படம் | AFP PHOTO/ LAKRUWAN WANNIARACHCH, Haveeru

இலங்கையில் 2015, 2016ஆம் ஆண்டுகள் தேர்தல் ஆண்டுகளாக மாற்றமடைந்துள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தல் சீர்த்திருத்திய வகையில் தேர்தல் தொகுதி முறை மற்றும் விகிதாசார முறை இணைந்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பலமிக்க கட்சிகளின் செல்வாக்கால் முறையான ஜனநாயகப் போக்கு உடைத்தேறியப்பட்டு, தந்திரோபாய ஜனநாயக தரிசனத்தை தந்த விகிதாசார முறையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது.

உள்ளூராட்சித் தேர்தல் பழைய வட்டார முறையும், ஓரளவு விகிதாசார முறையும் கலந்து இடம்பெறும் என ஆட்சியாளர்கள் குரல் கொடுத்து வந்தனர். கடந்த மே மாதம் 234 உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்பட்டு எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தல் இடம்பெறும் என்று உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் காணப்படும் நான்கு அடுக்கு அரசாட்சி முறைகளான ஜனாதிபதி, நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி என்பனவற்றில் உள்ளூராட்சியே அடிமட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுடன் தொடர்புபட்டதாகையால் அதில் நல்லாளுகைகளை விரும்புவோர் கவனம் செலுத்த வேண்டியவர்களாக உள்ளனர். முக்கியமாக தமிழர் பிரதேசம் நீண்ட காலமாக உள்ளூராட்சி அமைப்புகள் இயங்காத நிலையில் இருந்ததால் இனியாவது அவற்றை நல்ல முறையில் இயக்கி நல்லாட்சியை மக்களுக்கு வழங்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

எனவே, உள்ளூராட்சி பற்றி முறையான தெளிவை பெறுவது அவசியமாகும். அதுவே எமக்கான நல்லாட்சியை எய்துவதற்கான வழிமுறையாகும்.

இலங்கையில் வரலாற்றுக்காலம் முதலாக உள்ளூராட்சி முறைமைகள் நிலவி வந்துள்ளன. எனினும், நாம் 1948இன் பின் இலங்கையில் உள்ளூராட்சி முறைகள் எவ்வகையில் அமைந்திருந்தன என்பதைப் பார்ப்போம்.

உண்மையில் இவை பிரித்தானியரால் அறிமுகம் செய்யப்பட்ட முறைமைகளின் திருந்திய வடிவமேயாகும்.

1948இல் நடைமுறைகளில் இருந்த உள்ளூர் அதிகார அமைப்புகள்

  1. மாநகர சபை
  2. நகர சபை
  3. கிராம சபை

1981இல் நகரசபை, கிராமசபை என்பன ஒழிக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்திச் சபை எனும் அமைப்பு இல 35, 1981 சரத்து மூலம் உருவாக்கப்பட்டது. மேற்படி மாவட்ட அபவிருத்திச்சபை எனும் அமைப்பு முறை எதிர்பார்த்தளவு திருப்திகரமாக அமையாததால், 1987இல் சரத்து 15, 1987இன் படி பிரதேச சபைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இலங்கையில் தற்போது நாம் 3 வகையான உள்ளூர் அதிகார சபைகளைக் கொண்டுள்ளோம்.

அவையாவன:

  1. மாநகர சபை – 23
  2. நகர சபை – 41
  3. பிரதேச சபை – 271

மொத்தம் 335 அலகுகள்.

பாரிய நகரத்தை மாநகர சபைகளும் சிறிய நகரத்தை பட்டின சபைகளும் கிராமபுற பகுதிகளை பிரதேச சபைகளும் கொண்டுள்ளன. இவை மாநகரசபைச் சட்டம், நகரசபைச் சட்டம், பிரதேசசபைச் சட்டம் என்பவற்றால் அரசியல் சட்ட அந்தஸ்தை பெற்றுள்ளன. இந்தியாவைப்போல எமது உள்ளூராட்சி மன்றங்கள் அரசியல் சாசன அங்கீகாரத்தையும் சாசன பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை.

இந்தியாவில் 1992இல் ஏற்படுத்தப்பட்ட 73ஆவது, 74ஆவது அரசியல் சாசனத்திருத்தங்கள் கணிசமான அதிகாரங்களை உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு வழங்கின. பஞ்சாயத்து ராஜ் என்பது கிராமிய மட்டத்திலும் மாநகர அமைப்புகள் நகர மட்டத்திலும் சமூகமயமாக்கல் அபிவிருத்தி, மக்கள் நலன் தொடர்பான பணிகளை ஆற்றுகின்றன. இந்தச் சட்ட திருத்தத்தினால் பஞ்சாயத்து ராஜ் வீதிகளை அமைத்தல், கல்வி, விவசாய அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் பணியாற்ற முடிந்தது.

இலங்கையின் 13ஆவது திருத்தத்ததின்படி உள்ளூராட்சி அதிகாரசபைகளின் உருவாக்கம், அமைப்பு, சட்ட வரையறைகள் என்பனவும் தேசிய கொள்கைகளும் மத்திய அரசிடமே தொடர்ந்தும் உள்ளன. எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உள்ளூராட்சி அதிகார சபைக்கு ஏலவே உள்ள அதிகாரங்களை மாவட்ட சபை பெற்றுக் கொள்ள முடியாதெனவும் கூறுகின்றது.

தேவைப்படுமிடத்து மாகாண சபை உள்ளூராட்சி சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியும் எனவும் விதந்துரைக்கின்றது.

தேசிய மட்டத்திலான உள்ளூராட்சி அமைச்சு பொதுக்கொள்கை வழிகாட்டல், தேசிய ஒருங்கிணைப்பு என்பவற்றினை உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு வழங்கும். தேசிய மட்டத்தில் உள்ளூராட்சி அமைச்சுக்கு கீழ் இரு முகாமை நிறுவனங்கள் செயற்படுகின்றன. அவையாவன:

உள்ளூராட்சிக்கான இலங்கை நிறுவனம்

உள்ளூராட்சிக்குரிய முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் ஆய்வு என்பனவற்றை ஒன்றிணைக்கும்.

உள்ளூர் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம்

உள்ளூர் நிறுவனங்களுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை வழங்குவதற்கான அதிகார அமைப்பாகும்.

உள்ளூராட்சி அமைப்பின் அதிகாரங்களும் செயற்பாடுகளும்

உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி அமைப்புகள் பொதுவான ஆட்சி நடைமுறைகள் வழியாக அமுல்படுத்தலாம்.

அவை வருமாறு:

  • சொத்துகளை பாராதீனப்படுத்துவதற்கும் தன்னுரிமையாக்குவதற்கும் விற்பதற்கும் அதிகாரம் இவைகளுக்கு வழங்கப்படும்.
  • உள்ளூராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம்.
  • வரிகளை அறவிடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • செலவுகளைக் கணிப்பிடும் அதிகாரம்.
  • உரிமைப் பத்திரங்களை வழங்கும் அதிகாரம்
  • உப விதிகளை உருவாக்கும் அதிகாரம்

மேற்படி அதிகாரங்களும் செயற்பாட்டு வழிமுறைகளும் உள்ளூராட்சி அதிகார சபை சட்டங்களிலும் உப சரத்துகளிலும் கூறப்பட்டுள்ளன.

தற்போது இலங்கையில் நிவவும் உள்ளூராட்சி அதிகார அமைப்புக்களுக்கு மேற்கு நாடுகளில் காணப்படுவது போல் முழுமையான சுய ஆட்சி அதிகாரம் வழங்கப்படவில்லை. மேற்கு நாடுகளில் உள்ளூராட்சி அமைப்புக்கள் அவ்வவ் பிரதேசத்துக்குரிய கல்வி, காவற்துறை, சமூக சேவைகள் என்பவற்றில் அதிகாரம் செலுத்த முடியும். ஆனால், இலங்கையில் உள்ளூராட்சி அமைப்புகள் பொது நலன்கள் சார்ந்த துறைகளில், குறிப்பாக பொதுச்சுகாதாரம், கழிவகற்றல் போன்றவற்றிலும் சில சமூக சேவைகளிலும் ஈடுபட முடியும். பிரதேச நகர சபைகளை விட மாநகர சபைகளுக்கு மேற்படி விடயங்களை கையாள்வதில் அதிக அதிகாரம் உண்டு. எனினும், பிரதேச, நகர சபைகள் மக்களின் பங்களிப்புடன் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகளில் கணிசமான செல்வாக்கை செலுத்த முடியும். உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான மேலே கூறப்பட்ட சட்டங்கள், சரத்துக்களை விட இலங்கைக்கான பொதுவான சட்டங்களையும் உள்ளூராட்சி அமைப்புகள் பயன்படுத்த முடியும்.

அவையாவன:

  • அரசமைப்பு சட்டம், உள்ளூராட்சி தேர்தல் சட்டம், பொது நிர்வாகச் சட்டம், முகாமைத்துவ சட்டம், வரி செலுத்தும் வழி வகைகள் பற்றிய சட்டம், பொதுச்சுகாதாரம், பௌதிக திட்டமிடல், பொதுநலன் சேவைச்சட்டம் போன்றவற்றையும் இவை பயன்படுத்த முடியும்.
  • உள்ளூராட்சித் தேர்தல் முறை

1981 இற்கு முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கு வட்டார அடிப்படையிலேயே அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் கூடி தமது உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர், துணைத் தலைவர்களை தெரிவு செய்யும் முறை இருந்து வந்துள்ளது. இம்மாதிரியான தேர்தல் முறை 1989ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் அதிகார சபையின் சட்டத்தினால் மாற்றியமைக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு உள்ளூராட்சி அதிகார சட்டத்தின் படி விகிதாசார பிரதிநிதித்துவ முறை உள்ளூராட்சி அமைப்புக்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி பிரதேச சபை, நகர சபை, மாநகர சபைக்குரிய குறித்தொதுக்கப்பட்ட மொத்த அங்கத்தவர்கள் மொத்தமாக ஒரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிப்பதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். கட்சிக்கு அல்லது குழுவுக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்களில் சபைக்குரிய தலைவர், துணைத் தலைவர் என்போர் அரசியல் கட்சி/ குழுக்களின் செயலாளர்களினால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் 4 ஆண்டுகள் அப்பதவியை வகிக்க முடியும். உள்ளூராட்சி அமைச்சு விரும்பின் மேலும் ஒரு வருடத்திற்கு தேர்தலை ஒத்தி வைக்க முடியும்.

உள்ளூராட்சி சபைக்குரிய வாக்காளர் ஒருவர் கட்சிக்கு/ குழுவுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு புள்ளடி இடுவதன் மூலம் வாக்களிக்க முடியும். அதன் பின் அவருக்குரிய 3 விருப்பு வாக்குகளை வேட்பாளருக்கு வழங்கப்பட்ட இலக்கங்களின் நேரே புள்ளடி இடுவதன் மூலம் வழங்க முடியும். வாக்காளர் ஒருவர் 3 விருப்பு வாக்குகளை ஒருவருக்கோ/ இருவருக்கோ/ மூவருக்கோ வழங்க முடியும். விருப்பு வாக்குகளை பயன்படுத்தாது விடவும் முடியும். கட்சிக்கு/ குழுக்களுக்கான வாக்கு அளிக்கப்பட்ட பின்னரேயே விருப்பு வாக்கிற்கான உரிமை பெறப்படுகிறது.

தேர்வு பெற்ற அங்கத்தவர்களைக் கொண்ட அவையானது உள்ளூராட்சி அமைப்பின் கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாகும். இது உள்ளூராட்சி அமைப்பின் செயற்பாட்டிற்கு இன்றியமையாதது. அவை சில உப குழுக்களை அமைத்து செயற்படும். அவையாவன:

  • நிலையியல் குழு
  • தேவையை ஒட்டிய தற்காலிக குழு

உள்ளூராட்சி அவையின் எந்தெந்த தீர்மானங்களும் நிலையியல் குழுவில் கலந்துரையாடப்பட்ட பின்னரே அவைக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாநகர சபைக்கு இவ் வழிமுறை இன்றியமையாதது.

நகர சபை, பிரதேச சபைகளுக்கு இவை அவசியம் இல்லை. எனினும், இவ் வழிமுறையை பின்பற்றுதல் வரவேற்பிற்குள்ளாகும் எனலாம். உள்ளூராட்சி சபைகளின் அதிகாரம் மாகாண சபைகளின் உருவாக்கத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் அமைச்சுக்களும், அரசு முகாமை நிறுவனங்களும் உள்ளூராட்சி சபையின் மேல் தமது அதிகாரத்தை செலுத்துகின்றன. வட்டார தேர்வுகளை ஒழித்தமை விகிதாசார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வந்தமை என்பன பிரதேச ரீதியாக மக்கள் சேவையாளர் உள்ளூராட்சி சபைக்கு தேர்ந்தெடுக்க தடையாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தேர்தலின் பின் தலைவர், துணைத் தலைவர் என்போரை அரசியல் கட்சி அல்லது குழுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது நல்ல ஜனநாயக முறையல்ல எனவும் விமர்சிக்கப்படுகிறது.

சமீபகாலமாக நாடாளுமன்ற தேர்தலிலும் விகிதாசார தேர்தல் முறையை விடுத்து தொகுதி வாரி தேர்தல் முறையையும், வட்டாரத்தேர்தல் முறையையும் அமுலாக்க வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன. எனினும், சென்ற நாடாளுமன்ற தேர்தலானது மக்கள் குரலை மதிக்காது மீண்டும் விகிதாசார முறைக்கே சென்றது. உள்ளூராட்சி தேர்தலானது வட்டார முறையில் இடம்பெறும் என்ற நம்பிக்கையும் அற்றுப்போகக்கூடிய போக்கு தென்படுகிறது. ஜனநாயக முறையை புறந்தள்ளி பாரிய கட்சிகளின் செயலாளர், தலைவர்களுக்கே உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் கட்சிகளின் சர்வாதிகாரமும் ஊழல், பணபலம், சண்டித்தனம், பந்தம் பிடித்தல் போன்றவற்றில் தேர்ந்தவர்களே உறுப்பினர் ஆகும் சந்தர்ப்பம் உள்ளமை நடைமுறையில் நாம் கண்ட யதார்த்தமாகும். எனவே, மக்கள் சக்தியை திரட்டி உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் வட்டார முறையில் இடம்பெற வேண்டும் என குரல் கொடுத்து ஜனநாயகத்தை காப்பற்ற முயல வேண்டும். நல்லாளுகை என்பது அப்போதுதான் தோற்றம் பெற முடியும்.

பேராசிரியர் இரா. சிவசந்திரன்