படம் | @mayurappriyan

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் உருவாக்கத்தில் ‘எங்கள் கதை’ எனும் தலைப்பில் அமைந்த நாடக ஆற்றுகை யாழ். பல்கலை நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஏனைய பீட மாணவர்களது ஒத்துழைப்புடன் அரங்கேற்றப்பட்டது.

குறித்த நாடக ஆற்றுகை ஏற்பாட்டுக் குழுவினால் யாழ். பல்கலை நிர்வாகத்திடம் முன்னர் அனுமதி பெறப்பட்டு 26.06.2014 அன்று பல்கலை வளாக திறந்தவெளி அரங்கில் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், குறித்த நாடகத்தில் அரசியல், தனிப்பட்டவர்களை குத்திக் காட்டுவதாக அமைவதால் இதனைத் தடைசெய்வதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அன்றைய தினமே குறித்த நாடகத்தை ஆற்றுகை செய்யவேண்டும் என்றும் – இந்த நாடகத்தில் குறிப்பிடப்படவுள்ள விடயங்கள் மாணவர் நலன்சார் விடயங்கள் என்றும் – கண்டிப்பாக இவ்வாறான நாடக ஆற்றுகை மூலமே எமது பிரச்சினைகள் வெளிக்காட்ட முடியும் என்றும் – அங்கு குழுமியிருந்த ஏனைய மாணவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

இவற்றுடன் கலைப்பீடம் மற்றும் முகாமைத்துவ பீட மாணவ ஒன்றியங்களும் மற்றும் ஏனைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் அன்றைய தினமே மதியம் 12.30 மணியளவில் அரங்கேற்றப்பட்டது.

இந்த ஆற்றுகையின்போது நாடக குழுவினருடன் பார்ப்பதற்காக குழுமி நின்ற மாணவர்களும் ஒன்றாக இணைந்து ஆடிப்பாடி தமது உள்ளக் கிடக்கைகளை வெளிக்காட்டினர்.

இதேவேளை, காண்பிக்கப்படாத நாடக ஆற்றுகையினை பார்வையிடாது, அதில் வரும் விடயங்கள் பற்றி விமர்சிப்பதுடன், அதனை தடைசெய்வது எந்த வகையில் நியாயம் என நாடகத்தை பார்க்க வந்த மாணவர்கள் உட்பட ஏனையவர்கள் விசனம் தெரிவித்தனர்.

நாடக ஆற்றுகை குறித்து நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த நாடகம் எங்களுடைய கதைகளைச் சொல்வனவாகவே உள்ளது. இது எந்த அரசியல் சம்பந்தமாகவோ அல்லது யாரையும் குத்திக் காட்டுவதாகவோ அமையவில்லை. பள்ளி தொடக்கம் பல்கலை வரை எம்மைப் போன்ற மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் சமூக பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதாகவே ‘எங்கள் கதை’ நாடகம் அமைந்துள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி: உதயன்