படம் | இணையதளம்

ஒரு வகையில் பார்த்தால் இந்த மாதிரியான பிரச்சினைகள் நமக்கு தேவை தான். ஆம. நாம் அப்படிப்பட்டவர்கள் தான். நமது சூழல் தொடர்பில் எவ்வித அக்கறையுமற்ற சமூகம் தான். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைதல் பிரச்சினை தற்போது ஒரு இயங்கியல் தளத்திற்கு செல்வது போல் உள்ளது. அதற்குரிய தரவுகளை உரிய மட்டங்கள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், சில கேள்விகளை நாம் எல்லோரும் சேர்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்துகிறேன்.

நமது சூழல் தொடர்பான அக்கறை என்பது என்ன?

நாம் இன்னமும் பொலிதீன்களை எங்கும் வீசிக் கொண்டு திரிபவர்கள், குப்பைகளை வீதியில் யாரும் பார்ப்பதற்கு முன் எறிந்து விட்டு, பின் வீதி நாறுகிறது என்று அடுத்தவர்களைத் திட்டுபவர்கள், வீதியெங்கும் எச்சில் துப்புபவர்கள்… இதை ஒரு நீண்ட பட்டியலாகவே உருவாக்கலாம். ஆனால், என்ன பயன்? இதை படித்து விட்டு யார் தங்களை மாற்றிக் கொள்வார்கள்?

நமது சமூகம் எப்படிப்பட்டது?

காக்கைத் தீவு போன்ற நகர எல்லையில் அமைந்துள்ள பிரதேசங்களில், குப்பை மலைகளின் நடுவில் இன்னமும் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. நாங்களும் குப்பைகளுக்கு பக்கத்தில் வாழ்ந்து வருகிறோம், அந்த மக்கள் ஏன் போராடவில்லை, அந்த மக்களுக்காக ஏன் யாரும் போராடவில்லை, இப்போது எழுந்திருப்பது எந்த மாதிரியான ஒரு வர்க்கத்தின் குரல், பார்க்கப் போனால் இயலக் கூடியவர்களின் குரலே சமூகத்தில் எதிரொலிகளை ஏற்படுத்துகிறது .

நமது கடந்த காலம் எதையெல்லாம் கையளித்திருக்கிறது?

கீரிமலையை அண்டிய பிரதேசங்களில் கடந்த காலங்களில் முறையற்ற மண் அகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அது கூட இந்த நீர்ப் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பிலிருந்து சூறாவளி தோன்ற முடியும் என்கிறது கயாஸ் என்கிற தியரி. அப்படி இருக்க நிலத்தை சுரண்டி வாழ்ந்தவர்கள் நாம். நாம் தான் இதற்கு பொறுப்பாளிகள்.

இது ஒரு முக்கியமான எச்சரிக்கை! மொத்த நாட்டிற்குமே முக்கியமானது. இயற்கை என்ற அமைப்பை எவ்வளவு கலைக்கிறோமோ அவ்வளவுக்கு அது ஆபத்தானதாக மாறிவிடும். நமது சூழல் தொடர்பில் சுரணை வருவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதைக் கருதிக் கொள்ளலாம். நமது நிலம், மண், நீர், காற்று… எல்லாவற்றிலும் நமது அக்கறை மேம்பட வேண்டும். எல்லாவற்றிலும் முடிந்தவரை அக்கறை செலுத்த முயற்சிப்போம். விடுபட்ட குறைகளை நிவர்த்திக்க ஒன்றிணைந்து செயற்படுவோம்.

இந்த மாதிரியொரு நிலை முன்னொரு போதும் ஏற்பட்டதில்லை. நாம் இது போன்ற ஒரு நிகழ்விற்கு ஆயத்தமாயிருக்கவில்லை. நமது சிந்தனை குழாம்களோ அவ்வளவு தூரத்திற்கு சூழலியல் தொடர்பிலோ, பண்பாட்டு இயங்கியல் தொடர்பிலோ அக்கறை செலுத்தவில்லை. அந்த குறையையும் இதன்போது கருத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு மட்டங்களில், பல்வேறு தளங்களில் செயற்படும், சிந்திக்கும் நபர்கள் இணைந்து கருத்தியல் பரிமாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்தை நமது சந்ததிக்கு இந்த நிலத்தில் விட்டுச் செல்லலாம். அதுவே நாம் செய்யக் கூடியதும், செய்ய வேண்டியதும்.

கிரிஷாந்