படம் | THE WALL STREET JOURNAL

அரசியல் விடயங்களில் குறிப்பாக பேச்சுவார்த்தைகளில், இரகசியம் காப்பது சில சந்தர்ப்பங்களில் முக்கியமாகின்றது. எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகள் தமக்குள் ஒரு உடன்பாட்டைக் காண்பதற்கு முன்பு அவ்விடயங்கள் வெளியே தெரியப்படுத்தப்பட்டால், வெளிச்சக்திகள் வேறு காரணிகளை உட்புகுத்தி அதனைக் குழப்பி விடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உடன்பாடு கண்டபின்போ ஏனையோர் அதனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆயினும், அரசியலில் இரகசியம் காப்பது இன்னொரு வகையில் பார்க்கப்போனால் ஆபத்து நிறைந்ததாகும். பொது மக்களின் பார்வைக்கு அப்பால் பேரங்கள் பேசப்படும்போது பேசுபவர் ஏதாவதொரு சன்மானத்திற்கு மயங்கி தனது நிலைப்பாட்டினை விட்டுக் கொடுக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அல்லது ஒருவர் மற்றக் கட்சித் தரப்பினரினால் சாதுரியமாகக் கையாளப்படலாம். அதனையும்விட, பேச்சுவார்த்தைகள் நடத்துபவர்களுக்கிடையில் காலஞ்செல்லச் செல்ல ஒருவித நட்பு உருவாகின்றது. சில சமயங்களில் அந்த நட்பின் அடிப்படையில் ஒரு நாட்டையே பாதிக்கும் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம். மாறாக, பொதுமக்களின் பார்வைக்கு இவை விடப்படுவதனால் ஒவ்வொரு தீர்மானமும் கேள்விக்குள்ளாக்கப்படும். அதனால், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுவர்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்களினால் பலதரப்பட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டபோது எம்மில் சிலர் அவற்றைப் பற்றி கேள்வி எழுப்பிய சந்தர்ப்பங்கள் உண்டு. அந்த ஒவ்வொரு தடவையும் எமக்குத் தெரியாத பல உள் விடயங்கள் அவர்களுக்குத் தெரியுமெதன்பதனால் எமது கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கத் தேவையில்லை என்பதே அவர்கள் நிலைப்பாடாக இருந்தது. பின்னே என்ன செய்வது? அவர்களுடைய புலனாய்வு உபாயங்களுக்கும் அரசியல் முன்னெடுப்புக்கள் குறித்தும் நாம் ஒரு விமர்சனமும் முன்வைக்க முடியவில்லை. அவர்களுடைய தீர்மானங்களெல்லாமே திரை மறைவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்தாம். பொது மக்கள் அவையொன்றிலுமே சம்பந்தப்படுத்தப்படவில்லை. இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கும்போது எத்தனை ஆதங்கங்களை உணருகின்றோம். அவர்கள் பரந்துபட்ட கலந்துரையாடல்களை ஊக்குவித்திருந்தால் நாம் அவற்றில் எத்தனை தீர்மானங்களை மாற்றியமைத்திருக்கக் கூடும். வரலாறு மாறியிருக்குமே. இவை போன்ற காரணிகள்தாம் அரசியலில் இரகசிய பேச்சுவார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களாகும்.

கடந்த வாரம் லண்டனில் கூட்டமைப்பின் பிரதிநிதிக்கிடையிலும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலும் சில சர்வதேச பிரமுகர்களுக்கிடையிலும் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்கள் இந்த இரகசிய சந்திப்பு என்கின்ற புயலில் சிக்கி விட்டதைக் கண்டோம். இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், உலகத் தமிழர் பேரவை பிரதிநிதி சுரேன் சுரேந்திரனும், நோர்வே தமிழர் பேரவை பிரதிநிதி ரமணனும் மற்றும் எரிக் சொல்ஹெய்ம், எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்களும் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். இதன் ஏற்பாட்டாளர்கள் தென்னாபிரிக்க அரசு என்றும், நிதிக்கொடை வழங்குனர்கள் சுவிஸ் அரசு என்றும் அறிகின்றோம். ஒரு அரசுசார்பற்ற நிறுவனத்தின் மூலமாகத்தான் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏற்பாட்டாளர்கள் இச்சந்திப்பினை இரகசியமாகத்தான் வைக்க விரும்பினர் போலும். ஆனால், இணையத்தளங்கள் எல்லாம் இது பெரிய சதித்திட்டம் போன்று செய்திகள் வெளிவர ஆரம்பிக்கவே, அதனை மறுதலித்து விளக்குவதில் ஓரளவாவது பகிரங்கப்படுத்த வேண்டியதாயிற்று.

இச்சந்திப்பினைக் குறித்து சுமந்திரன் தனியேயும், சுரேந்திரன், ரமணன் ஆகியோருடன் கூடியும் அங்குள்ள இரு தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் வழங்கியிருந்தார். அவர்கள் அதனை “இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் உடனடித் தேவைகளை எவ்வாறு தீர்ப்பதென்பது பற்றிய கலந்துரையாடல்” என்றே விபரித்தனர். இதனை எரிக் சொல்ஹெய்ம் போன்றவர்களுடன் இலங்கையில் நடத்தியிருந்தால் சிங்கள பௌத்தவாத ராஜபக்‌ஷ தரப்பினரிடமிருந்து பிரசார அடி விழுந்திருக்குமென்பதனால் இது ஒரு வெளிநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். அத்துடன், இது ஆரம்ப கட்டமென்பதனால் பொதுவாகவே இதனை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இரகசியமாகச் செய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றனர். எமது மக்களின் உடனடித் தேவை என்று பார்க்கும்போது இப்பொழுது விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக் குடியமர்த்தப்படும்போது அவர்களுக்குத் தேவையான வீட்டுத் திட்டங்களும் ஏனைய உட்கட்டுமானத் திட்டங்களும் பற்றியும், அத்துடன் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவது பற்றியும் உரையாடியதாகக் கூறினர். இவற்றிற்குத் தேவையான நிதிகளைப் பெறுவதும், அதற்கான அழுத்தங்களை அரசின் மீது பிரயோகிப்பதும் எவ்வாறு என ஆராயும் பொருட்டே புலம்பெயர் தமிழர்களும் வெளிநாட்டு அரசுகளின் பிரதிநிதிகளும் கலந்தகொண்டதாக எமக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

எல்லாம் சரி. ஆனால், மக்களின் உடனடித் தேவைகள் பற்றிய ஆராய்ச்சிதானென்றால் அது இரகசியமாக வைக்கப்பட்ட நோக்கம் என்னவோ? மக்களுக்கு வீடு வேண்டும், வாழ்வாதாரத் திட்டம் வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறுவதில் என்ன சிக்கல் இருக்கக் கூடும்? அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று சொன்னால் அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டிய என்ன அரசியல் சூட்சுமம் அதில் இருக்கலாம்? இங்கு தொடங்கி அவர்களுடைய விளக்கங்களெல்லாம் சிறிது சறுக்கத்தான் ஆரம்பித்தன. 2002-2005 வரையிலான பேச்சுவார்த்தைகளில் எரிக் சொல்ஹெய்ம் ஈடுபட்டதனால் எதனை எப்படிச் செய்ய வேண்டும் என்கின்ற அனுபவப் பகிர்வினை அவரிடமிருந்து பெறவே அவர் அழைக்கப்பட்டார் என்றனர். ஆனால், எமக்குத் தெரிந்தவரை அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளுக்கான பொறிமுறைகளை ஸ்தாபிப்பதிலேயே அன்று நோர்வே அரசு ஈடுபட்டிருந்தது. மக்களின் உடனடித் தேவைகளைத் தீர்ப்பது எப்படி என அது ஆழமாக ஆராய்ந்தது எனக் கூற முடியாது. அப்படியானால் ஏன் எரிக் சொல்ஹெய்ம்? அத்துடன், வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர இதனுடன் எப்படித் தொடர்புபட்டிருக்கின்றார்? புரியவில்லை. வெளி அரசுகளின் அனுசரணையோடும் நிதி பலத்தோடும் ஒரு விடயம் நடக்கும்போது பார்வையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினை என்றும் ஆதரிக்காத நாடுகள்தாம் பெரும்பாலும் இருக்கின்றன. அவை புலம்பெயர் அமைப்புக்களினதும் எமது அரசியல் பிரதிநிதிகளினதும் போராட்டக் கூர்மையை மழுங்கடிக்க எத்தனிக்கின்றனவா என்பது முக்கிய கேள்வியாகின்றது. இதனால்தானோ என்னவோ அங்குள்ள இணையத்தளங்கள் யாவுமே இச்சந்திப்பு பற்றி பைத்தியம் பிடித்தது போலாகின.

அதற்குத் தகுந்தாற்போல குறித்த பங்குபற்றுனர்களின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் defensive ஆக இருந்தன. “எல்லோருக்கும் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன இருக்கின்றது என்பதுதான் தெரியும். ஆனால், என்ன அதிலிருந்து நீக்கப்பட்டதென்பது தெரியாது. ஒற்றையாட்சி என்கின்ற பதத்தை நீக்குவதற்கான காரணகர்த்தாக நான்தான் இருந்தேன்” என்றார் சுமந்திரன். ஆனால், ஜாதிக ஹெல உறுமயவுடன் ஜனாதிபதி மேற்கொண்ட ஒப்பந்தம் ஒற்றையாட்சியை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் ஒப்பந்தம் என்றுதான் நாம் அறிந்திருக்கின்றோம். மேலும், பிரதம மந்திரியாக ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையில் ஒற்றையாட்சியை வலியுறுத்தியபோது சுமந்திரன் மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைச் சுட்டிக் காட்டி அதனைத் திருத்தவில்லையே. அல்லது அதனையும் இரகசியமாகத்தான் செய்தாரோ? “நான் தமிழ் மக்கள் சார்பாக பேசிய அளவு வழக்குகளில் ஒரு 10 வீதந்தானும் வேறுசட்டத்தரணிகள் பேசியிருக்க மாட்டார்கள்” என்றும் மார் தட்டினார். காணிகள் தொடர்பில் சுமந்திரன் அதிகளவு வழக்குகள் தாக்கல் செய்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஆயிரமாயிரம் மக்களை விடுவிப்பதற்கு எமது ஏனைய சட்டத்தரணிகள் ஆற்றிய பங்கினையும் உயிர்த் தியாகத்தினையும் இங்கு ஏனோ மறந்து போய்விட்டார். மேலும், சமஷ்டி ஆட்சிதான் எமது தீர்வு என்கின்றார். சமஷ்டி என்னும் பதத்துக்குள்ளேயே பத்தாயிரம் வேறுபட்ட ஆட்சி முறைகள் இருக்கின்றன. இதில் எந்த ஆட்சி முறையை நாம் எடுத்துக்கொள்ளப் போகின்றோம்? சர்வதேச சமூகம், இந்தியா உட்ப, இந்த பத்தாயிரம் விதமான சமஷ்டி முறையில் எது குறித்து எவ்வளவு தூரம் எங்களுடன் பயணிக்கத் தயாராக இருக்கின்றன? இவற்றை தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தெரிவிக்க வேண்டுமா வேண்டாமா? அதனை அறிந்து கெண்டால்தானே ஒரு தேசியமாக நாம் எமது வருங்கால மூலோபாயங்களைத் தீட்டி ஆயத்தமாக இருக்கலாம்?

எமது அரசியல் அன்றும் இன்றும் தரகு அரசியலாகத்தானிருக்கின்றது. இதில் எனது அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பெண்கள் சிலர் இராணுவ ஆக்கிரமிப்பிற் எதிராகப் போராடுவதற்காக அன்னையர் முன்னணி அமைப்பினை உருவாக்கினர். உருவாக்கியவர்களில் நானும் ஒருத்தி. இதன் முதல் நடவடிக்கையாக கிட்டத்தட்ட 2000 பெண்கள் அடங்கிய ஆர்ப்பாட்ட ஊர்வலமும் யாழ். அரச அதிபரின் அலவலகத்துக்கு முன்னால் கொண்டு சென்றாயிற்று. வல்வெட்டித்துறை இளைஞர்களை பூசாவுக்கு திடுதிப்பென்று கொண்டு சென்றதுதான் இங்கு பிரச்சினைக்குரிய விடயமாக எடுக்கப்பட்டது. நாம் வருவது தெரிந்து கச்சேரி வாசல் கேட் பூட்டப்பட்டு தலைவிகள் மட்டும் உள்ளே வரலாம் என எங்களுக்குப் பணிக்கப்பட்டது. உடனே மறு பேச்சின்றித் ‘தலைவிகள்’ அரச அதிபரைச் சந்திக்கப் போயாயிற்று. ஏனையோர் எல்லோரும் வெளியில் சும்மா நின்று கொண்டிருந்தனர். நான் உள்ளே அழைக்கப்பட்டும் அதனை மறுத்து வெளியே எம்முடன் போராட வந்த பெண்களுடன் தங்கி விட்டேன். இடைக்கிடையாவது அந்த ‘தலைவிகள்’ வந்து அரச அதிபருடன் என்ன பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன, அதற்கு எமது எதிர்வினை என்னவாக இருக்க வேண்டும் என்று கலந்தாலோசித்தார்களாவென்றால் அதுவும் இல்லை. அவர்கள் பார்வையில் மற்றப் பெண்களெல்லாம் அவர்கள் அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான அதிகாரத்தினை வழங்கும் வெறும் எண்ணிக்கைகளாகத்தான் தெரிந்தனர். கடைசியில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதைக்கூட அறிவிப்பதற்கு ஆளில்லை. அன்னையர் முன்னணி வெகுவிரைவிலேயே இயக்கங்களின் கைப்பொம்மையானது வரலாறு. அதேபோலவே எமது அரசியல்வாதிகளும். தாம் மேலிடங்களுடன் ஊடாடும் அதிகாரத்தினை வழங்கும் வாக்குப் பெட்டிகளாகத்தான் அவர்களால் எமது மக்கள் கணிக்கப்படுகின்றனர். அப்படித்தான் ஏதாவது ஆலோசனைகள் தேவையெனில் தம்மைச் சுற்றியிருக்கும் கூசாத் தூக்கிகள் மற்றும் தம்மையொத்த கருத்துடையவர்கள் ஆகியோருடன் கலந்தாலோசிப்பதுடன் அவர்களின் கடமை ஒழிகின்றது. பொதுத் தளத்தில் இயங்காதவர்கள் எவருடையதும் கைப்பொம்மையாகப் போகின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாகும்.

எமது அரசியல்வாதிகளை தேவையான இடங்களில் இரகசியம் பேணத்தான் சொல்கின்றோம். ஆட்சேபணையில்லை. ஆனால், மக்களை மையப்படுத்திய அரசியல் முறைமை இன்றி அவர்கள் தமிழ் மக்களை அம்மக்களுக்கு அதிக அனுகூலமான பாதையில் நடத்திச் செல்ல முடியாதாகும்.