படம் | groundviews

இன்று சாதாரண குடிமக்கள் அதாவது, அன்றாட வேலைகளில் மூழ்கிப் போவதையே தங்கள் பிரதான கடமையாகக் கொள்பவர்கள், மாலைநேர அரட்டைகளில் அரசியலையும் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளுபவர்கள் போன்ற பிரிவினர் தொடக்கம், அரசியலை ஊன்றிக் கவனிப்போர் வரை அனைவர் மத்தியிலும் இருக்கும் கேள்வி, எதிர்வரும் மார்ச்சில் என்ன நடக்கும்? அவர்களது மனங்களில் எழும் கேள்விக்கு அவர்களிடமே பதிலுமுண்டு. நிச்சயம் ஏதோ பெரிதாக நடக்கத்தான் போகிறது. தமிழர் அரசியலைப் பொருத்தவரையில் கடந்த மூன்று வருடங்களாக இரண்டு சொற்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஒன்று ஜெனிவா, மற்றையது அமெரிக்கா. ஜெனிவா என்னும் சொல்லுடன், அமெரிக்கா என்னும் சக்திவாய்ந்த சொல்லை இணைத்துப் புரிந்துகொள்ள முற்படும் எந்தவொரு தமிழரும் இன்றைய சூழலில் நம்பிக்கை வைக்கவே முயல்வார். மக்களின் மனநிலை இவ்வாறென்றால், அவ்வாறான மக்களுக்கு நிலைமைகளை எடுத்துச்சொல்ல முற்படும் சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள் என்பவர்களும் அவ்வப்போது ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சர்வதேசத்தை நம்பி வேலையில்லை! அவர்கள் எங்களுக்கு எதையும் செய்யப் போவதில்லை. இந்த இடத்தில் என்னிடத்தே இருக்கும் கேள்வி – அவர்கள் (சர்வதேசம் அல்லது அமெரிக்கா) ஏன் தங்களின் நலன்களையெல்லாம் புறம்தள்ளிவிட்டு எங்களுக்கு உதவ வேண்டும்? அப்படி அவர்கள் உதவுமளவிற்கு தமிழர்களிடம் என்னதான் இருக்கிறது? வடக்கு கிழக்கில் எண்ணை இருக்கிறதா அல்லது தங்கம் இருக்கிறதா? அள்ளியெடுப்பதற்கு வெள்ளிதான் இருக்கிறதா?

பலம்பொருந்திய நாடுகள், ஒரு குறிப்பிட்ட மக்களின் பிரச்சினையை எப்போது தங்களின் பிரச்சினையாகக் கருதிச் செயற்பட எத்தணிக்கும்? சில விடயங்களின் அடிப்படையில்தான் அது நிகழ முடியும். ஒன்று, குறிப்பிட்ட மக்கள் குறித்த பலம்பொருந்திய நாட்டின் உள்ளக (Domestic Politics) அரசியலில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். இரண்டு, குறிப்பிட்ட மக்கள் அமைந்துள்ள நாட்டின் புவியமைவிடம், அதன் காரணமாக புவிசார் அரசியலில் குறித்த நாடு முக்கியத்துவம் உடையதாக இருக்கவேண்டும். மூன்றாவது, குறித்த பகுதியில் நிலவும் பதற்றமான நிலைமை ஏனைய நாடுகளின் தேசிய பாதுகாப்பில் செல்வாக்குச் செலுத்தும் நிலைமை காணப்படவேண்டும் அல்லது குறிப்பிட்ட நாட்டின் மீது செல்வாக்குச் செலுத்துவதன் ஊடாக பொருளாதார நன்மைகள் கிடைக்கவேண்டும். இப்படியான காரணங்களின் அடிப்படையில்தான் ஒரு பலம்பொருந்திய நாடு, ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யும். இந்தியா முன்னர் நேரடியாக தலையிட்டதிலிருந்து தற்போது அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகு கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வரும் இன்றைய நிலைமை வரையிலாக அனைத்துமே தமிழர்கள் மீது கொண்ட பாசப்பிணைப்பினால் நிகழ்ந்தவை அல்ல.

ஜெயவர்த்தன அரசின் அணுகுமுறைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடிய ஏதுநிலை காணப்படுவதை உணர்ந்தே, அன்றைய இந்திய அரசு, கொழும்பின் மீது நேரடியான அழுத்தங்களைப் பிரயோகித்தது. அன்றைய உலக ஒழுங்கு, சோவியத் தலைமை மற்றும் அமெரிக்கத் தலைமை என்னும் இரு அணிகளாக பிளவுண்டு கிடந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஈழ ஆயுத அமைப்புகளுக்கு இந்தியா அல்லது றோ பயிற்சியை வழங்கி, அவர்களை கொழும்புக்கு எதிரான கடும்போக்கு அழுத்தக் குழுவாக (Hardcore Pressure Groups) பயன்படுத்தியது. ஆனால், இங்கு தமிழர் பிரச்சினையை ஒரு காரணமாகக் காட்டியே, இந்தியா நேரடியாக களத்தில் இறங்கியிருந்தது. இந்தியா தமிழர் பிரச்சினையை கையில் எடுத்ததால், வெளித்தோற்றத்தில் அது தமிழர்களுக்கு ஆதரவான நடவடிக்கையாகத் தெரிந்தது. ஆனால், அது அடிப்படையில் இந்தியாவின் பிராந்திய அதிகார நலன்களுடன் தொடர்புபட்ட ஒன்றாக மட்டுமே இருந்தது. இந்தியாவின் நலன் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, அதன் ஊடாக தமிழர்களும் நன்மையடையக் கூடிய நிலைமை இருந்தது. ஆனால், அதனை தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வதில் தமிழர்கள் தோல்வியடைந்தனர். இந்த நிலைமையை சரியாக விளக்குவதாயின், சர்வதேச அரசியலை விளங்கிக் கொள்வதில் தமிழர் தோல்வியடைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான்.

ஆனால், இந்த நிலைமை பிறிதொரு மொழிகொண்டே விளங்கிக் கொள்ளப்பட்டது அல்லது, விளக்கப்பட்டது. அதாவது, உலக வல்லரசுகளில் ஒன்றான இந்தியாவின் படைகளையே நாங்கள் வெற்றிகரமாக புறமுதுகிட்டு ஓடச் செய்தவர்கள் என்னும் பண்டைய தமிழ் வீரக்கதையொன்று புனையப்பட்டு, அது புதிய தலைமுறையினருக்குள் சுவைக்கவும் விடப்பட்டது. அவர்களும் நன்றாக மென்று விழுங்கினர். இந்தியாவின் உடனடி அயல் நாடென்னும் வகையில், இலங்கையின் புவியியல் அமைவிடமும், இலங்கைக்குள் ஏற்படும் அந்நிய ஊடுருவல்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்னும் புறநிலைமையுமே அன்றைய தலையீட்டை முன்தள்ளிய காரணிகளாகும்.

மேற்படி அனுபவத்துடன் இன்றைய நிலைமைகளை உற்று நோக்குவோம். என்ன தெரிகிறது? அமெரிக்கா, ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் துணையுடன் கொழும்பின் மீதான அழுத்தங்களை தொடர்ந்து வருகிறது. இங்கும் தமிழர்களின் பிரச்சினை பேசப்படுகிறது. இதுவே தமிழர்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. இந்திய தலையீட்டின்போது எவ்வாறு தமிழர் பிரச்சினை ஒரு காரணமாக முன்னிறுத்தப்பட்டதோ, அதேபோன்றே இப்பொழுதும் தமிழர் பிரச்சினை ஒரு காரணமாக காட்டப்படுகிறது. இது தமிழர்கள் மீதான பாசப்பிணைப்பினால் நிகழ்ந்தவை அல்ல, மாறாக இலங்கையின் புவியியல் அமைவிடமும், புவிசார் அரசியலில் அது வகித்துவரும் முக்கியத்துவமுமே ஆகும். ஆனால், இந்தியாவின் நேரடித் தலையீட்டின் போதிருந்தது போன்ற சாதகமான வாய்ப்புகள் இப்போது காணப்படவில்லை.

இதன் காரணமாகவே கூட்டமைப்பு வெளியாரின் நிகழ்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதான விமர்சனங்கள் எழுகின்றன. இன்றைய சூழலில் கூட்டமைப்பின் முன்னால் வேறு தெரிவுகள் இல்லை என்பதுதான் உண்மை. ஒருபுறம் இந்தியாவின் கரங்களிலும் மறுபுறம் அமெரிக்காவின் கரங்களிலும் தொங்குவதைத் தவிர தமிழர்கள் முன்னால் வேறு எந்தத் தெரிவுகளும் இல்லை. இது இயலாமை அல்ல. இதுதான் இன்றைய நிலைமை. அமெரிக்க – இந்திய நலன்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு புள்ளியில், தமிழர்களின் நலன்களையும் இணைக்கும் வல்லமை கூட்டமைப்பிடம் இருப்பின், ஏதாவது நன்மைகள் விளைய வாய்ப்புண்டு. எனவே, சர்வதேச அரசியலில் தமிழர்களின் முக்கியத்துவம் என்ன என்றால், எதுவும் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை. குறிப்பாக அமெரிக்க மட்டத்தில் தமிழர்களின் முக்கியத்துவம் என்ன என்பது தெளிவற்ற ஒன்று. முன்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்த ஒருவர் குறிப்பிட்ட விடயமொன்று நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க மட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டின் மக்கள் முக்கியத்துவம் பெற வேண்டுமாயின், அம்மக்கள் பிரிவினர் அமெரிக்காவின் உள்ளக அரசியலில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவர்களாக இருக்கவேண்டும். இன்று அமெரிக்க – யூதர் உறவென்பது இந்த அடிப்படையில்தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஓரளவு நாங்கள் கனடாவின் அணுகுமுறையிலும், பிரித்தானியாவின் அணுமுறையிலும் காணலாம். பொதுநலவாய மாநாடு தொடர்பில் கனடா கடும் எதிர்ப்பை வெளியிட்டதும், பின்னர் பிரித்தானிய பிரதமர் இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் கடுமையாக நடந்து கொண்டதும், மேற்படி குறித்த நாடுகளில் தமிழர்கள் உள்ளக அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் ஆற்றலுடன் தொடர்புபட்டிருக்கிறது. கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஒப்பீட்டளவில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்துவரும் நிலைமையானது தேர்தல் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களது வாக்குகளை இலக்காகக் கொண்டே கனடிய ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தமிழர்களின் மனித உரிமை விடயங்களை கையிலெடுத்திருக்கின்றனர். பிரித்தானியாவிலும் இதுதான் நிலைமை. இந்த பின்னணியில் நோக்கினால் அமெரிக்காவின் உள்ளக அரசியலில் தமிழர்கள் செல்வாக்குச் செலுத்தும் நிலைமை இல்லை எனலாம். எனவே, அமெரிக்காவின் கொம்பு தொடர்பிலான சமீபகால அணுகுமுறையானது, முற்றிலுமாக அதன் மூலோபாய நலன்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது. ஆசியா நோக்கிய அமெரிக்காவின் மூலோபாய நகர்வென்பது, இந்தியாவுடன் தொடர்புபட்டிருக்கிறது. அந்த வகையில் இலங்கையின் உடனடி அயல்நாடென்னும் வகையில், கொழும்பு தொடர்பான அமெரிக்க அணுகுமுறைகள் எவையும் இந்தியாவின் ஆலோசனையின்றி நிகழாது எனலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையானது புவிசார் அரசியல் ரீதியான முக்கியத்துவ நிலையில், எந்தவகையிலும் தவிர்த்துச் செல்ல முடியாதவொரு இடத்தில் இருக்கிறது. இந்த பின்புலத்தில் வடக்கு – கிழக்கு பகுதிகள் இந்தியாவின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகளாகும். இந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இரண்டு முக்கியமான திட்டங்களே சேது சமுத்திரத் திட்டமும், திருகோணமலை துறைமுகத் திட்டமும் ஆகும். எனவே, இலங்கை புவிசார் அரசியலில் தவிர்த்துச்செல்ல முடியாதவொரு இடத்தில் நிலைகொண்டிருப்பதால், இலங்கையின் மீதான அழுத்தங்கள் ஏதோவொரு மட்டத்தில் தொடரவே செய்யும். இந்த பின்புலத்தில்தான் தமிழர் பிரச்சினை ஒரு விடயமாக நோக்கப்படுகிறது. இத்தகையதொரு சூழலில், தமிழர்கள் தனித்துவமாக அரசியல் செய்யலாம் என்பதெல்லாம் வெறும் கனவே!

யதீந்திரா

DSC_4908