கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ஏற்கனவே, சில ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் இதைப்போன்ற வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும், மதகுருக்களும் பங்குபற்றியிருந்தார்கள். அந்த சந்திப்பின் முடிவில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், பிறகெதுவும் நடக்கவில்லை. அது நடந்து மூன்று ஆண்டுகளின் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சந்திப்பு நடந்திருக்கிறது. முன்னைய சந்திப்பின் விரிந்த வடிவம் இது. இதில் முடிவுகள் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.

முதலில் அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதன் பின் மதகுருமார்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.  மதிய இடைவேளைக்குப்பின் அரசியற்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சுமாராக எட்டு மணித்தியாலங்கள் நீடித்த இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளே பங்குபற்ற அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. எனவே, கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கு பற்றிய ஒரு சந்திப்பாகவே அது முடிந்தது. அதில் கருத்துத் தெரிவித்த விமர்சகர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்ளைச் சேர்ந்தவர்கள் போன்றோர்களை விடவும் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் தெரிவித்த கருத்துக்களே அதிகம் காட்டமாக இருந்தன. தமது தலைமையை நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

காலை 9.30 மணியிலிருந்து பி.ப 5.30 மணி வரையிலும் தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் சம்பந்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக மிக நீண்டநேரம் அவரால் ஆசனத்தில் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. ஆசனத்தின் ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்தவாறு ஒரு கையால் முகத்தைத் தாங்கியபடி ஒன்றில் அரைக்கண்களைத் திறந்தபடி அல்லது முழுவதுமாக கண்களை மூடியபடி எல்லாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

முடிவில் அவர் பதில் சொன்னார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அநேகமாக நேரடியாகப் பதில் சொல்லவில்லை. பெருமளவிற்கு மறைமுகமாகவே பதில் வந்தது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு ஏதோ ஒரு பதில் சொல்லப்பட்டது. அவர் பதில் கூறியபின் அந்த பதில்களின் அடிப்படையில் அவரைக் கேள்வி கேட்பதற்கு ஏற்பாடுகள் இருக்கவில்லை. நேரமும் போதவில்லை. தவிர இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் பதிலைச் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுவதே வழமை என்று அவரது கட்சிக்காரர்கள் சொன்னார்கள். இப்படியாக அவருடைய பதில்களை வைத்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு சூழல் இல்லையென்றால் அது முற்றுப் பெறாத விவாதமாகவே அமையும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற எல்லாக் கூட்டங்களிலும் இறுதியிலும் இறுதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எழுந்து போகும் ஒரு நிலமைதான் தொடர்ந்து வருகிறது. இதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலும் நடந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் முழு அளவிலான விவாதங்களாக மாற்றப்படாதவரை அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விளைவுகளைத் தரப்போவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விமர்சனங்களில் உண்மை உண்டு. அதேசமயம் இது போன்ற சந்திப்புக்கள் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்தக் கூடியவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அச்சந்திப்பின் விளைவாக பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் விடக்கூடும். ஆனால், அந்தச் சந்திப்பின் முடிவில் சம்பந்தர் தெரிவித்த கருத்துக்களுக்கூடாக கூட்டமைப்பின் எதிர்கால வழிவரைபடமானது ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே, சம்பந்தர் தெரிவித்தவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

இலங்கைத் தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எந்த ஒரு யாப்பும் தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படவில்லை. ஆனால், இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு யாப்பை உருவாக்கத்தக்க நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சாசனப்பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. யாப்புக்கான வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பும் பங்கேற்கிறது. வழிகாட்டல் குழுவின் கீழ் உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கூட்டமைப்பு பங்குபற்றுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் புதிய யாப்பானது வரவிருக்கும் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு முன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கூறியிருக்கின்றார். ஆனால், நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் அதைவிட வேகமாக அதாவது நவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே புதிய யாப்பானது முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அந்த யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அப்படியொரு பெரும்பான்மை ஜெயவர்த்தனவிடம் இருந்தது. சந்திரிக்காவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்திருந்தால் அவருடைய தீர்வுப்பொதி நடைமுறைக்கு வந்திருக்கும். அதன்பின் மஹிந்தவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்தது. இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அப்படியொரு பெரும்பான்மையைப் பெறுவதாக இருந்தால் ஆறு வாக்குகள் தேவை. கூட்டமைப்பிடம் பதினாறு வாக்குகள் உண்டு.

ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்பு ஒப்புக் கொண்டிருந்தன. அதன்படி இந்த ஆண்டின் முடிவு வரையிலும் இத்தேசிய அரசாங்கத்தை அவர்கள் பாதுகாப்பார்கள். இத்தேசிய அரசாங்கத்தை கூட்டமைப்பும் ஆதரித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் புதிய யாப்புக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறலாம். அதன்பின் அடுத்த ஆண்டில் அந்த யாப்புக்கு பொது மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டி இருக்கும். அதற்காக ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டி வரும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றால் புதிய யாப்பு நடைமுறைக்கு வரும். அதாவது, இனப் பிரச்சினைக்குரிய ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும்.

சம்பந்தர் மறைமுகமாக வெளிப்படுத்திய கூட்டமைப்பின் வழி வரைபடம் இதுதான். இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. அதை அவருடைய பேச்சின் தொடர்ச்சிக்கூடாகவும் அவர் தனது பதிலைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிய போக்கிற்கூடாகவும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது என்பதே சரி. அவர் சமஷ்டி பற்றிய உலகளாவிய உதாரணங்களை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்து முடிவில் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ்டி என்ற பொருள்பட ஓர் ஆங்கில வார்த்தையைப் பிரயோகித்தார். (Unitary Federalism) அப்படியொரு முறைமை ஒஸ்ரியாவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதை ஏற்கனவே சில மாதங்களிற்கு முன் ரணில் விக்ரமசிங்க கூறி விட்டார். அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து போன மகாத்மாகாந்தியின் பேரனும் இதே தொனிப்பட – ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி உணர்வுள்ள ஒரு தீர்வு ஒன்றைப்பற்றி – குறிப்பிட்டிருந்தார்.

தமது தீர்வுப் பொதியை தமிழ் மக்களின் முன் வைத்து அதை அவர்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாகவும் சம்பந்தர் தெரிவித்தார். அத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பை எதிர்த்து ராஜபக்‌ஷ அணியினர் விரைவில் போராட்டமொன்றை நடத்த இருப்பதாகவும், அதை அவர்கள் குழப்பப்போவதாகவும், ஆனால் தமிழர்கள் அதை குழப்பக்கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சந்திரிக்காவையும், மைத்திரியையும், ரணிலையும் அவர் நம்புகிறார் என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. “நாங்கள் முழுநாட்டுக்குமான மாற்றத்தைத்தான் கொண்டு வந்தோம். வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல” என்று கூறிய அவர், இந்த அரசாங்கத்தை அதாவது ஆட்சி மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.

ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நிகழ்ந்து வரும் பௌத்த மயமாக்கல் சிங்கள மயமாக்கல் போன்றவற்றையாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும், அரசாங்கத்திற்கு எதிரான தரப்புகளும் படைக்கட்டமைப்புக்குள் மஹிந்தவுக்கு ஆதரவாக காணப்படும் அணியும்தான் மேற்கண்டவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், அவர்கள் எல்லாரும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் சம்பந்தர் தனது பதிலில் கூறினார்.

இது ஏறக்குறைய இவ்வாண்டு ஜெனிவாவில் காணப்பட்ட ஒரு நிலைமைதான். இந்த அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அதை பலவீனப்படுத்தக்கூடாது என்றும் சில மேற்கத்தைய நாட்டு பிரதிநிதிகள் தமிழ் தரப்பிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது, இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் நகர்வுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற மறைமுகச் செய்தி அதில் உண்டு. மன்னாரில் வைத்து சம்பந்தரும் அதைத்தான் சொன்னார். அதாவது, மஹிந்த செய்வதைப் போல தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தக் கூடாது என்று தொனிப்பட.

எனவே, மேற்கண்ட அனைத்தையும் தொகுத்து நாம் பின்வருமாறு ஒரு முடிவுக்கு வரலாம். மஹிந்த குழப்பா விட்டால் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று வருமாண்டு அமுலுக்கு வரும். அதற்குரிய வாக்கெடுப்பில் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூட்டமைப்பு கேட்கப்போகிறது. மஹிந்தவை மறுபடியும் ஒருமுறை தோற்கடிப்பதாக நம்பிக்கொண்டு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். ஆனால், இங்குள்ள முக்கியமான கேள்வி என்னவெனில், தமிழ் மக்கள் ஒரு தீர்வுக்காக வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது மஹிந்தவுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? என்பதுதான். ஒரு தீர்வுக்காக வாக்களிப்பது நடைமுறையில் மஹிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதுதான் என்று காட்டப்படப்போகிறது.

வரப்போகும் தீர்வு எத்தகையது என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாக சம்பந்தர் கூறுகிறார். யாப்பு விவகாரங்கள் பெருமளவுக்கு சிக்கலானவை. சாதாரண வாக்காளர்கள் அவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஒற்றையாட்சியா? சமஷ்டியா? என்பதில் கூட அந்த வார்த்தைகளை அவற்றுக்கான அரசறிவியல் பெறுமானங்களோடு சாதாரண வாக்காளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பதற்கில்லை. சாதாரண வாக்காளர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான விவகாரங்களால் தான் தூண்டப்படுகிறார்கள். அறிவுபூர்வமான விவகாரங்களால் தூண்டப்படும் வாக்காளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது யாப்பு போன்ற அறிவுபூர்வமான விவகாரங்களை விடவும் மஹிந்த எதிர்ப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களே அதிகம் எடுபடும். எனவே, ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி அல்லது சிலசமயம் ஒற்றையாட்சிக்குள் “தமிழரசு” என்ற விதமாக வார்த்தைகளை வைத்து விளையாடும் பொழுது எத்தனை விகிதமான சாதாரண வாக்காளர்கள் அந்த சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளப்போகிறார்கள். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ்டி பற்றியே கூறப்பட்டுள்ளது. அந்தச் சமஷ்டிக்கும் வரப்போகும் சமஷ்டி என்று சொல்லப்படும் ஏதோ ஒன்றுக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள்? அதிலும் குறிப்பாக மிகக் குறுகிய கால அவகாசத்துள் தீர்வுப் பொதியை முன்வைத்து விளக்கமளித்துவிட்டு வாக்களிக்குமாறு கேட்கப்படும் பொழுது சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள்?

இங்கு கால அவகாசம் என்பது ஒரு முக்கியமான அம்சம். யாப்புருவாக்கத்தில் சாதாரண சனங்களின் கருத்துக்களைப் பெறப் போவதாக சொல்லிக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவானது மிகக் குறுகிய காலமே செயற்பட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பல தசாப்தகால பிரச்சினை ஒன்றுக்கான தீர்வை சில மாதங்களுக்குள் விவாதித்து முடிவெடுப்பது எப்படி? நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் தீர்வுப் பொதியை அல்லது புதிய யாப்பை சாதாரண தமிழ் மக்கள் முன்னிலையில் வைத்து விவாதிப்பதற்கான கால அவகாசம் மிகக் குறைவானதாகவே தெரிகிறது. ஏனெனில், சம்பந்தர் கூறுவது போல இப்போதுள்ள தேசிய அரசாங்கத்திற்கான உடன்படிக்கை முடிவுறும் காலமும் புதிய யாப்புக்கான வாக்கெடுப்புக் காலமும் ஏறக்குறைய நெருங்கிய இடைவெளிக்குள் வருகின்றன. எனவே, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியா? அல்லது ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாகவும், பரவலாகவும் நடத்தப்படுமா? அல்லது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சியில் வருவது போல “மற்ற வாழைப்பழம் எங்கே?” என்று கேட்டால் அதாவது “நீங்கள் வாக்குறுதி அளித்த சமஷ்டி எங்கே?” என்று கேட்டால் “அதாண்ணே இது” என்று கூறப்போகிறார்களா?

அந்த நகைச்சுவைக் காட்சியில் செந்தில் திரும்பத் திரும்ப அப்பிடிச் சொல்லும் போது ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுண்டமணி அழத் தொடங்கி விடுவார். வருமாண்டில் சில சமயம் தீர்வற்ற தீர்வு ஒன்றுக்கு விரும்பி வாக்களித்து விட்டு அதன்பின் தமிழ் மக்களின் நிலையும் கவுண்டமணியின் நிலைமையைப் போலாகிவிடுமா?

நிலாந்தன் எழுதிய இக்கட்டுரை ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் முதலில் வெளியாகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.