பாகங்களிலும் அவை நிலவுகின்றன. குறிப்பாக தலைநகர் கொழும்பைக் கூறமுடியும்.

வடக்கு, கிழக்கை போலன்றி, தென்னிலங்கையில் பிரதான சந்தேகத்துக்குரியவர்களாக பெரும் பணம் பண்ணும் பேராசையில் பழிபாவத்துக்கு அஞ்சாத பாதகச்செயல்களில் ஈடுபடக்கூடிய -சகல அதிகாரங்களும் கொண்ட அரசியல்வாதிகளே விளங்குகிறார்கள். தங்களது கருவிகளாக பாதுகாப்புப் படையினரை அவர்கள் பயன்படுத்தக்கூடும். இந்த உணர்வுதான் அறகலய போராட்டத்தின்போது மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்குப் போகவேண்டும் என்ற சுலோகத்தை பிரபல்யப்படுத்தியது.

நாடளாவிய கண்காணிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் சம்பந்தப்பட்ட சம்பவம் வடக்கில் நிலவும் கண்காணிப்பு பிரச்சினையை மையமாகக் கொண்டதாகும். பொது மைதானமொன்றில் விளையாட்டு கழகம் ஒன்றைச் சேர்ந்த சுமார் இருபது ஆதரவாளர்களை சந்தித்துக்கொண்டிருந்ததாக அவர் கூறுகிறார். அவர்களுடன் தான் பேசிக்கொண்டிருந்தபோது இனந்தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 15 – 20 அடி தூரத்தில் தங்கள் வாகனத்தை நிறுத்திய அவர்களிடம் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டு அடையாள அட்டைகளைக் காட்டுமாறு கேட்டபோது அதற்கு அவர்கள் மறுத்தார்கள் என்று பொன்னம்பலம் கூறினார்.

சிவில் உடையில் வந்த அவ்விருவரும் புலனாய்வு தகவல்களைத் திரட்டிவந்த பொலிஸார் என்று பிறகு கூறப்பட்டது. வடக்கு, கிழக்கில் இவ்வாறு நடைபெறுவது வழமையானதாகும். ஆனால், நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு அசௌகரியத்தைத் தரக்கூடியதாக நாட்டின் ஏனைய பாகங்களிலும் இவ்வாறு இடம்பெறுகிறது.

இலங்கை இன்று துரதிர்ஷ்டவசமாக போருக்கான மூலக்காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணத்தவறிய நாடாக இருக்கிறது. போருக்குப் பின்னராக நாடாக மாத்திரமல்ல அறகலயவுக்குப் பின்னரான சமுதாயமாகவும் இருக்கிறது. வீழ்ச்சிகண்ட பொருளாதாரம் மக்களுக்கு சொல்லொணா இடர்பாடுகளைக் கொடுத்தது. மக்கள் தங்கள் விருப்பங்களையும்  ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்பார்ப்பவற்றையும் வெளிப்படுத்துவதற்கு வகைசெய்யக்கூடிய தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் காட்டும் மறுப்பு நிலைவரத்தை மேலும் மோசமயைச்செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படுவதைப் போன்ற கண்காணிப்பு நடவடிக்கைகள் நாட்டின் ஏனைய பாகங்களிலும் அமைதியின்மை தோன்றக்கூடிய இடங்கள் குறித்து அரசாங்கத்துக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தக் கண்காணிப்பு நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கில் கூடுதலான அளவுக்கு வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் மேற்கொள்ளப்படுவதே வித்தியாசமாகும். தென்னிலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்துக்கொண்டிருக்கும்போது அங்கு பேசப்படுவதை ஒற்றுக்கேட்பதற்கு பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் 10 – 15 அடி அண்மையாக மோட்டார் சைக்கிளில் வருவது சாத்தியமில்லை.

இரண்டாவது பிரச்சினை பொன்னம்பலம் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மரியாதை காட்டப்படாமல் அவர் கைதுசெய்யப்பட்ட முறையில் இருந்து எழுகிறது. இது வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்பு படைகள் ‘ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் ‘  போன்று நடந்துகொள்கின்றன என்பதை தமிழ் மக்களுக்கு ஊர்ஜிதப்படுத்துகிறது. பொலிஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலத்தைக் கொடுக்குமாறு பொன்னம்பலத்தை பொலிஸார் கேட்டபோதிலும், முன்னதாக மைதானத்தில் வாக்குவாதத்தின்போது தன்னை நோக்கி துப்பாக்கி நீட்டப்பட்ட காரணத்தால் பொலிஸ் நிலையம் சென்றால் தனக்குப் பகைமையான சூழல் காணப்படும் என்ற காரணத்தால் அங்கு செல்ல அவர் விரும்பவில்லை.

பொலிஸார் அதற்குப் பிறகு கொழும்பில் உள்ள வீட்டில் வைத்து அவரைக் கைது செய்து வாக்குமூலம் பெறுவதற்காகவும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காகவும் மீண்டும் வடக்கிற்கு  கூட்டிச்சென்றனர். அண்மைய கடந்த காலத்தில் வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஆத்திரமூட்டக்கூடிய வகையில் நடந்துகொண்ட சந்தப்பங்களிலும் கூட அவர்களை பொலிஸார் கடுமையாக நடத்தாமல் விட்டதை பொன்னம்பலத்தின் கைதுடன் நோக்கும்போது அது ஒரு மனக்கசப்பான ஒப்பீடாக அமைகிறது.

சமத்துவ குடியுரிமை

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள கூடுதலான அளவுக்கு கடும்போக்குடைய பிரிவுகளுடன் நெருக்கமான உறவைக்கொண்டிருப்பது உட்பட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கடைப்பிடிக்கும் முனைப்பான தமிழ்த் தேசிய நிலைப்பாடுகள் தெற்கில் இருந்தும் சிங்கள அரசியல் சமுதாயத்திடமிருந்தும் அவரை பெருமளவுக்கு தூரவிலக்கிவிட்டது. அவர் கைது செய்யப்பட்டதையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் குறித்தும் தெற்கின் சிங்கள பெரும்பான்மை இன பகுதிகளைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டதாக ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், கைதுசெய்யப்படுகின்றபோது சிங்கள மொழியில் பொன்னம்பலம் கருத்துக்களை வெளியிட்ட பாங்கு இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதிக்காக போராடுவதில் அவர் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அறிகுறியாகும். இதை ஊக்கப்படுத்தவேண்டுமே தவிர ஒடுக்கக்கூடாது.

“பொன்னம்பலம் இன்றைக்கே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்கவேண்டும் அல்லது அவரைக் கைதுசெய்யப்போவதாக பொலிஸார் அச்சுறுத்தியது முற்றிலும் சட்டவிரோதமானதாகும். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அது அவரது சிறப்புரிமையை மீறும் செயலாகும். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதில் இருந்து அவர் தடுக்கப்படுகிறார். இது அடக்குமுறையாகும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் ருவிட்டரில் பதிவுசெய்தார்.

போட்டி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தமிழ் தேசிய கூட்டமை்பின் பேச்சாளர் சுமந்திரன் வெளிக்காட்டிய ஒருமைப்பாடு நேர்மறையான ஒரு அம்சமாகும். அரசாங்கத்துடனான தங்களின் பேச்சுவார்த்தைகளில் நியாயமான பேரம்பேசும் வல்லமையை பெறவேண்டுமானால் தமிழ்க்கட்சிகள் மத்தியில் ஐக்கியம் ஏற்படவேண்டியது அவசியமாகும். கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளிக்காட்டிய எதிர்ப்பு பொன்னம்பலத்துக்கு சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒப்பீட்டளவில் ஆதரவு மிகவும் குறைவு என்ற தமிழ் ஊடகங்களின் செய்திகளை மறுதலிப்பதாக அமைந்தது.

“நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னமப்பலத்தின் கோட்பாட்டுடனும் நிலைப்பாடுகளுடனும் எமக்கு வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சபையில் வேறு எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரைப் போன்றும் நடத்தப்படுவதற்கு அவருக்கு உரித்து இருக்கிறது. சபை நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்தவேளை அவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அது சட்டவிரோதமானது. சட்டத்தை மதித்துச் செயற்படுமாறு நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இது ஒரு சட்டவிரோதமான கைது” என்று அவர் கூறினார். சகல சமூகங்களினதும் பொதுவான வாழ்விடமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான தேசிய ஐக்கியம் மற்றும் சமத்துவ குடியுரிமை உணர்வை எதிர்க்கட்சித் தலைவர் வெளிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் எதிரெதிர் பக்கங்களில் இருந்தாலும், தேசிய விவகாரங்களை கையாளுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாசவும் உயர்ந்த பொறுப்புக்களில் இருக்கும் இன்றைய காலகட்டம் கடந்த கால பிரச்சினைகளையும் சமகால பிரச்சினைகளையும் சீர்செய்வதற்கு சிறந்த ஒரு வாய்ப்பாகும். ஜெனீவாவில் அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், ஜனாதிபதி விக்கிரமசிங்க கூட்டிய சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கூட்டத்தில் நல்லிணக்க நடவடிக்கை திட்டம் ஒன்று குறித்து ஆராயப்பட்டது.

அந்தத் திட்டத்தை  நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டங்களை வரைவதை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களை ஜனாதிபதி அறிவுறுத்தினார். சட்டவாக்கத்துக்கான ஐந்து முக்கிய விவகாரங்கள், நிறுவன ரீதியான நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகள் விடுதலை மற்றும் அதிகாரப் பன்முகப்படுத்தல் ஆகியவை தொடர்பிலான முன்முயற்சிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. வார்த்தைகளில் பெருமளவு விடயங்கள் கூறப்பட்டுவிட்ட போதிலும் நடைமுறையில் களத்தில் பெரிதாக எதையும் காணமுடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலத்தின் கைது தொடர்பிலான பிரச்சினையை கையாளுவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடிய அணுகுமுறை மாற்றத்துக்கான ஒரு சான்றாக அமையும்.

கலாநிதி ஜெகான் பெரேரா