படம் | கட்டுரையாளர்

பெருந்தோட்டங்களை ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலம் முதல் இன்றுவரை பெருந்தோட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் கட்டப்பட்ட அதே குடியிருப்புகளிலேயே இன்றும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடாத்திவருகின்றனர்.

ஒரு கூடமும் எட்டடி கொண்ட அறை ஒன்று மட்டுமே அமையப்பெற்ற இக்குடியிருப்பில் தனியான சமையல் அறையின்றி காற்று நுழையக்கூட வழி இல்லாத இருண்ட அந்த அறைக்குள்ளேயே அனைத்து கருமங்களையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர்.

பொதுவாக வீடுகளில் சேரும் கழிவுகள் மற்றும் குப்பைகளைக் கொட்டுவதற்கேனும் இடமில்லாதும், கழிவு நீர் சென்றடைவதற்கான வடிகான் வசதியற்றவர்களாகவும் சிலர் இருந்து வருகின்றனர். வெளியாரின் ஆக்கிரமிப்பே இதற்கான காரணமாகும்.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர அஷ்க்வெலி தோட்டத்தில் 16 குடும்பங்கள் வசித்துவரும் வீட்டு முற்றம் பாதையாக மாறியுள்ளதால் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இங்குள்ள குடியிருப்பு கட்டடத்தின் முன்னால் அடுத்தடுத்து எட்டு வீடுகளும், பின்புறத்தே வரிசையாக எட்டு வீடுகளும் அமைந்துள்ளன. இந்த லயன் கட்டடத்தின் வீட்டு முற்றம் கலஹிட்டிய கிராமத்துக்கான பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பாதையினூடாகவே கிராமவாசிகளும், தோட்டமக்களும் போக்குவரத்துச் செய்துவருவதுடன் அடிக்கடி வாகனப் போக்குவரத்தும் இடம்பெற்று வருவதுடன் இ.போ.ச. பஸ் ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

DSC00505

முற்றம் பாதையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் சிறுவர்கள் ஓடியாடி விளையாட முடியாதுள்ளனர். தற்செயலாக முற்றத்துக்குப் போய் விளையாடுவார்களேயானால் விபத்தை எதிர்நோக்கவேண்டியுள்ளனர். இதனால், பெற்றோர் பிள்ளைகள் குறித்து மிகவும் அவதானத்துடனும், விழிப்புடனும் இருக்கவேண்டியுள்ளனர். அதுமட்டுமல்லாது வீடுகளில் மங்கள, அமங்கள காரியங்களை மனஆறுதலுடன் நிறைவேற்றிக்கொள்ளமுடியாது நம்மதியற்றவர்களாகவே தினம் பொழுதைக் கழித்துவருகின்றனர். வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் உடலை வெளியில் வைத்து இறுதிக் கிரியைகளைத் தானும் செய்துகொள்ள முடியாத நிலையில் அந்த எட்டடி இருண்ட அறைக்குள்ளேயே வைத்து அனைத்து கருமங்களையும் நிறைவேற்ற வேண்டியுள்ளனர். உடலை முற்றத்தில் வைத்திருந்தாலும் வாகனம் வரும்போது உடலை சுமந்து வாகனத்துக்கு இடமளித்து மீண்டும் வைக்கவேண்டியுள்ளது.

DSC00495

நீண்டகாலமாக இந்த மக்கள் எதிர்நோக்கி வந்தப் பிரச்சினைக்கு புளத்சிங்கள பிரதேச சபை உறுப்பினர் நூ. ஜெயராஜ், முன்னாள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல ஊடாகத் தீர்வு பெற்றுத் தரும் வகையில் பாதையை மாற்றி அமைப்பதாக உறுதி அளித்து ஒருவருடம் கடந்தும் எதுவும் நடைபெறவில்லை. ஓராண்டின் பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின்போது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் இங்கு வந்து பாதையை மாற்றியமைப்பதாகக் கூறி டோசர் இயந்திரத்தின் மூலம் தோட்டக்காணியில் ஒரு பகுதியை வெட்டி ஆரம்பித்து வைத்தார். தேர்தலும் முடிந்து ஓராண்டு கடந்துவிட்டது. பாதை வேலை கைவிடப்பட்ட நிலையிலேயே கிடக்கிறது.

தேர்தலில் போட்டியிட்ட இவருக்கு மக்கள் வாக்களிக்காது விட்டமையே வேலை தடைபடக்காரணம் என மக்கள் தெவித்துள்ளனர். ஆனால், இவரோ தோட்ட நிர்வாகம் தடை விதித்த காரணத்தினாலேயே வேலையை நிறுத்த வேண்டிய நிலையேற்பட்டது என்று கூறுகின்றார்.

வாக்குகளை எதிர்பார்த்து சேவை செய்வதை விடுத்து சேவை செய்து மக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் ஆதரவு பெருகும் என்பதை சில அரசியல்வாதிகள் சிந்திக்கத் தவறி விடுகின்றனர். தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களே இவ்வாறு நடந்துகொள்ளும்போது பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் நம்மவர்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். அஷ்க்வெலி தோட்ட மக்கள் எதிர்நோக்கி வந்த வீதி தொடர்பான பிரச்சினைக்கு ஒரு காத்திரமான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக இ.தொ.கா. 2012 டிசம்பர் 11, 12ஆம் திகதிகளில் வெளியான பத்திரிகைச் செய்திகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும் எந்த ஒரு தீர்வும் கிடைத்ததாக இல்லை.

DSC00496

எவ்வாறாயினும் அனைத்தும் வழமை போன்று நடந்தவண்ணமாகவே உள்ளன. ஆனால், எந்த நேரத்தில் விபத்து ஏற்பட்டு உயிராபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடனேயே மக்கள் இருந்து வருகின்றனர்.

தேர்தல் காலத்தில் மட்டும் படையெடுத்து வந்து குசலம் விசாரித்து பசப்பு வார்த்தைகளைக் கூறி வாக்குறுதிகளை வாரி வீசிவிட்டு வாக்குகளைப் பெற்றுச் செல்கின்றனர். ஆனால், தோட்ட மக்களுக்கு எதுவும் நிறைவேற்றித் தருவதாக இல்லை. பாதையை மாற்றியமைத்து இங்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைத் தடுக்க முன்வரவேண்டும். அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் வந்து அனுதாபம் தெவித்து ஆறுதல் கூறுவதால் பயன் ஏற்படப்போவதில்லை.

களுத்துறை மாவட்ட தோட்ட மக்களின் அவல நிலை குறித்து மலையகத்தின் புதிய அமைச்சர்கள் சற்று திரும்பிப்பார்க்க முன்வரவேண்டும்.

வீ. மூர்த்தி