படம் | Selvaraja Rajasegar Photo

மருதங்கேணியில் முன்னெடுக்கப்படவிருந்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், “சூழலுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தி மீன்பிடித் தொழிலைப் பாதிக்கும் என்று விஞ்ஞான ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதால்” கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று கடந்த 18ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வடமராட்சிக் கிழக்கு கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசம், வடமராட்சிக் கிழக்கு அபிவிருத்தி அமைப்பு மற்றும் வடமராட்சிக் கிழக்கு பட்டப்படிப்பு மாணவர் ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.சுகிர்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தின்போது, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான விஞ்ஞான ஆய்வினை மேற்கொண்ட இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வு பிரிவான ‘நாரா’வின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தமும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த கூட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளை கே.அருளானந்தம் முன்வைத்தார். அதன்பின்னர், தமக்குள்ள சந்தேகங்களை கேள்விகளாக வடமராட்சிக் கிழக்கு அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்தனர். அங்கு முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பூரண விளக்கம் அளிக்கப்படாத பின்னணியிலும், ஆய்வு முடிவுகளில் பாதகமான தன்மைகளே அதிகம் காணப்படுவதாக உணரப்பட்டதாலும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை கைவிடுவதாக கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. குறித்த அறிவிப்பினை கூட்டத்தின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் வெளியிட்டார். அந்த அறிவிப்பினை எம்.ஏ.சுமந்திரன் வெளியிடும் போது, அவரின் வலது புறத்தில் யாழ். மாவட்டச் செயலாளரும் அமர்ந்திருந்தார். ஆக, இந்த அறிவிப்பு குறிப்பிட்டளவு உத்தியோகபூர்வமானது என்று கொள்ள முடியும்.

ஆனால், கே.அருளானந்தம், அடுத்த நாள் (ஏப்ரல் 19), யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி “மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தினை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் ஏதுவும் இல்லை. குறிப்பாக, சூழல் பாதிப்புக்கள் இல்லை” என்று அறிவித்தார். அத்தோடு, தம்முடைய ஆய்வு முடிவுகளையும் அவர் அங்கு முன்வைத்தார். ஆனால், அந்த ஆய்வு முடிவுகள் தொடர்பில் முதல்நாள் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பூரண விளக்கங்களை அளிக்காத பட்சத்திலேயே, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் கைவிடப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் அவர் அங்கு எதுவும் கூறவில்லை.

இந்த இரு ஊடக சந்திப்புக்களையும் அடுத்து, மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் இரண்டு வகையான விடயங்கள் மக்கள் மத்தியில் பெருப்பிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டன. அதில், குடிநீரின்றி அல்லாடும் மக்களுக்கு, குடிநீரைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளுக்கு வடமராட்சிக் கிழக்கு மக்கள் தடையாக இருக்கின்றார்கள் என்பது முதலாவது. எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பழிதீர்க்க எண்ணியமைக்கான முனைப்புக்கள் இரண்டாவது.

ஆனால், மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆரம்பம், அதன் தற்போதையை நிலை தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்கும் உரையாடுவதற்கும் ஊடகங்களும், சிவில் சமூக அமைப்புக்களும், தமிழ்த் தேசியக் கட்சிகளும், ஏன் துறைசார் நிபுணர்களும் கூட அவ்வளவுக்கு தயாராக இல்லை. மாறாக, ஒருவித நழுவல் போக்கிலேயே இருந்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில், வடக்கின் பெரும்பான்மை மக்கள் மத்தியில், வடமராட்சிக் கிழக்கு மக்களின் நீதிக் கோரிக்கைகளை ஒவ்வாத ‘கலகம்’ மாதிரியாகக் காட்சிப்படுத்துவதில் சில தரப்புக்கள் குறியாக இருக்கின்றன. விடயங்களை ஆழமாக ஆராயும்போது அல்லது அதன் உண்மைத் தன்மைகளை உணர்ந்து கொள்கின்றபோது, எளிய மக்களின் கோரிக்கைகளின் பக்கத்திலுள்ள நியாயங்களைப் புரிய வேண்டிய வரும், அது, அந்த மக்கள் சார்பிலான முடிவுகளை எடுக்க வேண்டி வரும் என்கிற அச்சத்திலும், குறிப்பிட்டளவானவர்கள் விடயங்கள் சார்ந்து உரையாடுவதற்கு மறுக்கின்றார்கள். இதனை, எளிய மக்களை புரிந்து கொள்ள மறுக்கின்ற, ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவும் கொள்ள முடியும்.


கொள்ளைப் போகும் மீன் வங்கி


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கு மாகாண சபை உள்ளிட்ட தரப்புக்களினால் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது. இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் முனைப்புகளுக்கு கிளிநொச்சி மாவட்ட விவசாய சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதன் பின்னர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றிய உரையாடல் மேல் நோக்கி வந்தது. சடுதியாக ஒருநாள், மருதங்கேணியின் தாளையடிப் பகுதியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

சூழல் சமநிலையில் தாக்கம் செலுத்தக்கூடியதாக கருதப்படும் திட்டங்களை முன்வைக்கும்போது, அவை தொடர்பிலான ஆய்வுகளை பல கட்டங்களில் மேற்கொண்டு, சாதக பாதகத் தன்மைகள் தொடர்பில் தெளிவாக அறிக்கையிடப்பட வேண்டும். அதன்பின்னர், அவை தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேச மக்களோடு தொடர் கலந்துரையாடல்களை நடத்தி தெளிவுபடுத்தி, மக்கள் இணங்கும் பட்சத்தில் குறித்த திட்டங்களை முன்னெடுப்பதுதான் நடைமுறை வழக்கம். அதுதான், அடிப்படை அறமுமாகும். ஆனால், மருதங்கேணி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் வரையில் அந்தப் பகுதி மக்களுக்கு அது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை. ஒரு மக்கள் கூட்டத்தின் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திட்டமொன்று திணிக்கப்பட்டதான உணர்வுநிலையை அது ஏற்படுத்தியது. அதனையடுத்து, வடமராட்சி கிழக்கு மக்கள் பெரும் ஏமாற்றத்தின் புள்ளியில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தயாரானார்கள்.

இங்கு, எதிர்ப்பு நடவடிக்கை என்பது எந்தவித தார்மீகங்களையும் மீறிய வகையில் அமையவில்லை. மாறாக, தமது கடலை நம்பிய வாழ்வாதாரத்தின் மீதான சம்மட்டி அடியாக கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் அமையப் போவதான அச்சத்தின் புள்ளியில், அந்த முடிவுக்கு வந்தார்கள். அத்தோடு எதிர்ப்பு நடவடிக்கை என்பது எந்தவொரு தருணத்திலும் குடிநீரின்றி அல்லாடும் மக்களுக்கு குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைளுக்கு எதிரானதாகவும் அமையவில்லை. மாறாக, ஆய்வுகள் எதனையும் நடத்தாமல், தங்களை உரிய வகையில் தெளிவுபடுத்தாமல் ஆதிக்க மனநிலையோடு தம்மீது திணிக்கப்பட்ட முடிவுக்கு (திட்டமொன்றுக்கு) எதிரானது. அது, பாதிக்கப்படும் சமூகங்கள் உலகம் பூராவும் முன்னெடுப்பதுதான். அதனைத்தான் வடமராட்சிக் கிழக்கு மக்களும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். அப்போதும், வடக்கு மாகாண சபையாலும், யாழ். மாவட்டத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அநேகராலும் குறித்த திட்டத்தினை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என்கிற முனைப்பே காணப்பட்டது. அப்போதுதான், மக்கள் இன்னும் இன்னும் விழிப்டையத் தொடங்கினார்கள்.

இந்தப் பின்னணியில்தான், குறித்த திட்டம் தொடர்பிலான விஞ்ஞான ஆய்வுகளை நடத்துவதற்கு வடக்கு மாகாண சபை உள்ளிட்ட தரப்புக்கள்  ஒரு வருடத்தின் பின் இணங்கின. அந்த ஆய்வுகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்றன. அது தொடர்பிலான அறிவிப்பே கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதன் பின்னரே, பாதகத் தன்மைகள் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான சர்ச்சை ஆரம்பித்த தருணத்தில், அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கட்டுரையாளர், அந்தப் பகுதியின் மீன்பிடியில் ஈடுபடும் தொழிலாளி ஒருவரோடு உரையாடினார்.

அப்போது, அந்தத் தொழிலாளி இவ்வாறு கூறினார்.

“கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தாளையடிப் பகுதியில் அதாவது, நெல்லியான் வெட்டைக்கு பக்கத்தில் ஆரம்பிக்கப் போகிறார்களாம். தாளையடி – நெல்லியான் வெட்டையை அண்மித்த கடல் பகுதி வடமராட்சிக் கிழக்கிலேயே அதிகளவில் இறால் பிடிபடும் பகுதிகளில் ஒன்று. ஏனெனில், மருதங்கேணி தொடக்கம் – நெல்லியான் வெட்டைக்கு இடையில் ஆறு தொடுவாய்கள் (மழைக்காலங்களில் வடிந்தோடி வரும் வெள்ளம் கடலோடு கலக்கும் பகுதி) இருக்கின்றன. இறால், கடல் நீரில் நன்னீர் கலக்கும் காலப்பகுதியிலேயே இனப்பெருக்கம் செய்யும். இதனால், மார்கழி, தை மாதங்களில் அதிகளவான இறாலை நாங்கள் பிடிப்பதுண்டு. ஆனால், சுனாமி பேரழிவுக்குப் பின்னர், பற்றைக் காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு அங்கு குடியேற்றம் செய்யப்பட்டால், வெள்ளம் ஓடும் பகுதிகளும் அங்காங்கு அடைக்கப்பட்டு விட்டது. அதனால். தொடுவாய்கள் ஊடாக கடலில் நீர் கலப்பதும் குறைந்துவிட்டது. இதனால், இறால் பிடிபடுவதும் குறைந்துவிட்டது. முதலில் நாங்கள், அந்த வாய்க்கால்களைச் சரி செய்து, தொடுவாய்களை சீராக்க எண்ணியிருக்கிறோம். இப்படியான நிலையில்தான், நெல்லியான் வெட்டைப் பகுதியில், கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலையைப் போட்டு அதிக உப்புக்கழிவுகளையும், சுடு நீரையும் கடலுக்குள் கலக்கப் போகிறார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக இறால் பிடிபடாமல் போக வாய்ப்பிருக்கு. இது எங்களுக்கு பெரும் அச்சுறுத்தல்.”

ஆய்வுகளின் முடிவுகளில் கடல் நீரினைவிட இரண்டு அலகு அடர்த்தியுள்ள உப்புக்கழிவுகள் கடலில் கலக்கப்படும் என்று கே.அருளானந்தம் குறிப்பிட்டிருந்தார். அது, 20 மீற்றர் கடற்பகுதியில் தொடர்ச்சியாக உப்பின் அடர்த்தியை அதிகமாக வைத்துக் கொள்ளும் என்றும் அவர் கூறியிருந்தார். அத்தோடு, பருவகால நீரோட்டங்களின் போக்கில் கடலில் உப்பின் அடர்த்தி 6 அலகுகள் வரையிலும் அதிகரிப்பதுண்டு. ஆக, 2 அலகினால் உப்பு அடர்த்தி அதிகரிப்பதால் பிரச்சினை இல்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். இந்த இடத்தில், ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது பருவகால மாற்றங்கள் – நீரோட்டங்களினால் கடலில் 6 அலகினால் உப்பின் அடர்த்தி அதிகரிப்பதுவும், தொடர்ச்சியாக 2 அலகு உப்பு அடர்த்தி ஒரு பகுதியில் அதிகரிக்கச் செய்யப்படுவதும் ஒன்றா என்று? பருவகால – நீரோட்ட மாற்றங்களைப் பொறுத்து, கடல் வாழ் உயிரினங்கள் தமது வாழ்விடங்களையும், இனப்பெருக்க முறைகளையும் செய்து வருகின்றன. அப்படியான நிலையில், ஒரு பகுதியில் இயற்கைக்கு மாறாக, உப்பின் அடர்த்தியை அதிகரிப்பதால், கடல் வாழ் உயிரினங்களில் சுற்றில் பாதிப்பு ஏற்படாதா? ஆக, அந்தக் கேள்விகளுக்கும் கே.அருளானந்தம் போதிய விளக்கங்களை கொடுக்கவில்லை. அத்தோடு, மீன்பிடித் தொழிலே அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்கிற சந்தேகத்தினை ஆய்வு முடிவுகள் தீர்த்து வைத்திருக்கவில்லை. இது ஒரு உதாரணம் மட்டுமே.

ஒரு திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பிலான ஆய்வுகள் குறைந்தது மூன்று இடங்களைக் தெரிவு செய்து நடத்தியிருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பிலான ஆய்வு மருதங்கேணியில் மட்டுமே நடத்தப்பட்டது. அது ஏன் என்று கேள்வியெழுப்பப்பட்ட போதும் சம்பந்தப்பட்ட தரப்புக்களினால் பதில் அளிக்கப்படவில்லை. குறித்த திட்டத்தினை முன்னெடுக்கக் கூடிய சூழலுள்ள பகுதியென்று கருதப்படும் பகுதிகளில் ஒன்றான, கீரிமலை கடலில் ஏன் பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு, அங்கு இறுதிக் கிரியைகள் நடத்தப்படுவதால் அது சாத்தியமில்லை என்கிற விளக்கம் சொல்லப்பட்டது. இவ்வாறான, எழுந்தமான மனநிலையோடு, பாதிக்கப்பட்ட மக்களை அணுகும் முறை எங்கிருந்து வந்தது?

கடல் என்பது பரந்து விரிந்தது. அதிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்வதால் என்ன பாதிப்பு வரப் போகின்றது என்ற மேலோட்டமான சிந்தனை மக்களிடம் உண்டு. ஏன், மெத்தப்படித்தவர்களிடமும் இருப்பதை அண்மைய நாட்களில் உணர்ந்துகொள்ள முடிந்தது. கடல் உப்பாலானது, அப்படிப்பட்ட நிலையில், கடல் நீரைக் குடிநீராக்கியதும், உப்புக் கழிவுகளையும், இரசாயனக் கழிகளையும் கடலில் கொட்டுவதால் என்ன பாதிப்பு வரப்போகின்றது என்று விடயங்களை மேலோட்டமாக கடக்கின்ற புள்ளியில், பாதிக்கப்படும் எளிய மக்களின் கேள்விகளை புறந்தள்ள எத்தணிக்கின்றோம். கொஞ்சம், பாதிக்கப்படும் மக்களின் கருத்துக்களையும் சந்தேகங்களையும் காது கொடுத்துக் கேளுங்கள். அதன்பின்னர், உங்களின் இறுதி முடிவுகளுக்கு வரலாம். அதுதான், நியாயபூர்வமானதாகும். அதனையே, வடமராட்சிக் கிழக்கு மக்களும் எதிர்பார்க்கிறார்கள். மாறாக, அவர்கள் மீது, குடிநீர் தர மறுக்கும் அற உணர்வு அற்றவர்கள் என்கிற அடையாளப்படுத்தல்களைச் செய்வது அடிப்படையற்றது, அபத்தமானது.

புருஜோத்தமன் தங்கமயில்

‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வெளியான கட்டுரையின் விரிவான வடிவம் இது.

###

சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்