படம் | SRI LANKA GUARDIAN

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலத்தின் ஒரு வருடம் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியுடன் பூர்த்தியடைந்துள்ளதுடன், மைத்திரி பாலனயவின் (மைத்திரி ஆட்சி) கடந்த ஒரு வருடம் பற்றிய பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கு இதுவே உகந்த நேரமாகும்.

மைத்திரியின் ஜனாதிபதி பதவியைப் பொறுத்த வரையில், நிச்சயமாக அவ்வாறானதொன்று நடந்ததே முதலாவது அம்சமாகும். ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி அதிகாரத்தில் ஆழமாக வேரூன்றியிருந்ததுடன், தலைமுறைகளாக ஆட்சி செய்வதற்கான உறுதிப்பாட்டுடன் இருந்ததான தோற்றப்பாடே காணப்பட்டது. எவ்வாறிருப்பினும் முற்றிலும் ஒற்றை இன மத ரீதியான ஆதரவு தளத்தின் தவிர்க்கமுடியாதத்தன்மை அல்லது சாத்தியமின்மை, அதிலும் அதனது பெரும்பான்மை சமூகமும் கூட மகிந்த ராஜபக்‌ஷவுடன் அகப்பட்டுக்கொண்டது. குடும்ப குழுமம், பரவலான ஊழல்கள் மற்றும் சட்ட ஆட்சிக்கு மதிப்பின்மையுடன் இலங்கையை சொந்த நிலப்பிரத்துவம் போன்றும் ஆட்சி செய்தமை தொடர்பில் சிங்கள மக்கள் கூட அல்லது குறைந்தப்பட்சம் அவர்களது குறிப்பிடத்தக்க பிரிவினரேனும் தங்களது வெற்றிவீரன் தொடர்பில் சோர்வடைந்துவிட்டதாகவே காணப்பட்டது.

சிறிசேனவின் ஜனாதிபதி பதவியானது இலங்கையின் ஜனாதிபதி ஆட்சியிலும், எப்படி இலங்கை ஆட்சி செய்யப்பட்டுக் கொண்டிருந்தது என்பதிலும் தீவிர மாற்றமொன்றை ஏற்படுத்தியது. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்பட்ட முக்கிய விவகாரமான ஜனநாயக நல்லாட்சி விடயத்தில் அந்த மாற்றம் மிகவும் தீவிரமாக அமைந்திருந்தது. இலங்கை உடனடியாக சுதந்திரமானதும், சகிப்புத்தன்மை கொண்டதும் அனைவரும் உள்வாங்கப்பட்டதுமான சமூகமொன்றாக உருவாகியது. சட்ட மற்றும் ஒழுங்குக்கான முதன்மையான பொறுப்பானது மீண்டும் சிவில் பொலிஸ் படைக்கு வழங்கி கொழும்பு, கோட்டையைச் சுற்றிலும் மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டன, பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதுமான இராணுவ ஈடுபடுத்தல்களானது நிறுத்தப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது சொந்த நாட்டிலியே இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்துவந்த தமிழ் பொதுமக்களில் ஒரு பகுதியினர் அவர்களது பரம்பரையான சொந்த காணிகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதுடன், ராஜபக்‌ஷவினால் ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சம் படர்ந்த கலாசாரம் நீக்கப்பட்டது. வெள்ளை வான் கலாசாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

19ஆவது திருத்தமும் சுயாதீன ஆணைக்குழுக்களும்

பொருளாதார அபிவிருத்தி சமூகமொன்றுக்கான ராஜபக்‌ஷவின் உறுதிமொழிக்கும் ஜனநாயக நல்லாட்சியானது பொருளாதார அபிவிருத்தியுடன் ஒன்றுக்கொன்று தனிப்பட்டதல்ல என்ற உட்குறிப்புடனான ஜனநாயக சமூகமொன்றுக்கான சிறிசேனவின் உறுதிமொழிக்கும் இடையில் இலங்கை வாக்காளர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் தெளிவான தெரிவொன்றை கொண்டிருந்தனர். எனினும், ராஜபக்‌ஷவின் ஆட்சியை மேலும் விரும்பியவர்களுக்கு மிகவும் ஜனநாயகமானதும், பன்முகத்தன்மை கொண்டதும் மற்றும் நன்கு நிர்வகிக்கப்படுவதுமான சமூகமொன்றையே பெரும்பான்மையான இலங்கையர்கள் தெரிவுசெய்திருந்தனர். இலங்கையும் இலங்கையர்களும் அவர்கள் வாக்களித்த சுதந்திரமான சமூகத்தை அடிப்படையில் பெற்றுள்ளனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தியதும், பதவி கால வரையறைகளை மீள ஏற்படுத்தியதும், அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் தமது இரும்புப் பிடியை இறுக்கிக் கொள்ளவதற்காக ராஜபக்‌ஷவினால் கொண்டுவரப்பட்ட கடுமையான 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அடிப்படையில் இருந்தே ரத்து செய்ததுமான 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இதற்கு ஆதாரமாகவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதனையடுத்து ராஜபக்‌ஷவின் கூட்டாளிகளும் அடிவருடிகளும் நாடாளுமன்றத்தில் பின்வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளமையையே எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றை தொடர்ந்து இலங்கையானது நிறுவனங்களினாலும் சட்டங்களினாலும் நிர்வகிக்கப்படும் சமூகமொன்றாக மீள உருவாகியுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன.

வெளியுறவுகளில் வியத்தகு முன்னேற்றம்

சிறிசேனவின் ஜனாதிபதி பதவியின் பெறுபேறாக வெளியுறவுகள் துறையானது இலங்கையின் சர்வதேச உறவுகளைச் சுற்றிலும் வியத்தகு மாற்றமொன்றை காட்டுகிறது. ராஜபக்‌ஷ ஆட்சியின் அணுகுமுறை, செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் காரணமாக ஏறக்குறைய சர்வதேசத்தின் தீண்டத்தகாத அரசொன்றாக உருவாகியிருந்த இலங்கையானது, திடீரென வெளி உலகத்துடனான அதன் உறவுகளில் மிகப்பெரிய மாற்றமொன்றை கண்டுள்ளது. ஐ.நாவுடனும் சரி, மேற்குலக நாடுகளுடனும் சரி, குறிப்பாக இந்தியாவுடனும் சரி உறவுகள் கணிசமானளவு முன்னேற்றமடைந்துள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கண்டனங்களையும் மோசமான நிலைமைகளையும் சந்தித்துக் கொண்டிருந்த இலங்கையினால், செயல்முறையை ஒத்து தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் முன்னர் எதிர்வாத செயல்முறையாக இருந்தவற்றை இலங்கைக்கும் அதன் நண்பர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முயற்சியாக மாற்றிக்கொள்ளவும் முடிந்திருந்தது. எமது முக்கிய உதவி வழங்குனர்கள் மற்றும் வர்த்தகப் பங்காளிகளுடனான குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய மேற்குலக நட்பு நாடுகளுடனான மிகவும் கடினமான உறவானது, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்கள் மீதான இலங்கையின் சர்வதேச சட்ட மற்றும் உடன்படிக்கை கடப்பாடுகள் தொடர்பிலான அவற்றின் சட்டபூர்வமான விடயங்களை நிறைவேற்றுவதிலும் கையாள்வதிலும் தலைகீழாக திருத்தம் செய்யப்பட்டன.

சட்ட ஆட்சியை நிலைநாட்டும் அதேநேரம், முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருதல்

முன்னைய ஆட்சியினால் ஊக்குவிக்கப்பட்ட திட்டமிட்பட்ட வெறுப்புணர்வு குழுக்களினால் முஸ்லிம்களுக்கு மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளானது முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் வெளியேற்றம் மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனங்களிலான ஏனைய சில மாற்றங்களின் விளைவாக உடனடியாக முற்றிலும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமையை காணமுடிந்துள்ளது. அந்த வெறுப்புணர்வு குழுக்கள் இன்னும் அவர்களது கடும்போக்குவாதத்தை கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களால் தண்டனைகளில் இருந்தான விடுபாட்டு உரிமையுடன் வன்முறைகளில் ஈடுபட முடியாமல் போயுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்துக்கான நெருக்கடியே தாழ்வான ஆழங்களாக இருந்தன. அவற்றுக்குள்ளேயே சட்ட ஆட்சியும் நீதி முறைமையும் மூழ்கியிருந்தன. சட்டத்துக்கு புறம்பான செயல்முறையொன்றின் ஊடாக பிரதம நீதியரசர் பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்து தமது ஆதாயம் கருதி செயற்படும் ஒருவரை பிரதம நீதியரசராக நியமித்தமையே நிச்சயமாக அதன் இறுதியான தாழ்வின் எல்லையாக இருந்தது. தமது ஆதாயம் கருதி செயற்படும் ஒருவரின் கீழ் உயர்நீதித்துறையில் இடம்பெற்ற போலி நாடகத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையானது பாரபட்சமற்ற நீதித்துறையை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

புதிய அரசியலமைப்பொன்றுக்கான காத்திருப்பு

2016ஆம் ஆண்டானது புதிய அரசியலமைப்பொன்றை உறுதியளிக்கிறது. அந்த அரசியலமைப்பானது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவும், தேர்தல் முறையில் மாற்றவும் அதேபோல், இலங்கை அரசை மறுசீரமைக்கவும் செய்கிறது. அந்த வகையில், மத்தியிலும் அதற்கு அப்பாலுமான அதிகாரப் பகிர்வுடன் கூடிய அதிகார பரவலாக்கல் ஊடான இலங்கை சமூதாயத்தின் முழுமையான பன்முகத்தன்மைக்கு அது இடமளிப்பதுடன், வரவிருக்கும் தசாப்தத்தில் புதிய இலங்கையொன்றுக்கான தளமொன்றை உருவாக்குவதற்கான அடிப்படையானதும் தனிப்பட்டதுமான ஜனநாயக சுதந்திர வாக்குறுதிகளையும் உத்தரவாதமளித்துள்ளது. புதிய அரசியலமைப்பானது எமது அனைத்து இயலாமைகளுக்குமான சர்வரோக நிவாரணியாக இருக்க முடியாத போதிலும், புதிய அரசியலமைப்பொன்றின் உச்ச உயர்நிலையானது அரசியலமைப்பு நீதிமன்றமொன்றின் ஊடான அமுல்படுத்தலுடன் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கையின் அனைத்து மக்களினதும் பகிரப்பட்ட சுபீட்சத்துக்காக இலங்கையினால் நிறைவேற்றப்பட வேண்டிய ஏனைய பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூக சவால்களை தீர்ப்பதற்கான அடித்தளத்தை அது நிச்சயமாக உருவாக்கும்.

ஹரீம் பீரிஸினால் எழுதப்பட்டு Groundviews தளத்தில் Reflection on the “Maithri Palanaya” one year என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.