படம் | கட்டுரையாளர்

சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும். மெல்லிய ஈரம் தொட்டிருக்கின்ற இதமான வேளையில் ஒரு பக்கம் நீண்டு நிமிர்ந்த யாழ்ப்பாணத்துப் பனைகளும், இடையிடையே முளைத்திருக்கும் கட்டடங்களும், மறுபுறம் ஆனையிறவின் பெருவெண் உப்பு வெளியும், மறுபுறம் வன்னிக் காட்டின் குளிர்ச்சியும், எல்லாவற்றையும் குறுக்கே பிரித்து நிற்கும் கடலின் அழகும், கடலுக்குக் குறுக்கான தார் வீதியும் நம்மை ரசணையின் மிகுதியில் கூக்குரலிட வைக்கும்.

இவ்வளவு அழகுதரும் சங்குப் பிட்டிப்பாலத்தடியின் அபிவிருத்தி இன்னமும் முற்றுப் பெறவில்லை என்பதை நம்புவீர்களா? இப்போதும் அங்கு வீதிப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதை ரசித்தபடியே கொஞ்சத் தூரம் மன்னார் பக்கமாக நகரலாம். அதில் முதலாவதாக வருகின்ற சந்திக்குப் பெயர் கவுதாரி முனைச் சந்தி. அதற்குள்ளாகப் பயணித்தால், சங்குப் பிட்டிப் பாலத்தில் நின்று ரசித்த மொத்த அழகும் ஊனம் வடிக்கும். அபிவிருத்தியின் துர்நாற்றம் ‘கப்’ என அடிக்கும் புழுதியாக. மூச்சே நின்றுபோகும். அவ்வளவு புழுதிக்குள்ளும்தான் அங்கு வாழும் யாழ்ப்பாணத்துத் தென்கரையினதும், வன்னியின் வட கரையினதும் மக்களின் வாழ்க்கை தொலைகிறது.

“மணல் அள்ளுறவங்கள், கிரவல கொட்டி நிரவின றோட்டுத்தான் இது. அவங்களும் இல்லாட்டி இந்த றோட்டும் இல்ல” என்று புறுபுறுத்தபடி நடக்கும் நடைபயணிகளோடு பேசிக் கொண்டே, அந்தப் புழுதித் தெருவின் ஓரங்களில் அமைந்திருக்கும் கிராமங்களைத் தரிசிக்கலாம். இதற்குள் போரில் முறிந்த மொட்டைப் பனைகளை, கைவிடப்பட்ட பதுங்குழிகளை, செக் பண்ணும் இராணுவ காவலரண்களை, வானைத் தொடும் மணல் கும்பிகளை, அதைக் குடைந்து விற்கும் மணல் கொள்ளையர்களை, தூரத்து தெரியும் யாழ். பல்கலைக்கழகத்தை, எப்போதாவது வரும் வாகனங்களை எனப் பலவற்றையும் புதினம் பார்க்கலாம்.

அந்தத் தொலைதெருவின் முடிவில்தான் விநாசியோடைக் கிராமம் அமைந்திருக்கிறது. அங்கு என்ன புதினம்? அவள்தான் ஒரே புதினம். அவளால் ஊரே புதினம். யாரைக்கேட்டாலும், “அந்தப் பள்ளிக்கூடத்துக் பின்னால இருக்கிற வீடு” என்று முகவரி காட்டிவிடுகின்றனர்.

உதயகுமார் நினஞ்சலா. 9ஆம் ஆண்டு வரை மட்டுமே இருக்கின்ற அந்தக் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள். சமூக, விஞ்ஞான போட்டியில் மாகாண மட்ட ரீதியில் முதலிடம் வந்ததே அவளின் சாதனை. ஏனைய மாவட்ட மாணவர்களின் சாதனைகளுடன் ஒப்பிடுகையில் இது சிறியதுதான். ஆனால், இது போன்றதொரு எந்த அடிப்படை வசதியுமற்ற அதிகஸ்ட கிராமத்தில், அங்கேயே இருந்து, தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லாது, படித்து வட மாகாணத்து அனைத்துப் பாடசாலைகளினது மாணவர்களுடனும் போட்டியிட்டு முதலிடத்து வருவதென்பது வலி நிறைந்த சாதனை.

ஒருயொரு தற்காலிகத் தகரக் கட்டடத்துடன் இயங்குகின்றது அவள் படித்த பாடசாலை. இன்னொரு கட்டடம் இடிந்தும் உடைந்தும் சிதைந்தும் கிடக்கின்றது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை. ஒழுங்கான தனியார் கல்வி நிலையங்கள் இல்லை. இதுமாதிரியான பிரச்சினைகள் அவளுக்கும் பொதுவானதாக இருக்கின்றது.

இவ்வளவுக்கும் மத்தியில் சுயமாகப் படித்தாள் அவள். வீட்டில் தொலைக்காட்சி இல்லை. பொழுதுபோக்கு வசதிகளோ, மேலதிக அறிவைப் பெறும் தொழில்நுட்ப வசதிகளோ, நூலகங்களோ இல்லை. வீடு, முற்றம் எனப் பார்க்குமிடம் முழுதும் வறுமைதான் நிரம்பியிருக்கிறது. இரவு 9 மணிவரைக்கும், காலை 5 மணியிலிருந்து குப்பி விளக்கில் அன்றாடம் படிக்கும் அறிவே அவளை முன்னேற்றி வருகின்றது. அவ்வப்போது ஆறுதலளிக்கும் யாழ்ப்பாணத்து ஆசிரியை ஒருவர் அவளுக்குத் துணையாக இருக்கிறார். கதைகளில் நன்றியோடு நினைவுகூறுகின்றாள். அதைவிட உங்களுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டாள் அண்ணா என்கிறாள்.

அண்ணா பக்கத்திலேயே இருக்கிறார். அவரால் அசையக்கூட முடியாது. இருந்த இடத்தில் அப்படியே இருக்கிறார். இடையிடையே சிரிக்கிறார். எதையோ சொல்ல முயற்சிக்கிறார். தேங்கிய வார்த்தைகள் முழுதுமாக வெளியில் வர சிக்கிக் கொள்கின்றன.

அவளின் அண்ணாவுக்குப் இப்போது 14 வயது. திக்கித் தடுமாறும் வார்த்தைகளில் அவன் தன்னைச் சொல்கிறான். தங்கையை முந்திக் கொண்டு தன் திறமைகளை நினைவுகூர்கின்றான்.

10567358_674447379305485_787387108_n

“நான் சரியான கெட்டிக்காரன் அண்ணா, இங்கயே படிச்சி, ஸ்கொலர்ஷிப் கூட பாஸ் பண்ணினன். அதுக்குப் பிறகு இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் போயிட்டம். அங்க பங்கருக்குள்ள இருக்கேக்க ஷெல் விழுந்து காயப்பட்டு, முன் பாதித் தலை துண்டாகிட்டுது. பிளந்தபடி இருந்தது. சில நரம்புகள் அறாமல் தொடர்போட இருந்ததால தலையப் பொருத்திக் கட்டி காப்பாத்திட்டினம். பிறகு ஹொஸ்பிட்டலுக்குப் போய், ஒப்பரேசன் செய்துதலைய ஜொயின்ட் பண்ணிட்டினம். (தலையைத் தொட்டுக் காட்டுகிறார்) அதோட கால், கை எல்லாம் இழுத்துட்டுது. நடக்க மாட்டன். தள்ளுவண்டியில வச்சித்தான் தள்ளிக் கொண்டு போகோனும். நெடுகலும் நடக்கிற பயிற்சி செய்யச் சொல்லிச்சினம். இந்த மணலுக்க அம்மாவால தள்ள ஏலாது. பள்ளிக்கூடத்தில கொண்டு போய் இருத்திவிட்டா, பள்ளிக்கூடம் முடிய அம்மா வந்து தள்ளிக் கொண்டு போகவேணும். அங்க பெடியள் எல்லாரும் விளையாடுறதையும், படிக்கிறதையும் பாக்க ஆசையா இருக்கும். இப்ப படிக்கிற எதுவும் நினைவு நிக்குதில்ல. நெடுகலும் மணலுக்க தள்ளித் தள்ளி தள்ளுவண்டியும் உடைஞ்சிட்டுது. அதால பள்ளிக்கூடம் போறத நிப்பாட்டிட்டன். எனக்குப் படிக்கப் போகோணும் போல இருக்கு அண்ணா…” என்கிறவனிடம் பதில் சொல்ல எதுவுமிருக்கவில்லை. ஆறுதலாக தங்கையைப் பார்ப்பதை விட எந்த நம்பிக்கையை அவனுக்குக் கொடுக்கமுடியும்?

“இங்கயே இருந்தா மகளாலையும் 9ஆம் ஆண்டு வரைக்கும்தான் படிக்க முடியும் தம்பி” என்கிறார் நினஞ்சலாவின் அம்மா.

ஏன் அப்படி?

உங்களுக்கே தெரியும். இங்க அடிக்கடி பஸ் இல்ல. காலம ஒரு பஸ், பின்னேரம் ஒரு பஸ். 9ஆம் ஆண்டுக்குப் பிறகு படிக்கப் போறதெண்டா பூநகரிக்குத்தான் போகவேணும். அங்க போய் படிக்க நேரத்துக்கு பஸ் வறாது. காலம வந்தாலும், பள்ளிக்கூடம் விடுற நேரத்துக்குப் பின்னேரம் நடந்துதான் வரவேணும். இவ்வள தூரம்? இப்ப இருக்கிற நிலைமயில பொம்பிளப் பிள்ளையள் இந்தக் காட்டுக்குள்ளால சயிக்கிளில போய் படிச்சிட்டு வாறதும் சாத்தியமில்ல” என்கிறார் நம்பிக்கை அறுந்த வார்த்தைகளில்.

இது மாதிரியான அதிகஸ்ட பிரதேசங்களில் மிளிரும் சிறு நட்சத்திரங்களின் பிரகாசம் இப்படித்தான் அணைந்துபோகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகத் தெரிகிறாள் நினஞ்சலா.

இப்போது வாருங்கள் சங்குபிட்டிப் பாலத்திற்கு. மறுபடியும் அந்த அபிவிருத்தியையும், அழகையும் ரசியுங்கள். சிலவேளைகளில் உங்களுக்கு அங்கு அடிக்கும் மெல்லிய அலைகளில் அழுக்குத் தெரியலாம். தூரத்தே தெரியும் எல்லா அழகுகளிலும் துர்நாற்றம் மேற்கிளம்பி வரலாம். அங்கு நின்று உரத்துக் கத்திப் பார்க்கலாம், எது அபிவிருத்தி?

நன்றி: உதயசூரியன்

ஜெரா

Jera