21 வயது பிறந்து சில தினங்களுக்குப் பிறகு எனக்குத் திருமணம் முடிந்தது. இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இரண்டாவது பிள்ளை கொஞ்சம் வளர்ந்து வந்துகொண்டிருந்த போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. கணவர் என்னை திட்டுவதும், அடிப்பதுமாக இருந்தார். இருந்தாலும் பிள்ளைகளுக்காக பொறுமை காத்து வாழ்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது. அதன்பிறகுதான் நாங்கள் பிரிந்தோம். தொடர்ந்து அடித்துக்கொண்டே இருப்பார். கையில் கிடைப்பதைக் கொண்டு அடிப்பார். அடிதாங்க முடியாமல் இறுதியாக முதல் இரண்டு பிள்ளைகளும் பாடசாலை சென்றிருந்தவேளை மூன்றாவது பெண் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு எனது வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.  நான் அங்கிருந்து வௌியேறி  ஒரு வாரத்திற்குள் எனது மூன்றாவது பிள்ளையையும் பலவந்தமாக பறித்துக்கொண்டு சென்றுவிட்டார் எனது கணவர்.

பிள்ளைகளை என்னிடம் தரமறுக்கிறார்கள், பிள்ளைகளை எனக்குக் காண்பிப்பதில்லை. பேசக்கூட விடுவதில்லை. தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தாலும் தொடர்பை துண்டிக்கிறார்கள்.

ஐந்து வருடங்களாகின்றன. இன்னும் பிள்ளைகள் அம்மாதான் வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளை நான் பார்க்கவேண்டும், மூன்று பேரும் எனக்கு வேண்டும்.​

அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு இதுவரை நஷ்டஈடு கிடைக்கவில்லை. தலாக்குக்கான பணத்தை மட்டும் காதி நீதிபதி வாங்கிக்கொடுத்தார். எனக்குச் சொந்தமான வீட்டில்தான் கணவரும் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

காதி நீதிமன்ற அமர்வுகளின்போது பிள்ளைகள் மூவரையும் அழைத்துவந்து என்னிடம் காட்டுமாறு நீதிபதி கூறியும் அவர்கள் கேட்டபாடில்லை. அவரது பேச்சுக்கு மரியாதை கொடுப்பதேயில்லை.

அடிஉதை தாங்க முடியாமல்தான் நான் வீட்டைவிட்டு வெளியேறினேன். ஆனால், என் மீது வீண்பழி சுமத்தி என்னைக் குற்றவாளியாக்குகிறார்கள். அவர் எவ்வளவு அநியாயம் செய்தார் என்று அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.

முஸ்லிம் தனியாள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பாக ‘மாற்றம்’ ஏற்கனவே நான்கு நேர்க்காணல்களை வெளியிட்டிருந்த நிலையில் இன்று ஐந்தாவது நேர்க்காணலை வெளியிடுகிறது.

 


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, “நீதியைத் தேடும் பெண்கள்” நேர்க்காணல்கள் 1234