அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், வடக்கு-கிழக்கு

இலங்கை இனச்சிக்கல் – II

முதலாவது பாகமான “இலங்கைத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் – I” இங்கு பார்க்கலாம்.

சுயாட்சிக்கு வழி செய்யும் வகையில் முன்வைக்கப்பட்ட டொனமூர் ஆணைய ஆலோசனைகளின் பின்னணியில் இளைஞர் காங்கிரஸின் தோற்றம், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், சமூக நீதிக்கான முன்முயற்சிகள் இவை குறித்து கடந்த பகுதியில் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில்தான் இடதுசாரி அரசியலும் தமிழர் மத்தியில் செல்வாக்கு பெற்றது. ஆனால், அத்தகைய அரசியல், தீவிர இனவாதத்தின் விளைவாய் இன்று முற்றிலுமாக உருக்குலைந்து போயிருக்கிறது.

1927ஆம் ஆண்டில் ஆணையத்தை நியமித்தது பிரிட்டனின் குறிப்பிடத் தகுந்த சோஷலிஸ்ட் தலைவர் சிட்னி வெப். அப்போது அவர் காலனி நாடுகளுக்கான அமைச்சராயிருந்தார்.

அனைவருக்கும் வாக்குரிமை மற்றும் சம வாய்ப்புக்கள் என்பதே ஆணைய அறிக்கையின் தாரக மந்திரமாக இருந்தது. இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்படவேண்டும் எனவும் அது பரிந்துரைத்தது.

அன்றைய பிரபல தமிழர் தலைவர் பொன்னம்பலம் ராமநாதன் அப்போது 80 வயதை நெருங்கிக்கொண்டிருந்தார். ஆனாலும் அந்த தள்ளாத வயதிலும் ஆணையத்தின் முன் வந்து சாட்சியமளித்தார். என்னவென்று? இந்து வாழ்வியலுக்கு முரணானது அனைவருக்கும் வாக்குரிமை எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

அவர் மட்டுமல்ல ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து தமிழர் தலைவர்களுமே பெண்களுக்கும், வேளாளர் அல்லாதோருக்கும் வாக்குரிமை அளிப்பது அராஜகத்திற்கு இட்டுச் செல்லும் என வாதிட்டனர்.

செப்டெம்பர் 27, 1928இல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படுகிறது. அப்போதும் சில சட்ட மேலவை உறுப்பினர்கள் இது ஒருவகையில் சோஷலிசம், இதனால் நிதி நெருக்கடி உருவாகும் என்றனர்.

எழுத்தறிவு இருந்தால்தான் வாக்குரிமை கொடுக்கலாம் என ஆலோசனை கூறினார் ராமநாதன்.

Donoughmore means Tamils no more – அதாவது, டொனமூரின் பரிந்துரைகள் அமுலானால் தமிழர்களே அத்தீவில் வாழமுடியாது என்றும், வாக்குகளின் அடிப்படையிலான அரசு சிறுபான்மையினர் நலன்களை கடுமையாக பாதிக்கும், அவர்கள் இல்லாமலே போய்விடுவர் எனவும் ராமநாதன் எச்சரித்தார்.

nov1948

சட்ட மேலவை விவாதங்கள் குறித்து லண்டனுக்கு அறிக்கை அனுப்பிய இலங்கை ஆளுநர் ஹெர்பர்ட் ஸ்டான்லி வாக்குரிமை பெற எழுத்தறிவு அவசியம் என்றானால் கண்டித் தமிழர்கள் தகுதி பெற மாட்டார்கள் என்பதாலேயே அப்படி ஒரு யோசனையினை இராமநாதன் முன்வைப்பதாகக் குறிப்பிட்டார்.

ஆனால், இறுதியில் அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கப்படலாம் என ஒத்துக்கொண்டார் அவர்,

சிங்களரைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்தகைய உரிமை அளிக்கும்போது பல்வேறு நிபந்தனைகள் விதிக்கவேண்டும் எனக் கோரியதாகவும் ஹெர்பர்ட் தெரிவிக்கிறார்.

இதனிடையே இலங்கை இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதிகள் 1928இல் கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றனர். சைமன் ஆணையப் புறக்கணிப்பு, சுயராஜ்ஜியம் கோரும் தீர்மானம், இவ்வாறு இந்திய சுதந்திரப் போர் நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர, சுதந்திர வேட்கை இலங்கைத் தமிழ் இளைஞர்களையும் ஆட்கொண்டது.

யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் மாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பெரேரா, குலரத்ன, ஜயதிலக, குணசிங்க போன்ற சிங்கள அறிஞர்கள் பங்கேற்றனர். இன ரீதியில் தமிழ் இளைஞர்கள் அக்கட்டத்தில் சிந்திக்கவே இல்லை.

அனைவர்க்கும் வாக்குரிமை அளிக்கலாம் மற்றும் இன ரீதியான பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என 1928 ஜூலையில் வெளியான டொனமூர் கமிஷன் அறிக்கை பரிந்துரை செய்தது. அத்தகைய அம்சங்களை இளைஞர் காங்கிரஸ் வரவேற்றது, ஆனால், சுயாட்சி எதுவும் கூறப்படவில்லை எனவும் அது சுட்டிக்காட்டியது.

அறிக்கையின் விளைவாய் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் கணிசமாகக் குறையக்கூடும், பரவாயில்லை, இனங்களுக்கிடையே ஒற்றுமை அவசியம் என காங்கிரஸ் கருதியது.

வாரமிருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான இந்து என்ற ஆங்கில -தமிழ் ஏடு, இளைஞர் காங்கிரஸ் நிலையினை ஆதரித்து எழுதும்போது, சிங்கள ஆதிக்கம் என்று பூச்சாண்டி காட்டுவது சில தமிழர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது எனக் குறை கூறியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய வீரப் பெண்மணி கமலாதேவி சட்டோபாத்யாய் இளைஞர் காங்கிரஸ் அமர்வொன்றில் எழுச்சிமிகு உரையாற்ற, சுதந்திரக் கனல் இலங்கையிலும் பரவியது.

டொனமூர் கமிஷன் பரிந்துரைகள் சுயாட்சியை உறுதிசெய்யாத நிலையில், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட 1931ஆம் ஆண்டு தேர்தல்களை இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது.

ஃபிலிப் குணவர்த்தனே, இ.டபிள்யூ.பெரேரா, ஃபிரான்சிஸ் டி சொய்சா போன்ற சிங்கள அறிவுஜீவிகள் இளைஞர் காங்கிரஸை ஊக்குவித்தனர்,.

மேல்தட்டு தமிழர்கள் அனைவருக்கும், வாக்குரிமை அராஜகத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சினர் என்றால் சிங்களர் தரப்பிலோ தேர்தல்களை புறக்கணித்தால், ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் பெரும்பான்மை சமூகத்திற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை இழக்கவேண்டி வருமே எனக் கவலை எழுந்தது.

இளைஞர் காங்கிரஸார் மத்தியில் தங்கள் புறக்கணிப்பு தவறான செய்திகளை மக்களுக்கு சொல்லக்கூடும் என்ற அச்சம் இருக்கத்தான் செய்தது. அனைவருக்கும் வாக்குரிமை என்பதை தாங்கள் மனதார வரவேற்றாலும் சுயாட்சி பற்றி பரிந்துரைகளில் ஏதுமில்லை என்பதாலேயே புறக்கணிப்பு என்பதை சரியாக மக்கள் புரிந்துகொள்வார்களா?

அந்த நேரத்தில் இலங்கைக்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு கூட புறக்கணிப்பு சரியா என்ற கேள்வியை எழுப்பினார்.

ஆனால், தேர்தல் பக்கம் செல்வதில்லை என்றே முடிவானது. மகாத்மா காந்தி கூடத்தான் இமாலயத்தவறுகளை தான் செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறார், ஆனாலும் எல்லாம் நன்மைக்கே என்றானது, அதைப்போலத்தான் இந்தப் புறக்கணிப்பு முடிவும் என்கிறது இளைஞர் காங்கிரஸ் வெளியீடான ‘மதவாதமா இனவாதமா.’

அப்பிரசுரத்தின் முன்னுரையில் ஹாண்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகிறார்: “சர் பொன்னம்பலம் ராமநாதனை தமிழர்கள் நேசித்தனர், அதில் ஒன்றும் தவறில்லை, முதலில் இனவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தாலும் பின்னர் அவர் தன் நிலையை மாற்றிக்கொண்டார், சுயாட்சி வேண்டுமெனக் கோரினார், ஆனால், ஜி.ஜி. பொன்னம்பலம் அவரைத் தன் பக்கம் இழுத்து மீண்டும் இனரீதியான பிரதிநிதித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவைத்தார்.”

ஜி.ஜி. பொன்னம்பலம் தடாலடியாக தமிழர்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வேண்டுமென்றார். அவருக்குப் பதிலடியாகவே இளைஞர் காங்கிரஸ் இனவாதம் குறித்த பிரசுரத்தை வெளியிட்டு, அவர் நாஜிகள் போலப் பேசுகிறார், மொஹஞ்சதாரோவையில்லாம் மேற்கோள் காட்டி கல்தோன்றி மண் தோன்றா என்ற பாணியில் முழங்கி, சிங்களர்களை ஏளனம் செய்கிறார், சிறுமைப்படுத்துகிறார் எனக் குற்றஞ்சாட்டியது.

சிங்களர்களின் நம்பிக்கையைப் பெறுவதே சரியான அணுகுமுறை. இனத் துவேஷத்தை கிளப்பிவிட்டுவிட்டால் அப்பிசாசை அப்புறம் அடக்கவே முடியாது என இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

பின்னர் இலங்கையில் இன மோதல் தீவிரமான நிலையில் எழுதப்பட்ட நூல்கள் உண்மைகளைத் திரித்து, ராமநாதன் அனைவருக்கும் வாக்குரிமையை ஆதரித்ததை மறைத்துவிட்டனர்

ராமநாதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வைத்திலிங்கம், இளைஞர் காங்கிரஸ் தேவையில்லாமல் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கொடிபிடித்து அவர்கள் அதிருப்தியை சம்பாதித்தது, அவர்களை காந்திய நோய் பற்றிக்கொண்டதன் விளைவே அது, ஜின்னா போல் காலனீய அரசுக்கு அனுசரணையாக நடந்துகொண்டிருந்தால், அங்கே பாகிஸ்தான் போல் இங்கே ஈழமும் கிடைத்திருக்கக்கூடும் என்கிறார்.

சரி தாசானு தாசனாக நடந்துகொண்ட ஜி.ஜி. பொன்னம்பலம் கதி என்ன? தீவை விட்டு வெளியேறியபோது அவரைக் கண்டுகொண்டார்களா என்ன பிரிட்டிஷார்? துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கிளம்பினர். இலங்கை சுதந்திர நாடானது, இனி தமிழர்கள் கதி என்னாகுமோ என மிரண்டுபோய் டி.எஸ் சேனநாயகாவின் காலில் அல்லவா விழுந்தார் ஜிஜி!

விடுதலைப் புலிகள் என்ன செய்தனர்? இந்தியாவிற்குப் போய் தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொண்ட பின், மேற்குலகத்தைக் காக்காய் பிடித்து ஈழம் பெற முயன்றது.

இறுதியில் எல்லாமே பஸ்பமானது. சரியான பாடங்களை நாம் கற்கவே இல்லை. இப்போது அனுபவிக்கிறோம்.

ஆனாலும் நம்மவர்கள் உணரவில்லையே கசப்பான உண்மைகளை. இன்னமும் வெளிநாட்டவர் எவரேனும் நம் உதவிக்கு வரமாட்டார்களா என்றல்லவா நாம் ஏங்குகிறோம்.

ifl-5தமிழர் அரசியலின் வரலாற்று ரீதியான வளர்ச்சி மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக பேராசிரியரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான ராஜன் ஹூல் எழுதிய தொடர் கட்டுரைகள் தி ஐலண்ட் பத்திரிகை மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளத்தில் வெளியாகியிருந்தன. இந்த தொடர் கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் (கானகன்) செய்து முதலில் Patrikai.com வெளியிட்டிருந்தது. அந்த ஆறு பாகங்களைக் கொண்ட கட்டுரைகளில் இரண்டாவது பாகம் இங்கு தரப்பட்டுள்ளது.