படம் | UN News Centre

இலங்கையைப் பற்றி மனித உரிமை ஆணையாளர் ஸெயிட் அண்மையிலே விடுத்த வாய் மூல அறிக்கை தொடர்பாக எழுந்த செயற்பாடுகள் இலங்கையின் பொறுப்புக்கூறுதல் தொடர்பிலே சுவாரஸ்யமானதோர் இயங்குநிலையை ஒளிர்வித்துக் காட்டியுள்ளது. அதாவது, மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஆனதிலிருந்து இலங்கை அரசின் ஒரு பகுதி விடுவிக்க எடுத்த முயற்சிக்குப் பதிலாக மீண்டும் சர்வதேச சமூகத்தால் அது மீளவும் உட்தள்ளப்படுவதிலே விளைந்தது. நான் இந்த ஆக்கத்திலே வாதிப்பதுபோல, இப்படியான ஒரு இயங்குநிலையானது – அது சீழ்ப்பட விடப்பட்டால் – இலங்கை அரசுக்குப் பாரதூரமான இராஜதந்திர சவாலாக நேரிடும். இதற்குப் போதுமானதான ஒரேயொரு மாற்றுமருந்து குறுகியது முதல் மத்திம காலகட்டம் வரைக்கும் பொறுப்புக்கூறல் விடயத்திலே அர்த்தமுள்ள செயற்பாடே என நான் மேலும் கூறுவேன்.

செப்டம்பர் 2015 இலே சரித்திரபூர்வமான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு இணை அனுசரனை வழங்கி ஸ்தானிகர் ரவிநாத் ஆரியசிங்க அங்கே ஒப்பமிட்டபோது, அதன் நிபந்தனைகளுக்கு கொழும்பில உள்ள அரசாங்கம் இணக்கம் தெரிவித்தமை தெளிவானதாக இருந்தது. இறுதியான தீர்மானத்தின் சொற்பதங்களையிட்ட பேரம்பேசுதல்களிலே பிரதம மந்திரி நேரடியாக ஈடுபட்டார் என்பது தெரிந்திருக்க, தீர்மானம் மேற்கொண்ட பின்பு ஜனாதிபதி நடந்துகொண்ட விதம் அந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களுடன் அவரும் இணங்கியுள்ளமையைத் தெளிவுபடுத்தியது. தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பு நியூயோர்க்கில் இருந்து கொழும்புக்கு ஜனாதிபதி மீண்டபோது அவரது ஆதரவாளர்களால் அவருக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்திலே இடம்பெற்ற இருநாள் விவாத்தின்போது தீர்மானத்துக்கான அவரது ஆதரவானது தீர்மானத்தின் சொற்பதங்களுக்கு அவரது ஆதரவையிட்டு எழுந்த கேள்விகளுக்கு ஓய்வு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் நிபந்தனைகளை ஒருதலைப்பட்சமாக மீள் பேரம்பேசக்கூடிய இராஜதந்திர இடைவெளி இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, விசேட நீதிப் பொறிமுறையிலே எந்த ஒரு வெளிநாட்டு நீதிபதியும் தொழிற்படமாட்டார்கள் என நிர்ணயித்து, அதையிட்டதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்களைக் கைவிட நாடினார்.

விசேட நீதிமன்றம் பற்றிய பொறுப்புக்கூறல் விடயத்துடன் இடைப்படும்படி ஜெனீவா தீர்மானத்தை ஒன்றில் முழுமையாக வாபஸ் பெறவேண்டும் அல்லது அதன் அமுலாக்கத்தைத் தாமதிக்கவேண்டும் என ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். கூட்டு எதிர்க்கட்சியும் ராஜபக்‌ஷ பாசறையும், குறிப்பாக பா.உ. தினேஷ் குணவர்த்தன மற்றும் கலாநிதி தயான் ஜயதிலக ஆகியோரும் விசேட நீதிமன்றம் பற்றிய சிந்தனைக்குக்கூட முழுமையான எதிர்ப்பினைப் புலப்படுத்தி வந்துள்ளனர். ஆயினுங்கூட, இலங்கையிலே ஐக்கிய நாடுகள் சபையிலே ஆட்சிக்கு நெருக்கமான ஒரு சிலரும்கூட தீர்மானத்தின் நிபந்தனைகளுக்கான எதிர்ப்பினையே பகிர்கின்றனர் என்பதற்கான சில சான்றுகள் உள்ளன. உதாரணமாக, தேசிய ஐக்கியம் மன்றும் நல்லுறவு அலுவகத்தின் அங்கத்தினரான கலாநிதி ராம் மாணிக்கலிங்கம் எழுதிய ஒரு கட்டுரையிலே வாதிப்பது என்னவென்றால், “இந்தக் காலகட்டத்திலே ஒரு குற்றவியல் விசாரணை மன்றம் அதியுயர் முன்னுரிமையாக இருக்கக்கூடாது. ஏனெனில், அது சர்வதேச சமூகத்துக்கு வேண்டிய ஒன்றாகவே தோன்றுகிறது.” இதுபற்றிய பிரதியுத்தரத்தை நான் முன்னதாக வழங்கியிருக்கிறேன். இலங்கையில் உள்ள ஐ.நா. நாட்டு அணியினால் நியமிக்கப்பட்டதின் நிமித்தமாக கலாநிதி நிஷான் டீ மெல் மற்றும் கலாநிதி ராஜேஷ் வேணுகோபால் ஆகியோரால் எழுதப்பெற்ற அண்மைய “பின்புல மதிப்பீட்டு அறிக்கை” அதேபோலவே சர்வதேச குற்றங்களுக்கான குற்றவியல் விசாரணைகளின் முக்கியத்துவத்தைத் தணித்தே கையாண்டுள்ளது: இந்த நிலைப்பாடானது மேம்போக்காக நோக்குகையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்துக்கும் மற்றும் இலங்கை அரசுக்கும் முரண்பட்டதாகும்! ஜயதிலக மற்றும் மாணிக்கலிங்கம் தொடக்கம் டீ மெல் மற்றும் வேணுகோபால் வரைக்கும் இலங்கையின் கொழும்பு புத்திஜீவிகள் மற்றும் நிறுவனங்கள் பொறுப்புக்கூறுதல் தொடர்பான தீர்மானம் 30/1 ஐயிட்டு அசௌகரியம் கொண்டுள்ளமையும், அரசாங்கம் மற்றும் ஐ.நா. நடத்தையை அதற்கு எதிரானதாகத் தூண்டும்படி நாடுவதும் தற்போது தெளிவாகிறது. சகல நிலைப்பட்ட கருத்துத்தெரிவிப்போரும் பொறுப்புக்கூறுதலுக்கு எதிராக உள்ளனர் என்று கூறுவதற்கல்ல. நாட்டுக்குள் உள்ள பரந்தநோக்குக்கொண்ட சிவில் சமூக குழுக்களும் மற்றும் இன நல்லுறவுக்காக எழுப்பப்படும் முன்னேற்றகரமான குரல்களும் தீர்மானம் 30/1 ஐப்பற்றி பரிந்து போராடுவது மட்டுமன்றி, அதனை அமுல்படுத்தும்படியாக அரசாங்கத்தைத் தூண்டி ஏவியும் வருகின்றன.

தீர்மானத்துக்கான வெறுப்பலைகள் கொழும்பிலே நிலவுகிறதென்றால், ஜெனீவா அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை வழங்கியுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்தது முதல் மௌனத்தை காத்து வந்த ஆணையாளர் ஸெயிட் தனது வாய்மூல அறிக்கையில் கூறியது:

“மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தினால் வகுக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையிலே, குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேசக் குற்றச்செயல்களின் சிக்கல்தன்மை மற்றும் அளவு ஆகியவற்றின் பின்புலத்திலே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் நம்பகத்தன்மையை உத்தரவாதப்படுத்தும்படியாக, சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உறுதி செய்வதற்குச் சர்வதேசத்தின் பங்களிப்பானது அவசியம் என்பதையிட்டு நான் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறேன்…”

நம்பகத்தன்மைக்கு உத்தரவாதமாக சர்வதேசப் பங்களிப்பு எனும் இந்த எண்ணமும் – அதனால் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் முறைமையின் தவிர்க்கமுடியாத பகுதியாக அது இருப்பதும் – ஜெனீவாவிலே அமெரிக்காவினாலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2015 இலே தனது அமெரிக்க அரசுத் திணைக்கள சகபாடிகளைவிடவும் அதிகமாக இலங்கை அரசாங்கத்தை மேலும் தள்ளுவதற்கு இணங்கியவரான கீத் ஹார்பர் எனும் தூதுவர், ஜனவரி 2016 இலே டுவிட்டர் மூலம் தெரிவித்தது,

“இலங்கைக்கு – எந்த ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையினதும் நம்பகத்தன்மைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் போன்றோரின் ஈடுபாடு தேவை, அது மாறாது.”

சென்ற மாதம், உயர் ஸ்தானிகர் விடுத்த வாய்மூல அறிக்கையைத் தொடர்ந்து பேச்சாளர்கள் ஒருவர் பின் ஒருவராக நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, மக்கெதோனியா, ஐக்கிய இராச்சியம், நோர்வே, டென்மார்க், கனடா, நியூஸிலாந்து, எஸ்தோனியா, மற்றும் அயர்லாந்து ஆகிய நாட்டுப் பேராளர்கள் இலங்கைக்குப் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் முக்கியத்துவம் பற்றி ஞாபகமூட்டியதுடன், அவர்களுள் அநேகர் அந்தப் பொறிமுறையிலே சர்வதேசப் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தித் தெரிவித்தனர்.

அரசுக்கு உற்சாகமூட்டும் பல வார்த்தைகள் கூறப்பட்டாலும், வடக்கு – கிழக்கு மக்களின் நாளாந்த வாழ்வையிட்டதான முன்னேற்றம் மந்தமாய் இருப்பதையிட்ட கரிசனையைப் புலப்படும் வார்த்தைகளும் கூறப்பட்டன. ஆனாலும், 30/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களையிட்டு போராடி ஈற்றுப்படுத்திய அதே பேராளர்களால், அதன் முழுமையான அமுலாக்கம் பற்றிய தீர்க்கமான கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

எமக்கு அண்மித்த நாட்டிலே, பொதுவாகவே இலங்கை அரசுக்கு சார்பாக  எழுதும் இந்து ஆசிரியர் கட்டுரையானது ஒரு எச்சரிக்கையை ஒலித்தது:

“புதிய அரசியல் அமைப்பிற்கான செயன்முறையை முன்நகர்த்தி, நல்லுறவுக்கும் சீரமைப்புக்குமான நடவடிக்கைகளை எடுத்துவந்திருக்கையில், இப்போது அரசின் பக்கத்திலே எவ்விதமான இயங்குநிலையாவது தொலைந்தால் அது நம்பகத் தன்மையின் இழப்பினை விளைவீடாக்கும்.”

இந்தப் பின்புலத்திலே, தீர்க்கமற்ற தாமதத்தின் அல்லது விசேட நீதிமன்றத்தை நிலைநாட்டுவதிலே போதிய சர்வதேசப் பங்களிப்பினை உறுதிப்படுத்தத் தவறுவதன் பின்விளைவுகள் தெளிவானவை. அரசாங்கமானது நீதி பற்றிய கேள்வியை புறந்தள்ளுமேயாயின், நம்பகத்தன்மையைப் பொறுத்தவரைக்கும் அது பாரியதோர் செலவைச் செய்ய நேரிடலாம். நம்பகத்தன்மையின் இத்தகையதான இழப்பானது சர்வதேச நல்லெண்ணங்களை வெகு விரைவில் பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். முன்னேற்றமானது புலப்படாமலும் அத்துடன் சர்வதேச பதிப்பகங்களும், மனித உரிமைகள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்ளும் இலங்கை பற்றி கடுமையான கண்டன மனப்பான்மையைக் கைக்கொள்ளுமேயாயின், மேற்குலக அரசாங்கங்களும் முதலீட்டாளர்களும் இறுதியிலே அதையேதான் செய்வார்கள். பொருளாதார செழித்தோம்பல் இல்லாமல் நல்லாட்சி (யஹபாலன) இறுதியிலே தேர்தல் பிரச்சினைக்குள் செல்வது தவிர்க்க இயலாததாக இருக்கும். எனவே, அரசை தக்கவைப்பானது, அரசாங்கத்தின் அர்ப்பணங்களை உதாசீனம் செய்யாமல், அதனை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் நீண்டகால ஓட்டத்திலே சார்ந்ததாகும்.

இராணுவத்தின் அங்கத்தவர்களுக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணைகளுக்காக தெற்கின் ஆதரவை வென்றிடுவது இலகுவானதாய் இராது. ஆயினும், எதிர்பார்க்கப்படுவது என்னவென்றால், தண்டிக்கப்படாமை எனும் கலாச்சாரத்திலே ஊறிப்போயுள்ள நிலைமையைப் போதிய அளவுக்கு இடைப்படுவதற்கு நம்பகத்தன்மையான ஒரு பொறிமுறையை ஸ்தாபிப்பதை அதன் ஒரு நோக்கமாக அரசாங்கம் புலப்படுத்திக் காட்டவேண்டும். அதன் அர்த்தம் என்னவெனில், விசேட நீதிமன்றத்துக்கு அவசியமான சட்டங்களை நிலைநாட்டுவதும், சர்வதேசக் குற்றச்செயல்களை விசாரிப்பதற்கு விசேட வழக்குத்தொடுனர்கள் இருப்பதுவும், அதன் தொழிற்பாட்டின் முதல் வருடங்களின்போது அரசியல் ரீதியிலே செல்வாக்கற்ற, “கைக்கெட்டிய தூரத்திலே தொங்கும் பழம்போல” குற்றச்செயல்களின் சூத்திரதாரிகளையே இவைகள் விசாரித்தலுமே அதன் அர்த்தம். இனங்களுக்கிடையிலான நல்லுறவை எதிர்ப்பவர்களால், நிலைமாற்றுக்கால நீதியைப் பற்றி எழும் தப்பான தகவல்களை செயற்திறனுடன் இடைகட்டுவதுமாகும். மேலும், இது தமிழ்த்தலைவர்களை உள்ளடக்கியதான பணயப்பங்காளர்களுடன் நேர்மையாகவும் உண்மைத்தன்மையுடனும் இந்த விசேட மன்றத்தையிட்டுப் பேரம் பேசுவதையும், சர்வதேசப் பங்காளிகளின் ஈடுபாட்டு மட்டமானது செயற்படுத்தப் பட்டதாகவும் இருக்கவேண்டும்.

பொறுப்புக்கூறலை எதிர்க்கும் கொழும்பின் புத்திஜீவிகள் கடந்த மாத சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று இருக்குமேயானால், அவர்கள் இலங்கையின் இராஜதந்திர புனர்வாழ்வின் வழிக்குக் குறுக்காக, அதன்மூலம் பொருளாதார சீர்திருத்தத்துக்குக் குறுக்காக நிற்கக் கூடாது என்பதேயாகும்.

நிரான் அங்கிற்றல் எழுதிய Geneva and Coming Colours: A Lesson for Colombo என்ற கட்டுரை Groundviews இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையின் தமிழாக்கமே இங்கு தரப்பட்டுள்ளது.