பட மூலம், கட்டுரையாளர்

“வௌக்கெண்ணைய வெரல்ல பூசிட்டு அடுப்புல காட்டுவேன். அதுதான் மருந்து. ரெண்டு நாளைக்கு கொழுந்து எடுக்கலாம். திரும்ப வலிக்கத் தொடங்கும். அப்புறமும் வௌக்கெண்ணதான் மருந்து” என்று கூறுகிறார் தோட்டத் தொழிலாளியான 49 வயது பெருமாள் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். 3 பேர் படிக்கிறார்கள், இருவர் கொழும்பில் வேலை செய்கிறார்கள்.

16 வயதில் கொழுந்து பறிக்கச் சென்றிருக்கிறார் தனலெட்சுமி. அவரது கை விரல்கள் வருடக்கணக்காக மழை பெய்யாமல் பிளந்திருக்கும் நிலத்தைப் போல இருக்கிறது. பிளந்திருக்கும் வழியினூடாக வடிந்தோடியிருக்கும் தேயிலைச் சாய அடையாளங்கள் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

“இந்த காயத்தோட கொழுந்தெடுத்தா விரல் வலிக்கும். கிளவுஸ் (கையுறை) போட்டா கொழுந்து எடுக்க முடியாது. என்னதான் செய்ய, பிள்ளைகள படிக்கவைக்கனுமே, வலிச்சாலும் கொழுந்து எடுக்கத்தானே வேணும்” என்கிறார் நிர்மலா. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர்கள் கையுறை பயன்படுத்த நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. கையுறை அணிந்து பறிப்பதால் கொழுந்து சேதமடைவதாக நிர்வாகம் கூறுகிறது. காயத்தின் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில தொழிலாளர்கள் களவாக கையுறையை அணிகிறார்கள். இன்னும் ஒரு சிலர் விரல்களுக்கு மட்டும் உறைகளை அவர்களே தைத்து அணிகிறார்கள்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 30 வருடங்கள் வேலை செய்பவராக இருந்தால் அவரது விரல்களில் ஏற்படும் காயங்கள் நிரந்தரக் காயங்களாகின்றன. அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கூட செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

“இந்த காயத்தோட உடுப்பு கழுவ முடியாது. அதுகூட பரவாயில்ல, சாப்பாட பெனஞ்சி சாப்பிடக்கூட ஏலாது. கையெல்லாம் எறியும்” என்று கூறுகிறார் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான எம். ஞானசோதி.

###

இந்தப் புகைப்படக்கட்டுரை கொழுந்து பறிப்பதனால் தோட்டத் தொழிலாளர்களின் கைகளில் ஏற்பட்டிருக்கும் நிரந்தர அடையாளங்களான காயங்களை Adobe Spark என்ற வலைதள தொழில்நுட்பத்தைக் கொண்டு புகைப்படங்களூடாகக் காட்டுவதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் முலமாகவும் கட்டுரையைப் பார்க்கலாம்.

"வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து..."

இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் அழைக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது. தேநீரை சுவைப்பவர்கள், தேயிலையை விற்பனை செய்பவர்கள் கொண்டாட்டங்களை நடத்த தேயிலையை உற்பத்தி மலையக தோட்டத் தொழிலாளிகள் நாட்டின் சக பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தேயிலை மரத்துக்கு உரமாகிக்கொண்டிருக்கிறார்கள்.