Photo, @PMDNewsGov

மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து  அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சந்திப்புக்களில் முக்கியமானது பௌத்த மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் அவர்கள் நடத்திய சந்திப்புக்களாகும். அவற்றுக்கு உயர்ந்தளவு சாதகமான வரவேற்பு கிடைத்தது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னர் இலங்கைக்கு வந்திருந்தால் அவர்கள் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டிருக்கக்கூடிய காலம் ஒன்று இருந்தது.

இந்தத் தடவை அவர்கள் உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum) என்ற அமைப்பின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறார்கள். இந்தப் பேரவை இலங்கையில் முதலில் 2014ஆம் ஆண்டிலும் பிறகு 2021ஆம் ஆண்டிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இரு தடவைகளிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்று முடங்கிப்போய்க்கிடந்த சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பித்த வேளைகளிலேயே தடைகள் நீக்கப்பட்டன.

உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் வருகையும் அதற்கு கிடைத்த பிரசித்தமும் மேற்கு நாடுகளில் உள்ள அவர்களின் சமூகத்தைச் சேர்ந்த சில குழுக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

“புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாம், சிங்கள பௌத்த மதத்தலைவர்களில் ஒரு பிரிவினரும் தென்னிலங்கை சிவில் சமூகத்தவர்களும் முன்னெடுத்திருக்கும் ஒரு முயற்சி குறித்து ஊடக வட்டாரங்கள் மூலமாக அறிகின்றோம். இந்தக் குழுக்கள் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகளில் தெரிந்தெடுத்த குறிப்பிட்ட சில பிரதிநிதிகளுடன் குறிப்பாக அந்தச் சமூகத்தின் ஒரு சில நபர்களை மாத்திரம் இப்போது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உலகத் தமிழர் பேரவையுடன் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகள் எமது சமூகத்தை கூட்டாக பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் ஒருமித்த குரல்களை முழுமையாக பிரதிபலிப்பவை அல்ல. உலகத் தமிழர் பேரவைக்கு முன்னர் இருந்த பிரதிநிதித்துவம் இப்போது இல்லை என்பது முக்கியமாக கவனிக்கப்படவேண்டியதாகும்” என்று அந்தக் குழுக்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றன.

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் இலங்கையில் சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்ததாக அவர்களது விஜயத்தின் உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். கண்டியில் அவர்கள் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பௌத்த உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்ததுடன் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான புனித தலதா மாளிகைக்கும் சென்று வழிபட்டார்கள்.

அடுத்த ஓரிரு தினங்களில் அவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ஏனைய மதங்களின் தலைவர்களையும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தினா்கள்.

சிவில் சமூகத்துடனான அவர்களின் சந்திப்புக்களில் பதற்றமோ, சந்தேகமோ அல்லது அவர்களை வெறுத்து ஒதுக்கும் உணர்வோ காணப்படவில்லை. நாம் எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்று எமது தேசிய கீதம் கூறுவதைப் போன்று இது இவ்வாறுதான் அமையவேண்டும்.

பொருத்தமான தருணம்

உறுதியானதும் நிலைபேறானதுமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் நல்லிணக்கச் செயன்முறை ஒன்றை முடுக்கிவிடுவதற்கு தற்போதைய தருணமே பொருத்தமானதாகும். மக்களை இடர்பாடுகளுக்கு உள்ளாக்கிய படுபோசமான பொருளாதார நெருக்கடி இனநெருக்கடி அல்ல, நாட்டை பொருளாதார ஊழலில் இருந்தும் சூறையாடலில் இருந்தும் விடுவிப்பதே முன்னுரிமைக்குரியது என்று அவர்களை உணரவைத்திருக்கிறது.

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களினால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஹோட்டல்கள் தற்போது நிரம்பி வழிகின்றன. தங்களது நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பதற்காக அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கிறார்கள்.

உணவகங்களுக்கும் அவர்கள் படையெடுக்கிறார்கள். சாதாரண இலங்கை உழைப்பாளியினால் இந்த உணவகங்களுக்குச் சென்று அங்குள்ள விலையுயர்ந்த உணவு வகைகளை சாப்பிடக் கட்டுப்படியாகாது. புலம்பெயர் சமூகத்தில் இருந்து வந்திருக்கும் தங்கள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் இந்த உணவகங்களுக்கு வந்து அவர்களும் உணவு வகைகளை ருசிபார்க்கிறார்கள்.

உலகத் தமிழர் பேரவை ஒரு வருடகாலமாக உயர்மட்ட பௌத்த மதகுருமாருடன் ஊடாட்டங்களை செய்துவந்திருப்பதே அவர்களுடைய இலங்கை விஜயத்தில் தற்போதுள்ள பிரத்தியேகமான அம்சமாகும்.

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதற்காக பிரசாரத்தை முன்னெடுத்த முக்கியமான புலம்பெயர் தமிழ்ச் சமூக அமைப்பாக உலகத் தமிழர் பேரவை இருக்கின்ற போதிலும், அதன் உறுப்பினர்கள் இரு பிரதான பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் தலதா மாளிகைக்கும் சென்றார்கள்.

பௌத்த மதகுருமாருடன் சேர்ந்து அவர்கள் விடுத்த அறிக்கையில் “இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்கள் மத்தியிலும் புரிந்துணர்வையும் அமைதி சமாதானத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நாம் கடந்த சுமார் ஒரு வருடகாலமாக பேச்சுவார்த்தைகளை நடத்திவந்திருக்கிறோம். 2023 ஏப்ரலில் நேபாள நாட்டின் நாகார்கோட் நகரில் நடத்திய கட்டமைப்பு ரீதியான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் பரஸ்பரம் கருத்துக்களை அறிந்துகொள்வதற்கும் அதன் வழியாக இந்தத் தேசிய கலந்துரையாடலுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வழிவகுத்தது. இலங்கை மற்றும் புலம்பெயர் சமூகங்கள் மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற இத்தகைய முதல் முயற்சியை தொடருவதற்கு வழிகாட்ட நாம் ‘இமாலய பிரகடனத்தை’ செய்துகொண்டோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

இது இரு தரப்புகளுக்கும் இடையிலான ஒரு இணக்கப்பாட்டை பிரதிபலிக்கும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

ஆறு அம்ச கூட்டறிக்கை

உலகத் தமிழர் பேரவைக்கும் பௌத்த மதகுருமாருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளியிடப்பட்டிருக்கும்  கூட்டறிக்கை நன்கு தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு ஆவணமாகும். நீதி மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையை ஐக்கியப்பட்ட ஒரு கட்டத்துக்குக் கொண்டுவருவதற்கு செய்யவேண்டியவற்றை பிரதிபலிப்பதாக அது அமைந்திருக்கிறது.

நேபாளத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற இடத்தை குறிக்குமுகமாக ‘இமாலயப் பிரகடனம்’ என்ற மகுடத்தில் அமைந்திருக்கும் கூட்டறிக்கை கீழ்வரும் ஆறு அம்சங்களை வலியுறுத்துகிறது.

* எந்தவொரு சமூகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவோ, அதன் அடையாளத்தையும் பெருமையையும் இழந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சாத வகையில் நாட்டின் பன்முகத்தன்மையை பேணிக்காத்து மேம்படுத்துதல்;

* பொருளாதார நெருக்கடியை வெற்றிகொண்டு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களினதும் மற்றையவர்களினதும் ஈடுபாட்டுக்கும் முதலீடுகளுக்கும் வசதியாக அமையக்கூடியதாக உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தும் உகந்த பொருளாதார வகைமாதிரியை தெரிவுசெய்வதுடன் இலங்கையை உறுதியான ஒரு மத்தியதர வருமானமுடைய நாடாக முன்னேற்றும் பாதையில் பயணம் செய்வதை உறுதிப்படுத்துதல்;

* தனிப்பட்ட உரிமைகளையும் கூட்டு உரிமைகளையும் உத்தரவாதம் செய்து சகல மக்கள் மத்தியிலும் சமத்துவத்தை மேம்படுத்தக்கூடியதும் நிறுவனங்களின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி மாகாணங்களுக்குப் போதுமான அதிகாரங்களை உத்தரவாதம் செய்யக்கூடியதுமான புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைதல். அதுவரை அதிகாரப்பகிர்வு தொடர்பில் தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளை நம்பகமான முறையில் நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துதல்;

* ஐக்கியப்பட்டதும் பிளவுபடாததுமான நாட்டுக்குள் மக்களின் மத, கலாசார மற்றும் அடையாளங்களை ஏற்றுக்கொண்டு மதித்து அதிகாரங்களைப் பரவலாக்கி இனக்குழுக்களுக்கும் மதக்குழுக்களுக்கும் இடையில் நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதை நோக்கி பாடுபடுதல்;

* மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடியதும் கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெற்றுக்கொள்வதில் பற்றுறுதியுடன் கடந்தகால அவலங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகளைக் கொண்டதுமான இலங்கையை உருவாக்கும் நோக்குடன் செயற்படுதல்;

* இரு தரப்பு மற்றும் பல்தரப்பு சர்வதேச உடன்படிக்கைகளின் கடப்பாடுகளை மதித்து சுதந்திரமானதும் உரமும் ஊக்கமும் நிறைந்த வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து உலகில் சமாதானமும் வளமும் கொண்ட நாடுகள் மத்தியில் பெருமைக்குரிய ஒரு இடத்தை இலங்கை பிடிப்பதை உறுதிசெய்தல்.

உலகத் தமிழர் பேரவையுடனான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைதாங்கிய பௌத்த மதகுருமாரில் வண. பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசார மற்றும் வண. மாதம்பகம அஸ்ஸஜி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் கொவிட் பெருந்தொற்று காலத்தில் இறந்த முஸ்லிம்களின் பலவந்தமாக சடலங்களை தகனம் செய்வதற்குப் பிறரது உணர்ச்சிகளை மதிக்காத முறையில் எந்தவிதமான விஞ்ஞான அடிப்படையற்ற தீர்மானத்தை அன்றைய அரசாங்கம் எடுத்தபோது இஸ்லாமிய மதத்தவர்களின் உரிமைகளுக்காக உறுதியாகக் குரல்கொடுத்தவர்கள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான வண. களுபஹன பியரத்ன தேரரும் இந்த பிக்குமார் குழுவில் அடங்குவார்.

உலகளாவிய 1000 சமாதானப் பெண்கள் என்ற குழுவின் ஒரு உறுப்பினராக 2005 நோபல் சமாதானப் பரிசுக்காக நியமிக்கப்பட்ட விசாகா தர்மதாச நேபாளப் பேச்சுவார்த்தைகளுக்கு அனுசரணையாக செயற்பட்டார். அவரின் பங்களிப்பு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் குழுவுக்கும் பௌத்த மதத் தலைவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் பொதுநிலைப்பாடு ஏற்படுவதற்கு பெரிதும் உதவியது.

முரண்பாடான சான்றுகள் 

உலகத் தமிழர் பேரவையின் தூதுக்குழுவின் விஜயத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வு என்றால் அது அவர்களும் பௌத்த மதத்தலைவர்களும் சேர்ந்து ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பேயாகும். இதற்கு ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்குமான அவர்களின் முயற்சிகளுக்கு தனது ஆதரவை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.

ஜனாதிபதியின் இந்த உறுதிமொழி தங்களது பணிகளுக்கு நாட்டின் அதியுயர் அதிகார பீடத்தின் ஆசீர்வாதங்கள் கிடைக்கிறது என்பதால் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகளும் பௌத்த மதத் தலைவர்களும் மாத்திரமல்ல அவர்களைப் போன்று இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கும் நம்பிக்கையுடன் செயற்படுவதற்கு ஊக்கத்தை கொடுத்திருக்கும்.

ஆனால், இந்த முயற்சிகளுக்கு தோள்கொடுப்பதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பை அரசியல் தலைவர்கள் தட்டிக்கழிக்கமுடியாது. மலை உச்சியை நோக்கி பாறாங்கல்லை நகர்த்துவதைப் போன்ற இந்த முயற்சிகளை மற்றவர்கள் செய்யட்டும் என்று அரசியல் தலைவர்கள் வாளாவிருக்கமுடியாது.

அரச அதிகார நிறுவனங்களை அமைப்பதற்கும் சட்டத்தில் உறைந்துகிடக்கும் நீதியை உறுதிசெய்வதற்கான வழிவகைகளை வகுப்பதற்கும் அரசியல் தலைமத்துவத்தை அரசாங்கம் கொடுக்கவேண்டியது அவசியமானதாகும்.

மட்டக்களப்பில் உள்ள விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் தங்களது மேய்ச்சல் தரையை சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கைக்காக அபகரித்துவருவதாக கடந்த மூன்று வருடங்களாக முறைப்பாடு செய்துவருகிறார்கள். இந்த மேய்ச்சல் தரை 2011ஆம் ஆண்டில் அமைச்சரவை தீர்மானம் ஒன்றின் மூலமாக அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்தத் தரையில் 2020ஆம் ஆண்டு முதல் பொலன்னறுவையைச் சேர்ந்து சிங்கள குடியேற்றவாசிகள் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருகிறார்கள். முரண்பாடான இந்த அனுமதிகள் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கின்றன.

இரு மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி விக்கிரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிறகு எண்பதுக்கும் அதிகமான கால்நடைகள் களவாடப்பட்டு, இறைச்சிக்காக கொல்லப்பட்டு அல்லது மின்சாரம் தாக்கி பலியாகயிருப்பதாக தமிழ் விவசாயிகளுக்காக தற்போது வாதாடும் சடடத்தரணியான கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான பேராசிரியர் ரி.ஜெயசிங்கம் உறுதிசெய்திருக்கிறார்.

விவசாயிகள் சுமார் 160 கால்நடைகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. மட்டக்களப்புக்கு ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக 2023 அக்டோபர் 7ஆம் திகதியளவில் இரு பொலிஸ் காவல் நிலைகள் அமைக்கப்பட்ட பின்னரும் கூட இந்த நியாயமற்ற நிலைவரம் தொடருகிறது. அது மாத்திரமல்ல, செங்கலடியில் உள்ள இந்த மக்களுக்கு நீதி வழங்குவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க 2023 அக்டோபர் 8ஆம் திகதி அறிவித்தார் என்பதும் குறி்பிடத்தக்கது

மேய்ச்சல் தரையை ஆக்கிரமித்தவர்களில் சிலரை (13 பேர்) வெளியேற்றுமாறு 2013 நவம்பரில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவோ அல்லது சகல ஆக்கிரமிப்பாளர்களையும் அப்புறப்படுத்துவதாக 2022 ஜூலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மகாவலி அதிகார சபையினால் வழங்கப்பட்ட உறுதிமொழியோ இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று பேராசிரியர் ஜெயசிங்கம் கூறியிருக்கிறார்.

“எதுவுமே உருப்படியாக நடைபெறவில்லை. இது ஆட்சிமுறையினதும் நிருவாகத்தினதும் அலட்சியத்தை அல்லது தகுதியீனத்தை அல்லது சிறுபான்மை இனத்தவர்களுக்கு நீதிவழங்குவதில் கடைப்பிடிக்கப்படும் அதன் கொள்கையையே வெளிக்காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அதியுயர் அதிகாரமுடைய ஜனாதிபதியின் சொல்லுக்கு மதிப்பளித்து களத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் பெரும்பாலும் ஆட்சிமுறைமையில் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.

மேலும், நீதிமன்ற உத்தரவுகளும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்போது மக்கள் முற்றாகவே நம்பிக்கை இழந்துவிடுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில்தான் வன்முறைகள் மூள்கின்றன.

சொல்லுக்குப் பிறகு செயல்வேண்டும். அல்லாவிட்டால் தற்போது உணரக்கூடியதாக இருக்கின்ற நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்க உணர்வுகள் சமூகத்தின் அடிமட்டத்தில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. 2011 அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம் மேய்ச்சல் தரை குறித்து வர்த்தமானி மூலம் ஜனாதிபதி உத்தரவை பிறப்பித்தால் அது நல்லிணக்கத்துக்கான ஒரு தொடக்கமாக அமையலாம்.

கலாநிதி ஜெகான் பெரேரா