படம் | கட்டுரையாளர்

நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு. வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள் சிறு இருள் அறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலுக்குள்ளால் பிரவேசிக்கும் சூரிய ஒளியில் அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி அவரின் முகத்தில் பட்டுத் தெரிக்கையில் அந்த அறையெங்கும் ஒளி பரவுகின்றது. அவர் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுக்கள் குவிந்துகிடக்கின்றன.

கடிதம் எழுதியிருப்பவர்கள், அனைவரும் இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக் கல்வியின் ருசிகரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் இறுதிப் போர் வலயக் குழந்தைகள். (முல்லைத்தீவின் உண்ணாப்புலவு, செல்வபுரம் உள்ளிட்ட கிராமங்கள்) பென்சில்களில் எழுதிய முதிர்ச்சியும், பேனாவில் எழுதப்பழகும் தொடக்கமும் அந்த எழுத்துக்களில் தெரிகின்றன. அனைத்துக் கடிதங்களினதும் சாரம், “அண்ணா நீங்கள் எங்களுக்குப் புதுநம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள். நான் சாதிப்பேன்” என்பதாகவே இருக்கின்றது. அவர்களுக்கு நிமால் நீண்டகாலம் கற்பிக்கும் ஆசிரியனல்ல, பெரும் பேராசிரியருமல்ல. ஒரு அண்ணாவாக, ஒரே ஒரு பாடவேளைப் பொழுதில் மட்டும் சந்தித்துக்கொண்ட வழிப்போக்கனாக மட்டுமே இருந்தார்.

நிமால், நண்பர்களுடன் இசையமைத்துப் பாடிய, வலி போக்கும் பாடல்களைப் பாடிக்காட்டியிருக்கிறார். போர் மிச்சம் விட்ட தன் உடலின் முழுப் பாகங்களையும் பயன்படுத்தி ஓக்டோபாட், ட்ரம்ஸ் வாசித்துக் காட்டியிருக்கிறார். தான் வளர்ந்த கதையைச் சொல்லி, வாழ்வில் நம்பிக்கை பெறவேண்டிய தருணங்கள் குறித்து சில நிமிடங்கள் கலந்துரையாடியிருக்கின்றார். அந்த நம்பிக்கை உரமூட்டலுக்கான குறிப்பைத் தன் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறார். அதன் விளைவே நிமாலை நாம் சந்தித்தபோது, அவரின் கட்டிலெங்கும் மலையெனக் குவிந்துகிடக்கும் கடிதங்கள். அவற்றைக் கடிதங்கள் என்று மட்டும் சொல்லி, வார்த்தைப் பெறுமதியைக் குறைத்துவிடமுடியாது. நம்பிக்கையற்று அலையும் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய உலகின் அரிய புத்தகங்கள்.

நிமால் யார்? அவரும் இந்த மண்ணின் மைந்தன்தான். போரின் ஆரம்பக் கட்டத்தில் பிறந்த குழந்தைதான். அதனால் போரின் முழு விளைவுகளையும் அவர் தாங்கியிருக்கின்றார். பிறந்தது யாழ்ப்பாணமாக இருந்தாலும், விவரமறிந்த காலம் முழுதும் வன்னியின், புதுக்குடியிருப்பு – கைவேலி பகுதியில் வாழ்ந்திருக்கிறார். அறிவைத்தொட்ட கல்வி அனைத்தையும் அவர் வசித்த கிராமத்திலிருந்து 5 கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கும் வள்ளிபுனம் கனிஸ்ர உயர்தர வித்தியாலயத்தில் கற்றார். அந்தக் காலப்பகுதியில் பாடசலைக்கு பேருந்தில் செல்லவோ, ஓட்டோவில் ஒய்யாரமாய் ஏறிச் செல்லவோ, சைக்கிளில் சுருள் விடவோ வசதியிருக்கவில்லை. நடை… கால்நடையாகவே ஒவ்வொரு நாளும் பத்துக் கிலோமீற்றர்களைக் கடந்து கற்றார் நிமால். இடையிடையே வரும் சைக்கிள்காரர்கள் விரும்பினால் ஏற்றி, இறக்கிவிடுவதுண்டு. சில அவ்வாறாக ஆசிரியர்களை நினைவுகூர்கின்றார்.

நிமாலின் குடும்பம் கர்நாடக இசைப் பின்னணியுடனோ, அல்லது வேறெந்த இசை வல்லளார்களின் வாரிசுகளோ அல்ல. வள்ளிபுனம் பாடசாலையின் மேசைதான் நிமாலின் இசையறிவை வளர்த்தது. பாடமற்ற வேளைகளில் நண்பர்கள் அனைவரும் கூடி மேசையின் முதுகில் மேளம்தட்டிப் பாடுவது, இசையின் நுணுக்கங்களை அவருள் வளர்த்தது. அதுவே நிமாலைப் பாடசாலையில் பிரபலமான பாடகாராக்கியது. அந்தக் காலத்தில் பாடசாலைகளில் அடிக்கடி மாணவர் நிகழ்வுகள் நடைபெறும். அவை அனைத்தையும் நிமாலின் பாடல்கள் உயிர்பெறச்செய்யும். அப்படியே நிமால் ஒரு பாடகானார். அவர் உயர்தரம் கற்கையில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும் இயங்கும் 20க்கு மேற்பட்ட இசைக்குழுக்களில் பாடி பிரபலமடைந்திருந்தார். வாசிப்போர் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நிமால் முறையாக சங்கீதம் கற்றுத் தேறியவன் அல்ல. தன் விருப்பும், முயற்சியினாலும், பாடசாலை மேசைகளில் சங்கீதத்தைக் கற்றுக் கொண்டவன்.

இப்படியே ஓடிக்கொண்டிருந்த காலத்தில் போரும் இறுதிக் கட்டத்தை நெருங்கியது. அந்தப் போர் தன் பணியிலிருந்து யாரையும் விட்டுவைக்கவில்லை. அப்போது வன்னியிலிருந்த அனைவருக்கும் வாய்ப்பளித்துத் தனதைப் பங்கிட்டுக் கொண்டது. 01.08.2008 அன்று, நிமால் இருந்த பதுங்குகுழிக்குள் எறிகணை வீழ்ந்து வெடித்தது. அந்த வெடிப்பில் நிமாலின் இரு கால்களும் சிதறிவிட்டன. போருக்கு முழு மனிதனாகப் பிறந்தவன், அதே போரினால் அரை மனிதானாக்கப்பட்ட கதை நிமாலினுடையது.

போர் காலத்தி்ல், காலில்லாத வலியும், மன நோவும் மிகவும் அதிகரித்தது. பல இரவுகள் படுத்த படுக்கையாக பதுங்கு குழிக்குள் வாழவேண்டியேற்பட்டது. அருகில் எறிகணை வீழ்ந்தால் கூட யாருடைய துணையுமின்றி அவரால் நகரமுடியாது. அந்தக் காலங்களில் நிமாலிடம் மாற்றுவலுவுடையவர்களுக்கான வண்டி கூட இருக்கவில்லை. பசி, பட்டினி, நோய் என்று ஒரு மனிதன் எந்தத் துயரமெல்லாம் அனுபவிக்க முடியுமோ, அவை அனைத்தையும் ஆற அமர இருந்து ருசித்து வெளியேறினார் நிமால். போரும் அத்தோடு முடிந்தது.

நிமாலுக்கு வாழ்க்கை சலிக்கவில்லை. தனியாகவே சில காலம் அலைந்தார். அவரின் அலைவு தமிழகம் வரைக்கும் நீண்டது. தமிழகத்தின் பிரபலமான இசைக் கலைஞர்கள் நிமாலைச் சந்தித்து உரமூட்டினர்; அனுசரித்தனர்; நம்பிக்கையூட்டினர். எல்லாம் போனாலும், இசையிருக்கிறது என்ற நம்பிக்கையுடன், தனக்குக் கிடைத்த சக்கர நாற்காலியுடன் மீண்டும் நகரத் தொடங்கினார். ஆங்காங்கே இருந்த துறைசார்ந்த நண்பர்கள் கைகொடுத்தனர். தன் வாழ்க்கையை இசைக்கோர்வையாக்கினார். தன் வலியை மிருதுவாக மற்றையவர்களுக்கு எடுத்துக்கூறினார். நிலைமையறிந்தவர்கள் உதவினர். எல்லோர் வாழ்க்கைக்கும் இதம் தடவும் வார்த்தைகளை இசையாக்கித் தன்னால் இயன்ற இடங்களில் வெளியிட்டு வருவது இவரின் தற்போதைய தொழில். அது ஒரு வெற்றிகரமான தொழில். நிமாலின் கட்டிலெங்கும் கொட்டிக் கிடக்கும் அந்தக் கடிதங்கள் அதற்கு ஆதாரம். அவர் தன்னைப்போல போர் அலைக்கழித்த குழந்தைகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார், குழந்தைகள் தம் எழுத்துக்களி்ல் நிமாலுக்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள். வாழ்வில் பிரகாசமாகப் பயணிக்க, கொடுக்கல்-வாங்கல் முறையிலான நம்பிக்கையளித்தலைத் தவிர வேறென்ன தேவை. இதுவுமொரு உளச்சிகிச்சை முறையல்லவா! எனவேதான் நிமால் வாழ்க்கையை வென்றவனாகியிருக்கிறான்.

நிமாலிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியவர்கள் அதிகம் பேர் நம் மத்தியில் இருக்கின்றனர். போரில் தம் அங்கங்களை இழந்து, வாழ்க்கையை வெறுத்து அலையும் முன்னாள் போராளிகள், குடும்பங்களைத் தொலைத்தவர்கள், தற்கொலை எண்ணத்தோடும், அதைத் தடுக்கவும் நினைக்கும் யாழ் .பல்கலைக்கழக மாணவர்கள், போதைபொருள் பாவனைக்கு ஆட்பட்டு மீளமுடியாது தவிக்கும் பாடசாலை மாணவர்கள், உளவியல் துறைசார்ந்து இயங்கும் நிபுணர்கள், சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள், மற்றும் நம்பிக்கையைத் தொலைத்த பிடிமானமற்றவர்கள் அனைவரும் ஒருமுறை நிமாலைச் சந்தியுங்கள். அல்லது அவரின் வாழ்க்கையை முன்மாதிரியான எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எந்த புத்தகங்களும் தராத நம்பிக்கையை நம் முன் நடமாடும் நிமால் தருகிறார்!

நன்றி: சூரியகாந்தி

ஜெரா

 Jera